என் மலர்
இந்தோனேசியா
- கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று இந்தோனேசியா சென்றார்
- ஜகார்த்தாவில் உள்ள இஸ்திக்லால் மசூதியை போப் பிரான்சிஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.
ஜகார்த்தா:
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு தைமூர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 12 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல் கட்டமாகப் போப் பிரான்சிஸ் நேற்று இந்தோனேசியா சென்றிருந்தார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேசியாவுக்கு போப் ஆண்டவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக கருதப்படுகிறது.
இந்தோனேசியா சென்றடைந்த போப் ஆண்டவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகை சென்ற போப் பிரான்சிஸ், அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், ஜகார்த்தாவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதியை நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது போப் பிரான்சிஸ் மற்றும் இஸ்திக்லால் மசூதியின் இமாம் நசருதீன் உமர் இருவரும், மத வன்முறைக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுத்தனர்
முன்னதாக, போப் ஆண்டவர் வருகையை முன்னிட்டு பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்தின்பேரில் 7 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் போப் ஆண்டவர் பயணத்தை சீர்குலைக்கவும், அவர்மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டது தெரிய வந்தது.
- இந்தோனேசியா வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர்.
- மாயமான பலரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. லட்சக்கணக்கானோர் மலைப் பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு அருகில் வசித்து வருவதால் பேரிடர் காலங்களில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் அதிகமாக உள்ளது.
இதற்கிடையே, இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணம், டெர்னேட் தீவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
ருவா கிராமத்தில் குடியிருப்புகளை வெள்ளம் அடித்துச் சென்றதுடன், பிரதான சாலை மற்றும் அந்த கிராமத்திற்கான தரைவழி தொடர்பு துண்டிக்கப்பட்டது. பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேற்றில் புதைந்தன.
இந்நிலையில், இந்தோனேசியா கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக பலியாகினர் என்றும், மாயமான பலரை மீட்புக் குழு தேடி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறாய் என்று கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
- முதியவரின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.
எப்போ கல்யாணம் என்று தன்னை அடிக்கடி கேட்டு நச்சரித்து வந்த பக்கத்து வீட்டு முதியவரை 45 வயது நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள குடியிருப்பில் அசிம் இரியான்டோ [Asgim Irianto]என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வாழ்ந்து வந்தார்.
இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது சிரேகர் [Siregar] மீது கொண்ட அக்கறையில் அவரைப் அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் எப்போ திருமணம் செய்து கொள்ளபோகிறாய்?, 45 வயதாகியும் ஏன் சிங்கிளாக இருக்கிறாய்? என்று கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29 ஆம் தேதி திங்கள்கிழமையன்று முதியவரின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.
முதியவரின் மனைவியின் முன்னிலையிலேயே அவரை மரக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் வந்து சிரேகரைத் தடுத்து நிறுத்தி முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால் வழியிலேயே முதியவர் உயிரிழந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிரேகரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் குறித்து அவர் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்ததால் தான் மனதவளவில் பாதிக்கப்பட்டு முதியவரைத் தாக்கியதாக சிரேகர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- கைது செய்யப்பட்ட நபர் தனது நண்பர் கதிர் மார்கஸை மது அருந்த அழைத்துள்ளார்.
- 'கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா' என்று மார்கஸிடம் அவர் நண்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தோனேசியா நாட்டில் 'கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா' என்று புதிரின் விவாதத்தில் நண்பரை கத்தியால் குதி கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜூலை 24 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று, கைது செய்யப்பட்ட நபர் தனது நண்பர் கதிர் மார்கஸை மது அருந்த அழைத்துள்ளார். இருவரும் மது அருந்திய பொழுது, 'கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா' என்று மார்கஸிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவாதம் வாக்குவாதமாக மாறிய பிறகு, கதிர் மார்கஸ் விவாதம் செய்ய விரும்பாமல் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். இதனால் கோபமடைந்த அவரது நண்பர் ஆத்திரத்தில் மார்க்ஸை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
மார்கஸ் ஜூலை 26 அன்று அடக்கம் செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்தோனேசியா நாட்டில் வாட்சப் குழுவிலிருந்து நீக்கியதற்காக நண்பரை ஒருவர் கத்தியால் குத்திகொன்ற சம்பவம் கடந்தாண்டு நடந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி அற்ப காரணங்களுக்காக கொலை செய்வது இந்தேனோசியா நாட்டில் அதிகரித்துள்ளது.
- எக்ஸ் தளத்தில் வைரலான வீடியோ இரண்டு மில்லியன் பார்வைகளையும் 14,000 விருப்பங்களையும் குவித்துள்ளது.
- பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களில் சில, விலங்குகள் மீது மனிதர்கள் வைத்துள்ள பாசத்தை காட்டும். ஆனால் தற்போது வைரலாகும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் வீடியோவில், நீர்யானையின் வாயில் பிளாஸ்டிக் பையை ஒருவர் திணிப்பது பார்ப்பவர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்குகிறது. இச்சம்பவம் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள வனவிலங்கு பூங்காவில் நடந்துள்ளது.
வீடியோ காட்சிகளின் படி, பூங்காவை காரில் சென்று சுற்றி பார்க்கும் பயணிகளில் ஒருவர் நீர் யானைக்கு கேரட்டை கொடுக்க முன்வருகிறார். இதனால் நீர் யானையோ வாயை திறக்க மற்றொரு சுற்றுலா பயணி அதன் வாயில் பிளாஸ்டிக் பையை திணிக்கிறார். இதையடுத்து அந்த நீர்யானை பிளாஸ்டிக் பையை மெல்லுகிறது.
எக்ஸ் தளத்தில் வைரலான வீடியோ இரண்டு மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், "மனிதர்கள் அருவருப்பானவர்கள் மற்றும் பூங்காவில் விலங்குகளுக்கு உணவளிக்க யார் அனுமதிக்கிறார்கள்" என்றார். மற்றொருவர், "இதனால் அனைத்து விலங்குகளும் அழிந்து வருகின்றன" என்றார்.
இதற்கிடையே வீடியோ வைரலானதை அடுத்து, அந்த நபர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
பிளாஸ்டிக் பொருட்களால் உணவுகள் வீசப்படுகிறது. இந்த உணவை தேடி வரும் விலங்குகள் அதை உட்கொள்ளுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
- இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதம் குறித்த தகவல் இல்லை.
இந்தோனேசியாவில் 6.0 என்கிற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதம் குறித்த உடனடி தகவல்கள் வெளிவரவில்லை.
நிலநடுக்கம் கணிசமான ஆழத்தில் தாக்கியதால், கடுமையான சேதத்திற்கான சாத்தியம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் பார்த்ததுபோல் மழை நீரை சேகரித்தும், கூடாரம் அமைத்தும் 30 மணி நேரமாக உயிர் வாழ்ந்துள்ளனர்.
- மீட்பு குழுவினரின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் தொலைக்காட்சி தொகுப்பாளராக கேத்தரின் ஃபார்ஸ்டர் தனது மகன்களுடன் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு மேத்யூ (22), ஆண்ட்ரூ (18) என்ற அவரின் 2 மகன்களும் வழிதவறி பாலியில் உள்ள எரிமலையின் மீது எறியுள்ளனர். அங்கிருந்து எப்படி இறங்குவது என தெரியாமல் எரிமலையில் அவர்கள் மாட்டிக் கொண்டனர்.
அவர்களை மீட்க மீட்புக்குழுவினர் அந்த எரிமலைக்கு புறப்பட்டனர். எரிமலையில் 30 மணிநேரத்திற்கு மேலாக சிக்கி கொண்டதால், அவர்கள் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் வீடியோவில் கூறிய அறிவுரைகளை வைத்து உயிர்பிழைத்துள்ளனர்.
பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் பார்த்ததுபோல் மழை நீரை சேகரித்தும், கூடாரம் அமைத்தும் 30 மணி நேரமாக உயிர் வாழ்ந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 40 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு குழுவினரின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
- தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுயப்பட்டிருந்தனர்.
- 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று [ஜூலை 7] ஞாயிற்றுக்கிழமை சுலவேசி தீவின் கோரோண்டாலோ பகுதியில் உள்ள போன் பொலாங்கோ என்ற இடத்தில சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மேரோபகுதியில் இருந்த மண் சரிந்து குழிக்குள் இருந்தவர்கள் மீது விழுந்து அடைத்தது. இந்த விபத்தில் 12 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்டுப்படையினர் 12 பேரின் உடல்களை மண்ணுக்குள் இருந்து மீட்டனர். இந்த விபத்தில் சிக்கிய மேலும் 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


- நேரடி விமானங்களை இயக்குவதற்கு ரஷியா சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
- இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஜகார்த்தா, ஜூன் 28-
இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷியா முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக இரு நாடுகள் இடையே இயக்கப்பட்ட நேரடி விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதால் அதனை மீண்டும் இயக்க இந்தோனேசியா முயற்சித்து வருகிறது.
ஆனால் நேரடி விமானங்களை இயக்குவதற்கு ரஷியா சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதுகுறித்து இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்த பிறகு விரைவில் இரு நாடுகள் இடையேயான நேரடி விமானம் மீண்டும் இயக்கப்படும் என இந்தோனேசிய சுற்றுலாத்துறை மந்திரி சந்தியாகா யூனோ கூறினார்.
- நிலை தடுமாறிய அப்பெண் ஜிம் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
- தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தோனேசியாவில் 22 வயது இளம்பெண் ஒருவர் டிரெட்மில்லில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தனில் உள்ள போண்டியானக்கில் உள்ள ஜிம் ஒன்றில் 22 வயது இளம்பெண் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது, டிரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்த சமயத்தில் அப்பெண் நிலை தடுமாறி பின்னாடி உள்ள ஜன்னலை நோக்கி மெதுவாக நகர்கிறார்.
ஜன்னலை திறந்த நிலையில் இருந்ததால் கீழே விழுவதற்கு முன்பு ஜன்னலை பிடிக்க முயன்றபோதிலும், நிலை தடுமாறிய அப்பெண் ஜிம் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த அப்பெண் தனது சகோதரர் மற்றும் காதலனுடன் ஜிம்மிற்குச் சென்றிருந்தார் என்றும் காதலன் இரண்டாவது மாடியில் அவருடன் உடற்பயிற்சி செய்ய சொன்னதாகவும் ஆனால், அந்த பெண் மேல் மாடியில் உள்ள டிரெட்மில்லைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறி சென்ற நிலையில், பரிதாபமாக கீழே விழுந்து உயிரிழந்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இச்சம்பவம் கடந்த 18-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது.
- நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்கவில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்தோனேசியா:
இந்தோனேசியாவில் வடக்கு சுலாவேசி என்ற பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்கவில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12:01 மணியளவில் தலாட் தீவுகளின் வடமேற்கே 41 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் 32 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்
- சமீப காலங்களாக இந்தோனேசியாவில் இதுபோன்று மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது
இந்தோனேசியாவில் காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தில் வசித்து வருபவர் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் 45 வயதான பரிதா வசித்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர். நேற்று பரிதாவின் உடைகளைக் கிராமத்தின் அருகே அவரது கணவர் கண்டுபிடித்த நிலையில் தேடுதலைத் தீவிரப்படுத்திய கிராமத்தினர் 5 மீட்டர் நீளமுடைய 16 அடி பைத்தான் வகை மலைப்பாம்பை அப்பகுதியில் பார்த்துள்ளனர்.
சந்தேகமடைந்த அவர்கள் மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து பார்த்தபொழுது உள்ளே பரிதாவின் ஆடைகளுடன் உடல் முழுதாக ஜீரணிக்கப்படாமல் இருந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானது என்றாலும் சமீப காலங்களாக இந்தோனேசியாவில் இதுபோன்று மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த வருடம் தினாகியா மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 8அடி பைத்தானால் விழுங்கப்பட்டார். 2018 இல் சுலானீஸ் மாகாணத்தில் 54 வயது பெண் ஒருவர் 7 ஆடி பைத்தானின் வயிற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.






