என் மலர்
புதுச்சேரி
- கடலூர் கெமிக்கல் என்ஜினீயர் இளைய நம்பியும், ஏழுமலையும் நண்பர்கள்.
- சென்னையில் இருந்து புதுவைக்கு வாகனத்தில் மெத்தனால் கொண்டு வரும்போது சோதனை சாவடிகளில் காட்டுவதற்கு மொத்தனால் சோப்பு கம்பெனிக்கு வாங்கி வருவது போல ரசீது தயார் செய்து மெத்தனாலை கடத்தியுள்ளார்.
புதுச்சேரி:
மரக்காணம், செங்கல்பட்டு பகுதியில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஏழுமலை சென்னை ரசாயன தொழிற்சாலையில் மெத்தனால் வாங்கி புதுச்சேரியில் பதுக்கி வைத்து சப்ளை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம், செல்லன் தெரு, நகரான் தெரு, சம்புவெளி பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் விஷ சாராயம் குடித்ததில் 14 பேர் பலியாகினர்.
மற்றவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி, விழுப்புரம் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் பலியான இந்த சம்பவம் தமிழகம், புதுவையை உலுக்கியுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மரக்காணம் சாராய வியாபாரிகள் அமரன் முத்து, ஆறுமுகம், மண்ணாங்கட்டி, ரவி உள்ளிட்டவர்களையும் செங்கல்பட்டு பகுதியில் வேலு, சந்திரன், ராஜேஷ், விஜி உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரியில் இருந்து மெத்தனால் வாங்கி வந்தது தெரியவந்தது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரில் வசித்து வரும் பர்கத்துல்லா, வில்லியனூர் தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வரும் ஏழுமலை ஆகிய 2 பேரையும் புதுச்சேரி போலீஸ் உதவியுடன் விழுப்புரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், கள்ளச்சாராயம் தயாரிக்க சென்னை வானரகம் அடுத்த மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் மெத்தனால் வேதிப்பொருள் வாங்கி புதுச்சேரியில் பதுக்கி வைத்தும், புதுச்சேரியில் இருந்து மரக்காணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள சாராய வியாபாரிகளுக்கு மெத்தனாலை சப்ளை செய்ததும் தெரியவந்தது.
சென்னை மதுரவாயல் பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வரும் கடலூரை சேர்ந்த கெமிக்கல் என்ஜினீயர் இளையநம்பி தொழிற்சாலைக்கு வாங்கும் மெத்தனாலை ஏழுமலைக்கு விற்பனை செய்துள்ளார். இளையநம்பி கெமிக்கல் என்ஜினீயர் என்பதால் எவ்வளவு தண்ணீரில் மெத்தனால் மற்றும் மூலப்பொருள் சேர்த்து சாராயம் தயாரிக்க வேண்டும் என அவர் பயிற்சி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இளையநம்பி தொழிற்சாலையில் ஏழுமலை மற்றும் பர்கத்துல்லா கடந்த 11-ந்தேதி 3 பேரல்களில் 600 லிட்டர் மெத்தனால் வாங்கி வந்து புதுச்சேரியில் பதுக்கி வைத்துள்ளனர்.
பின்னர் அதனை மரக்காணம், செங்கல்பட்டு சாராய வியாபாரிகளுக்கு கொடுத்துள்ளனர். அதிக விஷத்தன்மை வாய்ந்த மெத்தனாலை சாராய வியாபாரிகள் கலப்படம் செய்து விற்பனை செய்ததால் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர்.
இதனை கேள்விப்பட்ட ஏழுமலை பதுக்கி வைத்திருந்த மெத்தனாலை கீழே ஊற்றி அழித்துள்ளார்.
கடலூர் கெமிக்கல் என்ஜினீயர் இளைய நம்பியும், ஏழுமலையும் நண்பர்கள். புதுவை வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியில் சோப்பு கம்பெனி வைத்திருப்பதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நம்புவதற்காக ஏழுமலை கொட்டகை அமைத்துள்ளார்.
மெத்தனால் வாங்கி வந்து இங்கு தான் ஏழுமலை பதுக்கி வைத்துள்ளார். சென்னையில் இருந்து புதுவைக்கு வாகனத்தில் மெத்தனால் கொண்டு வரும்போது சோதனை சாவடிகளில் காட்டுவதற்கு மொத்தனால் சோப்பு கம்பெனிக்கு வாங்கி வருவது போல ரசீது தயார் செய்து மெத்தனாலை கடத்தியுள்ளார்.
புதுச்சேரி என்றாலே மது என்பது எல்லோருடைய மனதிலும் எழக்கூடிய உளவியல் கலந்த உணர்வாக உள்ளது. இந்நிலையில் சென்னை மதுரவாயல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வாங்கி வரப்பட்ட மெத்தனாலை ஏழுமலை வரும் வழியிலேயே சாராய வியாபாரிகளுக்கு கொடுப்பதில்லை.
தன்னுடைய சோப்பு கம்பெனிக்கு மூலப்பொருள் வாங்கி வருவதாக கணக்கு காட்டிவிட்டு புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மெத்தனாலை அனுப்பி வந்துள்ளார். புதுவையில் இருந்து மெத்தனால் கொண்டு வருவதால் 'இது பாண்டிச்சேரி சரக்கு' என சாராய வியாபாரிகளுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
புதுவையில் இருந்து பர்க்கத்துல்லா வாகனம் மூலம் கொண்டுவரும் மெத்தனால் என்பதால் சாராய வியாபாரிகளுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டு வாங்கி உள்ளனர். இதுவே விஷசாராயமாக மாறி 22 பேர் உயிரை பறித்துள்ளது.
- சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
- கலால்துறை அதிகாரி ஜான்சன் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலை யில் காரைக்கால் மாவட்ட துணை கலெக்டரும், கலால்துறை அதிகாரியுமான ஜான்சன், வட்டாட்சியர் மதன்குமார் மற்றும் பலர், மாவட்டம் முழுவதும் உள்ள 100-க்கு மேற்பட்ட மதுக்கடைகள், பார்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட சாராயக் கடைகளில், அதி ரடி சோதனை மேற்கொ ண்டனர்.
இந்த சோதனையின் போது, மதுபானக் கடை மற்றும் சாராயக்கடைகளில் காலாவதியான மது பாட்டில்கள் உள்ளதா? எனவும், மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு மது விற்பனை செய்யப்ப டுகிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் முறை யாக கணக்குகளை பராமரி க்காத மதுபான கடைகளுக்கு கலால்துறை அதிகாரி ஜான்சன் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். மேலும், காரைக்கால் பகுதியில் இருந்து தமிழக த்துக்கு மது கடத்தலை எல்லையோரங்களில் கண்காணிக்கவும், அரசால் தடை செய்யப்பட்ட பிளா ஸ்டிக் கப்புகள் பயன்ப டுத்தும் மதுபான கடைக ளுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.
- குழாயின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த நாய்க்குட்டி கழிவறையின் உள்பகுதிக்குள் மாட்டி கொண்டது.
- கழிப்பறையை முழுமையாக இடித்து துளையிட்டுப் பார்த்தபோது சுமார் 8 அடி ஆழத்தில் நாய்க்குட்டி மாட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
கடலூர் சாவடி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள கழிப்பறை அருகே நாய் ஒன்று 3 குட்டிகளை போட்டிருந்தது.
அதில் ஒரு குட்டி வீட்டு கழிவறை குழாய் அருகே விளையாடிக்கொண்டிருந்தது. கழிவறை குழாயின் ஒரு பகுதி உடைந்திருந்தது குழாயின் மேல் பகுதி வழியாக சென்ற நாய்க்குட்டி கால் வழுக்கி ஓட்டைக்குள் விழுந்தது.
குழாயின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த நாய்க்குட்டி கழிவறையின் உள்பகுதிக்குள் மாட்டி கொண்டது. அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்தது.
குழாய்க்குள் இருந்து வந்த நாய்க்குட்டியின் முனகல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த முருகன் விலங்கு நல ஆர்வலரான செல்லா என்பவருக்கு தகவல் தெரிவித்து அவரது உதவியை நாடினார்.
அங்கு சென்றார் விலங்கு நல ஆர்வலர் செல்லா. குழாயில் சிக்கிய நாய்க்குட்டியை கழிப்பறை ஓட்டை வழியாக வெளியே எடுக்க முயற்சித்தார். அது பலன் அளிக்கவில்லை. கழிப்பறையை உடைத்தால் தான் குட்டியை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் முருகன் கழிப்பறையை முழுமையாக உடைக்க முடிவு செய்தார். இதையடுத்து கழிப்பறையை முழுமையாக இடித்து துளையிட்டுப் பார்த்தபோது சுமார் 8 அடி ஆழத்தில் நாய்க்குட்டி மாட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.
சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நாய்க்குட்டியை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அந்த நாய்க்குட்டியை குளிப்பாட்டி சுத்தம் செய்தனர். 6 மணி நேரத்திற்கு மேலாக குழாயில் சிக்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டி வெளியே வந்ததும் தனது தாயின் அரவணைப்பை தேடி அழுதுகொண்டே வேகமாக ஓடி தனது தாயுடன் சேர்ந்து பால் குடித்தது.
இதுகுறித்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விலங்கு நல ஆர்வலர் செல்லா மற்றும் வீட்டு உரிமையாளர் முருகனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
- பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது.
- சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலாவாக வந்து தீக்குழி நடைபெற்ற இடத்தின் முன்பு நிறைவு பெற்றது.
தொடர்ந்து, திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தீக்குழியில் இறங்கி மாரியம்மனை வழிபட்டனர். சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர். விழாவில் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.
- பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காரைக்காலில் நடைபெற்றது.
- பொதுமக்களுக்கான குடிநீர் கூட அரசுத்துறை அலுவலகங்களில் இல்லை.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி நடத்த வேண்டும். அன்றைய தினம் பொது விடுமுறையாக இருந்தால், அடுத்த வேலை நாளில் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்க வேண்டும் என, கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டார்.
அதன்படி, கடந்த சில மாதங்களாக காரைக்காலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் மாதந்தோறும் பொதுமக்கள் குறை கேட்பு நாள் நடந்து வந்தது. அதேபோல், மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வு செய்து, காரைக் கால் மாவட்டங்களில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங் களில் பணிபுரியும் ஊழி யர்கள் அரசு உத்தரவுப்படி காலை 8:45 மணிக்கு பணியில் இருக்க வேண்டும் என்றும், குறித்த நேரத்திற்கு பணிக்கு வராதவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அந்தவகையில், மாதம் ஒரு முறை நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காரைக்காலில் நடைபெற்றது ஆனால் பல்வேறு அரசுத் துறைகளில் துறை அதிகாரி கள், ஊழியர்கள் காலை 10 மணிவரை வரவில்லை. அதேபோல், கோடை வெயி லில் பொதுமக்களுக்கான குடிநீர் கூட அரசுத்துறை அலுவலகங்களில் இல்லை. பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து தங்கள் புகார் களை வழங்கி சென்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பெண்ணுக்கு ஆன்லைன் மூலம் பல கட்டங்களாக கடந்த 4-ந் தேதி வரை ரூ.5 லட்சம் பாலமுருகன் அனுப்பி இருக்கிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
சேலம் மாவட்டம், பி.என்.பாளையம், சின்ன மண்கொடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (27). வேலை காரணமாக புதுவை வந்துள்ள இவர் தேங்காய்திட்டு வடக்கு தெருவில் தனது நண்பர் மணிகண்டன் என்பவருடன் வசித்து வருகிறார்.
திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் திருமண இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். பதிவு செய்த 2 நாட்களுக்கு பிறகு ஊர், பெயர் தெரியாத பெண் ஒருவர், பாலமுருகனை அவரது வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, அவரது பெயர் இந்தியஸ்ரீ ராதாகிருஷ்ணன் என்றும், கடலூரில் வசிப்பதாகவும், இணையதளத்தில் புகைப்படம், குடும்ப விவரங்களை பார்த்ததாகவும், அவரை திருமணம்செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
பிறகு அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் குடும்ப விவரங்களை பார்த்துவிட்டு, அவருடன் பாலமுருகன் பேச ஆரம்பித்த போது, தன்னுடைய வருமானம் ரூ.15 ஆயிரம் என கூறியுள்ளார்.
அதற்கு அந்த பெண், தான் கடலூரில் உதவி கலெக்டராக இருப்பதாகவும், ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும் பாலமுருகனுக்கு நல்ல வேலை இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியிருக்கிறார்.
மேலும் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு வேலை இருக்கிறது. அந்த வேலையை வாங்குவதற்கு ரூ.5 லட்சம் கேட்கிறார்கள். பணத்தை கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
இதை நம்பி அந்த பெண்ணுக்கு ஆன்லைன் மூலம் பல கட்டங்களாக கடந்த 4-ந் தேதி வரை ரூ.5 லட்சம் பாலமுருகன் அனுப்பி இருக்கிறார்.
அதன்பிறகு அந்த பெண் பாலமுருகனிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அவரது செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே சம்பந்தப் பட்ட இணையதளத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அது தவறான முகவரி என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மே 30-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.
- ஜூன் 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இத்தகைய சிறப்புவாய்ந்த சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை 5.30 மணி அளவில் ரிஷப வானத்தில் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிமரத்து விநாயகருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், சந்தனம் இளநீர் விபூதி, பழரசம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து புனிதநீர் கொண்டு அபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் கொடிமரத்தில் கொடியை ஏற்றினர். அதனைத் தொடர்ந்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மே 23-ந் தேதி அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லக்கில் வீதியுலாவும், மே 30-ந் தேதி காலை தேரோட்டமும், 31-ந் தேதி சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
விழாவை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறுக்கு வருகை தருவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், சாலை சீரமைத்தல், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்ட வருகின்றது.
- விறகுகளை வைப்பதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
- வாசுகியின் ஸ்கூட்டரை தீயில் தள்ளி விட்டு எரித்ததாக கூறப்படு கிறது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நிரவி நடுஓடுதுறை பிள்ளை யார் கோவில் தெருவில் வசிப்பவர் வாசுகி (வயது30). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜசேகர் (50). இவர் ரியல் எஸ்டே தொழில் செய்து வருகிறார். இரு வர்கள் வீட்டின் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் மரபொருட்கள், விறகுகளை வைப்பதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், சம்பவத் தன்று இருவரும் தங்கள் பொருட்கள் போட்டு வைத்திருந்த இடத்தில் குப்பைகளை எரித்ததாக கூறப்படுகிறது. இதில் இரு வருகும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது, ராஜசேகர், வாசுகியை மரக்கட்டையால் தாக்கி, வாசுகியின் ஸ்கூட்டரை தீயில் தள்ளி விட்டு எரித்ததாக கூறப்படு கிறது.
- அருகில் இருந்தவர்கள் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர்.
- காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் நேரு நகர் டோபி காலனி தெருவை சேர்ந்தவர் சரவணன் டிரைவர். நேற்று வழக்கம்போல் சரவணன் வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், இவரது கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மலமலவென எறிய தொடங்கியது. இதனால் காரைக்கால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையில், தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தீ அருகிலுள்ள வீடுகளுக்கு பரவாமல் போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சரவணனின் தாய் வாசுகியின் இருதய அறுவை சிகிச்சைக்காக வீட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம், எலக்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இது குறித்து, காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்பும் உருவாகி உள்ளது.
- பா.ஜ.க. ஆட்சியில் கர்நாடக மக்கள் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர்.
புதுச்சேரி :
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்து வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சியினர் வெற்றியை கொண்டாடினார்கள். புதுவை வைசியாள் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் பட்டடாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் இணைந்து ஆட்சியை அமைத்தது. 1½ ஆண்டுகளில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தங்களது அதிகார பலம், பணபலத்தை கொண்டு பா.ஜ.க. ஆட்சியை அமைத்தனர்.
இந்த ஆட்சி அமைந்தது முதல் கர்நாடக மாநில மக்கள் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பாடுபட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் பேசியும், ஊர்வலம் நடத்திய நிலையிலும் கர்நாடக மாநில மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தெளிவான வெற்றியை கொடுத்து அரியணையில் அமர்த்தியுள்ளனர். இந்த தேர்தல் வெற்றியானது, நடைபெற உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில தேர்தல்களுக்கு முன்னோட்டமாகும்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியை பிடிக்கும். ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்பும் உருவாகி உள்ளது. கர்நாடக தேர்தல் மூலம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை சைபர் கிரைம் போலீசார் சென்னை ஓரகடம் பகுதிக்கு சென்று அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் 2 பேரையும் கைது செய்தனர்.
- ஜார்க்கண்டில் இணையதளம் வழியாக பணம் திருட தனி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
புதுச்சேரி:
புதுவை துத்திப்பட்டு பகுதி கடப்பேரிகுப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசர்மா (39). ஜிப்மர் காவலாளி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆன்லைன் செயலி மூலம் வீட்டுக்கான பொருள் வாங்க முயற்சித்தார். ஆனால் பொருள் அவருக்கு கிடைக்கவில்லை.
இதுகுறித்து விசாரிக்க வாடிக்கையாளர் சேவை பிரிவை இணையத்தில் தேடினார். அப்போது குறிப்பிட்ட செல்போன் எண் கிடைத்துள்ளது. அதில் பேசிய மர்மநபர், கிருஷ்ணசர்மாவின் விவரங்களை குறிப்பிட்ட செயலியில் பதிவிடும்படி கூறியுள்ளார்.
அதன்படி கிருஷ்ணசர்மா பதிவு செய்தார். அப்போது அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 ¾ லட்சம் மர்மநபர்களால் அபகரிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் கிருஷ்ணசர்மா புகார் அளித்தார். விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அசாமுதீன் அன்சாரி (30), மகேஷ்குமார் (28) ஆகியோர் வங்கிக் கணக்கில் கிருஷ்ண சர்மாவின் பணம் செலுத்தப்பட்டது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் இருவரும் சென்னை ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தது தெரிந்தது.
இதையடுத்து புதுவை சைபர் கிரைம் போலீசார் சென்னை ஓரகடம் பகுதிக்கு சென்று அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 3 ஏ.டி.எம் கார்டுகள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் தங்களது வங்கி கணக்கை தங்களது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் உள்ள ஒரு நபரிடம் அளித்துள்ளதாகவும், அதற்காக தங்களுக்கு கமிஷன் கிடைக்கும் என்றும், ஆகவே பணம் தங்களது வங்கிக்கணக்குக்கு எப்படி பரிமாற்றப்படுகிறது என தெரியாது என்றும் கூறியுள்ளனர்.
கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. ஜார்க்கண்டில் இணையதளம் வழியாக பணம் திருட தனி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த குழுவினர் வடமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் நபர்களின் வங்கி கணக்குகளை வாங்கி கொள்கின்றனர்.
'ஆன்லைன்' மூலம் திருடப்படும் பணத்தை தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் நபர்களின் வங்கி கணக்கில் செலுத்துகின்றனர். ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு கமிஷனாக கொடுத்து விட்டு, மீதி தொகையை மோசடி கும்பல் பெற்றுக் கொள்கிறது.
இதனால், மோசடி கும்பலை கைது செய்ய புதுவை சைபர் கிரைம் போலீசார் ஜார்கண்ட் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
- மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுவை மக்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதை காட்டுகிறது.
- ஏழை மக்களின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ரூ.1000 கோடிக்கணக்கில் நிதி வழங்கி அனைத்து துறைகளையும் நவீனப்படுத்தி சிறப்பான சேவையாற்றி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக ஜிப்மர் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.
ஜிப்மரில் புதுவை மட்டுமின்றி, தமிழகம் உட்பட தென் மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தென் மாநில பகுதிகளில் இருந்து உயர் சிகிச்சைக்காக நோயாளிகள் ஜிப்மருக்கு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 16-ந்தேதி 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை வெளியானது.
இதற்கு புதுவை அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேவை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தின. ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்த கவர்னர் கண்டனம் தெரிவித்திருந்தார். ஏழைகளுக்கு இலவச சிகிச்சை ஜிப்மரில் தொடரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அந்த அறிவிப்பில், கடந்த 16.3.2023-ந்தேதி வெளியிடப்பட்ட சேவை கட்டண சுற்றறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக்பாபு இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த ஆஸ்பத்திரியில் புதுவை, தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்கள் பல நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழை மக்களின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ரூ.1000 கோடிக்கணக்கில் நிதி வழங்கி அனைத்து துறைகளையும் நவீனப்படுத்தி சிறப்பான சேவையாற்றி வருகிறது.
கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு தெரிவிக்காமல், ஜிப்மர் இயக்குனர் சேவை கட்டணங்களை அமல்படுத்தினார். இதனால் ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நானும், பா.ஜனதா மாநில செயலாளர் ரத்தினவேல், விவசாய அணி தலைவர் புகழேந்தி ஆகியோர், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், மாநில தலைவர் சாமிநாதன் ஒப்புதலோடு டெல்லிக்கு சென்றோம்.
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து மேற்படி ஜிப்மரின் சேவை கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று மத்திய மந்திரி சேவை கட்டணங்களை ரத்து செய்ய துறையின் செயலரை அழைத்து உத்தரவு பிறப்பித்தார். இதன்படி ஜிப்மரில் அமல்படுத்தப்பட்ட சேவை கட்டணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எங்கள் கோரிக்கையை ஏற்று சேவை கட்டணங்களை ரத்து செய்ய ஆணை பிறப்பித்த மத்திய மந்திரி மன்சுக்மாண்டவியாவிற்கு புதுவை மாநில பா.ஜனதா சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுவை மக்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதை காட்டுகிறது. ஜிப்மருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மத்திய அரசு அளிக்கும். ஜிப்மரில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி பா.ஜனதா சார்பில் உரிய நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.






