என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • மட்டனில் உள்ள கொழுப்பு வெப்பத்தை குறைக்க உதவுகிறது.
    • ஆந்திரா ஸ்டைலில் நல்ல காரசாரமாக மட்டன் கிரேவி.

    அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இதன் சுவையும் நன்றாவே இருக்கும். மட்டன் சாப்பிடுவதன் மூலம், நம்முடைய இதயம் நன்கு வலுப்பெறுகின்றது. மேலும் மட்டனில் உள்ள கொழுப்பு வெப்பத்தை குறைக்க உதவுகிறது. ஆட்டுக்கறி சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் பி, செலினியம் மற்றும் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் தாக்காமல் உடலைப் பாதுகாக்கும்.

    ஆந்திரா ஸ்டைலில் நல்ல காரசாரமாக மட்டன் கிரேவி செய்வது எப்படி என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன்- 1/2 கிலோ

    மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்

    உப்பு- தேவையானஅளவு

    இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்

    எண்ணெய்- 4 டீஸ்பூன்

    வெங்காயம்- 2 பெரியது பொடியாக நறுக்கி கொள்ளவும்

    பச்சை- 2

    தக்காளி- 2

    தனி மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்

    மிளகு தூள்- 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி, கறிவேப்பிலை- தேவையான அளவு

    அரைப்பதற்கு:

    ஏலக்காய்- 1

    கிராம்பு- 2

    பெருஞ்சீரகம்- 1/2 டீஸ்பூன்

    பட்டை- 2

    கொத்தமல்லி விதை- 1/2 டீஸ்பூன்

    மிளகு- 1/2 டீஸ்பூன்

    சோம்பு- 1/4 டீஸ்பூன்

    செய்முறை:

    குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீருடன், மட்டன், உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து 6 விசில் வரும் வரை மட்டனை வேக வைக்க வேண்டும்.

    மட்டன் வேகவைத்த தண்ணீரை எடுத்து வைத்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்க வேண்டும்.

    பின்னர் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி மற்றும் மட்டன் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை அதிக வெப்பத்தில் வதக்க வேண்டும்.

    உப்பு மற்றும் அரைத்து வைத்த கலவையை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்க வேண்டும். மட்டன் வேகவைத்த தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    நன்கு கிரேவி பதம் வந்தவும் மீதம் உள்ள மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான காரசாரமான, மணமான ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி ரெடி.

     

    • காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன.
    • ஊட்டச்சத்துக்கள் காளான்களில் நிரம்பியுள்ளன.

    அனைத்து வகையான காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன. அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B கொண்டுள்ளன. D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன. காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும்.

    தேவையான பொருட்கள்:

    கிராம்பு- 2

    சோம்பு- ஒரு ஸ்பூன்

    பேப்ரிக்கா சில்லி- 20

    வெங்காயம்- 2

    பூண்டு- 10 பல்

    தனியா- ஒரு ஸ்பூன்

    மிளகு- கால் டீஸ்பூன்

    சீரகம்- கால் டீஸ்பூன்

    வெந்தயம்- சிறிதளவு

    காளான்- கால் கிலோ

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    புளி- சிறிதளவு

    வெல்லம்- சிறிதளவு

    செய்முறை:

    முதலில் காளானை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சில்லி, வெங்காயம், தனியா, பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, கிராம்பு, வெந்தயம் போன்றவற்றை மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 3 கரண்டி நெய் விட்டு காய்ந்தவுடன் அதில் கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் சேர்க்க வேண்டும். நன்றாக கலந்துவிட வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு அதில் சிறிதளவு புளியை கரைத்து சேர்க்க வேண்டும்.

    பின்னர் இந்த கலவை கொத்தவுடன் சிறிதளவு வெல்லம் சேர்க்க வேண்டும். அதன்பிறகு காலானை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். தண்ணீர் வேண்டும் என்றால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லை என்றால் காளனிலேயே தண்ணீர் இருக்கும். இந்த கலவை வெந்து கிரேவி பதம் வந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான காளான் கீ ரோஸ்ட் தயார். 

     

    • கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம்.
    • சாச்சுரேட் கொழுப்பு மீன் உணவுகளில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது.

    அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம். காரணம், சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது.

    மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது.

    நரம்புத் தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.

    இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

    இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்று நோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

    தேவையான பொருட்கள்:

    இறால் - 250 கிராம்

    மைதா - 1 டேபிள் ஸ்பூன்

    முட்டை - 1

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

    நசுக்கிய பூண்டு - 5 பல்

    நசுக்கிய இஞ்சி - 1 துண்டு

    பச்சை மிளகாய்- 1

    வெங்காயத்தாள் - 1 கப்

    மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

    சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு, எண்ணெய், - தேவைக்கு ஏற்ப

    கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன்

    சர்க்கரை - 1/4 டீஸ்பூன்

    டொமேட்டோ சாஸ்

    தாய் சில்லி பேஸ்ட்- ஒரு ஸ்பூன்

    துளசி இலைகள்- 10

    செய்முறை:

    ஒரு பவுலில் சுத்தம் செய்து வைத்துள்ள இறால்களை சேர்க்க வேண்டும். இதில் உப்பு, கார்ன்பிளார் மாவு, முட்டை, மிளகுத்தூள் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தது. அதில் கலந்து வைத்துள்ள இறாலை பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு மீண்டும் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் குடைமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.

    இந்த கலவையில் சில்லி சாஸ், தக்காளி சாஸ், தாய் சில்லி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். இதில் துளசி இலைகளை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்தால் சுவையான தாய் பேசில் சில்லி பிரான் தயார். நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

     

    • தூங்காமல் விழித்திருப்பவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
    • நமது மூளையில் சூப்பர் கிளாக் என்ற ஒரு பொருள் உள்ளது.

    இன்றைய உலகில் ஆண்களும், பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். அதிலும் நிறைய பெண்கள் மற்றும் ஆண்கள் இரவுநேர வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாது இரவு நேரத்தில் தூங்காமல் விழித்திருப்பவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    அதிலும் குறிப்பாக பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. முடிகொட்டுதலில் தொடங்கி, ஹார்மோன் மாற்றம், ஸ்கின் பிராப்லம்ஸ் மற்றும் கருத்தரிப்பதில் சிக்கல், மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அது குறித்த பதிவுகள் உங்களுக்காக...

    இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். நமது மூளையில் சூப்பர் கிளாக் (suprachiasmatic nucles) என்ற ஒரு பொருள் உள்ளது. அது ஹைப்போதாலமஸ் என்ற இடத்தில் உள்ளது.

    இது சூப்பர் கிளாக் கொடுக்கும் சிக்னல் மூலமாகத்தான் ஹார்மோன்ஸ் மற்றும் அனைத்து சிஸ்டமும் வேலை செய்கிறது. இந்த சூப்பர் கிளாக்குக்கான பவர் எங்கிருந்து கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா...? சூரிய ஒளியின் வெளிச்சத்தில் இருந்துதான். ஏனென்றால் சூரிய ஒளியின் வெளிச்சத்தில் இருந்து தான் செரோட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது. இரவில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது.

    இந்த சூப்பர் கிளாக்குக்கு சூரிய ஒளி இல்லாத இரவு நேரத்தில் தூங்காமல் உடலுக்கு கொடுக்கும் செயற்கையான வெளிச்சத்தால் உடலுக்கு எந்த சிக்னலும் கிடைக்காமல் போய்விடுகிறது.

    எனவே உங்களுக்கு சரியான தூக்கம் இல்லை என்றால் இந்த சூப்பர் கிளாக்குக்கு சரியான சிக்னல் கிடைக்காது. இதனால் அந்த ஹார்மோன்கள் வேலை செய்யாது. சரியான சிக்னல் உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் சர்க்காடியன் ரிதம் ஹார்மோன் (circadian rhythm) வேலை செய்யாது.

    இதனால் பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி பிரச்சினை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையில் பிரச்சினை வர அதிக வாய்ப்பு உள்ளது.

    எனவே இவ்வளவு துல்லியமாக வேலை செய்யும் சூப்பர் கிளாக்குக்கு மதிப்பளித்து இரவு 7 முதல் 8 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.

    • கொரிய உணவு மேஜையில் அதிகளவில் இருப்பது காய்கறிகள் தானாம்.
    • வெளியில் சாப்பிடுவதை விட, வீட்டிலேயே சாப்பிடுவார்கள்.

    அழகிலும், ஆரோக்கியத்திலும் முன்னோடியாக இருக்கும் கொரிய நாட்டு பெண்களின் ஆரோக்கிய ரகசியம் அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    இளைஞர்கள், இளம்பெண்கள், வயதான தாத்தா, பாட்டியாக இருந்தாலும் உடலை மிகவும் ஸ்லிம்மாகவே வைத்திருப்பார்கள். இதற்கு காரணம் அவர்களின் உணவுமுறைதான், அப்படி அவர்கள் என்ன ரகசிய உணவுமுறையை பின்பற்றுகிறாரார்கள் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

    டயட் என்ற பெயரில் எந்த உணவினையும் ஒதுக்கி வைக்காத கொரிய பெண்கள் புரதம் தொடங்கி கார்ப்ஸ் முதல் கொழுப்புகள் வரை, ஆரோக்கியமான கொரிய உணவு அனைத்தையும் அவர்கள் சாப்பிடுகிறார்கள்.

    ஆனால் உணவுகளின் அளவில் கட்டுப்பாடு வைத்திருக்கும் இவர்கள் அளவாகவே சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பாடுக்கு ஏற்ப உடல் செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றனர்.

    கொரிய உணவு மேஜையில் அதிகளவில் இருப்பது காய்கறிகள் தானாம். ஆம் காய்கறிகளை அதிகமாக விரும்பும் இவர்களின் உடல் எடையை ஸ்லிம்மாக வைத்திருக்கின்றதாம்.

    இவர்களின் பெரும்பாலான காய்கறிகள் நார்ச்சத்துள்ளவை, ஆரோக்கியமானவை மற்றும் குறைந்த கலோரி கொண்டவை என்பதால், இது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது.

    கொரியப் பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் வெளியில் சாப்பிடுவதை விட, வீட்டிலேயே சாப்பிடுவார்கள். தங்கள் உடலுக்கு நல்ல உணவுகளை நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் அதற்கேற்ப ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்கிறார்கள்.

    இவர்களின் முக்கிய உணவாக கடல் உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆம் ஆரோக்கியத்திற்கு சிறப்பான கொழுப்பு நிறைந்த மீன்களைத் தவிர, கடற்பாசி ஒரு பொதுவான கொரிய உணவுப் பொருளாகும்.

    வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த கடற்பாசியில் நிறைய நார்ச்சத்து உள்ளதுடன், செரிமானத்திற்கும், நீண்ட காலம் இளமையாகவும் வைக்கின்றதாம்.

    ஆதலால் கடற்பாசியினை வழக்கமான உணவிலிருந்து சூப் வரை அனைத்திலும் சேர்க்கப்பட்டு இவர்கள் சாப்பிடுகிறார்களாம்.

    இறுதியாக கொரிய மக்களைப் பொருத்த வரை எங்கு சென்றாலும் நடப்பதையே விரும்புகின்றனராம். ஆம் பொது போக்குவரத்தினை பயன்படுத்துவதை விட, காலால் நடந்தே செல்வதை தான் வழக்கமாக வைத்துள்ளார்களாம்.

    • ஊறுகாய், கடுகு எண்ணெய் ஊற்றி செய்தால் விரைவில் கெட்டுப்போகாது.
    • வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி ஆப்பம் வார்த்தால் சுவையாக இருக்கும்.

    * பொதுவாக எந்த ஊறுகாய் செய்தாலும் கடுகு எண்ணெய் ஊற்றி செய்தால் விரைவில் கெட்டுப்போகாது. வடநாட்டினர் பெரும்பாலும் பின்பற்றும் வழியும் இதுதான்.

    * குலோப்ஜாமூனை ஆறவைத்த சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்தால் விரிசல் விழாது, உடைந்தும் போகாது.

    * முந்திரி பருப்பை எறும்பு அரிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

    * பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து செயற்கை கலருக்கு பதிலாக பயன்படுத்தலாம். உணவுப் பொருட்கள் பார்ப்பதற்கு அழகான நிறங்களில் இருக்கும். உடலுக்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

    * தேங்காயோடு பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் தேங்காய் சட்னி மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    * கோதுமை மாவு போட்டு வைக்கும் டப்பாவில் கொஞ்சம் பிரியாணி இலைகளையும் சேர்த்தால் வண்டு வராது.

    * சமையல் செய்யும்போது உடலில் சூடான எண்ணெய் பட்டுவிட்டால், அந்த இடத்தில் உருளைக்கிழங்கை அரைத்து பூசினால் கொப்பளம் வராது.

    * குலோப்ஜாமூன் ஜீரா மீந்துவிட்டால், அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெய்யில் பொரித்தால் சுவையான இனிப்பு பிஸ்கட் ரெடி.

    * ஆப்பத்திற்கு மாவு கலக்கும் போது இரண்டு மஞ்சள் வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி சேர்த்து ஆப்பம் வார்த்தால் மிகுந்த சுவையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது மேலாக சிறிது ரொட்டி தூளை தூவினால் கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

    • பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும்.
    • பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியம்.

    முதல்முறையாக தாயான பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும். குழந்தைகள் பிறந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இளம் தாய்மார்களுக்கு சந்தேகம் இருக்கவே செய்யும். குழந்தையின் அழுகை, குழந்தை பராமரிப்பு வரை எதைக்கண்டாலும் மனதில் ஒருவித அச்சம் இருக்கவே செய்யும்.

    சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சையாக இருந்தாலும் குழந்தை பிறந்த பிறகு மற்றுமொரு சவால் குழந்தை வளர்ப்பு தான். பல பெண்களும் குழந்தை பிறந்தவுடன் கர்ப்பகால அவஸ்தைகள் முடிந்துவிடுவதாக நினைக்கிறார்கள். ஆனால் தாய்மையின் பயணமே அப்போது தான் தொடங்குகிறது. அதிலும் குறிப்பாக முதல் முறை தாயாகியிருக்கும் பெண்கள் அவசியம் குழந்தை வளர்ப்பு பற்றி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதல்:

    பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியம் என்பதை மருத்துவர் குழந்தை பிறந்ததும் வலியுறுத்துவார். பிரசவித்தவுடன் குழந்தைக்கு தரக்கூடிய தாய்ப்பால் சீம்பால் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாலில் குழந்தைக்கு தேவையான எதிர்ப்புசக்தி கிடைக்கும் என்பதால் முதலில் வெளிவரும் மஞ்சள் நிற பாலை குழந்தைக்கு தவிர்க்காமல் கொடுக்க வேண்டும்.

    தாய்ப்பால் கொடுக்கும் நிலை

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள் உண்டு. இளந்தாய்மார்கள் அனைவருமே செவிலியர் அல்லது மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலையை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் முறையை அறிந்து சரியாக பின்பற்றும் போது தாய்ப்பால் சுரப்பும் கிடைக்கும். குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பிணைப்பும் அதிகமாகும்.

    குழந்தையின் அழுகை

    குழந்தையின் அழுகை குறித்து சரியாக தெரியாது என்றாலும் ஓரளவேனும் அதன் அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். பசிக்கான அழுகை, டயப்பர் ஈர அழுகை, வயிற்றுவலிக்கான அழுகை, தூக்கத்துக்கான் அழுகை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி குழந்தையின் அழுகை காய்ச்சல் அல்லது வேறு பிரச்சனைகளால் தீவிரமாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்துகொள்வது அவசியம்.

    குழந்தைக்கான தடுப்பூசி

    பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணையை மருத்துவரே அளிப்பார் என்றாலும் அதை அம்மாக்களும் நினைவுபடுத்தி வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதை நினைவுபடுத்தி முன்கூட்டியே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    குழந்தைக்கான மருந்துகள் பிறந்த நேரத்தில் இல்லை என்றாலும் அதிக காய்ச்சல், சளி, இருமல், தாய்ப்பால் குடிக்காத காலங்களில் அவசரத்துக்கு என்ன செய்ய வேண்டும். எப்போது சிகிச்சைக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதையும் ஆலோசித்து வைத்துகொள்வது நல்லது.

    குழந்தையை குளிக்கவைக்கும் முறை:

    பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் அடுத்த நாள் முதலே குளிக்க வைக்கலாம். ஆனால் அம்மாக்களால் குழந்தையை குளிப்பாட்டுவது சிரமமாக இருக்கும். வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால் எப்படி குழந்தையை குளிக்க வைக்க வேண்டும் என்பதை பற்றி பெற்றோர்கள் இருவருமே தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். 

    குழந்தைக்கு மசாஜ் செய்யும் முறை, அதன் முக்கியத்துவம், தலைகுளியல், குளிக்க வைக்கும் முறை என அனைத்தையும் கற்றுக்கொள்வது நல்லது.

    • தாய்மை என்பது எல்லா பெண்களுக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை.
    • தற்போது மருத்துவத்தில் டெக்னாலஜி ரொம்பவே முன்னேறி உள்ளது.

    ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் அழகான மற்றும் அற்புதமான விஷயம் என்னவென்றால் தாய்மை தான். அந்த தாய்மையை போற்றும் விதமாகத்தான் ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 12-ந்தேதி (இன்று) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆனாலும் தாய்மை என்பது எல்லா பெண்களுக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை. அதிலும் பெண்களுக்கு சிக்கல்கள் பல உள்ளன. இருப்பினும் முன்பு உள்ள காலம்போல் இல்லாமல் தற்போது மருத்துவத்தில் டெக்னாலஜி ரொம்பவே முன்னேறி உள்ளது. அதனை சிலர் அறியாமை அல்லது விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களால் அறியாமல் உள்ளனர். அதிலும் சில பெண்கள் பயத்தின் காரணமாக தாமதமாக டாக்டரிடம் செல்கின்றனர். அடுத்து தவறான புரிதல்களினாலும் குழப்பத்தில் டாக்டரிடம் செல்வதையும் தவிர்த்துவிடுகின்றனர்.

    அதை விடுத்து ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கு இருக்கும் பிரச்சினையை டாக்டரிடம் எடுத்துக்கூறினால் ஆரம்பத்திலேயே அவர்களின் பிரச்சினையை சரிசெய்ய ஏதுவாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு பெண்களுக்கும் அவர்களின் வயதுவரம்பை பொறுத்துதான், கர்பப்பையில் கருமுட்டை வளர்ச்சி அடையும். வயது அதிகமாகும் போது பெண்களுக்கு கருமுட்டையின் வளர்ச்சியும் குறையத் தொடங்கும். இதன் காரணமாகவும் தாய்மையும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

    எனவே, டெக்னாலஜி அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் இனியும் தாமதிக்காமல் டாக்டரை அணுகுவதே சிறந்தது. ஏனென்றால் கருமுட்டை வளர்ச்சி அடையாத பெண்களுக்கு கூட தற்போது ஐவிஎப் (IVF)முறையில் கருமுட்டை செலுத்தி தாய்மை அடையச்செய்யும் வசதிகள் உள்ளன.

    தாய்மை என்பது ஒரு பெண்ணிற்கு மிக முக்கியமான கால கட்டம். பெருமைமிக்க பெற்றோராக மாறி இந்த உலகத்திற்கு புதிய வாழ்க்கையை அறிமுகப்படுத்துவது அவசியம். எனவே திருமணமான பெண்கள் ஒருவருடம் மட்டுமே தாய்மைக்காக காத்திருந்து பார்க்கலாம். இல்லையென்றால் தாமதிக்காமல் டாக்டரை அணுகுவதே சிறந்தது.

    • இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும்.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

    வட்டலப்பம் என்பது இஸ்லாமிய வீடுகளில் திருமண விசேஷங்கள் ரம்ஜான் பண்டிகை போன்றவற்றின் போது பாரம்பரியமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும். இதில் தேங்காய் பால், வெல்லம், முந்திரி பருப்பு, முட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் ஜாதிக்காய் உள்ளிட்ட பல்வேறு மசாலாப் பொருட்களாலும் செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும்.

    இது இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும். இதை வேண்டாம் என்று கூறாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவார்கள். ஆகவே வாயில் வைத்ததும் கரையக்கூடிய இந்த இனிப்பை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    தேங்காய்ப்பால்- 1 டம்ளர்

    முட்டை- 10

    ஏலக்காய்ப்பொடி- சிறிது

    முந்திரிப்பருப்பு- 15

    பாதாம் பருப்பு- 10

    உலர் திராட்சை- 15

    சர்க்கரை- 400 கிராம்

    நெய்- 1 தேக்கரண்டி

    செய்முறை

    முதலில் 10 முட்டைகளை மிக்சியில் அடித்து எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரையை மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    தேங்காயை துருவி மிக்சி ஜாரில் போட்டு கெட்டியான பால் ஒரு டம்ளர் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், அடித்துவைத்துள்ள முட்டையை ஊற்றி, பொடித்துவைத்துள்ள சர்க்கரை மற்றும் தேங்காய்ப் பால், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அடித்து கலக்க வேண்டும்.

    மற்றொரு பாத்திரத்தில் நெய் தடவிவிட்டு அதில், இந்த கலவையை ஊற்ற வேண்டும். பின்னர் குக்கரில் தண்ணீரை ஊற்றி சூடுபடுத்தி, அதினுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து நெய் தடவி வைத்த பாத்திரத்தை குக்கருக்குள் மூடி போடாமல் வைக்க வேண்டும். குக்கரை மூடி 30 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

    30 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும். ஒரு கத்தியை வைத்து குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும். அப்போது சரியாக வெந்துள்ளது என அறிந்து கொள்ளலாம். பாதாம் பருப்பு, முந்திரி, திராட்சை மேலே தூவி பரிமாறவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றும் பரிமாறலாம்.

    • உங்களுக்கு பிடித்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள்.
    • மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டும் எழுதத் தொடங்குங்கள்.

    வாரத்தின் ஆறு நாட்களும் ஒரே வேலையில் மூழ்கி சோர்ந்து போகும் நபரா நீங்கள், அப்படியென்றால் கொஞ்சம் 'ஓய்வு' எடுக்க பழகுங்கள். ஒரே வேலையில் ஈடுபட்டு வரும்போது, அந்த வேலை அப்படியே தடைபட்டு நின்று போக வாய்ப்புள்ளது. இது உங்கள் செயல்திறனை குறைப்பது மட்டுமின்றி, உங்களை அடுத்தகட்டத்துக்கு நகரவிடாமல் நீண்ட நாட்கள் அதே இடத்தில் முடக்கிவிடும்.

    இதுபோன்ற பணி சூழலில் சிக்கியிருப்பவர்கள் அதில் இருந்து மீண்டுவர என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை பார்ப்போம்...

    பயணம் மேற்கொள்ளுங்கள்

    தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். பயணங்களில் கவனம் சிதற வைக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் பயணத்தையும், நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதனை செய்ய பழகுங்கள்.

    தினமும் எழுதுங்கள்

    தினமும் எழுதுங்கள் என்று கூறியவுடன் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். 'நான் ஒரு கணினி பொறியாளர்... நான் எப்படி தினமும் எழுதுவது?' என்று. ஒரு நாளைக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை, மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டும் எழுதத் தொடங்குங்கள். இது மனரீதியாக ஒரு மாற்றத்தை கொடுக்கும்.


    காதலியுங்கள்

    காதல் என்றவுடன் எதிர்பாலின ஈர்ப்பு என்ற அர்த்தம் இல்லை. உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். நீங்கள் செய்யும் சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலையை பற்றிய நினைவு இல்லாத உற்சாகமான வேலைகளில் நாட்டம் செலுத்துங்கள்.

    • வீட்டில் எளிமையாக வளர்க்கக்கூடிய ஒரு வகையான தாவரம்.
    • எரிச்சலான சருமத்தை சரி செய்ய உதவுகிறது.

    சரும பராமரிப்பு என்று வரும்போது அதில் சரியானவற்றைக் கண்டறிவது மிகவும் கடினமாகும். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் சருமப் பராமரிப்புக்கு புகழ்பெற்ற ஒன்றாக மாறியிருப்பது கற்றாழை ஜெல் மட்டுமே. கற்றாழை வீட்டில் எளிமையாக வளர்க்கக்கூடிய ஒரு வகையான தாவரம்.

    தண்ணீர் இல்லாத வறண்ட பிரதேசத்தில் கூட வளரும். இயற்கையின் அதிசயமாகப் பார்க்கப்படும் கற்றாழையில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால், சருமத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இந்த பதிவில் இரவில் முகத்துக்கு கற்றாழை ஜெல் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

    கற்றாழை ஜெல் சருமத்தை வறண்டு போகச்செய்யாமல் பாதுகாக்க உதவுகிறது. இதை இரவில் சருமத்திற்குப் பயன்படுத்தும் போது இயற்கையான ஈரப்பதத்தைப் பராமரிக்கிறது. உங்களுக்கு சென்சிடிவ் அல்லது எரிச்சலூட்டும் சருமம் இருந்தால் கற்றாழை ஜெல் இவை அனைத்தையும் சரி செய்யும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் எரிச்சலான சருமத்தை சரி செய்ய உதவுகிறது.

    நமக்கு வயதாகும்போது நமது சருமம் நெகிழ்ச்சியடைந்து அதன் உறுதித் தன்மையை இழக்கிறது. கற்றாழை ஜெல்லில் இருக்கும் விட்டமின் சி மற்றும் இ உள்ளிட்ட ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுவதால், வயதான தோற்றத்தை தாமதப்படுத்த உதவுகிறது. எனவே தொடர்ச்சியாக இரவில் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள், மெல்லிய கோடுகள் போன்றவை குறையும்.

    முகப்பரு என்பது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான சரும பாதிப்பாகும். கற்றாழை ஜெல் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

    முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள், தழும்புகள் போன்றவை நமது மனநிலையை பெரிதும் பாதிப்பவை. கற்றாழை ஜெல்லில் தழும்புகளை நீக்கும் என்சைம்கள் உள்ளன. எனவே அவை முகத்தில் உள்ள வடுக்களை நீக்க உதவுகின்றன. தினமும் இரவில் முகத்தில் கற்றாழை ஜெல் தடவுவதால் முகத்திற்கு இயற்கையான புத்துணர்ச்சி கிடைக்கிறது.

    • சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.
    • ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது.

    பெண்ணுக்கும், ஆணுக்கும் முடிகொட்டும் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. அதிலும் ஆண்களுக்கு முடி கொட்டி வழுக்கை வந்துவிட்டால் தன்னம்பிக்கை இழந்து அதனால் மிகவும் வறுத்த படுகிறார்கள். தற்சமயம் சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.

    எந்த பிரச்சினையாக இருந்தாலும் சமாளிக்க முடியும். ஆனால் தலை முடி உதிர்வதை தடுப்பதும், அதனால் தலையில் வழுக்கை ஏற்படுவதையும் நம்மால் சமாளிக்கவே முடியாது.

    அவ்வாறு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட அந்த இடத்தில் எவ்வாறு மீண்டும் முடி வளர வைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க...

    வெங்காயம் ஹேர் பேக்

    சின்ன வெங்காயத்தை நன்ற அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த பேஸ்டை உங்கள் தலையில் நன்கு மசாஜ் செய்து தலையில் நன்கு படும் படி ஊற வைக்க வேண்டும். அரைமணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.

    ஆலிவ் ஆயில் மசாஜ்

    ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது. இதனைத் தொடர்ந்து தலையில் தேய்த்து வர, நல்ல முன்னேற்றம் இருக்கும்.

    ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்

    தேன்- 1 டேபிள் ஸ்பூன்

    பட்டை பொடி- 1 டேபிள் ஸ்பூன்

    இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் விட்டு விட வேண்டும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.

    முட்டை ஹேர்மாஸ்க்:

    முட்டையின் மஞ்சள் கருவில் ரத்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒரு முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக் கருவை தனித்தனியாக பிரித்துக்கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் கருவில் ஒரு டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

    இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்து செய்து பின்னர் தலைக்கு குளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.

    ×