என் மலர்tooltip icon

    சமையல்

    கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. இன்று கறிவேப்பிலையில் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கறிவேப்பிலை - 1 கப்
    புளி - சிறிய எலுமிச்சை பழம்அளவு
    துருவிய வெல்லம் - ஒரு கைப்பிடி அளவு
    காய்ந்த மிளகாய் - 4
    கடுகு - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு
    கடுகு பொடி - சிறிதளவு

    செய்முறை:

    புளியையும், மிளகாயையும் சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

    பிறகு கறிவேப்பிலை விழுதைக் கொட்டி கிளறவும்.

    கெட்டி பதத்துக்கு வந்ததும் வெல்லம், உப்பு தூவி கிளறி இறக்கவும்.

    அதனுடன் கடுகு பொடி தூவி பரிமாறலாம்.
    இந்த ஜூஸை சமைக்கத் தேவையில்லை. காலையில் காபிக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம். இந்த சிறுதானியம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பயனளிக்கும்.
    தேவையான பொருட்கள்

    முளைகட்டிய கம்பு    - 1 கைப்பிடி
    தேங்காய் துருவல்     - 1 கைப்பிடி
    ஏலக்காய்        - 2
    வெல்லம் - ஒரு துண்டு

    செய்முறை

    கம்பை இரவில் ஊற வைத்து மறுநாள் முளைக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.

    அதோடு வெல்லம், தேங்காய், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.

    அரைத்த கம்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வடிக்கட்டவும்.

    சுவையான கம்பு ஜூஸ் ரெடி.
    தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு. இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோழி இறைச்சி - அரை கிலோ
    தக்காளி - 3 (நறுக்கவும்)
    சி.வெங்காயம் - அரை கப் (நறுக்கியது)
    பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
    காய்ந்த மிளகாய் - 2 (நறுக்கவும்)
    சிக்கன் மசாலா தூள் - 2 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள், கடுகு - சிறிதளவு
    தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    கோழி இறைச்சியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    அதனுடன் கோழி இறைச்சி துண்டுகளை சேர்த்து கிளறவும்.

    பின்னர் சிக்கன் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.

    ஓரளவு வெந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி மீண்டும் மூடி வைக்கவும்.

    தேங்காய் பால் நன்கு வற்றி குழம்பு பதத்துக்கு வந்ததும் இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு ரெடி.
    அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.
    தேவையான பொருட்கள்

    கம்பு - 1 கப்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கம்பைச் சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்புப் போட்டுக் கொதிக்கவிடுங்கள்.

    தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் கம்பு மாவைச் சேர்த்துக் கட்டிதட்டாமல் கிளறுங்கள்.

    நன்றாக வெந்ததும் இறக்கிவைத்துப் பரிமாறுங்கள்.

    உருண்டைகளாகப் பிடித்தும் சாப்பிடலாம்.

    வெந்தயக் குழம்பு அல்லது கறிக்குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
    சிறுதானியங்களில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று உருளைக்கிழங்கு, தினை மாவு சேர்த்து பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை மாவு - 2 கப்
    உருளைக்கிழங்கு - 2
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    இந்துப்பு - சிறிதளவு
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி நன்றாக மசித்துக்கொள்ளவும்.

    அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, இந்துப்பு, நெய், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    தினை மாவை கலந்து பூரி பதத்துக்கு பிசைந்து கால் மணி நேரம் ஊற வைக்கவும்.

    மாவு பிசைவதற்கு உருளைக்கிழங்கை வேகவைத்த தண்ணீரை சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி பூரிகளாக தேய்த்தெடுத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பூரிகளை போட்டு மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான தினை உருளைக்கிழங்கு மசாலா பூரி ரெடி.
    தோசை, நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பாலக் பன்னீர். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - 2 கட்டு
    கொத்தமல்லி தழை - தேவைக்கேற்ப
    நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
    பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்)
    நெய் - 5 டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 3 (நறுக்கவும்)
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    நறுக்கிய தக்காளி - அரை கப்
    கரம்மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    நறுக்கிய பன்னீர் - 1 கப்

    செய்முறை:

    கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

    பின்னர் அதனை பாத்திரத்தில் போட்டு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

    வெந்ததும், கீரை கலவையை நன்றாக கடைந்து கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் சீரகம், கரம் மசாலா, மஞ்சள்தூள், சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

    பொன்னிறமானவுடன் தக்காளியை கொட்டி கிளறவும்.

    நன்கு வதங்கியதும் கடைந்த கீரையை சேர்க்கவும். அதனுடன் பன்னீர் சேர்த்து 3 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

    கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.

    ஆரோக்கிய பலன்: இதில் மெக்னீசியம், கால்சியம், இரும்புசத்து இருப்பதால் ஆஸ்துமா வராமல் தடுக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். எலும்புகளுக்கும் பலம் சேர்க்கும்.

    குறிப்பு: கீரையை சமைக்கும்போது மூடிவைக்க கூடாது. அப்போதுதான் அதன் நிறம் மாறாது.
    தோசை, நாண், சப்பாத்தி, சூடான சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பச்சை பயிறு குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சை பயிறு  - 1/2 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி     - 1
    மிளகாய்     - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் பச்சை பயிறு, வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு அவித்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கிய பின்னர் அவித்ததைப் கொட்டி உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

    திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தூவி இறக்க வேண்டும்.

    சப்பாத்தி செய்து அதற்கு குருமாவாக பயன்படுத்தலாம். ருசியாக இருக்கும்.

    குறிப்பு:

    * கருவுற்ற பெண்கள் தினமும் முளைகட்டிய சிறுபயிறு எடுத்துக்கொள்வது நல்லது.
    * இரவில் பச்சை பயிறு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாயுவை உற்பத்தி செய்யும்.
    * குழந்தைகளுக்கு அளவாக கொடுக்க வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் வயிறு உப்பிசம் ஏற்படும். பேதியாகலாம்.
    ஜீரண சக்தி குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை, சீறுநீரகப் பாதிப்பு கொண்டவர்கள் மிக குறைவான அளவில் பயன்படுத்த வேண்டும்.
    உடல் உறுப்புகளுக்கு வலிமை சேர்த்து ஆரோக்கியத்தை பேணி காக்கும் தன்மை கொண்ட உணவு வகைகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது இன்றைய காலகட்டத்தில் அவசியமானது.
    தேவையான பொருட்கள் :

    மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை - 1 கட்டு
    தேங்காய் துருவல் - அரை கப்
    நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
    உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
    கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
    நல்லெண்ணெய் (செக்கு எண்ணெய்) - 3 டீஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 3
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    கல் உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து இலைகளை மட்டும் ஆய்ந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    பின்னர் வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானவுடன் தேங்காய் துருவலை போட்டு கிளறி, கீரையை கொட்டி வதக்குங்கள்.

    அதனுடன் உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து இறக்கி பரிமாறவும்.

    ஆரோக்கிய பலன்: கரிசலாங்கண்ணி கீரையில் இரும்பு சத்து, கால்சியம் அதிகம் இருக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிடுவது ஈரல் மற்றும் கண்களுக்கு நல்லது. ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவும்.
    இந்த தொக்கை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் கல்லீரல், சிறுநீரகம், எலும்பு ஆகியவற்றின் ஆரோக்கியம் மேம்படும். தொற்றுக்கிருமிகளின் தாக்கமும் குறையும்.
    தேவையான பொருட்கள் :

    சுண்டைக்காய் - அரை கப்
    தனியா - 2 டீஸ்பூன்
    சின்னவெங்காயம் - 1 கப்
    தக்காளி - 4 (நறுக்கவும்)
    கடலை எண்ணெய் - 5 ஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    உளுந்து பருப்பு - 1 ஸ்பூன்
    கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    பூண்டு - 4 பல்
    கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
    கல் உப்பு - தேவையான அளவு
    புளி கரைசல் - 2 டீஸ்பூன்
    வெல்லம் - அரை டீஸ்பூன்

    செய்முறை:

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் தனியா, தக்காளி ஆகியவற்றை கொட்டி லேசாக வதக்கவும்.

    பின்னர் அதனை ஆறவைத்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, பூண்டு, கடலை பருப்பு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் அதனுடன் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    அதனுடன் வெந்தயம், வெல்லம் ஆகியவற்றை கொட்டி நன்றாக கிளறி இறக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சுண்டைக்காயை கொட்டி லேசாக வதக்கவும்.

    அதனுடன் அரைத்த விழுது, வதக்கிய பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

    பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். தொக்கு பதத்துக்கு வந்ததும் இறக்கவும். இதை 3-4 மணிநேரம் கழித்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

    ஆரோக்கிய பலன்: இந்த தொக்கை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் கல்லீரல், சிறுநீரகம், எலும்பு ஆகியவற்றின் ஆரோக்கியம் மேம்படும். அல்சர் பிரச்சினை, நுரையீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் குறையும். தொற்றுக்கிருமிகளின் தாக்கமும் குறையும். பற்களின் ஆரோக்கியமும் மேம்படும்.
    உடல் நலத்திற்கு வலுசேர்க்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்கள் தாக்காமல் தற்காத்துக்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி உடல் உறுப்புகளின் இயக்கத்தையும் மேம்படுத்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாம்பார் வெங்காயம் - 1 கையளவு
    சிவப்பு குடைமிளகாய் - 2
    மஞ்சள் குடைமிளகாய் - 2
    பச்சை குடைமிளகாய் - 2
    நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
    நறுக்கிய பூண்டு- 1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
    இந்துப்பு - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    3 நிற குடைமிளகாய்களையும் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் அகன்ற பாத்திரத்தை சிறு தீயில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் சிறிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை கொட்டி தாளிக்கவும்.

    பின்னர் குடைமிளகாய்களை கொட்டி அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் இஞ்சி, உப்பு சேர்த்து வேகவைத்து இறக்கி பரிமாறலாம்.

    நன்கு மொறுமொறுவென்று இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதிக தண்ணீர் சேர்த்து வேகவைத்தால் அதிலிருக்கும் புரத சத்து வீணாகிவிடும்.

    ஆரோக்கிய பலன்: பச்சை குடைமிளகாயை காட்டிலும் சிவப்பு குடைமிளகாயில் பீட்டா கரோட்டின் 11 மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் வைட்டமின் சியும் ஒன்றரை மடங்கு அதிகம் இருக்கிறது. இரும்பு சத்தும் அதிகம் நிரம்பியிருக்கிறது. எனவே கண்களுக்கு மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு திறனும் அதிகரிக்கும். சருமம், முடி, விரல் நகங்களுக்கும் அதிக வலிமையை கொடுக்கும்.

    குறிப்பு: பெரிய வெங்காயத்தை காட்டிலும் சாம்பார் வெங்காயத்தில் புரதசத்து அதிகம் இருக்கிறது. அதனை பச்சையாகவோ அல்லது தயிர் பச்சடியாகவோ சாப்பிட்டுவந்தால் அதிக புரத சத்து உடலுக்கு கிடைக்கும். சின்ன வெங்காயத்தின் நுனி மற்றும் அடி பகுதிகளை லேசாக நறுக்கினாலே போதும். அதிகமாக நறுக்கி வீணாக்கினால் அதிலுள்ள புரத சத்துகள் குப்பைக்கு சென்றுவிடும்.
    சப்பாத்தி, நாண், தோசை, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெண்டைக்காய் பாதாம் கிரேவி. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாதாம் பருப்பு - 10
    வெண்டைக்காய் - 100 கிராம் (நறுக்கவும்
    பெ.வெங்காயம் - 2 (நறுக்கவும்)
    தக்காளி - 3 (நறுக்கவும்)
    இஞ்சி - சிறிதளவு
    ஏலக்காய் - 2
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    உலர்ந்த வெந்தயக்கீரை - சிறிதளவு
    கரம் மசாலாத்தூள், சோம்புத்தூள் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    சுடுநீரில் பாதாம் பருப்பை கால் மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்கிக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெண்டைக்காயை கொட்டி வதக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் பாதாம், ஏலக்காய், வெங்காயம், சோம்புத்தூள், வெந்தயக்கீரை, இஞ்சி ஆகியவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    தக்காளியையும் தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதனுடன் அரைத்து வைத்த விழுதை கொட்டி வதக்க வேண்டும்.

    அடுத்து தக்காளி விழுதையும் சேர்த்து கிளறிவிட வேண்டும்.

    பின்னர் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிவிடவும்.

    இறுதியில் வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் பாதாம் கிரேவி ரெடி.
    கடுகு கீரை தொக்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மற்றும் தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். எலும்புகளும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கடுகு கீரை - 2 கட்டு  
    பாலக்கீரை - 1 கட்டு  
    வெந்தயக்கீரை - 1 கட்டு  
    நறுக்கிய சிறிய வெங்காயம் - அரை கப்  
    பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)  
    இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன்  
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்  
    சீரக தூள் - அரை டீஸ்பூன்  
    கடுகு எண்ணெய் - 3 டீஸ்பூன்  
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்  
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கடுகு கீரை, பாலக்கீரை, வெந்தய கீரை ஆகியவற்றை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

    அதனுடன் மிளகாய், இஞ்சி, உப்பு, போதுமான நீர் சேர்த்து அரை மணி நேரம் வேக வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரக தூள், பூண்டு, வெங்காயம், மிளகாய் தூள் ஆகியவற்றை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    அதனை வேகவைத்த கீரை வகைகளுடன் சேர்த்து கொதிக்கவைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

    சாப்பிடும்போது இந்த தொக்குடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.

    குறிப்பு: பச்சையாக கடுகு கீரை கிடைக்கவில்லை என்றால் பதப்படுத்தப்பட்ட டின் கீரையை வாங்கி பயன்படுத்தலாம். ஏனெனில் கடுகு கீரை வருடத்தில் 4 மாதங்கள் மட்டும்தான் கிடைக்கும்.

    ஆரோக்கிய பலன்: கடுகு கீரை தொக்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மற்றும் தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். எலும்புகளும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். புற்றுநோய் வராமலும் தடுக்கும்.
    ×