என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    ஒற்றைக் குழந்தைகளின் இயல்புக்கு பெற்றோர்களும் வளர்ப்பு முறையும்தான் காரணமே தவிர, அவர்கள் வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளையாய் இருப்பதல்ல.
    ஒற்றைக் குழந்தைகள், பிரைவஸியை விரும்புபவர்களாகவும், சுயநலமுடையவர்களாகவும், எளிதில் பிறருடன் சேராதவர்களாகவும், சேர முடியாதவர்களாகவும், திமிர் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள் என்னும் பொதுவான கருத்தில் உண்மையே இல்லை. ஓர் ஒற்றைக் குழந்தை, உறவினர்கள் நிறைந்த பெரிய குடும்பத்தில், பகிர்ந்து வாழும் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டது என்றால், அதுவும் பகிர்ந்துகொள்ளுதலைக் கற்றுக்கொள்ளும்.

    விளையாட்டுத் துணைக்கும் பேச்சுத்துணைக்கும் யாருமே இல்லாமல் தனித்து விடப்பட்ட குழந்தை, பேசிப் பழக வாய்ப்பு கிடைக்காமல் போவதால்தான், பிற்காலத்தில் மற்றவர்களுடன் சேர முடியாத குணம்கொண்டவராக நேர்கிறதே தவிர, அது அவரின் இயல்பு கிடையாது.

    அதேபோல, இரண்டு பிள்ளைகளாகப் பிறந்தாலும், தனிக் குடும்பத்தில், பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில், பிள்ளைகள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி விளையாடாமல், இரண்டு அறைகளிலும் இரண்டு டி.வி-க்கள், கேட்ஜெட்ஸில் மூழ்கும் பழக்கம் என்றிருக்கும் வீடுகளிலும், அந்தக் குழந்தைகளுக்கு மேற்சொன்ன இயல்பு மாற்றங்கள் ஏற்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஒற்றைக் குழந்தைகளைப் பற்றி இன்னொரு விஷயமும் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள், பெற்றோரால் வளர்க்கப்படும்போது ஒரு முறையிலும், பாட்டி தாத்தாவிடம் வளரும்போது இன்னொரு முறையிலும் வளர்வார்கள். அவை இரண்டு முறைகளே அன்றி, ஒன்று தவறு, இன்னொன்று சரி என்றெல்லாம் கிடையாது. அதனால் குழந்தைகளின் குணாதிசயங்கள், வளரும் சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல வேறுபடுகின்றன. குழந்தை வளர்ப்பில் வெவ்வேறு நிலைகளில் பல இடர்ப்பாடுகள் வரும், போகும். அவற்றைப் பொறுத்தும் ஒரு குழந்தையின் வளர்ச்சி இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

    இனிமேல், பிடிவாதக்கார குழந்தை என்றாலே, `அது வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளையாக இருக்கும்' என்று தீர்மானித்துவிடாதீர்கள். குழந்தைகள், பெற்றோர்கள் கற்றுக்கொடுப்பதைச் செய்வதில்லை. ஆனால், தங்கள் பெற்றோர் செய்வதைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள். அதனால், அவர்களின் இயல்புக்கு பெற்றோர்களும் வளர்ப்பு முறையும்தான் காரணமே தவிர, அவர்கள் வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளையாய் இருப்பதல்ல.
    தினசரி ஒரு மாதிரி வினாத்தாளை பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட கால அளவுக்குள் விடையளிப்பது, தினசரி பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.
    மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித் தகுதியிலான லோயர் டிவிஷன் கிளார்க், ஷார்ட்டிங் அசிஸ்டன்ட், போஸ்டல் அசிஸ்டன்ட், ஜூனியர் செகரட்டேரியேட் அசிஸ்டன்ட் ஆகிய பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணிகளுக்கு வரும் 10-ந்தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    இந்த பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு வரும் மார்ச் 16-ந்தேதி முதல் நடக்கிறது. தேர்வுக்கு இன்னும் சுமார் 3 மாதங்கள் இருக்கிறது. அதுவரை தேர்வுக்கு எப்படி திட்டமிட்டு தயாராக வேண்டும் என்று பார்க்கலாம்...

    முதலில் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை 4 அல்லது 5 முறை பொறுமையாக படித்து புரிந்து கொள்ளுங்கள். பின்பு, தலைப்பு வாரியாக பாடக்குறிப்புகளை சேகரியுங்கள். சந்தையில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன.

    இவற்றை நேரடியாக படிப்பதைவிட, பாடப்புத்தகங்களை படித்து சுயமாக குறிப்பெடுத்து படித்த பின்பு, படிப்பது நல்ல பலனைத் தரும். ஆங்கிலப் பகுதி மற்றும் புத்திக்கூர்மை பகுதிக்கு நேரடியாக சந்தையில் கிடைக்கும் இவை சார்ந்த புத்தகங்களை படிக்கலாம்.

    முந்தைய தேர்வு வினாத் தாள்களை பொறுமையாக வாசித்து, வினாக்கள் கேட்கப்படும் விதம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். பின்பு எந்த பகுதிக்கு அதிக நேரம் படிக்க வேண்டும், எந்த பாடத்திற்கு பிறரின் உதவி தேவை, எத்தனை நாட்களுக்குள் பாடத்திட்டத்தை படித்து முடிக்க முடியும் என்பது குறித்து ஆழமாக சிந்தித்து ஒரு கால அட்டவணையை உருவாக்குங்கள்.

    உதாரணமாக, சிலருக்கு கணிதப்பகுதியில் பிறரின் உதவி தேவைப்படலாம். சிலருக்கு ஆங்கிலப் பகுதியில் தேவைப்படலாம்.

    தினமும் பயிற்சி

    எத்தனை நாட்களுக்குள் பாடத்திட்டத்தை முடிக்கலாம் என்பது அவரவர் கல்வித் திறன், தேர்வுகள் எழுதிய அனுபவம், தினசரி படிக்கும் முறை, ஆர்வம் ஆகியவற்றை பொறுத்தது. எவ்வாறாயினும், அதிகபட்சம் 45 தினங்களுக்குள் ஓரளவு முடித்துவிடலாம்.

    பின்பு தினசரி ஒரு மாதிரி வினாத்தாளை பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட கால அளவுக்குள் விடையளிப்பது, தினசரி பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.

    ஆங்கிலம்

    பெரும்பாலானவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தயங்கக் காரணம் ஆங்கிலப் பகுதி மற்றும் கணிதப்பகுதியைக் கண்டுதான். ஆங்கில வினாக்கள் நீங்கள் நினைக்குமளவிற்கு கடினமானவை அல்ல.

    பத்தாம் வகுப்பு தரத்தில்தான் கேட்கப்படுகின்றன. அவற்றை ஒருமுறை திருப்பிப் படித்தாலே போதுமானது. எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள், பயிற்சி ஏடுகள் போன்றவற்றையும் படிப்பது நல்லது.

    இலக்கணத்தில் தெளிவிருந்தால் இப்பகுதியில் முழு மதிப்பெண் பெற முடிவதுடன், குறைந்த நேரத்திலேயே அடுத்த பகுதிக்கு செல்ல முடியும் என்பது சிறப்பு. ஸ்பாட்டிங் எரர் பகுதி வினாக்கள், வங்கித் தேர்வு வினாக்கள்போல சிரமாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முந்தைய கேள்வித்தாள்களைப் பார்த்தால் நல்ல தெளிவு கிடைக்கும்.

    கணிதம்

    கணிதப்பகுதி, மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது சற்று கடினமான பகுதி மற்றும் தேர்வில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் பகுதியாகும். ஆனால், வங்கித் தேர்வில் இடம்பெறும் கணக்குகளைப் போல் அவ்வளவு கடினமான பகுதி அல்ல.

    நம்பர் சிஸ்டம் மற்றும் அல்ஜிப்ரா பகுதிகளில் இருந்து படிக்க ஆரம்பிப்பது சிறப்பு. பள்ளி பாடப்புத்தகங்களை படித்த பின்பு, சந்தையில் கிடைக்கும் புத்தகங்களில் உள்ள கணக்கு மாதிரிகளுக்கு பயிற்சி செய்யுங்கள். எளிமையான வழியில் எந்த புத்தகத்தில் கணக்கு தீர்வு செய்யப்பட்டிருக்கிறதோ அதை குறிப்பெடுத்து பின்பற்றுங்கள்.

    தினசரி குறைந்தபட்சம் ஒருமணி நேரம் கணிதப்பகுதிக்கென ஒதுக்கி பயிற்சி செய்யுங்கள். தேர்வில் ஒரு கணித வினாவிற்கு விடை சரியாக வரவில்லையெனில் அதையே யோசித்து நேரத்தை வீணாக்காமல் அடுத்த வினாவிற்கு சென்றுவிடுங்கள்.

    ரீசனிங்

    இப்பகுதிக்கு இதர மூன்று பகுதிகளைப் போல் மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. லாஜிக்கை புரிந்து கொண்டாலே போதும். அதிக நேரம் பயிற்சி செய்தல் நல்ல பயனைத் தரும். அதிக மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம். ஒரே நேரத்தில் இருவேறு ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களை படிப்பதை தவிர்க்கலாம். ஒன்றை முழுமையாக படித்த பின்பு, அடுத்தவர் எழுதிய புத்தகத்தை படிப்பது தெளிவைத் தரும். குழப்பங்களை தவிர்க்கும்.

    பொது அறிவுப் பகுதி

    இந்திய வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, பொது அறிவுப் பகுதி மற்றும் நடப்பு நிகழ்ச்சிகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன.

    ஆறாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள NCERT புத்தகங்களை படிக்கலாம். அதற்கு முன்பாக ஐந்து வருடத்திற்குரிய முந்தைய தேர்வு வினாக்களை பொறுமையாக படிப்பதன் மூலம் எந்தப் பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன, கேள்விகள் கேட்கப்படும் முறை மற்றும் தரம் ஆகியவை குறித்து ஒரு தெளிவு கிடைக்கும். அதன் பின்பு பாடப்புத்தகங்களைப் படிப்பது நல்ல பலனைத் தரும்.

    இரண்டாம் கட்டத் தேர்வு 28.06.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, தினமும் காலை, மாலை தட்டச்சு பயிற்சி செய்யுங்கள். கட்டுரைத் தேர்வுக்கும் போதிய அவகாசம் கிடைக்கும்.

    பயம் தவிர்ப்போம்

    எஸ்.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கு தமிழக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிப்பதில்லை. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி “ நான் ஏன் இத்தேர்வினை எழுத முடிவு செய்துள்ளேன்” என்பதுதான். உங்களது குறிக்கோள் தெளிவானதாக, உறுதியாக இருக்கும்பட்சத்தில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

    பயிற்சி வகுப்புக்கு செல்வது உங்கள் திறமையைப் பொறுத்து நீங்களே முடிவு செய்யலாம். ஆனால் கண்டிப்பாக பயிற்சியும், முயற்சியும் அவசியம். முந்தைய வினாக்களை படிப்பது, தகுந்த தரமான புத்தகங்களை படிப்பது, நிறைய பயிற்சி வினாக்களை செய்து பழகுவது ஆகியவை சேர்ந்தே உங்கள் வெற்றியை தீர்மானிக்கும். எனவே, தயக்கமின்றி முழு மனதுடன் இத்தேர்வுகளுக்கு தயார் செய்யுங்கள்.

    ஆயிரம் மைல்கள் கொண்ட பயணம் நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியில்தான் ஆரம்பமாகிறது. எனவே, இத்தேர்வுக்கு தயார் செய்வதும் ஒரு பயணமே. முழு பயணத்திற்கும் முறையாக திட்டம் வகுத்து முதல் அடியை இன்றே எடுத்து வையுங்கள், உங்கள் இலக்கை அடைய வாழ்த்துகள்.

    நம்பிக்கையுடன் இன்றே விண்ணப்பியுங்கள். விடாமுயற்சியுடனும், ஆர்வத்துடனும் தேர்வுக்கு தயாராகுங்கள். இந்த 2020 புத்தாண்டில் உங்கள் கனவு நனவாகும். வாழ்த்துக்கள்...

    -எம்.கருணாகரன், இராமநாதபுரம்.
    பள்ளிப் படிப்பில், மூன்று வழிமுறைகளை நாம் கட்டாயம் முன்னெடுக்க வேண்டும்: 1. சேர்ந்து படித்தல்; 2. உரக்கப் படித்தல்; 3. மனப்பாடம் செய்தல். நன்றாக இதனை மனதில் பாடப் படுத்திக் கொள்வோம்.
    ‘அறம் செய விரும்பு’ ‘ஆறுவது சினம்’ சிறுவர்களின் குரல், தெரு முழுக்கக் கேட்கும். உரக்கப் படிப்பது மிகவும் ஆரோக்கியமான வழிமுறை.

    இதே போல்தான், ‘மனப்பாடம்’ செய்வதும். ஒரு சிறிய கிராமம்; அங்கே ஒரு பழைய கோவில் வாசலில் ஒரு முதியவர். எப்போதோ ஓரிருவர் கோவிலுக்கு வருவார்கள். தானே வலியச் சென்று, அவர்களிடம் விடாப் பிடியாய் பேசுவார் முதியவர்.

    பள்ளிப் படிப்பை தாண்டாதவர்தான். ஆனால், அவர் பேச பேச வியப்பாய் இருக்கும். தேவாரம், திருவாசகம் தொடங்கி, சுதந்திரப் போராட்ட வரலாறு, இந்தியா பற்றிய பூகோளத் தகவல்கள், வெவ்வேறு தலைவர்களின் வரலாறு வரை ‘புட்டு புட்டு’ வைப்பார். சரியாகவும் இருக்கும்; சுவையாகவும் இருக்கும். இவரை போன்றவர்கள் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள்.

    உண்மையில், ‘அந்தக் கால’ மனிதர்கள் எல்லாருமே இப்படித்தான். சகட்டு மேனிக்கு செய்திகளை அள்ளி வீசுவார்கள். எப்படி சாத்தியம் ஆயிற்று..? ‘மனப்பாடம்’. எனக்கு எல்லாப் பாட்டுமே மனப்பாடமா தெரியும்’ என்று சொல்வதில் ஒரு பெருமிதம் இருந்தது அன்று.

    இன்றைக்கு... அறிஞர்கள், கல்வியாளர்கள் அரசியல்வாதிகள், ஆர்வலர்கள், சினிமா காரர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள்.... அத்தனை பேரும், மனப்பாடம் என்றாலே அறிவுக்குப் புறம்பானது என்று பேசித் திரிகிறார்கள். இது ஒரு ‘நாகரிகம்’ ஆகி விட்டது. பழம்பெரும் செய்யுள்கள், கணித சூத்திரங்கள், வாய்ப்பாடுகள், அறிவியல் தேற்றங்கள் (தியரி), வரலாற்று நிகழ்வுகள், இலக்கணக் குறிப்புகளை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொண்டால், ‘என்றைக்கும்’ உதவும்.

    ‘மனப்பாடம்’ செய்கிற போது, பாடத்துடன் மனம் ஒன்றிப் போகிறது. ஒருமுகத் திறன் (‘கான்சன்ட்ரேஷன்’) வரப்பெறுகிறது; வலுப்பெறுகிறது. மூதுரை, நல்வழி, திருக்குறள் உள்ளிட்ட அறநெறிகளுக்குப் பொருள், அநேகமாக, ‘படிக்குற வயசுல’ தெரியாது. வளர வளர புரியத் தொடங்கும். “ஊக்கமது கைவிடேல்” ஆறு வயதில் மனப்பாடமாகப் படித்தது; இருபத்தாறில், தன்னம்பிக்கை ஊட்டுகிறது.

    “அறத்தாறு இதுவென வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை”. ஒருவன் பல்லக்கில் சுகமாய் அமர்ந்து இருக்கிறான்; அதனை பலர், உடல் நோக சுமந்து செல்கிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வு, அறம் வழிப் பட்டது அல்ல. தர்மம் செஞ்ச புண்ணியவான்’ பல்லக்கில் போவதாகச் சொல்வது தவறு. இந்த இடைவெளிக்கு, சமூக அரசியல், பொருளாதாரக் காரணங்கள் உள்ளன. வர்க்க பேதம் குறித்த ஆழமான கருத்தை மிக நுணுக்கமாக எடுத்துரைக்கிறது திருக்குறள்.

    சிறு வயதில் இது புரியுமா...? மனப்பாடம் செய்யும் போது, வரிகள் தெரியவரும் நாளடைவில் உட்கருத்தும் புரிய வரும்.

    இதுதான் கற்றலின் சூட்சுமம். இது தெரியாமல், ‘புரியாம’ படிக்கிறது ‘வேஸ்ட்’ என்று அக்கறையுடன் கவலைப்படுகிறார்கள்!

    இப்படி படித்துதான், சர் சி.வி.ராமன். டாக்டர் ராதாகிருஷ்ணன், இளைஞர்களின் ‘ரோல்மாடல்’ டாக்டர் அப்துல் கலாம் போன்ற பெருமக்கள் உருவானார்கள். வாய்ப்பாடு, மனப்பாடமாக இருக்கப் போய்த்தான், பொதுக் கணிதம் (‘அரித்மெடிக்’) பகுதியில் தலைமுறை தலைமுறையாக நாம் சிறந்து விளங்குகிறோம். இந்த அடித்தளம் வலுவாக அமைந்ததால்தான், கணிதமேதை ராமானுஜம், தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்றாலும், பிறகு பெரிய அளவில் சாதிக்க முடிந்தது.

    இன்று என்ன நிலைமை...? இரண்டால் பெருக்குவதற்குக் கூட, ‘கால்குலேட்டர்’ தேடும் தலைமுறையை உருவாக்கி வைத்து இருக்கிறோம். இத்தனை பலவீனமான ஆழ்மனது அறிவை வைத்துக் கொண்டு, ஆராய்ச்சிக்கு முனைகிறோம்! ஒரு சிலர் ஒருவேளை சாதிக்கவும் செய்யலாம். தமிழ்ச் சமுதாயத்தின் ஒட்டுமொத்த கணித அறிவு, அபாரமானது. சின்னஞ்சிறு கிராமங்களில் கூட, கணிதப் பாடத்தில் வெளுத்துக் கட்டுகிற பிள்ளைகள் ஏராளம். வழி கோலியது அவர்களின் ‘தக்க வைக்கும் திறன்’. இதற்கு உதவியது மனப்பாடப் பயிற்சி.

    தங்கு தடையற்ற மொழி நடைக்கும், சிறு வயதில் பயின்ற மனப்பாடச் செய்யுட்கள்தான் காரணம். இதற்கு எதிராகப் பேசியதால் என்ன ஆயிற்று..? தமிழ்நாட்டில் தமிழர்களின் சொல்வளம், குன்றிப் போய் விட்டது; மிகச் சில சொற்களையே திரும்பத் திரும்ப, எழுதுகிறோம்; பேசுகிறோம். நம் தாய்மொழியை அநியாயத்துக்குச் சுருக்கி விட்டோம். போதாக் குறைக்கு, ‘காது கொடுத்துக் கேட்க முடியாத’ உச்சரிப்பு வேறு. இந்தக் கோளாறுகள் எல்லாம், இறக்குமதி செய்யப்பட்ட ‘நாகரிக’ சிந்தனையால் விளைந்தவை. புரிந்து படிக்கட்டும்; நல்லதுதான். அதேசமயம், ‘புரியாமலே’மனப்பாடம் செய்து ஒப்புவிக்கிற நடைமுறை, ‘அறிவு ஜீவிகள்’ சொல்வது போல, அறிவுக்குப் புறம்பானது அல்லவே அல்ல. காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாய் கடைப்பிடிக்கப்படுகிற, கற்றல் முறைகளில் ஒன்றினை, ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது, சற்றும் அறிவுடைமை ஆகாது.

    புதிய கல்விக் கொள்கை மனப்பாடம் செய்தல், ஒப்புவித்தல் முறைக்கு எதிராகப் பேசுகிறது. இந்த முறையை, குருட்டுத் தனமாகக் கற்றல் என்கிறது. இதை வன்மையாக கண்டிக்க வேண்டும். கற்றலும் ‘குருட்டுத் தனமும்’ எப்படி ஒன்று சேர முடியும்..? ‘குருட்டாம் போக்கில்’ படிக்கிற கிராமப்புற மாணவர்களுக்கு இருக்கிற சொல்வன்மை’ நகரப் பெற்றோர்களால், ‘புரிந்து படிக்கிற’ பிள்ளைகளின் ஆற்றலை விட, பல மடங்கு அதிகம். கவனத்தில் கொண்டோமா...? புரிந்து படிப்பது எல்லாராலும் முடியாது.

    ஆனால் மனப்பாடம் செய்தல் அனைவராலும் முடியும். சிலர் ஒருமுறை படித்தாலே, நினைவில் வைத்துக் கொள்வார்கள்;

    சிலருக்கு பத்து முறை படித்தால்தான் ஞாபகம் வரும் அவ்வளவுதான். புரிந்து கொள்ள யாரேனும் உதவி செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் படித்து மனப்பாடம் செய்ய, யார் தயவும் தேவை இல்லை. பொதுத்தேர்வுகளுக்கு தயாராகிற நேரம் வந்து விட்டது. முக்கிய பகுதிகளை மனப்பாடமாய்த் தெரிந்து வைத்துக் கொண்டால், பெரிதும் உதவும். அலட்சியம் வேண்டாம்.

    பள்ளிப் படிப்பில், மூன்று வழிமுறைகளை நாம் கட்டாயம் முன்னெடுக்க வேண்டும்: 1. சேர்ந்து படித்தல்; 2. உரக்கப் படித்தல்; 3. மனப்பாடம் செய்தல். நன்றாக இதனை மனதில் பாடப் படுத்திக் கொள்வோம்.

    போலித்தனம் இல்லாமல், நாளைய தலைமுறைக்கு நல்லதைச் சொல்வோம்; நல்லதைத் தருவோம்.

    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி,
    வருமானவரித்துறை அலுவலர்.
    இன்றைய தினம் பல பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைக்கு வந்துள்ளது ‘கற்றல் குறைபாடு’ என்பதை ஆரம்பத்தில் கணிக்கத் தவறி, பிரச்சினை முற்றிய பிறகு மருத்துவ ஆலோசனைக்கு வருவது அதிகரித்து வருகிறது.
    இந்தியாவில் 100 குழந்தைகளில் 12 பேருக்கு இது இருக்கிறது. அதிலும் ஆண் குழந்தைகளுக்குத்தான் அதிகம். இது பெரும்பாலும் பரம்பரைத் தன்மையால் ஏற்படுகிறது. இந்தப் பாதிப்பை அறிவதற்குத் தனிப் பரிசோதனை எதுவும் இல்லை. பொதுவாக, குழந்தைக்கு மூன்று வயது ஆகும்போது இந்தக் குறைபாடு இருப்பதைப் பெற்றோரே தெரிந்துகொள்ளலாம். குழந்தைக்கு வாசிப்பது, எழுதுவது, புதிய சொற்களை உச்சரிப்பது, ஸ்பெல்லிங் சொல்வது போன்றவற்றில் சிரமங்கள் ஏற்படும். குழந்தை பள்ளிக்குச் சென்றதும் எழுத்துகள் மட்டுமன்றி, எண்கள், குழந்தைப் பாடல்கள், ஒரே மாதிரி ஒலிக்கும் சொற்கள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதிலும் பிரச்சினை இருப்பதைக் காணமுடியும். ஒரு மொழியைத் தெரிந்துகொள்வதிலும் அதன் பொருளைப் புரிந்து கொள்வதிலும் சிக்கல் ஏற்படலாம்.

    முக்கியமாக, இந்தக் குழந்தைகள் கணக்குப் பாடத்திலும் ரைம்ஸ் எழுதுவதிலும் சொல்வதிலும் சிரமப்படுவார்கள். வீட்டுப்பாடம் எழுதுவதற்கு அடம் பிடிப்பார்கள். புதிய சொற்களைக் கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் இருக்காது. பென்சிலைப் பிடித்து எழுதுவது, மனப்பாடம் செய்வது, தகவல்களை நினைவில் வைத்துக்கொள்வது, கதை சொல்வது, இலக்கணம் புரிவது போன்ற திறமைகள் குறைவாக இருக்கும்.

    இதற்குத் தனிச் சிகிச்சை எதுவுமில்லை. அதேநேரம் குழந்தைகள் படிப்பில் பின்னடைவதைப் பார்த்து, எதிர்கால வாழ்க்கை இருண்டு விடுமோ எனப் பெற்றோர் கவலைப்படவும் தேவையில்லை. பெற்றோர் இந்தக் குழந்தைகளிடம் குற்றம் காணாமல், குறை கூறாமல், அதிகம் கடிந்து கொள்ளாமல் அன்போடு அரவணைத்துக் கவனிக்க வேண்டியது மிக முக்கியம். இந்தக் குழந்தைகளுக்கென பள்ளிக் கல்விமுறை சாராத சிறப்புப் பயிற்சிகள் தரும் மையங்களும் பள்ளிகளும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இங்கு குழந்தையின் அறிவுத்திறனைப் பரிசோதித்து, என்ன காரணத்தால் கற்றலில் குறைபாடு உள்ளது எனத் தெரிந்து, அதற்கேற்ப தனித்தனி பயிற்சிகளைத் தருகிறார்கள். குழந்தையின் பார்த்தல், கேட்டல் முறைகளை மட்டும் பயன்படுத்தாமல் தொடுதல், வாசனை, சுவை ஆகியவற்றுடன் புலன் தொடர்பான கற்பித்தல் முறைகளைக் கையாண்டு கற்றல் திறனை அதிகப்படுத்து கிறார்கள். எழுத்துகளை போர்டில் எழுதிப்போடுவது மட்டுமல்லாமல், ஓர் எழுத்தை விரல்களால் உருவகப்படுத்திக் காட்டிப் பாடம் நடத்துவதை இதற்கு ஓர் உதாரண மாகச் சொல்லலாம். அடுத்து, குழந்தைகளின் ஆர்வத்துக்கு ஏற்ப, அவர்கள் விரும்பும் துறையில் பயிற்சி அளிக்கும்போது சிறப்பிடம் பெறுகிறார்கள்.
    தெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மலையேறிவிட்டது. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்...
    “ஓடி விளையாடு பாப்பா” என்று பாரதியார் கூறினார். ஆனால் ஓடிவிளையாடும் பண்பு குறைந்துவிட்டது. செல்போனில் விளையாடும் வழக்கம் பெருகிவிட்டது.

    நம் முன்னோர்கள் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகிப் போய்விட்டது. அந்த காலங்களில் பெரியவர்கள் வீட்டின் திண்ணையில் விளையாடும் விளையாட்டுகள், இன்று நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் வந்துவிட்டது. தெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மலையேறிவிட்டது. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்...

    1. பல்லாங்குழி

    வட்டமாக குழி உள்ள பலகையில் புளியங்கொட்டை அல்லது முத்துகளை கொண்டு விளையாடும் பல்லாங்குழி மிகவும் புகழ்பெற்ற விளையாட்டாகும். குழந்தைகள் இந்த விளையாட்டை விளையாடுவதால் விரலுக்கு பயிற்சியும், கணக்கு பயிற்சியும் பெற முடியும். முத்துகளை நகர்த்தும் வகையால், இருக்கும் இடத்தில் இருந்து எடுத்து, இல்லாத இடத்திற்கு கொடுக்கும் குணம் வளரும்.

    2. தாயம்

    இரண்டு அல்லது நான்கு பேர் இணைந்து தாயம் மற்றும் காய்களை கொண்டு விளையாடும் சதுரங்க விளையாட்டு தாயம் எனப்படுகிறது. ஒவ்வொருவரும் நான்கு காய்களை கொண்டு விளையாடுவர். முதலில் யார், சதுரங்க பலகையைச் சுற்றி, மற்றவரின் காய்களை வெட்டி அவர்களிடம் இருந் தப்பித்து, தனது கட்டத்தின் உச்சிக் கொம்பு ஏறி, கனி பெறுவார் என்பது சுவாரஸ்யம் கூட்டும் அம்சமாகும். மகாபாரத காலத்தில் இந்த விளையாட்டு விளையாடப்பட்டதாக வரலாறு உண்டு. காய்களை வெட்டி வீழ்த்தும்போது, மீண்டும் முயன்று தொடங்கி முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் எழும். கணிதத் திறன் வலுப்பெறும். சாதுர்யம், மன ஆற்றல் மேம்படும்.

    3. கண்ணாமூச்சி

    குழு உணர்வையும், நட்பையும் வளர்க்கும் விதமாகக் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளில் மிகச் சிறந்தது கண்ணாமூச்சி.

    ஒருவர் கண்ணை மூடிக்கொள்ள மற்றவர்கள் அருகில் ஒளிந்து கொள்ள வேண்டும். பின்னர், ஒளிந்திருப்பவா்களை கண்டுபிடிப்பதே கண்ணாமூச்சி விளையாட்டாகும். ஒளிந்து இருப்பவர்களை கண்டுபிடிப்பதன் மூலம் பொறுமையும், நிதானத்தையும் பெறலாம். சாதுர்யத்திறனும் வளரும்.

    ஆட்டங்கள் பலவிதம்

    இவை மட்டுமல்லாமல், கபடி, உறியடி, கோலி, நொண்டி, சில்லுக்குச்சி போன்ற ஏராளமான பாரம் பரிய விளையாட்டுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை இன்றைய குழந்தைகள் விளையாடு வதில்லை. இவை அழியாமல் இருக்க, நாம் நமது வருங்கால சந்ததியினருக்கு பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். சத்துணவு, உடற்பயிற்சி, விளையாட்டு களினால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். விளையாட்டு களால் ஒற்றுமை, விட்டுக்கொடுக் கும் மனப்பான்மை, வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மை, நட்புணர்வு, உற்சாகம் போன்ற நற்பண்புகள் வளரும். பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவோம், நற்பண்புகளையும், நற்பலன்களையும் பெறுவோம். 
    கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. நிறைய அக்கறை என்கிற விகிதத்தில் அவர்களை நீங்கள் வளர்ப்பது எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
    இன்றைய தலைமுறைக்கு பிடிவாத குணம் அதிகம் ஆகிவிட்டது. ஒரு பொருளை விரும்பி விட்டால் வாங்கி தந்தே ஆகவேண்டும் என்பார்கள். அந்த நேரங்களில் நீங்கள் அதன் விருப்பத்தை தள்ளி போட வேண்டும். வாங்கி தர மாட்டேன் என்று நீங்களும் பிடிவாதம் பிடிக்காமல் அடுத்த வாரம் வாங்கி தரேன் என்று கூறுங்கள். அந்த நிமிடம் அமைதியாக கேட்கும். அடுத்த நாளே அதை பற்றி மறந்தும் போகும். அதுதான் குழந்தை.

    முரட்டுத்தனமான குழந்தைகளை அப்படியே விட கூடாது. பெரியவர்களிடம் யோசனை கேளுங்கள். அல்லது குழந்தை நல ஆலோசகரின் உதவி உங்களுக்கு அவசியம் தேவைப்படும். கோபம் வந்தால் பொருள்களை உடைப்பது, வீசி எறிவது , அடிப்பது போன்ற காரியங்கள் குழந்தைகளை செய்ய அனுமதிக்காதீர்கள். கொஞ்ச நேரம் வீட்டிற்கு வெளியே நிற்க வையுங்கள். தனிமை அவர்களுக்கு பயத்தை கொடுக்கும். கொஞ்சம் முரட்டுத்தனம் குறையும்.

    குழந்தைகள் அவர்கள் சூழலை அனுசரித்துதான் தங்கள் நடவடிக்கைகளை செய்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நீங்கள் கத்துவது சண்டையிடுவது போன்றவற்றை செய்யாதீர்கள். முக்கியமாக குடும்ப சண்டைகளை அவர்கள் முன்னிலையில் தவிருங்கள். அதனால் அவர்கள் மனம் உடையும் வாய்ப்பு அதிகம்.

    மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை நீங்கள் உங்கள் குழந்தைக்கு சிறு வயதிலேயே பழக்குங்கள். அதே போல மற்ற குழந்தைகள் உங்கள் குழந்தையால் காயப்படா வண்ணம் பார்த்து கொள்ளுங்கள்.

    விளையாட்டாக குழந்தைகள் பொய் சொல்வார்கள். அதனை ஆதரிக்காதீர்கள். அது தவறு என்று கூறுங்கள். மற்றவரை மரியாதையை இல்லாமல் குழந்தை பேசினால் உடனே கண்டியுங்கள். நாம் கண்டிக்கவிட்டால் அதனையே அது வெளியிலும் போய் பேசும்படி ஆகி விடும். அப்புறம் ஊரார் கண்டிப்பார்கள்.

    உங்களுக்கு வேலைகள் இருப்பதால் குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது குறையலாம். இது தவறு. மற்றும் பொறுமையும் இருப்பதில்லை. ஒரு முக்கியமான பந்தத்தில் இருக்கும் நீங்கள் ஒரு உயிரை வளர்க்கும் பொறுப்பில் இருக்கும் நீங்கள் அதற்காக தேவையான நேரம் செலவழிக்க வேண்டும். குழந்தைக்காக உங்கள் மற்ற பொறுப்புகளை பெரியவர்களிடம் அல்லது உடன் இருப்பவர்களிடம் ஒப்படைத்து விட்டு குழந்தையோடு இருக்க வேண்டியது அவசியம்.

    குழந்தைக்கு என்ன விருப்பமோ எது நன்றாக வருமோ அதனை அதன் போக்கில் செய்ய விடுங்கள். டிவி நிகழ்ச்சியில் பாடும் ஆடும் குழந்தைகள் போல நம் பிள்ளை இல்லை என்று உங்கள் விருப்பத்தை அதன் மேல் திணிக்காதீர்கள்.

    குழந்தை வளர்ப்பில் ஆண் பெண் பாகுபாடுகள் வேண்டாம். ஒரு பெண்ணாகிய நீங்களே இந்த கொடுமைக்கு துணை போகாதீர்கள். குழந்தைகள் எது விரும்புகிறார்களோ அதற்கான விஷயங்களை தேடி அலசி ஆராய்ந்து அது பற்றி அவர்களுக்கு புரிய வைத்து பின்னர் அதில் ஈடுபட வையுங்கள்.

    மனமார பாராட்டுங்கள். உங்கள் பாராட்டுக்கள் அவர்களை மேலும் நன்றாக வளர உதவி செய்யும். நன்மைகள் தீமைகள் பற்றிய தெளிவை அவர்களுக்கு சொல்லி கொடுங்கள்.

    கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. நிறைய அக்கறை என்கிற விகிதத்தில் அவர்களை நீங்கள் வளர்ப்பது எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். (parental guidelines) 
    குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பழக்கத்தால் சுபாவம், நடத்தையில் பெருமளவில் மாற்றம் ஏற்படும். இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    சில வீடுகளில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை பயன்படுத்த கொடுக்கிறார்கள். இதனால் அவர்களின் சுபாவம், நடத்தை எல்லாம் பெருமளவில் மாற்றம் அடையும். போனில் வீடியோகேம்ஸ் விளையாடிப் பழகி, அதற்கு அடிமையாகி விடுவார்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து கேம்ஸ் விளையாடுவார்கள். இயற்கையான விளையாட்டுகளின் மீது உள்ள மோகம் குறைந்துவிடும். பருமன் பிரச்னையும் ஏற்படும். அதனால் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை கொடுக்கும் போதுஃப்ளைட் மோட் ஆஃசனில் கொடுக்க வேண்டும். அப்போது கேம்ஸ் போன்ற சில ஆப்ஷன்களை பயன்படுத்த முடியாது.

    குழந்தைகளை ஸ்மார்ட்போன் பழக்கத்தில் இருந்து குழந்தைகளை விடுவிக்கும் வழிகள்:

    1 பெற்றோர், குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க வேண்டும்.

    2. ஸ்மார்ட்போனுக்கு பாஸ்வேர்டு போடுங்கள். குழந்தைகள் செல்லும் இணைய பக்கங்களில் ஒரு கண் வையுங்கள்.

    3. குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை மெல்லமெல்ல குறையுங்கள். விழிப்புணர்வு ஊட்டுவதுடன் அதிலிருந்து விலகி வரும் மனநிலையை உருவாக்குங்கள்.

    4. குழந்தைகளுடன் விளையாடும் நேரத்தை அதிகமாக்குங்கள்.

    5. ஓவியம் வரையக் கற்றுக் கொடுங்கள், கலைப்பொருட்கள் உருவாக்க நேரம் செலவிடுங்கள்.

    6. விளையாட்டு மையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

    7. குழந்தைகளுடன் செலவிடும் நேரமே அவர்களை அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீட்பதுடன், ஆரோக்கியமான எதிர்காலத்தையும் உருவாக்குகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்!
    உடல் பருமன் பெரியவர்களை மட்டுமல்ல சிறுவர்களையும் பாதிக்கும். அதிக உடல் எடை, குழந்தைகளைப் படிப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் பின்தங்க வைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
    எல்லா விதத்திலும் வசதிகள் பெருகிக்கொண்டே வருவதும் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க முக்கியக் காரணம். உடல் செயல்பாடுகள் என்பது இப்போதுள்ள குழந்தைகளிடம் குறைந்துவருகிறது. எல்லாவற்றிலும் நவீன வசதிகள் வந்தபிறகு, அவற்றைப் பயன்படுத்தவே அவர்களும் விரும்புகிறார்கள். இதனால் சாப்பிடும்போது உடலில் சேரும் கலோரிகள் அப்படியே இருப்பதால், உடல் பருமன் அதிகரிக்கிறது. எந்த அளவுக்கு உணவில் கலோரிகளை எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடல் உழைப்பும் அவசியம். இது, தற்போதுள்ள பெரும்பாலான குழந்தைகளிடம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. முன்பெல்லாம், பெற்றோர்கள் குழந்தைகளை வேலைவாங்குவார்கள். ஆனால், இப்போது குழந்தைகள் பெற்றோரை வேலைவாங்கும் நிலை வந்துவிட்டது.

    உடல் எடை அதிகரிக்க மற்றொரு காரணம் ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் குப்பை உணவுகள். குழந்தைகள், உணவின் சுவைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் குப்பை உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். பெற்றோர்களும் இவற்றை வாங்கிக்கொடுத்து ஊக்கப்படுத்துகின்றனர் என்பது வருத்தமளிக்கும் விஷயம். பெரும்பாலும், அம்மா அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் குழந்தைகளுக்கு ரெடிமேட் உணவு வகைகளைச் சமைத்துத் தருகின்றனர். அவை உடல் எடையை அதிகரிப்பதுடன், பல நோய்களுக்கும் காரணமாகின்றன.

    உடல் எடை அதிகரிப்பதால், ஒரு குழந்தைக்கு இதய நோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், படிப்பில் ஆர்வம் குறைதல், கவனச்சிதறல், விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமின்மை போன்றவை ஏற்படலாம். உடல் பருமனாகும்போது, அந்த எடையை எலும்புகள் தாங்க முடியாமல் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம். இதுபோன்ற பலவிதமான பிரச்னைகள் உடல் பருமனால் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

    மாடிப்படிகள் ஏறுவது மிக முக்கியமான உடற்பயிற்சி. ஆனால், இப்போதுள்ள குழந்தைகள் லிஃப்ட்டை மட்டும் தான் உபயோகிக்கிறார்கள். குழந்தைகள் மாடிப்படிகள் ஏறி இறங்குவதைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் ஓடியாடி விளையாடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். எந்நேரமும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க அனுமதிக்கக் கூடாது.

    இப்போது, நாட்டில் நிலவும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில், பலர் குழந்தைகளை வெளியில் விடவே பயப்படுகிறார்கள். எனவே, குழந்தைகளைக் குறை கூறி ஒரு பயனும் இல்லை. ஒரு பிரச்னையைத் தீர்க்க, அதை எதிர்கொள்ள வேண்டுமே தவிர ஓடி ஒளியக்கூடாது. குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்புவதில் தவறில்லை. ஆனால், எப்போதும் அவர்கள்மீது ஒரு கண் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

    சில குழந்தைகள் மரபு ரீதியில் பருமனாக இருக்கலாம். இருந்தாலும் அவர்கள் உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் சரிசெய்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

    குழந்தைகளுக்கு குப்பை உணவுகளைத் தவிர்த்து, காய்கறிகளையும் தானியங்களையும் சாப்பிடக் கொடுத்தால் ஆரோக்கியமாக வளருவார்கள். அதை அவர்கள் விரும்பிச் சாப்பிடும் வகையில் சமைத்துத் தருவதிலேயே பெற்றோர்களின் திறமை மறைந்துள்ளது. டிராஃபிக் நிற காய்கறிகள் எனப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற காய்கறிகளும் பழங்களும் உடலுக்கு மிகவும் நல்லது.

    இது தவிர, பருமனாக உள்ள குழந்தைகளை எளிய உடற்பயிற்சிகள் செய்ய ஊக்கப்படுத்தலாம். உடல் பருமன் பெரியவர்களை மட்டுமல்ல சிறுவர்களையும் பாதிக்கும். எனவே, இதுபற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்பதே உண்மை.
    குழந்தையின் விளையாட்டுக்கள் வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொள்ளவே என்கிறார்கள் மருத்துவர்கள். பிற்காலத்தில் தாம் வாழப் போகும் வாழ்க்கைக்குத் தம்மை தயார் செய்துகொள்ளவே குழந்தைகள் விளையாடுகிறார்கள்.
    குழந்தையின் விளையாட்டு வெறும் விளையாட்டு அல்ல. குழந்தை விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது ஏதோ பொழுது போக்க, அல்லது மனமகிழ்விற்காக விளையாடுவதாகத் தோன்றும். நாம் அதை பெரியவர்கள் பார்வையில் பார்க்கும்போது அதற்கு அத்தனை முக்கியத்துவம் இருக்காது. ஒரு சின்ன பொம்மையை வைத்துக் கொண்டு அம்மா, அப்பா என்றெல்லாம் சொல்லும்போது நாம் அதை ரொம்பவும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை.

    ஆனால் குழந்தையின் விளையாட்டுக்கள் வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொள்ளவே என்கிறார்கள் மருத்துவர்கள். பிற்காலத்தில் தாம் வாழப் போகும் வாழ்க்கைக்குத் தம்மை தயார் செய்துகொள்ளவே குழந்தைகள் விளையாடுகிறார்கள். குழந்தைகள் எளிதாக விளையாடுவதாக நாம் நினைக்கிறோம்; ஆனால் அவர்களுக்கு விளையாட்டு பிடிப்பதற்குக் காரணம் அது ‘கஷ்டம்’ ஆக இருப்பதனால்தான். ஒரு உயர்நிலைப்பள்ளி மாணவன் எத்தனை கஷ்டப்பட்டு ‘ஜியோமெட்ரி’ யைக் கற்றுக் கொள்ளுகிறானோ அதே தீவிரத்துடன் குழந்தைகள் விளையாட்டினை திரும்பத்திரும்ப விளையாடி அதன் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்ளுகிறார்கள்.

    இந்தக் காலத்தில் தான் குழந்தைகளுக்கு விதம் விதமாக விளையாட்டு சாமான்கள் வருகின்றன. எங்கள் காலத்தில் ஒரு மர யானை அல்லது மாடு, அல்லது குதிரை இருக்கும். அதைக் கயிற்றில் கட்டி இழுத்துக் கொண்டு போவோம். அவ்வளவுதான்.

    குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கும்போது ரொம்பவும் சின்ன அளவுள்ள ப்ளாக்ஸ் (blocks) வாங்காதீர்கள். குழந்தை வாயில் போட்டுக் கொண்டு விழுங்கிவிடும். அதேபோல பொம்மையின் ஓரங்கள் கூர்மையாக இல்லாமல், வழுவழு என்று இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.

    இரண்டு வயது குழந்தை தன் அம்மா அப்பா செய்வதையெல்லாம் காப்பி அடிக்கக் கற்றுக் கொள்ளுகிறது. காப்பி பில்டரை வைத்துக் கொண்டு எல்லோருக்கும் காப்பி போட்டுக் கொடுக்கும். அப்பா மாதிரி ஷேவ் செய்து கொள்ளும். ஷூக்களைப்  போட்டுக்கொண்டு ஆபீஸ் போகும்.

    நீங்கள் மிகவும் விலையுயர்ந்த விளையாட்டு சாமான்களை வாங்க வேண்டும் என்பதில்லை. குழந்தைக்கு மலிவு, விலையுயர்ந்தது என்பது பற்றி தெரியாது. இருப்பதைக் கொண்டு விளையாடும் திறமை குழந்தைகளுக்கு உண்டு. நிலத்தில் கார் மாதிரி ஓடும் பென்சில் திடீரென்று வானத்தில் விமானமாக சீறிப்பாயும்.

    குழந்தைகள் தங்கள் விளையாட்டு சாமான்களுடன் விளையாடும்போது தூர நின்று பாருங்கள். நீங்கள் கூடவே இருந்து இப்படி செய், அப்படி செய் என்று சொல்லிக் கொடுக்காதீர்கள். உதாரணமாக நீங்கள் ஒரு பார்பி டால் வாங்குகிறீர்கள். மாற்றிக் கொள்ள உடை, காதணிகள், காலணிகள் எல்லாம் கூடவே வருகிறது. முதலில் உள்ளாடைகளைப் போட்டுவிட்டு பிறகு மேலாடைகளைப் போட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்கள் குழந்தை முதலில் மேலாடையைப் போடுகிறது. உடனே நீங்கள் ‘அப்படியில்லம்மா…இப்படி இதை முதலில் போடு என்று சொல்லிக் கொடுக்கிறீர்கள்’ உங்களது தலையீட்டால் குழந்தைக்கு (தானாகவே) விளையாடுவதில் ஆர்வம் குறைகிறது. பார்பி டால் மூலையில் விழுகிறது.

    மேலே சொன்னதுபோல தானாகவே விளையாட்டு மூலம் ஆராய்ச்சி செய்து, பிறகு அதை செய்து பார்த்து கற்க விரும்புகிறது குழந்தை. அதை அதன் போக்கில் விடுங்கள். ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா? எழுத ஆரம்பித்த புதிதில் எல்லா குழந்தைகளும் ‘அ’ என்ற எழுத்தை தலைகீழாகத்தான் எழுதும். இதற்கெல்லாம் பெற்றோர்கள் ரொம்பவும் கவலைப்பட வேண்டாம். தானாகவே கற்றுக் கொள்ளும் குழந்தை.
    குழந்தை வளர்ப்பில் சில கடமைகள் உள்ளன. பெற்றோர் அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.
    குழந்தை வளர்ப்பில் தாயானவள் கட்டாயமாக இருப்பார். ஆனால், பெரும்பாலும் தந்தையானவர் இதில் இணையாமல் இருக்கிறார். தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.

    * குழந்தைக்கு எப்போது எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவைக் கொடுத்து பழக்க வேண்டும்.

    * தண்ணீர் பாட்டிலும் ஸ்டீல் அல்லது காப்பரில் வாங்கலாம்.

    * வாய் சிறிதாக உள்ள பாட்டிலை வாங்குவது நல்லது.

    * பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிற்றுகிழமையாவது முழு நேரத்தையும் குழந்தையிடம் செலவிட வேண்டும்.

    * வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது. பாதுகாப்பும்கூட.

    * பஸ், வேன்களில் நீண்ட தூரம் குழந்தை பயணம் செய்தால், முதுகுத்தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும்.

    * குழந்தையை படி, படி என அடிக்கடி கட்டாயப்படுத்தாமல், புரியும்படி சொல்வது நல்லது. விளையாட்டும் படிப்பும் இரண்டுமே குழந்தைக்கு இருப்பது நல்லது.

    * ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும். அந்த தனித்துவ திறனை கண்டுபிடிக்க முயலுங்கள்.

    * பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லி குழந்தையை வற்புறுத்த கூடாது.

    * டிவி, மொபைல் விளையாட்டுகளைவிட உடலுழைப்பு தரும் விளையாட்டுகளை விளையாட குழந்தையை ஊக்குவியுங்கள்.

    * அன்றாடம் தாயும் தந்தையும் காலை முதல் இரவு வரை என்ன நடந்தது எனக் குழந்தைகளிடம் தினமும் கேட்க வேண்டும். ஏனெனில் காலம் மிகவும் மோசமாக இருப்பதால் குழந்தையைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.

    குழந்தை என்ன நடந்தாலும் தாய், தந்தையரிடம் பயம் இல்லாமல் சொல்லும் அளவுக்கு உங்களது வளர்ப்புமுறை இருந்தால் எல்லாக் குழந்தைகளும் பாதுகாப்புடன் இருக்கும். குழந்தையின் பாதுகாப்பு பெற்றோர் கையிலே.

    முன்பெல்லாம் குறைப்பிரசவக் குழந்தைகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் தனியாக வைத்திருப்பார்கள். குறைப்பிரசவ குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவில் இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    முன்பெல்லாம் குறைப்பிரசவக் குழந்தைகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் தனியாக வைத்திருப்பார்கள். காரணம் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க தாய் உட்பட யாரையுமே மருத்துவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், தற்போது பிறந்த குழந்தைகளுக்கான தனி தீவிர சிகிச்சைப்பிரிவு அமைத்து அங்கு எப்போதும் தாய் கூடவே இருக்கும்படி பார்த்துக் கொள்ளும் அளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

    தாயின் குரல், தாயின் அரவணைப்பு போன்றவை அந்த குழந்தைகளுக்கு தொடர்ந்து கிடைக்கும்போது விரைவான முன்னேற்றம் ஏற்படுவதையும் கண்கூடாக உணர முடியும். ஆரம்பத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தாயிடமிருந்து தாய்ப்பாலை பிழிந்து எடுத்துக் கொடுக்க ஆரம்பித்து, போகப்போக அந்தக் குழந்தை தானாக அருந்தும் திறனைப் பெற்றவுடன் நேரிடையாக தாய்ப்பாலைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

    ‘‘தற்போதுள்ள தொழில்நுட்பம், ஆய்வுகள் போன்றவற்றால் ஆரம்பத்திலேயே குழந்தைகளுக்கு சிகிச்சை கொடுத்துவிடுவதால், நீண்டநாள் பாதிப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை. இருந்தாலும் குழந்தை அந்தந்த பருவத்தில் குப்புறப்படுப்பது, தவழ்வது, உட்கார்வது, நடப்பது போன்ற செயல்களை செய்கிறதா போன்ற விஷயங்களை தாயானவள் நுட்பமாக கண்காணிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பிஸியோதெரபி சிகிச்சைகள் மூலம் கொண்டு வந்துவிடலாம். சில குழந்தைகள் பேசுவதற்கு தாமதம் எடுத்துக் கொள்ளலாம்.

    அவர்களுக்குக்கூட ஸ்பீச் தெரபி மூலம் சரி செய்துவிடலாம். இவர்களின் கேட்கும் திறன், பார்வைத்திறன் போன்றவற்றை வருடத்திற்கு ஒருமுறை அவ்வப்போது சோதனை செய்து பார்த்துவிட வேண்டும். இதுவும் கூட 30 வாரங்களிலேயே பிறந்த குறைப்பிரசவக் குழந்தைகளுக்குத்தான் வரும் என்பதால் மற்றவர்கள் பயப்படத் தேவையில்லை. குழந்தையின் வளர்ச்சிப்படி நிலையை தாய் கூர்ந்து கண்காணித்து, தவறாமல் சிகிச்சை அளிக்கும்பட்சத்தில் இவர்களும் மற்ற குழந்தைகளைப்போலவே வெகு இயல்பான அறிவுத்திறன் கொண்டவர்களாக வளர்ந்துவிடுவார்கள்.’’
    குறைப்பிரசவ குழந்தைகளுக்கு சில உடல் உபாதைகள் ஏற்படும். அவை என்வென்று அறிந்து கொள்ளலாம்.
    குறைப்பிரசவ குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ந்திருக்காது என்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும். முதலில் மூச்சுப்பிரச்னையை சரிசெய்வது அவசியம். குழந்தையின் நுரையீரலை திறந்துவிடுவதற்காக மெஷின் மூலம் ஆக்சிஜன் செலுத்துவது, நேரடியாக நுரையீரலில் ஊசி செலுத்தும் சிகிச்சைகளை செய்ய வேண்டும். குழந்தைகளின் சருமம் மிகமிக மெல்லியதாக இருக்கும்.

    உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு தோல்தான் பாதுகாப்பு அரண் எனும்போது, தோலின் மூலம் எளிதாக உடலினுள் கிருமிகள் சென்றுவிடும். அதற்காக இந்தக் குழந்தைகளை பாதுகாப்பாக பிளாஸ்டிக் கவர் சுற்றி, இன்குபேட்டரில் வைத்திருப்போம். மேலும் இவர்களின் உடல் வெப்பநிலை குறைவாக இருக்கும் என்பதால் கதகதப்பிற்காகவும் இன்குபேட்டரில் வைக்க வேண்டும்.

    கருவின் கடைசி 2 வாரங்களில்தான் செரிமான உறுப்புகளே வளர ஆரம்பிக்கும் என்பதால், குறைமாதக் குழந்தைகளுக்கு பால் அருந்துவதற்கான ஆற்றல், செரிமான ஆற்றல் இருக்காது. மூச்சை தம்பிடித்து இழுக்க முடியாத காரணத்தால் இந்தக் குழந்தைகள் தாயிடம் பால் அருந்தவும் முடியாது. இதன் காரணமாக அத்தனை ஊட்டச்சத்துக்களையும் ஊசி மூலமாகத்தான் சில வாரங்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும். 28 - 30 வாரங்களில் பிறக்கும் குழந்தைகள் மெதுவாக 2,3 வாரங்களுக்குப் பின்னர்தான் பால் குடிக்கவே ஆரம்பிப்பார்கள்.
    ×