
முக்கியமாக, இந்தக் குழந்தைகள் கணக்குப் பாடத்திலும் ரைம்ஸ் எழுதுவதிலும் சொல்வதிலும் சிரமப்படுவார்கள். வீட்டுப்பாடம் எழுதுவதற்கு அடம் பிடிப்பார்கள். புதிய சொற்களைக் கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் இருக்காது. பென்சிலைப் பிடித்து எழுதுவது, மனப்பாடம் செய்வது, தகவல்களை நினைவில் வைத்துக்கொள்வது, கதை சொல்வது, இலக்கணம் புரிவது போன்ற திறமைகள் குறைவாக இருக்கும்.
இதற்குத் தனிச் சிகிச்சை எதுவுமில்லை. அதேநேரம் குழந்தைகள் படிப்பில் பின்னடைவதைப் பார்த்து, எதிர்கால வாழ்க்கை இருண்டு விடுமோ எனப் பெற்றோர் கவலைப்படவும் தேவையில்லை. பெற்றோர் இந்தக் குழந்தைகளிடம் குற்றம் காணாமல், குறை கூறாமல், அதிகம் கடிந்து கொள்ளாமல் அன்போடு அரவணைத்துக் கவனிக்க வேண்டியது மிக முக்கியம். இந்தக் குழந்தைகளுக்கென பள்ளிக் கல்விமுறை சாராத சிறப்புப் பயிற்சிகள் தரும் மையங்களும் பள்ளிகளும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இங்கு குழந்தையின் அறிவுத்திறனைப் பரிசோதித்து, என்ன காரணத்தால் கற்றலில் குறைபாடு உள்ளது எனத் தெரிந்து, அதற்கேற்ப தனித்தனி பயிற்சிகளைத் தருகிறார்கள். குழந்தையின் பார்த்தல், கேட்டல் முறைகளை மட்டும் பயன்படுத்தாமல் தொடுதல், வாசனை, சுவை ஆகியவற்றுடன் புலன் தொடர்பான கற்பித்தல் முறைகளைக் கையாண்டு கற்றல் திறனை அதிகப்படுத்து கிறார்கள். எழுத்துகளை போர்டில் எழுதிப்போடுவது மட்டுமல்லாமல், ஓர் எழுத்தை விரல்களால் உருவகப்படுத்திக் காட்டிப் பாடம் நடத்துவதை இதற்கு ஓர் உதாரண மாகச் சொல்லலாம். அடுத்து, குழந்தைகளின் ஆர்வத்துக்கு ஏற்ப, அவர்கள் விரும்பும் துறையில் பயிற்சி அளிக்கும்போது சிறப்பிடம் பெறுகிறார்கள்.