என் மலர்
பெண்கள் உலகம்
- எண்ணெய் குளியல் சருமத்தை மென்மையாக்கி, பொலிவாக்க உதவும்.
- வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை பயக்கும்.
2010க்கு பின் பிறந்த பலருக்கு எண்ணெய் குளியல் என்ற சொல்லே புதிதாக இருக்கும். ஆனால் அதற்குமுன் பிறந்தவர்களுக்கு அதனுடைய பயன்கள் என்னவென்று தெரியாவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமை என்றால் அம்மா கண், காது, தலை என உடல் முழுவதும் எண்ணெயை ஊற்றி, தேய்த்துவிட்டு, 2 மணிநேரம் கழித்து குளிக்க சொன்னால், குளித்துவிட்டு வந்து நன்றாக தூங்குவோம். தூங்கி எழுந்தால் அப்படி ஒரு பொலிவு முகத்தில் இருக்கும். நல்ல தூக்கத்திற்கும், முகத்தில் இருக்கும் அந்த பொலிவிற்கும் இந்த எண்ணெய் குளியல்தான் காரணம் என்று அப்போது தெரியாது. இப்படி தமிழ்நாட்டில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒரு செயல்தான் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. ஆனால் இப்போதெல்லாம் தீபாவளி என்றால் மட்டும்தான் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும் என்ற சொல் வெளிப்படுகிறது. அப்படி எண்ணெய் குளியலால் கிடைக்கும் பயன்தான் என்னவென்று நீங்கள் கேட்கும் அளவிற்கு அழகியல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு நன்மைகளை கொண்டது எண்ணெய் குளியல். அதுகுறித்து பார்ப்போம்.
அழகியல் நன்மைகள்
எண்ணெய் குளியல் சருமத்தை மென்மையாக்கி, பொலிவாக்க உதவும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். சருமத்துளைகளை சுத்தப்படுத்தும். சருமத்திற்கு ஈரப்பதத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வறண்ட சருமத்தினர் எண்ணெய் குளியல் எடுக்கும்போது உடலுக்கு தேவையான எண்ணெயை வழங்குவதால், பளபளப்பான, மிருதுவான சருமம் கிடைக்கும். எண்ணெய்களில் உள்ள வைட்டமின் ஈ, ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து காக்கிறது. எண்ணெய், சூரிய ஒளியின் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. சருமத்திற்கு ஊட்டமளித்து வறட்சியை தடுக்கிறது.
முடி வளர்ச்சி
எண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும். பொடுகுத் தொல்லை நீங்கும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்து குளித்தால், உடல்சூடு தணியும். உடலில் உள்ள நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மாதத்திற்கு ஒருமுறையாவது எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ளுங்கள்
நல்ல தூக்கம்
வேலை காரணமாக, மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாமல் இருந்தால் அல்லது உடல் சோர்வாக இருந்தால் ஒரு எண்ணெய் குளியல் போடுங்கள். குளித்துவிட்டு வந்த அரைமணிநேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவீர்கள்.
நோய்களை தவிர்க்கும்...
எண்ணெய் குளியல் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். ஒற்றைத் தலைவலி, மனச்சோர்வு, பாலியல் கோளாறுகள், நீரிழிவு மற்றும் வயிற்றுக் கோளாறுகள், மஞ்சள் காமாலை போன்ற நோய்களைத் தடுக்க உதவும். எண்ணெயில் உள்ள அழற்சி பண்புகள் வலி, வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. இதுபோன்ற பல்வேறு நன்மைகளை எண்ணெய் குளியல் கொண்டுள்ளது. உங்களால் வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியல் முடியாவிட்டாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது எடுத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் குளியலில் பல்வேறு வகையான எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து எண்ணெய்களும் உடலுக்கு நன்மை பயக்கக்கூடியவையாக இருந்தாலும், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் குளியல் இன்னும் உகந்தது.
- குரல்கள் கொடுக்கும் அறிவுரையைவிட, செயலின் விளைவுகள் நிறையப் பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
- அதிகம் கோபப்படும்போது நம்மீது வெறுப்பு உணர்வு தோன்ற ஆரம்பித்துவிடும்.
குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதானல்ல. பெற்றோர் என்ற பொறுப்பு எவ்வளவு கடமைகளை கொண்டது என்பதை அந்த நிலையில் இருப்பவர்கள் அறிவர். இந்தக் கடமையில், இந்த பணியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, அதாவது தவறு என்றால் தாங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்க வேண்டுமென்றால் கத்தினால்தான் அது நடக்கும் என நம்புவது. அவர்களை பயப்பட வைப்பதற்கு, சொல்வதை கேட்க வைப்பதற்கு என அனைத்திற்கும் கத்துவதுதான் வழி என பல பெற்றோர்களும் நினைக்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கத்தினால் அப்போதைய வேலை வேண்டுமானால் முடியலாம். ஆனால், அந்தக் கத்தல் குழந்தைகளை அதிக பதட்டமாகவும், அடங்காதவர்களாவும் மாற்றுகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கத்தாமல் குழந்தைகளை நாம் சொல்வதை கேட்கவைப்பது எப்படி என்பதை கூறும் 5 எளிய வழிகள்.
கண்களை பார்த்து, அமைதியாக பேசுங்கள்...
குழந்தைகள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அல்லது அவர்களை ஒரு விஷயத்தை செய்ய வைக்க வேண்டுமானால், கத்தாமல், அதிகாரத் தோரணையில் சொல்லாமல், அவர்களிடம் சென்று மண்டியிட்டு அவர்களது கண்களை பார்த்து அமைதியாக பேசுங்கள். அந்த அமைதியான பேச்சு அவர்களை கவனிக்க செய்யும். மேலும் சில விஷயங்களை அவர்களை சொல்லவும் வைக்கும்.
கட்டளை வேண்டாம்
"இப்போதே செய்" என கட்டளையிடுவதற்கு பதில், சாப்பிட்டுவிட்டு வீட்டுப்பாடம் செய்கிறீர்களா? இல்லை வீட்டுப்பாடம் செய்துவிட்டு சாப்பிடுகிறீர்களா? அல்லது கொஞ்சநேரம் விளையாடுகிறீர்களா? ஒரு 10 நிமிடம் இடைவெளி எடுத்துக்கொள்கிறீர்களா? என கேளுங்கள். அப்போது அதை செய்வார்கள்.
இடைவெளி விட்டுப் பேசுங்கள்
குழந்தைகளிடம் அவர்களின் தவறை குறிப்பிட்டு கோபமாக பேசும்போது, சிறிது இடைவெளி விட்டு பேசுங்கள். கோபமாக இருக்கும்போது கொஞ்சம் அமைதியானால் அந்த கோபம் தணியும். உங்களின் இந்த சுயகட்டுப்பாட்டை மாதிரியாக கொண்டு குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்றுக்கொள்வார்கள்.

குழந்தைகளின் கண்களை பார்த்து அமைதியாக பேசுங்கள்
முயற்சியைப் பாராட்டுங்கள், முடிவுகளை மட்டுமல்ல
போட்டியோ, ஏதேனும் புதிய செயலோ எதுவாக இருந்தாலும் அதன் வெற்றி, முடிவை பார்க்காமல் குழந்தைகளின் அந்த முயற்சியை, அதில் கலந்துகொண்டதை பாராட்டுங்கள். அது அவர்களை ஊக்குவிக்கும். தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால், அடுத்தமுறை நன்றாக எடுங்கள் என கூறுங்கள். அப்படி தொடர்ந்து மதிப்பெண்கள் குறைந்தால் அதற்கான காரணம் என்னவென கண்டறியுங்கள். அதைவிடுத்து கத்துவதால், கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லை.
தண்டனைகளைவிட விளைவுகள் பாடத்தை சொல்லிக்கொடுக்கும்
மிகவும் அடம்பிடித்து குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யாவிடில் கத்துவதற்கு பதிலாக அதை அப்படியே விடுங்கள். மறுநாள் ஆசிரியரின் முன்பு அதற்கு பதில்சொல்ல கடமைப்படிருப்பர். நம் குரல்கள் கொடுக்கும் அறிவுரையைவிட, அவர்களின் செயலின் விளைவுகள் நிறையப் பாடங்களை கற்றுக்கொடுக்கும். இது வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் பொருந்தும்.
அமைதி
கத்துவதைவிட அமைதியாக பேசுவது அவர்களை காதுகொடுத்து கேட்கவைக்கும். அதிகம் கோபப்படும்போது நம்மீது ஒரு வெறுப்பு உணர்வு தோன்ற ஆரம்பித்துவிடும். "அன்னைக்கு என்ன அடிச்சல்ல" என நாம் திட்டுவது, அடிப்பது போன்ற நிகழ்வுகள் அவர்களின் மனதில் ஆழமாக பதியும். அவர்களின் தவறை சுட்டிக்காட்ட பேசாமல் அமைதியாக இருங்கள். அப்போது அவர்களே வந்துப்பேசி தவறை உணர்வார்கள்.
- ஒருவருக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் மற்றொருவருக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
- இதய பிரச்சனைகள் உள்ளவர்கள் வாழைப்பழங்கள் உட்கொள்வதை தவிர்க்கலாம்.
"ஆரோக்கியமானது" என்று நாம் சொல்லக்கூடிய ஒவ்வொரு உணவும் அனைவருக்கும் பாதுகாப்பானது அல்ல. ஒருவருக்கு உதவும் அதே ஊட்டச்சத்துக்கள் மற்றொருவருக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அன்றாடம் நாம் இயல்பாக எடுத்துக்கொள்ளக்கூடிய சில உணவுகள் இதய அல்லது சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்களை எவ்வாறு பாதிக்கிறது என பார்ப்போம்.
வாழைப்பழம்...
வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது தசைகள் மற்றும் இதயத்தின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது. ஆனால் சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள், ஸ்பைரோனோலாக்டோன், ARNI போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடும்போது பொட்டாசியம் இன்னும் இரத்தத்தில் சேரக்கூடும். அதிகப்படியான பொட்டாசியம் ஒழுங்கற்ற இதயத்துடிப்பை உண்டாக்கி, மாரடைப்புக்கு வழிவகுக்கும். அதனால் சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் இதய பிரச்சனைகள் உள்ளவர்கள் அதிக அளவு வாழைப்பழங்கள் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லதல்ல.
பசலைக்கீரை...
பசலைக்கீரை ஊட்டச்சத்துக்களால் நிறைந்திருந்தாலும், வாழைப்பழங்களைப் போலவே, இதிலும் பொட்டாசியம் அதிகளவு உள்ளது. இரத்த உறைதலை தடுக்கும் வார்ஃபரின் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் மிதமான அளவு பசலைக்கீரையை எடுத்துக்கொள்வது நல்லது. இதனை கொஞ்சம் கூடுதலாக எடுத்துக்கொண்டாலும், ரத்த உறைதல் அளவை கணிக்க முடியாது. அதனால் ரத்த உறைதல் பிரச்சனைகள் உள்ளவர்கள் கவனமுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிமதுரம்
சீமை அதிமதுரத்தில் கிளைசிரைசின் என்ற கலவை உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரித்து பொட்டாசியம் அளவைக் குறைக்கும். உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

வார்ஃபரின் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் மிதமான அளவு பசலைக்கீரையை எடுத்துக்கொள்வது நல்லது
சோயா சாஸ்
சோயா சாஸால் ஒரு நாளைக்கு தேவையான சோடியத்தின் அளவை எளிதில் நிரப்பமுடியும். இதய செயலிழப்பு உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் சோயா சாஸ் எடுத்துகொள்வது கூட நீர்தேக்கம், வீக்கம், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். சோடியம் உட்கொள்ளல் இதயத்திற்கும், சிறுநீரகத்திற்கும் அதிக வேலைகொடுக்கும். அவை ஏற்கனவே பலவீனமாக இருக்கும்போது இதை எடுத்துக்கொள்வது இன்னும் ஆபத்தானதாகும்.
ஆல்கஹால்
பலரும் வைன் குடிப்பது தீங்கு விளைவிக்காது என நினைத்தாலும், ஆல்கஹால் இதயத்திற்கு ஒரு நச்சுக்காரணி என்பதை புரிந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து மது அருந்துதல், இதய செயலிழப்பிற்கு வழிவகுக்கும். இதய பிரச்சனை உள்ளவர்கள் மது அருந்தினால் அது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
திராட்சை
திராட்சை சில மருந்துகளின் செயல்பாட்டை மாற்றக்கூடும். திராட்சையில் உள்ள சில ரசாயனங்கள், கல்லீரலில் உள்ள உள்ள CYP3A4 என்ற நொதியின் செயல்பாட்டை தடுக்கும். இந்த நொதி நாம் எடுத்துக்கொள்ளும் பல்வேறு மருந்துகளை உடைத்து வெளியேற்ற உதவுகிறது. இந்த நொதியத்தின் செயல் தடுக்கப்படும்போது, மருந்து இரத்த ஓட்டத்தில் அதிக அளவில் கலந்து, உடலில் மிக நீண்ட நேரம் தங்கிவிடுகிறது. இதனால் மருந்துகளின் அளவு உடலில் அபாயகரமான அளவிற்கு அதிகமாகி, பக்க விளைவுகள் மற்றும் நச்சுத்தன்மையின் அபாயத்தை அதிகரிக்கிறது.
உங்களுக்கு பயத்தை உண்டாக்குவதற்காக இந்த தகவலை சொல்லவில்லை. ஒவ்வொருவரின் இதயமும் சிறுநீரகங்களும் ஊட்டச்சத்துக்களை வித்தியாசமாகக் கையாளுகின்றன. அதனால் உங்கள் உடல்நலனுக்கு எது சிறந்ததோ அதை அறிந்து உட்கொள்ளுங்கள். மருத்துவ கண்காணிப்பில் இருப்பவர்கள் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுமுறைகள் குறித்து மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.
- முடி, சருமம் என இரண்டிற்கும் பல்வேறு அழகு நன்மைகளை அளிக்கிறது அரிசி தண்ணீர்.
- அரிசி நீர் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும்.
முடி உதிர்தலை தடுக்க, முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெண்கள் நிறைய முயற்சிகளை மேற்கொள்வர். அதில் ஒன்றுதான், முடிக்கு அரிசி தண்ணீர் பயன்படுத்துவது. முகம் மற்றும் சருமத்திற்கு அரிசி நீரை ஏன் பயன்படுத்துகிறார்கள்? அதனால் என்னப் பயன் என்பது குறித்து பார்ப்போம்.
சருமத்தைப் பொலிவாக்கும்
அரிசி நீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை சரும அமைப்பை மேம்படுத்தவும், நிறத்தை கூட்டவும், முகத்தை பிரகாசமாக்கவும் உதவும். மேலும் கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் மற்ற பழுப்பு நிறக்கோடுகள், புள்ளிகளையும் குறைக்க உதவும்.
வயதான தோற்றத்தை குறைக்க உதவும்
அரிசி நீரில் ஃபெருலிக் அமிலம் உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கவும், வயதான அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும். முகத்தில் தோன்றும் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் வயது தொடர்பான பிற தோல் கவலைகளைக் குறைக்க உதவும்.
நீரேற்றம்
அரிசி நீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றவும், அழற்சியால் ஏற்பட்ட பாதிப்பினை குறைக்கவும் உதவும். இது ஒரு இயற்கை மாய்ச்சுரைசராகவும் உள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக்க உதவும்.
எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும்
அரிசி நீர் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும். எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கும், முகப்பரு அதிகம் இருப்பவர்களுக்கும் அரிசி நீர் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. வெடிப்புகளை தடுக்கவும் உதவும்.

அரிசி நீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன
தோல் தடையை சரிசெய்தல்
அரிசி நீரில் உள்ள புரதங்கள் சருமத்தின் இயற்கையான தடையை வலுப்படுத்த உதவும், இது சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் ஈரப்பதம் இழப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவும். இது காலப்போக்கில் ஆரோக்கியமான, மீள்தன்மை கொண்ட சருமத்திற்கு வழிவகுக்கும்.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள்
அரிசி நீரில் வைட்டமின் ஈ , ஃபெருலிக் அமிலம் மற்றும் பைடிக் அமிலம் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும்.
எக்ஸ்ஃபோலைட்டிங்
அரிசி நீரில் என்சைம்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற இயற்கையான எக்ஸ்ஃபோலைட்டிங் பொருட்கள் உள்ளன. அவை இறந்த சரும செல்களை அகற்றவும், முகப்பருவைத் தடுக்கவும் உதவும்.
இவ்வளவு நன்மைகளை கொண்ட அரிசிநீரை எப்படி பயன்படுத்துவது?
அரிசியை தண்ணீரில் கழுவிவிட்டு, அதில் உள்ள அழுக்கு சென்றபின் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். அரை கப் அரிசி எடுத்தால், இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீர் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பின்னர் தண்ணியை ஒரு சுத்தமான கிண்ணத்தில் வடிகட்டி, பஞ்சை பயன்படுத்தி, தொட்டு தொட்டு முகத்தில் தடவலாம். அல்லது பாட்டிலில் ஊற்றி ஸ்பிரேவாகவும் பயன்படுத்தலாம். இதனை வாரத்திற்கு இரண்டுமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- ஜப்பானில் ஹரா ஹச்சி பு என்ற உணவுக் கொள்கை பின்பற்றப்படுகிறது.
- இந்தியர்களின் ஆயுட்காலம் குறைவாக இருக்க நமது உணவுமுறைதான் காரணம்.
இந்தியாவும், ஜப்பானும் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் எளிமையான வாழ்க்கை முறைகளுக்கு பெயர் பெற்றிருந்தாலும், இந்தியர்களைவிட ஜப்பானியர்கள் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். நம்மைவிட ஜப்பானியர் 10 முதல் 15 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர். அதாவது ஜப்பானியரின் ஆயுட்காலம் 84.8 ஆண்டுகள் எனவும், இந்தியர்களின் ஆயுட்காலம் 70.4 ஆண்டுகள் எனவும் வரையறுக்கப்படுகிறது. மீதமுள்ள நாட்களை நாம் மாத்திரையில்தான் கழிக்கிறோம். இதற்கு காரணம் என்ன என என்றாவது யோசித்துள்ளீர்களா? நம் ஆயுட்காலத்தில் 10 ஆண்டுகள் குறைய நமது உணவுமுறைதான் முக்கிய காரணம். நமது உணவுமுறைக்கும், ஜப்பானியர்களின் உணவுமுறைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை காண்போம்.
தண்ணீர் - எண்ணெய்
ஜப்பானில் எண்ணெய் பயன்பாட்டை விட தண்ணீர் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதாவது நாம் அதிகம் எண்ணெயில் வறுத்த, பொறித்த உணவுகளையே விரும்புகிறோம். அதிகம் எண்ணெயில்தான் சமையலை செய்கிறோம். ஆனால் ஜப்பானில் வேகவைத்தலே அதிகம் பின்பற்றப்படுகிறது. அவர்கள் வறுக்கும் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். இதனால் வறுக்கும்போது இழக்கப்படும், வைட்டமின் சி, பி, போன்ற ஊட்டச்சத்துக்கள் வேகவைக்கப்படும் உணவுகளால் பாதுகாக்கப்படுகிறது. வேகவைத்து எடுக்கப்படும் உணவுகள் இதய நோய்களை உருவாக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் உருவாகாமல் தடுக்கின்றன. எண்ணெய் பயன்படுத்தப்படாத உணவுகள், இலகுவாகவும், ஜீரணிக்க எளிதாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கும். இந்த சமையல் பாணி சிறந்த குடல் ஆரோக்கியம், நீரேற்றம் மற்றும் நீண்டகால இருதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.
ஒமேகா 3 நிறைந்த உணவுமுறை
ஒருகாலத்தில் பாரம்பரிய இந்திய உணவுமுறை என்பது ஆரோக்கியமான கொழுப்புகள், புதிய பொருட்கள், வீட்டில் சமைக்கும் உணவுகளை மையமாக கொண்டிருந்தது. ஆனால் தற்போது, பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள்தான் சமையலறைகளை நிரப்பியுள்ளன. ஆனால் ஜப்பானில் தற்போதும் மீன், காய்கறிகள், புளித்த உணவுகள் (இட்லி, தோசை போன்ற உணவுகள்) எண்ணெய் குறைவான உணவுகள்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்து நிறைந்த அணுகுமுறை இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா-3 அமிலங்களை உடலுக்கு வழங்குகிறது. அவை வீக்கத்தைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன. இந்த புளித்த உணவுகள், காய்கறிகளை உப்பு தண்ணீரில் ஊறவைத்து ஊறுகாய் போல் செய்து சாப்பிடும் அவர்களின் உணவுமுறைகள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கிறது. சிறந்த செரிமானத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஊக்குவிக்கிறது.

மீன், கடல்பாசிகள், எண்ணெய் சேர்க்கப்படாத உணவுகளையே ஜப்பான் மக்கள் அதிகம் எடுத்துக்கொள்கின்றனர்
பகுதி அளவு (hara hachi bu)
ஜப்பானில் ஹரா ஹச்சி பு என்ற கொள்கையைப் பின்பற்றுகிறார்கள். அதாவது 80 சதவீதம் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது பசி அடங்கியவுடன், வயிறு நிரம்பியவுடன் சாப்பிடுவதை நிறுத்தவேண்டும். 'திருப்தி அடைந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்து; அள்ளி அள்ளி போட்டுக் கொள்ளாதே' என்பதுதான் இதன் சுருக்கமான தத்துவம். இந்த கவனமுள்ள அணுகுமுறை அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது மற்றும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த முறை ஜப்பானிய மக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கிறது. இந்தியாவிலும் நம் முன்னோர்கள் இந்தமுறையை பின்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரமே மேலோங்கியுள்ளது.
உடல் செயல்பாடுகள்
நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், குழு பங்கேற்பு போன்ற செயல்பாடுகளின் மூலம் ஜப்பானின் அன்றாட வாழ்க்கையில் உடல் செயல்பாடு அதாவது உடற்பயிற்சி பின்னிப்பிணைந்துள்ளது. இது வயதான காலத்தில் வலுவான தசை, எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. ஆனால் இந்தியாவில் சிறுவர்கள்கூட பைக்குகளில்தான் செல்கின்றனர். பலரும் உடல் செயல்பாடுகளுக்கு வேலை கொடுக்க மறக்கின்றனர்.
இரவு உணவு - தூக்கம்
ஜப்பானில் இரவு உணவு குறைவாகவும், சீக்கிரமாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் தூங்குவதற்கு முன்பே செரிமானம் நிகழ்கிறது. இந்தியாவில் இரவுநேரத்தில் இந்த உணவுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் இல்லை. இரவு உணவு கனமாக இருக்கும். மேலும் தூங்குவதற்கு அரைமணிநேரத்திற்கு முன்புதான் சாப்பிடுவோம். சிலரெல்லாம் சாப்பிட்ட உடனேயே படுத்துவிடுவார்கள். இது தூக்கத்தை சீர்குலைத்து, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கோவை விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், நவ.2ம் தேதி இரவு, கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டுருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர், காரில் இருந்த இளைஞரை தாக்கிவிட்டு, அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தித்தாளை திறந்தாலே, ஃபோனை ஆன் செய்தாலே, டிவியை போட்டாலே இதே செய்திதான். இச்செய்தியில் பல விவாதங்கள் எழுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது, எப்போதுமே இருவாதம் எழும். அதாவது சட்டம், ஒழுங்கு சரியில்லை; பெண்கள் ஏன் அந்த நேரத்தில் அங்கு சென்றனர்? ஏன் அவரிடம் பேசினர்? இதில் எது சரி? பார்ப்போம்...
சட்டம், ஒழுங்கு சரியில்லையா?
சட்டம், ஒழுங்கு என்றால் என்ன? ஏதேனும் ஒரு குற்றம் என்றால் உடனே ஆளும்கட்சியை குறைசொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் பலரும். ஒரு அரசுதான் குற்றங்கள் அனைத்திற்கும் காரணமா? பொறுப்பா? கொஞ்சம் மக்கள் சிந்தித்து பாருங்கள். ஒரு அரசு மட்டும் என்ன செய்யமுடியும்?
பல இடங்களில், அதுவும் பொது இடங்களில் ஒரு கும்பல் சண்டை போடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த சண்டையை சுற்றி இருக்கும் பொதுமக்கள் தடுக்கலாம். ஆனால் உயிர்மீதான பயத்தால் யாரும் தடுக்கமாட்டோம். அப்படி அனைவரும் ஒன்றுக்கூடி தடுத்தால், ஒவ்வொரு இடங்களில் இது நிகழும்போதும் மக்கள்மீது குற்றம் புரிபவர்களுக்கு ஒரு பயம் வரும். ஆனால் நமக்கு என்ன என மக்கள் ஒதுங்கி இருப்போம். என்று, மக்கள்மீது குற்றம் புரிபவர்களுக்கு பயம் வருகிறதோ, அப்போதுதான் குற்றங்கள் குறையும். மற்றொன்று காவல்துறையினர். உண்மையில் காவல்துறையினர் மீது பல விமர்சனங்கள் இருப்பது நிதர்சனமான உண்மை. அதேநேரம் காவல்துறையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் என தனித்தனியாக ஒரு காவலரை நியமிக்க முடியாது என்பதும் நியாயமான ஒன்றுதானே.
சுய ஒழுக்கம்
மறுபக்கம் எளிதாக ஒருவரை குத்திவிட்டு, கொடூரமாக கொலைசெய்து விட்டு, ஒரு பெண்ணின் அழுகை, கதறல் சத்தம்கேட்டும் ஒருவன் குற்றத்தை புரிகிறான். நமக்கு ஒரு எறும்பை மிதித்துவிட்டால் கூட உள்ளம் பதறுகிறது. இங்கு அவனுக்கு மனிதாபிமானம் இல்லையா? இரக்க குணம் இல்லையா? எது இல்லை? சிறுவயதிலிருந்தே ஒருவருக்கு அனைத்து நல் ஒழுக்கங்களையும், மனிதாபிமானம், இரக்கக்குணம் போன்றவற்றையும் பெற்றோர்கள் சொல்லி வளர்க்கவேண்டும். ஒருவரின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு நல்ல வளர்ப்பு, குற்றங்களை தடுக்க உதவும். ஆனால் பல பெற்றோர்களே குழந்தைகள் குற்றவாளிகளாக உருவெடுக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றனர். வளர்த்தலை தாண்டி சுய ஒழுக்கமும் தேவை. ஒரு மனிதன் சுய ஒழுக்கத்துடன் வளருதல் என்பது மிக முக்கியமான ஒன்று. நாம் ஒழுக்கத்துடன் இல்லாமல், சட்டத்தை மட்டும் குறை கூறுவது எப்படி?
சட்டங்கள்
குற்றங்கள் நடக்க முக்கிய காரணம் சட்டங்கள் கடுமையாக இல்லை என்ற பேச்சு நீண்டகாலமாக தொடர்கிறது. இதற்கு காரணம் இந்தியாவில்தான் கொலை செய்தவன், ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தவன் போன்றோரெல்லாம் ஜாமினில் ஜாலியாக சுற்றுகிறார்கள். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இல்லாததால்தான், பல குற்றச் செயல்களுக்கு சிறார்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். எப்போது ஒரு சட்டத்தின் மீது பயம் வருகிறதோ அப்போதுதான் குற்றம் குறையும். இருப்பினும் வெறும் சட்டத்தால் மட்டும் குற்றங்களை குறைக்க முடியாது.
எல்லாவற்றிற்கும் அரசுதான் பொறுப்பா?
மேலே நாம் குறிப்பிட்ட கோவை கல்லூரி பெண் வழக்கு உட்பட தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை குற்றங்களுக்கும் அரசுதான் பொறுப்பா? கொஞ்சம் தெளியுங்கள். சொந்த குடும்பத்தை, உறவினர்களை, தான் நேசித்த காதலரை, காதலியை சிலர் கொல்கிறார்கள். இதற்கும் அரசை குறை கூறவேண்டியது. சொந்த குடும்பத்தில் அண்ணன், தனது தம்பியை வெட்டப்போகிறான் என்பது அரசுக்கு எப்படி தெரியும்? தெரிந்தால்தானே ஒரு காவலரை அங்கு முன்கூட்டியே காவல் வைக்கமுடியும். தகாத உறவுகளால் பல கொலைகள் அதுவும் அப்பாவிகள் பலர் கொலை செய்யப்படுகின்றனர்.
இதற்கும் அரசுதான் காரணம் என்றால், ஒவ்வொருவரும் தங்கள் உறவு குறித்து அரசிடம் பதிவு செய்தால், அதற்கேற்றார் போல ஒரு காவலரை நியமிக்கலாம். இருப்பினும் சில வழக்குகளில் கொலைசெய்துவிட்டு தண்டனை குறித்து தெரிந்தும், காவல் நிலையங்களில் சரணடைகின்றனர். இதற்கு காரணம்? சட்டத்தின் மீது பயம் இல்லாததா? இல்லை. சில இடங்களில் உணர்ச்சிரீதியாக சிலர் பொறுமை இழக்கையில் தனது நெருங்கிய உறவுகளை கூட கொல்ல துணிகின்றனர். கொலை என்பது எல்லாவற்றிற்கும் தீர்வு அல்ல என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மூன்றாவது கூட்ட நெரிசல். ஆன்மிக நிகழ்ச்சிகள், பெங்களூரு ஆர்பிசி கூட்ட நெரிசல், சமீபத்தில் தவெக கூட்ட நெரிசல் என இவற்றில் சிக்கி ஏராளமானோர் இறந்த செய்தியை அனைவரும் பார்த்திருப்போம். இதற்கு அரசும், காவல்துறையும் பாதுகாப்பு வழங்காததுதான் காரணம் என குற்றம் சொல்பவர்கள் சொல்லலாம். ஆனால் 10 பேர் இருக்கவேண்டிய இடத்தில் 50 பேர் இருந்தால் காவல்துறையும், அரசும் மட்டும் என்ன செய்யும்? இதை ஏன் மக்கள் சிந்திக்கவே மறுக்கிறீர்கள்? உங்களின் சுய ஒழுக்கம், ஒரு பொது அறிவு, பொது புரிதல் எங்கே செல்கிறது? ஒருவர் இருக்கவேண்டிய இடத்தில் பத்துபேர் இருந்தால் மூச்சுவிடுதல் சிரமமாகும். தாகம் எடுக்கும். அங்கு மூச்சும் விட இயலாது. முன்னேற்பாடுகள் இல்லாததால் தண்ணீரும் குடிக்க இயலாது. நிற்பதற்கு இடமும் இல்லாமல், ஒருவரை ஒருவர் நெரித்து மேலே ஏறி மிதிப்பர். ஏனெனில் அவரவர் உயிர்தானே அவரவருக்கு முக்கியம். அதனால் மற்றவர்களை நினைக்கமாட்டார்கள். இப்படி ஒரு உயிர் அங்கு போக அங்கு இருப்பவர்களே காரணமாக இருந்துகொண்டு ஒரு அரசை குற்றம் சாட்டினால் எப்படித்தகும்?

சுதந்திரத்திற்கும் கட்டுப்பாடு அவசியம்
கண்டிப்பாக அரசும் பொறுப்பேற்க வேண்டும். நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு கண்டிப்பாக ஆட்சியில் இருக்கும் ஒரு அரசு பொறுப்பேற்க வேண்டும்தான். ஆனால் மக்கள் சுய ஒழுக்கத்துடன், ஒரு பொது புரிதலுடன் இருக்கவேண்டும். அரசை கூறுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
பாதுகாப்பு முக்கியம்!
கோவை மாணவி வழக்கு உட்பட காதலர்கள் பலரும் இதுபோல தனிமையில் இருக்கும்போது, பலர் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். காதலர்கள் தனிமையில் நேரம் செலவிடவேண்டும் என விரும்புவோம். அது நம் அனைவருக்குள்ளும் எழும் ஒரு இயல்பான உணர்வு. ஆனால் நாம் நேரம் செலவிடுவதற்கு தகுந்த இடம் எது? பலரும் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் சென்று இதுபோல சிக்கிக் கொள்கின்றனர். பெண்ணை ஒரு ஆண் உண்மையில் நேசிக்கிறான் என்றால், அவன் அந்த பெண்ணின் பாதுகாப்பிற்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பான். உணர்ச்சிகள் மட்டும் காதல் இல்லை. உண்மையான நேசம்தான் காதல் என்பதை மனதில் நிறுத்திக்கொள்வோம்.
எது பெண் சுதந்திரம்?
1947-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் நாம் நினைத்த நேரத்தில், நமக்கு பிடித்ததை, நமக்கு பிடித்த இடத்திற்கு, நமக்கு பிடித்தவருடன் செல்ல முடியவில்லை என்பது என்ன சுதந்திரம் என கேள்வி எழுப்பலாம். அதற்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் இங்கு நமக்கு பாதுகாப்பு சுதந்திரம் இல்லை என்பதை பெண்கள் உணருங்கள். நினைத்த நேரத்திற்கு வெளியே செல்லலாம் என்பது சுதந்திரம்தான். ஆனால் அதிலும் ஒரு கட்டுப்பாடு தேவை. எதிலும் ஒரு கட்டுப்பாடு இருந்தால்தான் அது நிலையோடு இருக்கும். இதை சொல்வது அபத்தமானது என்று தெரிந்தாலும், நம் நாட்டின் நிலை என்ன? நமக்கு இங்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்பதை பெண்கள் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காதலரை சந்திப்பது தவறு இல்லை. ஆனால் அந்த சந்திப்பை ஒரு பாதுகாப்பான இடத்தில் நிகழ்த்துங்கள். இந்தியாவில் அம்மாக்களே தங்கள் பெண்பிள்ளைகளைத்தான், ஒழுங்காக உடை அணிய சொல்வார்கள். எப்போதும் தங்கள் ஆண்பிள்ளைகளிடம் சாதரணமாகக்கூட பெண்களை தவறாக பார்க்கக்கூடாது என சொல்லமாட்டார்கள். அப்படி இருக்கையில் இங்கு நாம்தான் நம் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதனால் கிடைக்கும் சுதந்திரத்தை முதலில் அனைவரும் சரியாக பயன்படுத்துகிறோமா என எண்ணுங்கள். இந்தக் கருத்துகள் பெண் சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல. ஆனால் இங்கு சட்டம், ஒழுங்கு, ஒரு ஆணின் பார்வை, மக்களின் பார்வை எப்போது மாறுகிறதோ அப்போதுதான் பெண்கள் நினைக்கும் சுதந்திரம் கிடைக்கும் என்பதை தெளிவுப்படுத்திக்கொள்வோம்.
- சட்டப்படி விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
- ஒருவர் செய்வது குற்றம் என அறிந்தாலும், பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் மட்டுமே, சட்டம் தலையிடும்.
தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா வழக்கில் இன்று முக்கிய திருப்பம் அரங்கேறியுள்ளது. இதுவரை தன்மீது ஜாய் கிரிசில்டா கூறிய எந்த குற்றச்சாட்டுக்கும் விளக்கமளிக்காத ரங்கராஜ், சமீபத்தில் மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில் தான்தான் ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தந்தை என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துக் கொண்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் மகளிர் குற்றத் தடுப்பு துணை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. குழந்தைக்கு தந்தை தான் என ஒப்புக்கொண்டதால் டிஎன்ஏ பரிசோதனை தேவையில்லை எனவும், அவர்மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமையியல் நீதிமன்றத்தை ஜாய் கிரிசில்டா நாடும் வரையில், அவருக்கு தற்போது பிறந்துள்ள குழந்தைக்கான பராமரிப்பு செலவை மாதம்பட்டி ரங்கராஜ், மறுப்பு தெரிவிக்காமல் ஏற்கவேண்டும் எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் கைது செய்யப்படுவாரா என இணையவாசிகள் விவாதம் நடத்தி வருகின்றனர். இப்படி இவர்கள் சொல்வதுபோல மாதம்பட்டி ரங்கராஜை கைது செய்ய இயலுமா? இந்திய சட்டங்கள் என்ன கூறுகின்றன என்பது குறித்து காண்போம்.
இந்தியச் சட்டப்படி கணவர் விவாகரத்துப் பெறாமல் இரண்டாவது திருமணம் செய்தால், அவர்மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து, சிறை தண்டனையும் விதிக்கலாம். ஆனால் அதற்கு கணவரின் திருமணத்தால் பாதிக்கப்பட்ட முதல் மனைவி புகார் அளிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் மட்டுமே, சட்டம் தலையிடும். மற்றப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. மற்றொன்று முதல் மனைவியுடன் விவாகரத்து வாங்கவில்லை என்பதை அறிந்தே, இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், அப்பெண்ணிண் குற்றச்சாட்டு எடுபடாது. ஆனால் ரங்கராஜின் வழக்கில் மகளிர் ஆணையம் தற்போது உறுதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளதால் கைது செய்யப்படலாம் என சிலர் கூறிவருகின்றனர். மற்றொன்று ஜாய் கிரிசில்டா கோரிய பராமரிப்பு தொகை... தனக்கும், தனது குழந்தைக்கும் மாதந்தோறும் ரூ.6.50 லட்சம் பராமரிப்புத் தொகை வழங்கக் கோரி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் சட்டப்படி திருமணம் செய்யாவிட்டாலும், பராமரிப்புத்தொகை நிச்சயம் வழங்கப்பட வழிவகை உள்ளது. இதுபோன்ற பல வழக்குகளில் நீதிமன்றங்கள் இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. முதல் மனைவி தடுத்தாலும் போதிய காரணங்கள் இருந்தால் வழங்கலாம். காரணம் கணவரின் தவறு என்பதால் முதல் மனைவி தடுத்தாலும் ஜீவனாம்சம் வழங்கலாம்.

இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன
இவர்கள் வழக்கு எப்படி இருந்தாலும், சட்டங்கள் என்ன சொன்னாலும் பெண்கள் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டியது ஒன்றுதான். திருமணம் முடிந்திருந்தால், விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அதுபோல நீங்கள் திருமணம் செய்ய உள்ளவர், ஏற்கனவே திருமணம் ஆனவர் எனில், அவருடைய விவாகரத்தை உறுதிசெய்து பின்னர் ஒரு உறவுக்குள் செல்லுங்கள். உங்கள் தரப்பில் உணர்ச்சி ரீதியான நியாயங்கள் முன்வைக்கப்பட்டாலும், சட்டத்தின்படியே அரசு செயல்பட இயலும். படிப்பறிவு இருந்தாலும், நடைமுறையை அறிந்திருந்தாலும் உறவுகளுக்குள் செல்லும்போது சில முடிவுகளை எடுப்பது சிக்கலான ஒன்றுதான். ஆனால் எப்போதும் இந்த சமூகம் பெண்களையே குறைக்கூறும். அதனால் உங்கள் நலனுக்காக எந்த முடிவையும் எமோஷனலாக எடுக்காமல், நடைமுறையோடு ஒப்பிட்டு, ஆராய்ந்து எடுங்கள்.
- சப்ளிமெண்டுகள் பயன்தரக்கூடியவைதான் என்றாலும், அவை சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளன.
- எப்போதும் உயர்தர சப்ளிமெண்டுகளைத் தேர்வுசெய்து, அதன் பரிந்துரை அளவை மட்டும் பயன்படுத்துங்கள்.
உணவின் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காதபோது, கூடுதல் வைட்டமின்கள், தாதுக்கள், புரோட்டீன்கள் அல்லது பிற ஊட்டச்சத்துக்களை பெற தற்போது பலரும் எடுத்துக்கொள்வது சப்ளிமெண்டுகள். உணவுகள் மூலம் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருக்காது. நாம் எந்தமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்கிறோம், அவற்றில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை பொறுத்துதான் அவை அமையும். இப்போதெல்லாம் பலரும் உணவு எடுத்துக்கொள்வதே ஒரு வேலையாக பார்க்கும்போது, எப்படி ஊட்டச்சத்து கிடைக்கும். அதனால் ஊட்டச்சத்துக்களையும் மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்கின்றனர். உடல் ஆரோக்கியத்தைத் தாண்டி சருமம், முடி என அழகு சார்ந்த தேவைகளுக்கும் இந்த சப்ளிமெண்டுகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். சப்ளிமெண்டுகள் பயன்தரக்கூடியவைதான் என்றாலும், அவை சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளன. நீங்கள் தினந்தோறும் சருமம், முடி, மற்றும் நக பொலிவுக்காக பயன்படுத்தும் சப்ளிமெண்டுகளால் ஏற்படும் பக்க விளைவுகளை காண்போம்.
குமட்டல், வயிற்றுவலி
சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், குறிப்பாக இரும்பு, துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி போன்றவற்றை உணவு இல்லாமல் எடுத்துக் கொள்ளும்போது செரிமான அமைப்பை எரிச்சலடையச் செய்யலாம். இது குமட்டல், வயிற்றுப் பிடிப்புகள், வயிறு எரிச்சல் போன்ற செரிமான அசௌகரியங்களை ஏற்படுத்தும். அதுபோல வெறும் வயிற்றில் அல்லது காபி, ஆரஞ்சு சாறு போன்ற அமில பானங்களுடன் சேர்த்து சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலமும் அசௌகரியம் அதிகரிக்கும். இவை வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து, நெஞ்செரிச்சல், அஜீரணம் அல்லது இரைப்பை அழற்சி போன்ற பிரச்சனைகளை மோசமாக்கலாம். எனவே, சப்ளிமெண்ட்ஸை உணவுடன் எடுத்துக்கொள்வது சிறந்தது.
தலைவலி, தலைச்சுற்றல்
கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, இ, கே ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது அவை உடலில் சேமிக்கப்பட்டு, நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். இதனால் தலைச்சுற்றல், தலைவலி ஏற்படலாம். மேலும் ரத்த அழுத்தத்தை பாதிப்பதுடன், நீரிழிவையும் ஏற்படுத்தும். காஃபின் மற்றும் மூலிகை சாறுகள் கொண்ட சப்ளிமெண்டுகளை எடுத்துக்கொள்ள தொடங்கும்போதும் சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
தோல் பிரச்சனைகள், முகப்பரு
உங்கள் சருமத்தை மேம்படுத்துவதற்காக நீங்கள் பயன்படுத்தும் சப்ளிமெண்டுகள் சில நேரங்களில் அதை மோசமாக்கும். அதிக அளவு பயோட்டின் (வைட்டமின் பி7) அல்லது வைட்டமின் பி12 முகப்பரு போன்ற வெடிப்புகளைத் தூண்டக்கூடும். குறிப்பாக தாடை மற்றும் கன்னங்களில். இதற்குக் காரணம், பயோட்டின் மற்றும் வைட்டமின் B5 (பாந்தோத்தேனிக் அமிலம்) இரண்டும் ஒரே பாதையில் உறிஞ்சப்படுகின்றன. எனவே, அதிகப்படியான பயோட்டின், வைட்டமின் B5-ஐ உடல் உறிஞ்சுவதைத் தடுக்கக்கூடும், இது முகப்பரு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒவ்வாமை உணர்திறன் காரணமாக மற்றவர்களுக்கு லேசான தடிப்புகள், அரிப்பு அல்லது சிவத்தல் ஏற்படலாம்.

அதிக அளவு வைட்டமின் பி7, பி12 பயன்படுத்துவது முகப்பருவுக்கு வழிவகுக்கும்
மாறுபடும் சிறுநீரின் நிறம்
சப்ளிமெண்டுகளை எடுத்துக்கொண்ட பிறகு, சிறுநீர் அடர் மஞ்சள் அல்லது நியான் நிறங்களில் செல்லும். நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள், முக்கியமாக வைட்டமின் பி2 (ரைபோஃப்ளேவின்) எடுத்துக்கொண்டால் ஏற்படும் பொதுவான மற்றும் பாதிப்பில்லாத விளைவுதான் இது. இதுகுறித்து கவலைக்கொள்ள வேண்டியதில்லை என்றாலும், முதல்முறை சப்ளிமெண்ட் பயன்படுத்துபவர்களுக்கு புதிதாகவும், பயமாகவும் இருக்கலாம். ஆனால் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை.
சோர்வு, மனநிலை மாற்றங்கள்
சிலர் முடி மற்றும் சரும பராமரிப்பிற்காக சப்ளிமெண்டுகள் எடுத்துக்கொள்ள தொடங்கும்போது சோர்வு, எரிச்சல் போன்ற மனநிலை மாற்றங்களை அனுபவிக்கக்கூடும். இது அதிகப்படியான வைட்டமின் B6, நியாசின் (B3) அல்லது துத்தநாகத்தால் ஏற்படக்கூடியது. வைட்டமின் B6 அதிக நரம்பு சேதத்தை ஏற்படுத்தும், இது உணர்வின்மை மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும். நியாசின் (B3) அளவுக்கு அதிகமாக உட்கொள்வது தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
நகம் உடைதல், முடி உதிர்தல்
சப்ளிமெண்ட் எடுக்கத் தொடங்கும்போது உச்சந்தலையில் எண்ணெய் பசை அதிகரிப்பது, நகங்கள் எளிதாக உடைவது, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உடல் திடீரென ஊட்டச்சத்துக்களின் வருகைக்கு ஏற்ப மாறும்போது, கெரட்டின் உற்பத்தி மற்றும் ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கும்போது இந்த விளைவுகள் ஏற்படலாம். ஆனால் இது தற்காலிகமானதுதான்.
செரிமான அசௌகரியம் மற்றும் வீக்கம்...
குமட்டலைத் தவிர சில நேரங்களில் வீக்கம், வாயு அல்லது லேசான வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளையும் பயனர்கள் அடைகின்றனர். ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட கொலாஜன், ஜெலட்டின் அல்லது செயற்கை இனிப்புகள் போன்ற பொருட்கள் உணர்திறன் உள்ளவர்களுக்கு லேசான செரிமானக் கோளாறை ஏற்படுத்தக்கூடும். சப்ளிமெண்ட் எடுக்க தொடங்கும் ஆரம்பகாலத்தில் இந்த அறிகுறிகள் தென்படலாம். பின்னர், குடல் அதன் வருகைக்கு ஏற்றவாறு மாறத் தொடங்கிவிடும்.
இறுதியில் பிரகாசமான சருமம், வலுவான நகங்கள் மற்றும் பளபளப்பான கூந்தல் போன்றவை மாத்திரைகளால் கிடைப்பவை அல்ல. இவை அனைத்தும் ஊட்டச்சத்துக்களால், அதாவது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. நமது அழகு, நமது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பதை புரிந்துகொண்டாலே இதுபோன்ற மாத்திரைகளும், கேப்ஸ்யூல்களும், அழகு சாதனப் பொருட்கள் எதுவும் உங்களுக்கு பயன்படாது.
- ஆங்கிலம் பேச அழுத்தம் கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு அதிக பதட்ட உணர்வு ஏற்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
- ஆங்கிலத்தில் உங்கள் குழந்தைகள் புலமைபெற வேண்டுமானால், நீங்களும் வீட்டில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள்.
அண்மையில் தமிழ்நாட்டில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மும்மொழிக் கொள்கை தொடர்பான வாக்குவாதங்கள் அரங்கேறியதை நாம் அனைவரும் அறிவோம். இதில் பலரும் ஹிந்தி திணிக்கப்படும் என்பதற்காக மும்மொழிக் கொள்கையை எதிர்த்தாலும், சிலர் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலமே முழுமையாக தெரியாதபோது எப்படி மூன்றாவது மொழி என்பதற்காக எதிர்த்தனர். ஆம் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இருமொழிக்கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த இரண்டு மொழிகளிலும் வல்லவராக இருப்போம். ஒருசிலரே. அனைவருக்கும் அவரவது தாய்மொழி என்பது மிகமுக்கியமான ஒன்று. அடுத்து இணைப்புப் பாலமான ஆங்கிலம். ஆனால் இப்போதெல்லாம் தாய்மொழி தெரியாவிட்டாலும், ஆங்கிலத்தில் பேசினால் பெருமை என பலரும் நினைக்கின்றனர். தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆங்கிலவழி கல்விமுறை உள்ள பள்ளிகளில் சேர்க்கின்றனர். பொது இடங்களில் தமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என அவர்களை ஊக்குவிக்கின்றனர். ஆனால் குழந்தைகளை ஆங்கிலம் பேச கட்டாயப்படுத்துவது அவர்களின் மொழி வளர்ச்சி, உணர்ச்சி, ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
கற்றலில் அதிகரிக்கும் பதற்றம்...
2023ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, எகிப்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆங்கிலம் பேச அழுத்தம் இருப்பதாகவும், இது குழந்தைகளுக்கு அதிக பதட்டத்தை கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேச வராதபோது அது அவர்களின் தன்னம்பிக்கையை பாதித்தாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது எகிப்தில் மட்டுமல்ல. தமிழ்நாட்டிலும் அப்படித்தான். நமது மொழி தமிழ். மற்ற மொழியை தவறுதலாக உச்சரித்தால் எந்த தவறும் கிடையாது. இதனை பெற்றோர்கள் மனதில் கொள்ளவேண்டும். நீங்கள் வீட்டில் தமிழில் பேசுவீர்கள். வெறும் கற்பதை வைத்துமட்டும் பிள்ளைகள் சரளமாக ஆங்கிலம் பேசவேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கக்கூடாது. முதலில் அந்த மொழியை குழந்தை அறிந்து, தெளிந்து பின்னர் பேசத்தொடங்கும்போதுதான் சரியான உச்சரிப்பு வரும். அதற்குள் குழந்தைகளை ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என நிர்பந்திக்கும்போது அல்லது அழுத்தம் கொடுக்கப்படும்போது, அவர்கள் பயப்படுகிறார்கள். அதிகம் பதட்டம் கொள்கிறார்கள். பதட்டத்தால் அதுசரியாக வராதபோது, அப்போது எப்போதும் நமக்கு ஆங்கிலம் வராதோ என அச்ச உணர்வு கொள்கிறார்கள். இதுவே அவர்கள் ஆங்கிலம் கற்க தடையாக அமைந்துவிடும். மேலும் படிப்பிலும் அவர்களை பாதிக்கும். அதனால் பெற்றோர் குழந்தைகளிடம் ஆங்கிலம் கற்க வேண்டும் என அதிகம் அழுத்தம் கொடுக்காதீர்கள்.

நாம் ஒரு செயலை செய்ய கட்டாயப்படுத்தும்போது அதன்மீது குழந்தைகளுக்கு வெறுப்பு உண்டாகும்
பெற்றோரும் ஆங்கிலத்தில் பேசுங்கள்...
வீட்டில் நாம் நம் தாய்மொழியில் பேசுவதால் அவர்களுக்கு தமிழ் சரளமாக வரலாம். அப்படி ஆங்கிலத்தில் உங்கள் குழந்தைகள் புலமைபெற வேண்டுமானால், நீங்களும் வீட்டில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள். அப்போது அது குழந்தைக்கு எளிதாக இருக்கும். இருமொழிகளையும் மாறி மாறி பேசும்போது இரண்டிலும் நல்ல புலமை பெறுவார்கள். அவர்களுக்கு இருமொழிகளையும் பற்றி அறிய ஆர்வம் வரும். மறுபக்கம் ஆங்கிலத்திற்கு ஆதரவாக தாய்மொழியை அடக்குவது மொத்த அறிவாற்றல் வளர்ச்சியை குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களை டியூஷனுக்கு அனுப்பாமல் சிறுவர்களுக்கான ஆங்கில படங்களை போட்டுக்காட்டி அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளை கற்றுக்கொடுக்கலாம். இயல்பான உரையாடல் மூலம் ஆங்கிலத்தை ஊக்குவிக்கலாம். மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்போது அதை கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். அதைவிடுத்து அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். மேலும் தாய்மொழி அறிதலும் மிக முக்கியமானது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
- குழந்தை பெற வேண்டுமானால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இருப்பது முக்கியம்.
- நீங்கள் தவறவிட்ட விஷயங்களை அடைவதற்கான வழி அல்ல குழந்தைப் பெற்றுக்கொள்வது.
புதிதாக திருமணமான தம்பதிகள் குழந்தை பெற திட்டமிட்டுள்ளீர்கள் எனில், எதற்காக நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். ஏனெனில் குழந்தை வளர்ப்பு என்பது எளிதானது அல்ல. ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு நாம் முழுமனதோடு தயாராக வேண்டும். நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன் மற்றவர்களின் அழுத்தத்தின் காரணமாக குழந்தை பெறக்கூடாது என்பதை தெளிவாக மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். உண்மையில் ஒரு பெண் ஆசைப்பட்டு அல்லது கணவன், மனைவி இருவரும் விருப்பப்பட்டு ஒரு குழந்தைக்கு தயாராகிறீர்கள் என்றால் பிரச்சனை இல்லை. மாறாக, வேறுசில காரணங்களால் நீங்கள் குழந்தை பெற முயற்சிக்கிறீர்கள் என்றால் அதனை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் அதனால் பாதிக்கப்படப்போவது நீங்கள் இல்லை. எந்தப் பாவமும் செய்யாமல் இந்த உலகுக்கு வரும் குழந்தைதான். காரணம், மற்றவர்களின் அழுத்தத்தால் ஒரு குழந்தை பெறும்போது நீங்கள் முழு அன்பையும் குழந்தையிடம் வெளிப்படுத்தமாட்டீர்கள். பெற்றோம், வளர்த்தோம் என கடமைக்காக ஒரு செயலை செய்வீர்கள். அதனால் கீழ்க்காணும் காரணங்களுக்காக பெண்கள் குழந்தை பெறுவதை கைவிடுங்கள்.
"பெற்றோர் பேரக்குழந்தையை பார்க்க விரும்புகிறார்கள்"
திருமணமானாலே வீட்டில் உள்ள பெரியவர்கள், பேரக்குழந்தையை பார்த்துவிட்டால் நிம்மதியாக சென்றுவிடுவேன். பேரக்குழந்தையை பெற்றுக்கொடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என தொடர்ந்து பேச தொடங்கிவிடுவர். பெற்றோர் விருப்பம், மாமியார் கேட்டார் என ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு எப்போது விருப்பமோ, அப்போது குழந்தை பற்றி யோசியுங்கள்.
"எங்களை நெருக்கமாக்கும் என்று நினைத்தோம்"
பெரும்பாலான தம்பதிகள் குழந்தை பிறந்தால் தங்களுக்குள் கூடுதல் நெருக்கம் வந்துவிடும் என நினைப்பார்கள். அது தவறு. உங்களுக்கு நெருக்கம் வேண்டும் என்று நினைத்தால் நேரம் ஒதுக்கி அதிகம் வெளியே செல்லுங்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயலுங்கள். அதைவிடுத்து குழந்தை பெற்றுக்கொண்டு, நெருக்கம் இல்லாமல் உங்கள் நிலையை இன்னும் மோசமாக்கி கொள்ளாதீர்கள்.

புதிய தம்பதிகள் கூடுதல் பிணைப்பு வேண்டும் என்று எண்ணினால் ஒன்றாக அதிக நேரம் செலவிடுங்கள்
ஆண், பெண் என்பதை நிரூபிக்க...
திருமணமான ஒரு ஆண்டிற்குபின் குழந்தை பெறுவது என்பது கட்டாயம் என்ற விதிமுறை நம் சமூகத்தில் நடைமுறையில் உள்ளது. இதற்கு மாறாக நமது திட்டங்கள் ஏதேனும் இருந்தால், உன்னால் குழந்தை பெத்துக்க முடியாது என பெண்களையும், நீயெல்லாம் ஒரு ஆணா என கணவன்மார்களையும் விமர்சிக்க தொடங்குவர். இந்த பேச்சுகளை நினைத்து பயம்கொண்டே உங்களுக்கு வேறு ஏதேனும் திட்டங்கள் இருந்தாலும் குழந்தை பெற்றுக்கொள்வீர்கள். ஆனால் அப்படி செய்யாதீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் சமூகம் பேசும். அதனால் உங்கள் கடமைகளை நிறைவேற்றிவிட்டு குழந்தைக்கு நீங்கள் தயார் எனும்போது பெற்றுக்கொள்ளுங்கள்.
"மற்ற குடும்பங்களிலிருந்து வித்தியாசமாக இருக்க விரும்பவில்லை"
சமூக அழுத்தம் காரணமாக நிறைய திருமணமான தம்பதிகள் உடனே குழந்தைகளைப் பெறுகிறார்கள். திருமணமான சில மாதங்களிலேயே உங்களைச் சுற்றியுள்ள பெரும்பாலானோர் "நல்ல செய்தி" இருக்கா என கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே என குழந்தைப் பெற்றுக்கொள்ளக்கூடாது. மேலும் எங்களோடு திருமணம் செய்துகொண்டவர்கள் எல்லாம் பெற்றுக்கொண்டார்கள். நாங்கள் இன்னும் பெறவில்லை எனக்கூறி, குழந்தை பெற முயற்சிக்காதீர். குழந்தை பெற வேண்டுமானால் நீங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இருப்பது முக்கியம்.
"நான் பெறாத விஷயங்கள் என் குழந்தைக்கு கிடைக்கவேண்டும்"
என்னுடைய சிறுவயதில் நான் நிறைய விஷயங்களை தவறவிட்டேன். ஆனால் என் குழந்தைக்கு எல்லாவற்றையும் நான் கொடுக்கவேண்டும். என் குழந்தைக்கு செய்ய தேவையான அனைத்தும் இப்போது என்னிடம் உள்ளது என நீங்கள் தவறவிட்ட விஷயங்களை அடைவதற்கான வழி அல்ல குழந்தைப் பெற்றுக்கொள்வது. அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாளம் இருக்கும். ஆகையால் இதுபோன்ற செயல்களை மனதில் வைத்துக்கொண்டு ஒரு குழந்தையை பெறாதீர்கள். நீங்களாக விருப்பப்பட்டு ஒரு குழந்தை பெறும்போது அதற்கு உங்களின் அனைத்துவிதமான அன்பும் கிடைக்கும். நாம் திட்டமிட்டு நடத்துவதைவிட, எதிர்பாராமல் கிடைப்பதில்தான் ஆனந்தம் அதிகம் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
- கடுகு எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவது முடி அமைப்பை மேம்படுத்தும்.
- அதிக உணர்திறன் சருமம் கொண்டவர்கள் கடுகு எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
கடுகு எண்ணெயில் முடி ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. கடுகு எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மேலும் மாசு, சூரியனின் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் சேதங்களிலிருந்து முடியை பாதுகாக்கிறது. மேலும் இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் தொற்று, பொடுகு மற்றும் அரிப்புகள் ஏற்படுவதை தடுத்து அதற்கெதிராக போராடுகின்றன. முடிக்கு இவ்வளவு நன்மை பயக்கும் கடுகு எண்ணெயை மற்ற எந்தெந்த பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தினால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
வெந்தயம் - கடுகு எண்ணெய்
வெந்தயம் புரதம் மற்றும் நிகோடினிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும். வெந்தயத்தில் உள்ள புரதங்கள் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் நிகோடினிக் அமிலம் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கிறது. வெந்தயத்தை கடுகு எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தும்போது அந்த கலவை உச்சந்தலையில் ஊடுருவி, வேர்களுக்கு ஊட்டமளிக்கும்.
பயன்படுத்தும் முறை: வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, பேஸ்டாக அரைத்து, கடுகு எண்ணெயுடன் கலந்து, இந்த கலவையை உச்சந்தலையில் தடவி, 30-45 நிமிடங்கள் விட்டு, பின்னர் தலைக்கு குளிக்கவும்.
கடுகு எண்ணெய் - வெங்காயச் சாறு
வெங்காயச் சாறு நீண்ட காலமாக அதன் அதிக சல்பர் உள்ளடக்கத்திற்கு பெயர் பெற்றது. சல்பர் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் முடி நுண்குழாய்களை வலுப்படுத்துகிறது. வெங்காயச் சாற்றை கடுகு எண்ணெயுடன் கலந்து தடவுவது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும் முடிவளர்ச்சியைத் தூண்டி காலப்போக்கில் முடி உதிர்தலைக் குறைக்கிறது. இந்த கலவை உச்சந்தலையில் தொற்றுகளைத் தடுக்கவும், வேர் முதல் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
பயன்படுத்தும் முறை: கடுகு எண்ணெய்யை லேசாக சூடுப்படுத்தி, அதில் வெங்காய சாற்றை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் ஊற்றி, மெதுவாக மசாஜ் செய்து, 30-40 நிமிடங்கள் விட்டு, ஷாம்பு பயன்படுத்தி குளிக்கலாம். இது முடி அடர்த்தியை மேம்படுத்துவதோடு, உதிர்தலை குறைக்கும்.
கடுகு எண்ணெய் - கற்றாழை
கற்றாழையின் நீரேற்றம் பண்பு தலையின் எரிச்சலுக்கு சிகிச்சையளிக்கிறது. இதனை கடுகு எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும்போது உச்சந்தலையின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. முடி நுண்ணறைகளை அவிழ்த்து, முடி மீண்டும் வளரத் தூண்டுகிறது. இந்த கலவை முடியை ஹைட்ரேட்டாகவும், மென்மையாகவும் வைத்திருப்பதோடு, முடியின் உடையும் தன்மையை குறைக்கும். அதாவது முடியை வலுப்படுத்தும்.
பயன்படுத்தும் முறை: கற்றாழை ஜெல்லை கடுகு எண்ணெயுடன் கலக்கவும். கலவையை உச்சந்தலையில் மற்றும் தலைமுடியில் தடவி, 30 நிமிடங்கள் விட்டு, பின்னர் முடியை அலசவும்.
கடுகு எண்ணெய் - கறிவேப்பிலை
கறிவேப்பிலையில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பீட்டா கரோட்டின் உள்ளிட்டவை இருக்கின்றன. இவை தலைமுடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கும் மற்றும் ஒட்டுமொத்த உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கறிவேப்பிலையை கடுகு எண்ணெயோடு சேர்த்து பயன்படுத்தும்போது வலுவான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
பயன்படுத்தும் முறை: கடுகு எண்ணெயில் தேவையான அளவு கருவேப்பிலையைப் போட்டு, நன்கு கொதிக்கவிடவும். பின்னர் இந்த எண்ணெயை எடுத்து ஆறவைத்து வடிகட்டி முடிக்கு மசாஜ் செய்யலாம். வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயால் மசாஜ் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
கடுகு எண்ணெய் - செம்பருத்தி
செம்பருத்தி கெரட்டின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், முடி இழைகளை அடர்த்தியாக்கவும், புதிய வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. கடுகு எண்ணெயுடன் செம்பருத்தி இலைகள், பூவை சேர்க்கும்போது சக்திவாய்ந்த ஹேர் மாஸ்க் உருவாகிறது. இது முடி உதிர்தலைக் குறைப்பது மட்டுமல்லாமல், முடிக்கு இயற்கையான பளபளப்பை தருகிறது.
பயன்படுத்தும் முறை: செம்பருத்தி இதழ்கள் அல்லது இலைகளை அரைத்து, பேஸ்ட் பதத்திற்கு வந்தபின் கடுகு எண்ணெயுடன் கலந்து, உச்சந்தலை மற்றும் முடியில் தடவவும். 40-45 நிமிடங்கள் அப்படியே ஊறவைத்து, பின்னர் தலையை அலசலாம்.

வெந்தயம் முடிக்கு நன்கு ஊட்டமளிக்கும்
கடுகு எண்ணெய் - கருஞ்சீரகம்
கருஞ்சீரகத்தின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மயிர்க்கால்களைத் தூண்டுவதோடு, உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. இதனை கடுகு எண்ணெயுடன் கலந்து தடவும்போது முடி இழைகள் வலுவடைகின்றன.
பயன்படுத்தும் முறை: கருப்பு விதைகளை நன்றாகப் பொடியாக அரைத்து, சூடான கடுகு எண்ணெயுடன் கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். 30-40 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் அலசலாம். இந்த பேக்கை வாரந்தோறும் போடுவது முடி உதிர்தலைக் குறைத்து வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.
கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் பால்
தேங்காய்ப் பாலில் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை முடி வளர்ச்சியை ஊக்குவித்து, முடி உடைவதை தடுக்கிறது. இதனை கடுகு எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும்போது முடியின் வலிமையை அதிகரிக்கிறது. முடி உடைதலை குறைத்து ஒட்டுமொத்த முடி அமைப்பை மேம்படுத்துகிறது. இந்த கலவை வறண்ட மற்றும் உடையக்கூடிய கூந்தலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பயன்படுத்தும் முறை: தேங்காய்ப் பாலை கடுகு எண்ணெயுடன் கலந்து, அந்தக் கலவையை உச்சந்தலை மற்றும் தலைமுடியில் தடவி, 45 நிமிடங்கள் விட்டு பின்னர் கழுவவும். தொடர்ந்து தடவுவது முடியை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும்.
- நள்ளிரவுக்கு மேல் இயங்குவதற்கு ஏற்றவாறு நம் உடல் வடிவமைக்கப்படவில்லை. தூக்கமின்மை, மூளை வயதாவதை துரிதப்படுத்தும்.
- நினைவாற்றலை ஒருங்கிணைக்க, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த, செல்லுலார் சேதத்தை சரிசெய்ய மனித மனதிற்கு இரவில் ஓய்வு தேவைப்படுகிறது.
நள்ளிரவுக்குப் பிறகும் விழித்திருப்பது என்பது இளம் தலைமுறையினர் பலருக்கும் வழக்கமாகிவிட்டது. அலுவலகத்திற்கு செல்வது, வீடு திரும்புவது, வீட்டு வேலைகளை முடிப்பது, இன்ஸ்டாகிராமை ஸ்க்ரோலிங் செய்வது அல்லது படம், நிகழ்ச்சி என வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பது என நள்ளிரவுக்கு மேல் பலரும் விழித்திருக்கின்றனர். ஆனால் நள்ளிரவுக்கு மேல் இயங்குவதற்கு ஏற்றவாறு நம் உடல் வடிவமைக்கப்படவில்லை என்பதை பலரும் புரிந்துகொள்ள வேண்டும். நாம் விழித்துக்கொண்டிருந்தாலும், நமது உடலும், மனமும் அவற்றின் இயல்பான செயல்பாடுகளுக்கு ஏற்படும் இடையூறுகளை சமாளிக்க அமைதியாக உள்ளுக்குள் போராடி வருகின்றன.
இதனால் மனநிலை மாற்றங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், இருதய மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அறிவாற்றல் செயல்பாடுகள், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் முடிவெடுப்பது போன்ற அனைத்தும் இரவு நேரம் விழித்திருக்கும் போது மோசமடைகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நள்ளிரவுக்கு பின் விழித்திருப்பது இயற்கையாகவே உடலையும், மூளையையும் ஓய்வுக்குத் தயார்படுத்தும் சர்க்காடியன் தாளங்கள் சீர்குலைத்து, மனக்கிளர்ச்சி, மோசமான உணர்ச்சிக் கட்டுப்பாடு மற்றும் மெதுவான மன செயலாக்கத்திற்கு வழிவகுக்கும். மேலும் மூளை செயல்பாடு மற்றும் நடத்தையில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நள்ளிரவுக்கு பின் விழித்திருப்பதால் உடல் மற்றும் மனநலனுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து காண்போம்.
அதிகரிக்கும் மனச்சுமை
தூக்க சுழற்சி முதல் ஹார்மோன் உற்பத்திவரை நமது உயிரியலின், கிட்டத்தட்ட ஒவ்வொரு நடைமுறையையும் சர்க்காடியன் தாளங்கள் வழிநடத்துகின்றன. நள்ளிரவுக்கு பின் நாம் விழித்திருக்கும்போது, மூளை நம் செயல்பாடுகளுக்கு ஏற்ப நம் எண்ணங்களை, செயல்களை, இயக்கங்களை ஒழுங்குப்படுத்தாது. செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற நியூரோட்ரான்ஸ்மிட்டர்களின் கட்டுப்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற நியூரோட்ரான்ஸ்மிட்டர்களின் கட்டுப்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் மனச்சோர்வு, ஸ்கிசோஃப்ரினியா போன்ற மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த செயல்பாடுகள் அனைத்தும் மனச்சுமையை அதிகரிக்கும்.
அறிவாற்றல் குறைபாடுகள்
நள்ளிரவுக்கு பின் விழித்திருப்பது உங்கள் தூக்கத்தை தொடர்ந்து பாதிக்கும். இந்த தொடர்விழிப்பு, அறிவாற்றல் மற்றும் செயலாக்கத்தை கடுமையாக பாதிக்கும். கவனம், நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன்கள் போன்றவை பாதிக்கப்படும். இது ஒட்டுமொத்த அன்றாட வாழ்வையும் பாதிக்கும். தூக்கமின்மையில் செல்லும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

உடல் மற்றும் மனதுக்கு ஓய்வு அவசியம்
உணர்ச்சிரீதியான பாதிப்புகள்
நள்ளிரவுக்குப்பின்பும் விழித்திருப்பதால், அறிவாற்றல் பாதிப்பை தாண்டி உணர்ச்சிரீதியான பல விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். இரவில் மூளை உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தவறும்போது எரிச்சல், பதட்டம், மனச்சோர்வு ஏற்படும். மேலும் நள்ளிரவுக்குப் பிறகு மனித மனம் மெதுவாக இயங்குவது மட்டுமல்லாமல் உணர்ச்சி ரீதியாகவும் அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கும். இதனால் ஒட்டுமொத்த மனநலனும் பாதிப்படையும்.
மூளை பாதிப்பு
நாள்பட்ட தூக்கமின்மை, அறிவாற்றல் வீழ்ச்சி, டிமென்ஷியா போன்ற மறதி நோய்களுக்கு வழிவகுக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தூக்கமின்மை மற்றும் தவறான தூக்க முறைகள் மூளை வயதாவதை துரிதப்படுத்துகின்றன. மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, சீரான தூக்க முறைகளைப் பராமரிப்பதும், இரவு நேர செயல்பாடுகளைத் தவிர்ப்பதும் மிக முக்கியம். நினைவாற்றலை ஒருங்கிணைக்க, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த மற்றும் செல்லுலார் சேதத்தை சரிசெய்ய மனித மனதிற்கு இரவில் ஓய்வு அவிசயம்.






