search icon
என் மலர்tooltip icon

    தலையங்கம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் அலுவலகத்திற்கு குழந்தைகள் வந்திருந்தனர்
    • மறக்க முடியாத தருணங்கள் என குறுஞ்செய்தியையும் பதிவிட்டுள்ளார் பிரதமர்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

    இன்று அவரை காண சில குழந்தைகள் அவரது அலுவலகத்திற்கு வந்தார்கள்.

    அவர்களுடன் பிரதமர் மோடி மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டார். அப்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் சில 'மேஜிக்' செய்து காட்டினார். இதில் ஒரு நாணயத்தை குழந்தைகளின் நெற்றியில் ஒட்டி அதனை மறைய செய்தார். அதை குழந்தைகள் ரசித்தனர்.

    இந்த சம்பவத்தின் வீடியோவை தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் பிரதமர் பதிவிட்டார். அது இணையத்தில் பரவி வருகிறது. அதில் "எனது இளைய நண்பர்களுடன் சில மறக்க முடியாத தருணங்கள்" என ஒர் குறுஞ்செய்தியையும் பதிவிட்டுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட "ரக்ஷாபந்தன்" பண்டிகையின் போது சில குழந்தைகள் அவரை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
    • இன்று காலை 8.30 மணி முதல் பாட வாரியாக வகுப்புகள் தொடங்கின.

    சென்னை:

    கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் 2-வது முறையாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 12-ந்தேதியும், 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் வருகிற 14-ந்தேதியும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளி திறப்பு தாமதமானதால் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி திறப்பு தாமதமானதால் அவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்த முடியாததால் மாணவ-மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

    இதை கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆயத்தப் பணிகள் நேற்றே தொடங்கி நடந்தது.

    மாலையிலேயே அந்தந்த மாணவ, மாணவிகளுக்கு செல்போனில் அதற்கான லிங்க் அனுப்பப்பட்டது.

    இன்று காலை 8.30 மணி முதல் பாட வாரியாக வகுப்புகள் தொடங்கின. வீட்டில் இருந்தபடியே 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பாடத்திட்டங்களை ஆன்லைன் மூலம் படித்தனர்.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடந்தது. அதன் பின்பு வெயில் தாக்கத்தால் இப்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது.

    பள்ளி திறந்ததும் வழக்கம் போல் நேரடி வகுப்புகள் தொடங்கும்.

    • 17 பெட்டிகள் தடம் புரண்டதில், 230க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
    • ரெயில் விபத்தை தடுக்கும் கவாச் பாதுகாப்பு அமைப்பு பாலசூர் வழிதடத்தில் இல்லை என்று தகவல்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் 17 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரெயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா அறிவித்துள்ளார்.

    மேலும், விபத்து நடந்த இடத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும், ரெயில் விபத்தை தடுக்கும் கவாச் பாதுகாப்பு அமைப்பு பாலசூர் வழிதடத்தில் இல்லை என்றும் ரெயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரெயில்கள் மோதிக்கொள்ளாமல் தடுப்பதே கவாச் திட்டம் ஆகும்.

    • மஹந்திரா குழும தலைவர் பதவியை 48 ஆண்டுகளாக வகித்து வந்தவர் கேசுப் மஹிந்திரா.
    • பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் மஹிந்திரா கூட்டணி அமைக்கவும் முக்கிய பங்கு வகித்தார்.

    இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் தலைவருமான கேசுப் மஹிந்திரா (99) இன்று அதிகாலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

    மஹந்திரா குழும தலைவர் பதவியை 48 ஆண்டுகளாக வகித்து வந்த கேசுப் மஹிந்திரா, ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள் மற்றும் மருத்துவம் என பல்வேறு துறைகளில் மஹிந்திரா குழுமம் களமிறங்க முக்கிய காரணமாக விளங்கினார்.

    இதுதவிர வில்லிஸ் கார்ப்பரேஷன், மிட்சுபிஷி, இண்டர்நேஷனல் ஹார்வெஸ்டர், யுனைடட் டெக்னாலஜிஸ், பிரிட்டிஷ் டெலிகாம் உள்பட பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் மஹிந்திரா கூட்டணி அமைக்கவும் முக்கிய பங்கு வகித்தார்.

    இந்நிலையில், கேசுப் மஹிந்திராவின் மறைவுக்கு பிரதமர் மோடிஇரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கேஷுப் மஹிந்திராவின் மறைவால் வேதனை அடைகிறேன். வணிக உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும், அவரது முயற்சிகளுக்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • பனை ஓலை ெவட்டியபோது சம்பவம்
    • மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெள்ளைச்செட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 70). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், பனை ஓலை மூலம் கூடை, பாய் உள்ளிட்டவைகளை பின்னி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டருகே வயல்காட்டில் உள்ள பனைமரத்தில் ஏறி ஓலை வெட்டியுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பனைமரத்தின் அருகே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பியிலிருந்து இவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த ஆவுடையார்கோவில் போலீசார் ராமனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • சில நேரங்களில் காற்றும் புயலாகி விடுவதை போல் காய்ச்சலும் விபரீதமாகி விடுகிறது.
    • தற்காத்து கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை நாம்தான் பின்பற்ற வேண்டும்.

    இயற்கையை தடுக்க முடியாது. ஆனால் அதில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என்பார்கள். இயற்கை என்பது புயல், மழை என்பதையும் தாண்டி நோய்களும் அதில் இணைந்து இருக்கிறது.

    கொரோனா பெருந்தொற்று என்பது மிகப்பெரிய இயற்கை பேரிடராக உலகையே தாக்கியது. அதில் இருந்து உலகம் மீண்டது. லட்சக்கணக்கானவர்களை வாரி சுருட்டி சென்றாலும் எஞ்சியவர்கள் மருந்து, முகக்கவசம் என்று சில வழிமுறைகளை கடைபிடித்து தற்காத்து கொண்டோம் என்பதே உண்மை.

    புயல், மழையை வானிலை முன்கூட்டியே முன் எச்சரிக்கை செய்யும். அதேபோல் இனி மருத்துவ உலகம் அவ்வப்போது அறிவிக்கும் முன்னெச்சரிக்கைகளை கண்டிப்பாக கடைபிடித்தே ஆகவேண்டிய சூழல். தவறினால் அதற்கான விலையை நாம்தான் கொடுக்க வேண்டும்.

    இப்போது ஒரு புதிய எச்சரிக்கையை சுகாதாரத்துறை விடுத்துள்ளது. காய்ச்சல் என்பது சாதாரணமாக எல்லோரும் சந்திக்கும் நோய்தான். சில நேரங்களில் காற்றும் புயலாகி விடுவதை போல் காய்ச்சலும் விபரீதமாகி விடுகிறது.

    அந்த வகையில் காய்ச்சலில் புளூ காய்ச்சல் காலநிலை காய்ச்சலாக இருந்தாலும் அது பரவும் தன்மை கொண்டது. இருமல், தும்மல் ஏற்படும்போது காற்றில் வைரஸ் பரவுகிறது. எனவே காய்ச்சல் அறிகுறி இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்.

    பண்டிகை காலம் வேறு வருகிறது. கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே வெளியே செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்லுங்கள் என்று எச்சரித்துள்ளனர்.

    இது ஏற்கனவே கொரோனா காலத்தில் நாம் கடைபிடித்த பழக்கம்தான். எனவே இதை கடைப்பிடிப்பது சிரமமானது அல்ல.

    காய்ச்சலோடு கொரோனாவும் சற்று அதிகரித்துள்ளது. தொற்றுக்கான அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை இலவசமாக செய்துகொள்ள சென்னையில் 16 சமுதாய நலக்கூடங்களும் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

    அரசு உதவி செய்யும். அதை பயன்படுத்தி கொள்ள வேண்டியது நம் கைகளில்தான் உள்ளது.

    தொற்று ஏற்படலாம் என்று அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் அதில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் நாம்தான் பின்பற்ற வேண்டும்.

    இயற்கை அச்சுறுத்தல் என்பது எப்படி எந்நேரமும் வரலாம் என்பதை போல் இனிமேல் இந்த மாதிரி தொற்றுக்களும் எந்நேரமும் வரலாம்.

    வைரசில் உருமாற்றம் ஏற்படுவது போல் நோயிலும் அதன் தாக்கத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம். எந்த சூழலிலும் அதனிடம் இருந்து நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    சளி, காய்ச்சல் இருந்தால் சுய சிகிச்சை மேற்கொள்ளாதீர்கள். மருத்துவர்களின் ஆலோசனையை கேளுங்கள். அதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அது மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும்.

    காலம் மாறிவிட்டது. அதற்கேற்ப நாமும் நமது வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். 

    • 100 யூனிட் வரை இலவசம் என்பது மிகவும் குக்கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு நிச்சயம் உதவும்.
    • நகரங்களில் குடியிருப்பவர்களுக்கு, நகரச் சூழ்நிலைக்கு ஏற்ப மின்சார பயன்பாடு சற்று அதிகமாகவே இருக்கும்.

    உயர் அழுத்தம்...

    மின்சாரத்திலும் இருக்கிறது. மின்சார கட்டண உயர்விலும் இருக்கிறது.

    தமிழக அரசு மின்சார கட்டணத்தை சற்று உயர்த்தியது உயர் மின் அழுத்தத்தை போல மக்கள் மத்தியில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. எட்டு ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின்வாரியம் கடனில் தவிக்கிறது. எனவே மின் கட்டணத்தை உயர்த்துங்கள் என்ற அழுத்தம் அரசுக்கு... அரசும் உயர்த்தி விட்டது. இருக்கிற சூழ்நிலையில் இந்த உயர்வு எங்களுக்கு கூடுதல் அழுத்தமாகவே மாறும் என்பது மின் நுகர்வோர்களாக இருக்கும் மொத்த தமிழக மக்களின் ஆதங்கம்.

    இந்த சூழ்நிலையில் குஜராத்தை விட குறைவு, கர்நாடகத்தை விட குறைவு என்று அரசியல் ரீதியாக அணுகி நியாயப்படுத்துவது சரியாக இருக்காது. ஏற்கனவே சுமந்து பழக்கப்பட்ட கழுதைக்கு கொஞ்சம் சுமையை கூடுதலாக ஏற்றி வைத்தாலும், அது சமாளித்து நடக்கும். பழக்கம் இல்லாவிட்டால் சற்று சுமை அதிகரித்தாலும் தடுமாறத்தான் செய்யும். அதே நிலைமைதான் இதுவும். இது மக்கள் செய்த தவறு ஆகாது.

    100 யூனிட் வரை இலவசம் என்பது மிகவும் குக்கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு நிச்சயம் உதவும். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் வாழும் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கூட ஆண்டில் ஆறு மாதங்கள் வரை சராசரியாக ரூ. 4 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள் என்பதே உண்மை. அவர்களுக்கு கட்டணத்தில் 500 ரூபாய் கூடுவது என்பது எவ்வளவு பெரிய சுமையாக தெரியும்? ஏனெனில் இந்த வர்க்கத்தினர் பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்தி சமாளித்துக் கொண்டிருப்பவர்கள்.

    இந்த கட்டண உயர்வு மின்வாரியத்தோடு நின்று விடாது. இனி வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் அழுத்தம் கொடுப்பார்கள். ஏற்கனவே யூனிட்டுக்கு அரசு கட்டணம் ஒருவகையாக இருக்கும், வீட்டு உரிமையாளர்கள் வசூலிப்பது வேறு வகையாக இருக்கும். அந்த அடிப்படையில் இன்னும் கட்டணத்தை உயர்த்துவார்கள்.

    200 யூனிட்டுகளுக்குள் பயன்படுத்துபவர்கள் சாதாரணமானவர்கள். அதற்கு மேல் பயன்படுத்துபவர்கள் வசதி படைத்தவர்கள் என்று கணக்கிட்டு விட முடியாது, ஏனெனில் சென்னை போன்ற நகரங்களில் குடியிருப்பவர்களுக்கு, நகரச் சூழ்நிலைக்கு ஏற்ப மின்சார பயன்பாடு சற்று அதிகமாகவே இருக்கும்.

    ஆனால் மின் கட்டணத்தை பொறுத்தவரை யூனிட் பயன்படுத்துவதை பொருத்து கட்டணமும் மாறுபடுவது ஒரு பக்கம். தற்போது இந்த கூடுதல் கட்டணம் ஒரு பக்கம் என்பது அவர்களுக்கு கூடுதல் அழுத்தமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே தான் கூட்டணி கட்சிகளும் இந்த விஷயத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளன.

    மின்வாரிய கருத்துக் கூட்டங்களிலும் சரி பொதுவாகவே மின் பயன்பாட்டை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடுவதை கைவிட்டு மாதம்தோறும் கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் யூனிட்டுகள் அதிகரிக்கும் போது கட்டணங்களும் இரண்டு மடங்காகி விடுகிறது.

    குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை மின் பயன்பாட்டை கணக்கிட்டாலாவது மக்களுக்கு இந்த அழுத்தம் பெரும் பிரச்சினையாக தெரியாது. இந்த மாதிரி செய்தால் எந்த அழுத்தத்தையும் தாங்கும் மனநிலைக்கு மக்களும் வருவார்கள்.

    மின்வாரியம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால், எல்லா தரப்பு மக்களுக்கும் ஒரே சீரான மின்சாரத்தை போல, சீரான மின் கட்டணமும் இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    • யாரோ திருடர்கள் எங்கிருந்தோ வந்து கைவரிசை காட்டி சென்று விட்டார்கள் என்பதை நம்புவதற்கில்லை.
    • சிலைகள் மீட்கப்படுவதை பாராட்டினாலும் அதை களவாடி கொண்டு சென்றவர்களும் வெளிச்சத்துக்கு வர வேண்டும்.

    சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்று சுதந்திரத்துக்கு முன்பு பாரதி பாடியது சுதந்திரத்துக்கு பிறகு எட்டுத்திக்கும் சென்று களவாடப்பட்ட நமது கலைச் செல்வங்களை மீட்டு கொண்டு வாருங்கள் என்று மாற்றி பாடி இருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.

    காலத்தால் அழிக்க முடியாத நமது கலைப் பொக்கிஷங்களான பல சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. பாராட்டுக்கள்.

    அந்த வரிசையில் இப்போது கும்பகோணம் அருகே சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் இருந்த 3 ஐம்பொன் சிலைகள் வெளிநாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஆசிய கலை அருங்காட்சியகத்தில் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலையும், டெக்சாஸ் அருங்காட்சியகத்தில் விஷ்ணு சிலையும், புளோரிடா ஹில்ஸ் ஏல மையத்தில் ஸ்ரீதேவி சிலையும் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளார்கள்.

    களவாடி கடல் கடந்து கொண்டு செல்லப்பட்ட கலை செல்வங்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருவது வரவேற்கத் தக்கது. இதற்காக சிரத்தை எடுத்து செயல்படும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள்.

    சிலைகள் மீட்கப்படுவதை பாராட்டினாலும் அதை களவாடி கொண்டு சென்றவர்களும் வெளிச்சத்துக்கு வர வேண்டும். இந்த 3 சிலைகளும் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போய்விட்டது. அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன்புதான் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதில்தான் எங்கோ இடிக்கிறது! அதாவது கோவில் பூட்டை உடைத்து திருடவில்லை. விலை உயர்ந்த ஒரிஜினல் சிலையை எடுத்துவிட்டு போலி சிலையை வைத்துள்ளார்கள். இது யாரோ திருடர்கள் எங்கிருந்தோ வந்து கைவரிசை காட்டி சென்று விட்டார்கள் என்பதை நம்புவதற்கில்லை. 60 ஆண்டுகளாக வெளியே தெரியாத... இல்லை... இல்லை. வெளியே சொல்லாத ஒரு உண்மை இப்போது வெளியே சொல்லப்பட்டுள்ளது.

    இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும். ஒன்று சிலை கடத்தல் பிரிவின் நெருக்கடி அல்லது குற்றம் நிகழ்ந்தது பற்றிய குறுகுறுப்பாக இருக்கும். இனி சிலையை மீட்பதோடு பிரச்சினை தீர்ந்து விட்டது என்று கருதாமல் சம்பந்தப்பட்டவர்களையும் அடையாளம் காண முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் இந்த தேடல், மீட்பு என்பதெல்லாம் முழுமை அடையும்.

    ஏனெனில் இந்த சிலைகள் சாமானிய ஒன்றிரண்டு பேரால் எடுத்து செல்லப்பட்டிருக்காது. போலி சிலைகள் தயார் செய்வது, கோவிலில் இருந்து எடுப்பது, போலி சிலையை வைப்பது, எடுக்கப்பட்ட சிலைகளை விமானத்தில் கொண்டு செல்வது என்பதெல்லாம் சாதாரண விஷயமா? அவர்களையும் கண்டுபிடித்து `காப்பு' போட்டால்தான் சிலைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். அது மட்டுமல்ல நமது முந்தைய நாகரீகங்களை அகழ்வாராய்ச்சிகள் மூலம் தேடிக் கொண்டிருக்கிறோம்.

    நம் கண் முன்னால் இருக்கும் நமது பாரம்பரிய நாகரீகத்தையும், கலையையும் காப்பாற்றி பாதுகாக்க வேண்டியதும் நமது கடைமையல்லவா? அந்த கடமையில் தவற கூடாது.

    • குரங்கு அம்மை நோய் இந்தியாவில் முதல் முறையாக ஊடுருவி உள்ளது
    • முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

    கொரோனா தொற்றை தொடர்ந்து குரங்கு அம்மை நோயும் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. சுமார் 50 நாடுகளில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பரவ தொடங்கிய குரங்கு அம்மை நோய் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து குரங்கு அம்மை நோய் நமது நாட்டிலும் பரவினால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்கிற ஆலோசனையிலும் மத்திய சுகாதார துறையினர் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக அனைத்து மாநில சுகாதார துறை அதிகாரிகளும் ஏற்கனவே உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் இந்தியாவில் முதல் முறையாக ஊடுருவி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து மத்திய சுகாதார துறை அதிகாரிகள் கேரளாவுக்கு விரைந்து சென்று தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மத்திய சுகாதார துறை செயலாளரான ராஜேஷ்பூசன், மாநில சுகாதார துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் குரங்கு அம்மைக்கு எதிரான முன்எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

    உலகம் முழுவதும் 50 நாடுகளில் 3413 பேருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஐரோப்பிய நாடுகளில் 86 சதவீதம் பேருக்கும், அமெரிக்காவில் 11 சதவீதம் பேருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால் இந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களை கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    விமான நிலையத்திலேயே சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதிக்க வேண்டும். இதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுடன் இதுபோன்ற தொற்றுகளையும் கண்டறிந்து வேரறுக்க வேண்டியது நமது கடமையாகும் என்றும் மத்திய அரசு, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் குரங்கு அம்மை நோய் தொற்று தடுப்பு பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    பக்கத்து மாநிலமான கேரளாவில் குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    சென்னை விமான நிலையத்திலும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். குரங்கு அம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை கண்டறிந்து அவர்கள் முழுமையாக பரிசோதனைக்குட் படுத்தப்படுகிறார்கள்.

    குரங்கு அம்மை தொற்றின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, உடல் தசை வலிகள் இருக்கும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த அறிகுறிகளுடன் வருபவர்களையும் இணை நோய் உள்ளவர்களையும் கண்டுபிடித்து குரங்கு அம்மை தொற்று பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    குரங்கு அம்மை நோய் தொடர்பாக கேரளாவில் இருந்து அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியை கவனமாக எடுத்துக் கொண்டு தமிழகத்திலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த நோய் நமது மாநிலத்துக்குள் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டியது அனைவரின் கடமையாகவும் மாறி இருக்கிறது.

    குரங்கு அம்மை பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள்:

    * குரங்கு அம்மைக்கான அறிகுறி போல தோற்றமளிக்கும் சொறி உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதை தவிர்க்கவும்.

    * குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபரின் சொறி அல்லது சிரங்குகளைத் தொடாதீர்கள்.

    * இந்த நோய் உள்ள நபருடன் முத்தமிடவோ, கட்டிப்பிடிக்கவோ அல்லது உடலுறவு கொள்ளவோ கூடாது.

    * பாதிக்கப்பட்டவருடன் உண்ணும் பாத்திரங்கள் அல்லது கோப்பைகளை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

    * பாதிக்கப்பட்டவரின் படுக்கை, துண்டுகள் அல்லது ஆடைகளை பயன்படுத்தவோ தொடவோ கூடாது.

    * சோப்பு மற்றும் தண்ணீருடன் கைகளை அடிக்கடி கழுவவும், அல்லது ஆல்கஹால் சார்ந்த கை சுத்திகரிப்பானை பயன்படுத்தவும்.

    * நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த விலங்குகள், அவற்றின் படுக்கை அல்லது அவை தொட்ட பிற பொருட்களைத் தவிர்க்கவும்.

    * குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் குறிப்பாக சொறி போன்று தென்பட்டால், முடிந்தவரை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். 

    • தமிழக கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட விலை மதிக்க முடியாத உலோக சிலைகள் மீட்பு
    • திருக்கோவில்களில் இருக்கும் அனைத்து விலைமதிப்பற்ற சிலைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

    கடல் கடந்து போன தமிழனின் களவாடப்பட்ட பெருமை ரெயிலில் வந்து இறங்கியது...

    ஆம், வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் சென்னையில் ரெயிலில் வந்து இறங்கியதும் இப்படித்தான் தோன்றியது.

    மீட்கப்பட்டு இருப்பது தொன்மையான கோவில் சிலைகள் மட்டுமல்ல தமிழர்களின் தொன்மையான கலையும் தான் என்பதே உண்மை.

    தமிழக கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட விலை மதிக்க முடியாத உலோக சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின்போது அந்த சிலைகளை மீட்பதற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் 10 சிலைகள் இந்தியா வந்து சேர்ந்தது.

    அந்த சிலைகள் முறைப்படி டெல்லியில் மத்திய மந்திரி மூலம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு பெற்றுக் கொண்டார். இன்று கும்பகோணம் கோர்ட்டில் அந்த சிலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    2 துவார பாலகர்கள் சிலை, தென்காசி அத்தாள மூன்றீஸ்வரர் கோவிலிலும், கங்காள மூர்த்தி, நந்திகேஸ்வரர் சிலைகள் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர் கோவிலிலும், நடராஜர் சிலை தஞ்சை மாவட்டம் புன்னை நல்லூர் கைலாச நாதர் கோவிலிலும், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள் அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலிலும், சிவன்- பார்வதி சிலை தஞ்சை தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோவிலிலும், சம்பந்தர் சிலை ஒன்று நாகப்பட்டினம் சுகவனேஸ்வரர் கோவிலிலும் திருடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. அந்த சிலைகள் அனைத்தும் அந்தந்த கோவில்களில் ஒப்படைக்கப்படும்.

    மற்றொரு நடனமாடும் சம்பந்தர் சிலை அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சிலைகள் மீண்டு வந்திருப்பது தமிழர்களின் இழந்த பெருமை மீண்டது போல் உள்ளது.

    காலத்தை கணிக்க முடியாத இந்த சிலைகள் அந்த காலத்திலும் தமிழன் எவ்வளவு கலை நுட்பங்களுடன் இருந்திருக்கிறான் என்பதற்கான அடையாளம்.

    பூமிக்கு அடியில் தோண்டி தமிழர்களின் வாழ்க்கையையும், வரலாற்றையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையில் சிலை வடிவான இந்த கலை பொக்கிஷங்கள் மீட்பு பெருமைப்பட வைக்கின்றன.

    கடல் கடந்து கடத்தி செல்லப்பட்ட இந்த சிலைகளின் இருப்பிடத்தையும் துப்புதுலக்கி கண்டு அறிந்த பணியில் ஈடுபட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகளும் பாராட்டுக்குரியவர்கள். மீட்கப்பட்ட இந்த சிலைகள் மட்டுமல்ல தமிழகத்தில் இருந்து கொள்ளை போன அனைத்து கலைபொருட்களையும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் மீட்டு வரவேண்டும்.

    தமிழகத்தில் திருக்கோவில்களில் இருக்கும் அனைத்து விலைமதிப்பற்ற சிலைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

    அந்தகாலத்தில் கவனக்குறைவும், உரிய பாதுகாப்பும் இல்லாததால் சிலைகள் களவாடப்பட்டுள்ளன. இனி அவ்வாறு நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்கள் பாதுகாப்பும், பராமரிப்பும் சாதாரணமானதல்ல. தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் போற்றி பாதுகாப்பதாகும்.

    ×