என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பொங்கல் பண்டிகை நாளை (14-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் (15-ந் தேதி) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

    சென்னை :

    பொங்கல் பண்டிகை நாளை (14-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் (15-ந் தேதி) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மயிலாடுதுறையை சேர்ந்த ஜோதிடர் பி.வி.ரமணி அய்யர் அளித்துள்ள நேரம் வருமாறு:-

    நாளை (14-ந் தேதி) காலை 8 மணி முதல் 10 மணி வரையும், 11.35 மணி முதல் 1.30 மணி வரையும் பொங்கல் பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்.

    15-ந் தேதி மாட்டுப் பொங்கல் அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பொங்கல் பானை வைத்து படைக்க உகந்த நேரம் ஆகும்.

    ஹரித்துவார மங்கலம் ஜோதிடம் ஆர்.ராஜாராம அய்யர் கணித்துள்ள விவரம் வருமாறு:-

    நாளை (14-ந் தேதி) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் அடுப்புகள் கட்டி காலை 11.05 மணிக்கு மேல் பொங்கல் வைத்து பகல் 1.30 மணிக்குள் பூஜை நிவேதனம் செய்து போஜனம் செய்ய உகந்தமான நேரம் ஆகும்.

    15-ந் தேதி மாட்டுப் பொங்கல் அன்று காலை 9 மணிக்குள் மாட்டுத்தொட்டி கட்டி பகல் 12 மணிக்கு மேல் 3 மணிக்குள் மாடுகளை குளிப்பாட்டி மாலை 4.30 மணிக்கு மேல் மாட்டுப் பொங்கல் வைத்து மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் மாட்டுப் பொங்கலிட்டு பூஜை செய்து மாடுகள் விட உத்தமமான நேரம் ஆகும்.

    இவ்வாறு அவர்கள் கணித்துள்ளனர்.

    கர்நாடகத்தில் உள்ள 7 முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியர் கோவில் விளங்குகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கர்நாடகத்தில் உள்ள 7 முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியர் கோவில் விளங்குகிறது. தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் இந்த சுப்பிரமணியர் கோவில் உள்ளது. மேலும் இது குமார பர்வதா மலையில் உற்பத்தியாகி ஓடி வரும் குமாரதாரா ஆற்றின் கரையோரம் அமைந்து உள்ளது. இந்தக்கோவிலுக்கு புராண வரலாறு ஒன்று உள்ளது. அதாவது முருகக் கடவுள் போரில் தாரகா சூரன், சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை சம்ஹாரம் செய்த பிறகு தனது சகோதரர் விநாயகர் மற்றும் பக்தர்கள் புடைசூழ குமார பர்வதாவுக்கு வந்தார். 

    அவரை இந்திரன் மற்றும் தேவர்கள் வரவேற்றனர். மேலும் தனது மகள் தெய்வானையை திருமணம் செய்து கொள்ளும்படி இந்திரன் வேண்டுகோள் விடுக்க முருகப்பெருமான் சம்மதம் தெரிவித்தார். அதன்படி முருகர்-தெய்வானை திருமணம் நடந்தது. அப்போது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மற்றும் தேவர்கள் அங்கு கூடினர். பல்வேறு புனித நதிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அந்த புனித நீர் ஆறாக ஓடியது. அதுவே குமாரதாரா நதியானதாக சொல்லப்படுகிறது.

    இதேப் போல் சிவ பக்தரும், நாகர்களின் தலைவரான வாசுகி தன்னை கருடன் தாக்காமல் இருப்பதற்காக குக்கே சுப்பிரமணியர் கோவிலில் உள்ள பிலாத் வாரா குகையில் தவம் இருந்தது. இதைத் தொடர்ந்து சிவனின் ஆணையை ஏற்று வாசுகியை இந்த தலத்தில் தனது பரமபக்தராக தன்னோடு இருக்கும்படி முருகப்பெருமான் அருள்புரிந்தார். இதனால் இங்கு வாசுகிக்கு பூஜை செய்தால், அது முருகப்பெருமானுக்கு பூஜை செய்ததாகவே கருதப்படுகிறது. இந்த கோவிலில் வெள்ளி கவசமிடப்பட்ட கருட கம்பம் ஒன்று உள்ளது. 

    வாசுகி பாம்பின் விஷம் பக்தர்களை தாக்காமல் இருப்பதற்காக அந்த கருட கம்பம் இங்கு நிறுவப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் குமாரதாராவில் நீராடிய பிறகே சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆற்றின் தண்ணீர் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக பக்தர்களால் நம்பப்படுகிறது. 

    மங்களூருவில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 299 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த புனித ஆலயம் அமையப் பெற்று இருக்கிறது. இந்தக்கோவிலில் எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் ‘உருளு சேவை' என்னும் நிகழ்ச்சி சிறப்பம்சம் ஆகும்.
    கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    ராமேசுவரம் 

    இயற்கை எழில் கொஞ்சும் கச்சத்தீவு 287 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டாலும் நம் நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பின்போது ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும் பயன்படுத்தவும் உரிமை உண்டு. கச்சத்தீவில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம், இருநாட்டு மீனவர்களுக்கும் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்குகிறது.

    ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் பிப்ரவரி மாதத்தின் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ 2 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் இந்திய-இலங்கையை சேர்ந்த இருநாட்டு மக்களும் திரளாக கலந்துகொள்வார்கள்.

    இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற பிப்ரவரி மாதம் 26, 27 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு நடைபெறும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் இரு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மற்றும் நெடுந்தீவு பங்குத்தந்தை, கடற்படை அதிகாரிகள், இந்திய துணை தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நெடுந்தீவு பங்குக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 150 பேர் மட்டுமே இந்த ஆண்டு நடைபெறும் அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்றும், இரு நாடுகளை சேர்ந்த பக்தர்கள் யாரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்கு அனுமதி கிடையாது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மக்காச்சோளம் வைத்து பூஜை செய்யப்பட்டது.
    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த கோவிலில் உள்ளது. அதுதான் ஆண்டவன் உத்தரவு பெட்டி ஆகும்.

    சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறுவார். பின்னர் கோவில் சிவாச்சாரியார்கள் சுவாமியிடம் பூபோட்டு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.

    இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அது நேர்மறையாகவும் இருக்கலாம் அல்லது எதிர்மறையாகவும் இருக்கலாம்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொங்கூர் பகுதியை சேர்ந்த கே.எம்.சிவராம் என்ற பக்தரின் கனவில் முருகன் தோன்றி உத்தரவு பெட்டியில் மக்காச்சோளம் வைத்து பூஜை செய்யுமாறு உத்தரவிட்டதாக, அந்த பக்தர் கோவிலுக்கு வந்து நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து சாமியிடம் உத்தரவு பெற்று உத்தரவு பெட்டியில் நிறைநாழியில் மக்காச்சோளம் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதனால் மக்காச்சோளம் விளைச்சல் அதிகரிக்கும். அதேசமயத்தில் விளைச்சலுக்கு ஏற்ற விலையும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், விவசாயிகளுக்கு நிறைவானதாக இருக்கும் என்றும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் நிறைநாழி படி அரிசி வைத்து பூஜை செய்யப்பட்டது.
    பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.
    பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

    "ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
    ஸர்வானுக்ராய தீமஹி
    தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்

    "ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
    சூல ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ காளி ப்ரசோதயாத்."
    மறைசாட்சி தேவசகாயத்தின் நினைவு தினம் நாளை (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய அருட்பணி பேரவையில் 23-வது பொதுக்குழு கூட்டம் தலைவர் ஸ்டான்லி சகாய சீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

    கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் பொங்கல் விழா நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு திருப்பலியுடன் தொடங்குகிறது. இதில் கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஏஞ்சலூஸ், பங்குதந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குதந்தை ஜார்ஜ் கபிரியேல் கிஷோர் ஆகியோர் பொங்கல் விழா திருப்பலி நிறைவேற்றுகின்றனர். தொடர்ந்து திருப்பலி முடிந்ததும் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்படுகிறது.

    குமரி மாவட்ட மண்ணின் மறைசாட்சி என அழைக்கப்படும் தேவசகாயத்தின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14-ந்தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    தேவசகாயம் இயேசு கிறிஸ்துவை பின்பற்றியதற்காக பல துன்பங்களை சந்தித்தார். 1752-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் திருவிதாங்கூர் மன்னராட்சியின் போது ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி மறைசாட்சியானார். கோட்டார் மறைமாவட்டம் இவரது மறைசாட்சி தினத்தை ஆண்டுதோறும் நினைவு கூர்ந்து வருகிறது. மேலும், உலக திரு அவை இவரை முத்திபேறு ஏற்றுக்கொண்டு அருளாளர் என்று அறிவித்தது.

    இந்த ஆண்டு அருளாளர் தேவசகாயம் மறைசாட்சி தினம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட கோட்டார் புனித சவேரியார் பேராயத்தில் மறைசாட்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க கோட்டார் மறைமாவட்டத்தின் பல பங்குகளில் இருந்தும் இறைமக்கள், குருக்கள் வருகை தருகிறார்கள். விழாவில் நாளை மாலை 5 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மிக விரைவில் புனிதர் பட்டம் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் இவ்விழா முக்கியத்துவம் வாய்ந்ததாக கொண்டாடப்பட உள்ளது.

    கோட்டார் மறை மாவட்டத்தின் மறைந்த முன்னாள் ஆயர் லியோன் தர்மராஜின் 14-ம் ஆண்டு நினைவு தினம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கோட்டார் சவேரியார் ஆலயத்தில் வருகிற 16-ந்தேி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அன்று காலை 6.15 மணிக்கு ஆயர் தலைமையில் திருப்பலி, கல்லறை மந்திரிப்பு தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆலய வளாகத்தில் சமபந்தி விருந்து ஆகியவை நடைபெறுகிறது.

    இந்த முப்பெரும் விழாவில் மறைமாவட்ட இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கோட்டார் சவேரியார் பேராலய அருட்பணி பேரவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    முடிவில் அருட்பணி பேரவை செயலாளர் அந்தோணி சவரிமுத்து நன்றி கூறினார்.
    வில்லுக்குறி மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் 19 அடி உயரத்தில் அருளாளர் தேவசகாயம் பிள்ளை குருசடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அர்ச்சிப்பு மற்றும் திறப்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
    நாகர்கோவில் வில்லுக்குறி மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் 19 அடி உயரத்தில் அருளாளர் தேவசகாயம் பிள்ளை குருசடி அமைக்கப்பட்டுள்ளது. 

    இதன் அர்ச்சிப்பு மற்றும் திறப்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு திருப்பலி, இரவு 7 மணிக்கு குருசடி அர்ச்சிப்பு போன்றவை நடைபெறும். அருட்பணியாளர் அந்தோணி எம். முத்து தலைமை தாங்கி குருசடியை அர்ச்சி

    த்து திறந்து வைக்கிறார். பங்குத்தந்தை ஜெயக்குமார், இணைப் பங்குத்தந்தை ஷிஜின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை பங்கு அருட்பணி பேரவை, கட்டிட குழு மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.
    சபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி ஐயப்பசாமிக்கு அணிவிக்கப்படும் திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து புறப்பட்டது.
    சபரிமலை :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    அன்றைய தினம் ஐயப்பசாமிக்கு திருவாபரணங்கள் அணிவது வழக்கம். இந்தநிலையில் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மதியம் 12.30 மணிக்கு திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது. இந்த திருவாபரணம் தலைச்சுமையாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு திருவாபரண ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் செல்கிறது.

    நாளை மாலை 6.20 மணிக்கு சன்னிதானம் வந்து சேரும் திருவாபரணங்களுக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, 6.30 மணிக்கு திருவாபரணங்கள் ஐயப்பசாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அப்போது பொன்னம்பல மேட்டில் 3 முறை, ஐயப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தருவார்.

    வழக்கமாக மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக, மகரஜோதி தினத்தில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மகர விளக்கின் முன்னோடியாக நேற்று மாலையில் பிரசாத சுத்தி கிரியை மற்றும் அதை சார்ந்த கணபதி பூஜை, பிரசாத சுத்தி பூஜை, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து புண்ணியாகம் ஆகியவை நடைபெற்றது.

    திருவாபரண ஊர்வலத்தையொட்டி நேற்று பந்தளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.
    மார்கழி மாத அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. மார்கழி மாத அமாவாசையையொட்டி நேற்று இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

    ஆதலால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, கோவை, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.

    காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கைகளை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்த பின்னரே மலைப்பாதை வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டனர்.

    பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள வழுக்குப்பாறை, சங்கிலிப்பாறை, கருப்பசாமி கோவில் ஓடை ஆகிய பகுதிகளில் நீராடிவிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.

    காலை 8 மணிக்கு திடீரென மலைப்பகுதியில் பெய்த மழையால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    மழை நின்ற உடன் காலை 8.30 மணிக்கு மீண்டும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் மலைப்பகுதியில் சாரல் மழையானது பெய்ய தொடங்கியது.

    மழையானது தொடர்ந்து பெய்து வந்ததால் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டு பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வனத்துறை கேட் மூடப்பட்டது.

    வனத்துறை கேட்டிற்கு முன்பு பக்தர்களின் வருகை அதிகரித்தது. 1 மணி நேரத்துக்கு மேலாக 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்து அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தொடர்ந்து மலைப்பகுதியில் பெய்த மழையால் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடை பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    மார்கழி மாத அமாவாசையையொட்டி நேற்று மதியம் 12 மணிக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தன மகாலிங்கம் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அமாவாசை சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் பூஜைக்கு பிறகு மலையில் இருந்து கீழே இறங்கி வந்தனர். தொடர்ந்து மலைப்பகுதியில் மழை பெய்வதால் பக்தர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
    சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
    செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

    பொருள்:

    அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.
    சிற்றஞ்சிறுகாலே வந்துனைச் சேவித்து, உன் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சிற்றஞ்சிறுகாலே வந்துனைச் சேவித்து, உன் 
    பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய் 
    பெற்றெம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ 
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது 
    இற்றைப்றை கொள்வானென்று காண் கோவிந்தா 
    எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும், உன் தன்னோடு 
    உற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம் 
    மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

    பொருள்: அதிகாலையில் வந்து, உனது பாதங்களைப் பணிந்து நிற்பதன் பயனைக் கேட்பாயாக. பசுக் கூட்டத்தை மேய்த்து உண்ணும் இடையர் குலத்தில் பிறந்த நீ, நாங்கள் உனக்கு செய்யும் திருப்பணிகளை ஏற்றுக் கொள்ளாமல் எங்களைக் கைவிடுவது முறையாகாது. 

    இன்று கொடுக்கப்படும் பறையை மட்டும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி நாங்கள் வரவில்லை. காலம் உள்ளவரை, ஏழேழு பிறவிகளுக்கும் உன்னோடு நாங்கள் இப்போது இருப்பதைப் போன்ற அதே அன்போடும், உறவோடும் இருக்க வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும். அதை மட்டுமே எங்களுக்கு அளித்து அருள் புரிவாயாக.
    அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்தப்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இன்று ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டது. காலை 11 மணி வரை மட்டுமே 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டு இருக்கும். அதன்பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள்  நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    ×