என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    `டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்திற்கு `டெடி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #Teddy #Arya #ShakthiSoundarRajan
    ஆர்யாவின் முந்தைய படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், கடைசியாக வெளியான `கஜினிகாந்த்' மட்டும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், `மிருதன்', `டிக் டிக் டிக்' என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த சக்தி சவுந்தர் ராஜன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், படத்திற்கு டெடி என்று தலைப்பு வைத்துள்ளனர்.


    ஆர்யா தற்போது சூர்யாவுடன் இணைந்து `காப்பான்' படத்தில் நடித்துள்ளார். இதுதவிர கன்னடத்தில் வரவேற்பை பெற்ற `மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே ஆர்யா - சாயிஷாவுக்கு ஐதராபாத்தில் வைத்து இன்று திருமணம் நடந்தது. #Teddy #Arya #ShakthiSoundarRajan

    `வேலாயுதம்' படத்திற்கு பிறகு விஜய்யுடன் தான் மீண்டும் இணையவிருப்பதாகவும், `தனி ஒருவன் 2' படத்தின் முதற்கட்ட பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாகவும் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். #MohanRaja #Vijay
    மோகன் ராஜா இயக்க, நடிகர் விஜய் நடித்து கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான படம் `வேலாயுதம்'. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு, ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது. பின்னர் தனிஒருவன் படத்திற்கு பிறகு மோகன் ராஜா - விஜய் மீண்டும் இணையப் போவதாக தகவல் வெளியானது. 

    இந்த நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து `வேலைக்காரன்' என்ற படத்தை இயக்கினார். `வேலைக்காரன்' வெற்றி பெற்ற நிலையில், விஜய் - மோகன் ராஜா இருவரும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. இருவரும் மீண்டும் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் விஜய், அட்லி இயக்கத்தில் விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.



    மோகன் ராஜாவும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலையில் பிசியானார். இந்த நிலையில், தான் விஜய்யுடன் விரைவில் இணையவிருப்பதாக கல்லூரி நிகழ்ச்சியொன்றில் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். ஆனால் அது விஜய்யின் 64-வது படமா என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை. இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் `தனி ஒருவன் 2' படத்திற்கான வேலைகளை முடித்துவிட்டதாகவும், தயாரிப்பாளர் மற்றும் படக்குழு தேர்வு விரைவில் நடைபெறும் என்றும் தெரிவித்தார். #MohanRaja #Vijay #Vijay64

    சாதி அரசியலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் கேள்வி கேட்டு அதற்கான தீர்வைச் சொல்லும் படமாக உறியடி 2 வந்துள்ளதாக படத்தை இயக்கி நடித்திருக்கும் விஜய் குமார் கூறினார். #Uriyadi2 #VijayKumar
    இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகினாலும், தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாற்று சினிமாவை நோக்கி இளைஞர்கள் வீறுநடை போடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் உறியடி படத்தில் பேசிய சாதிய அரசியலை, இன்னும் வலிமையாக பேச உள்ளது உறியடி 2. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், "உறியடி, உறியடி 2 படங்கள் பற்றி பேசினார்.

    "தற்போதைய சமூகத்தில் சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி 2 வருவதற்கான காரணம். எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யவில்லை. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற விசயம் சினிமா. சாதி அரசியலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் கேள்வி கேட்டு அதற்கான தீர்வைச் சொல்லும் படமாக உறியடி 2 வந்துள்ளது.



    இந்த படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், சுதாகர் உள்ளிட்ட யூடியூப் பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். உறியடியில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இதிலும் பணிபுரிந்துள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படம் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது. #Uriyadi2 #VijayKumar

    நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் ஐதராபாத்தில் வைத்து இன்று திருமணம் நடந்து முடிந்தது. நடிகர்-நடிகைகள் பலரும் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். #AryawedsSayyeshaa #Arya #Sayyeshaa
    நடிகர் ஆர்யா 2005-ம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு 38 வயது ஆகிறது.

    கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

    அதன்பிறகு பெற்றோரும் தீவிரமாக மணப்பெண் தேடிவந்தனர். இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயி‌ஷாவுக்கும் காதல் மலர்ந்தது.

    சாயி‌ஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.



    கடந்த பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று, சாயிஷாவையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக நடிகர் ஆர்யா ட்விட்டரில் பதிவிட்டார்.

    திரை பிரபலங்கள் பலரும் ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு திருமண வாழ்த்துகளை தெரிவிக்க ஆரம்பித்தனர். இதற்கிடையே மார்ச் 9 மற்றும் 10-ந் தேதிகளில் தங்களது திருமணம் நடைபெறும் என ஆர்யா-சாயிஷா ஜோடி தெரிவித்தது.

    திருமணத்தை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் பலர் பங்கேற்று, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த நிகழ்ச்சியில் நடிகை சாயிஷா போட்ட ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.



    இந்நிலையில் இன்று காலை ஐதராபாத்தில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது. நேற்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். #AryawedsSayyeshaa #Arya #Sayyeshaa

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். #Vishal #Election #LSPolls
    நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முக்கிய சங்கங்களான தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ளார். அரசியலிலும் ஆர்வம் காட்டும் அவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைதேர்தலில் போட்டியிட மனு செய்தார். அவர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

    சென்னையில் தொடங்கிய நகைக் கண்காட்சி ஒன்றை விஷால் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது விஷாலிடம் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் ‘பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அதே போல் இடைத்தேர்தல் தொடர்பாகவும் பேசிக்கொண்டே இருக்கிறோம். இன்னும் அறிவிக்க வில்லை. முதலில் அறிவிக்கட்டும். அதன் பிறகு என் முடிவை சொல்கிறேன். கண்டிப்பாக இந்த தேர்தல் ரொம்ப முக்கியமான தேர்தலாக இருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை மட்டுமல்ல, இந்தியாவுக்கும் சேர்த்து தான்’ என்று பதிலளித்தார்.



    ரஜினி, கமல் இருவரும் இணைந்தால் நல்லது என்று கருத்து கூறி இருக்கிறீர்கள். கமலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்று கேட்டதற்கு ‘தேர்தல் தேதி முடிவான பின்னர் அதிகாரபூர்வமாக பேசினால் நன்றாக இருக்கும். அப்போது பதில் அளிப்பேன்’ என்று பதில் அளித்தார்.
    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தனியார் சேனலில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசும்போது, கலைஞரின் வசனத்தை பேச பயந்தேன் என்று கூறியிருக்கிறார். #SarojaDevi
    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மகளிர் தினத்தையொட்டி தனியார் சேனலில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிவாஜி கணேசனுடன் ’இருவர் உள்ளம்’ படத்தில் நடித்தேன். எழுத்தாளர் லட்சுமியின் கதை இது. எல்.வி.பிரசாத் இயக்கியிருந்தார். கலைஞர்தான் வசனம் எழுதியிருந்தார். கலைஞரின் வசனத்தை சரியாகப் பேசவேண்டுமே என்று எனக்கு உதறலாகவே இருந்தது.

    அந்தப் படத்தில் ஒரு காட்சி. சிவாஜி அவர்கள் என்னிடம், ‘என்னை ஏன் விரும்பமாட்டேங்கிறே? எனக்கு படிப்பு இல்லையா? அழகில்லையா?’ என்றெல்லாம் கேட்பார். அதற்கு நான், ‘நீ படிப்பில் மேதையாக இருக்கலாம். பணத்தில் குபேரனாக இருக்கலாம். அழகில் மன்மதனாக இருக்கலாம்.



    ஆனால் இந்த மூன்றையும் காக்கின்ற கண்ணியம் உன்னிடத்தில் இல்லை’ என்று சொல்லுவேன். கலைஞரின் வசனம். அவர் பிரமாதமாக எழுதிவிட்டார். சிவாஜி சாரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

    இந்த வசனத்தைப் பேசிவிட்டு, ‘எப்படி பேசினேன்? நல்லா இல்லியா?’ என்று பயந்துகொண்டே கேட்டேன். உடனே அவர், ‘பரவாயில்லியே... உன் ஸ்டைல்லயே, பிரமாதமா பேசிட்டியே...’ என்று சிவாஜி சார் சொன்னார். அப்பாடா... என்று நிம்மதியானேன்’. இவ்வாறு சரோஜாதேவி பேசினார்.
    பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகை டாப்சியை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேச அழைக்காததால், அவர் விரக்தியடைந்து பேட்டியளித்திருக்கிறார். #Taapsee #Pink
    அமிதாப்பச்சன், டாப்சி நடித்த படம் பிங்க். இந்த படம்தான் தற்போது தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அமிதாப் வேடத்தில் அஜித் நடிக்கிறார். வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா நடிக்கின்றனர். ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

    பிங்க் இந்தி படத்தில் நடித்தவர்களை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அழைத்து உரையாடினார்கள். ஆனால் முக்கிய வேடத்தில் நடித்த டாப்சியை அவர்கள் அழைக்கவில்லை. பேட்டியை கண்ட ரசிகர்கள் டாப்சியிடம் இதுபற்றி விசாரிக்க தொடங்கினார்கள். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நீங்கள் பேட்டியில் பங்கேற்காதது ஏன்? என்று கேட்டதும் டாப்சி வருத்தமானார்.



    ஆனாலும் சிரித்தபடி சமாளித்தவர், ‘நல்ல கேள்வி... எனக்கு அந்த பேட்டியில் பங்கேற்கும் தகுதி இன்னும் வரவில்லை. அதற்கான தகுதிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று விரக்தியாக பதில் அளித்தார். இந்த பதிலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, ‘எல்லாவற்றிலும் நீங்கள் புத்திசாலி. எல்லா தகுதியும் உங்களுக்கு உண்டு’ என ஆறுதல் கூறத் தொடங்கின. உடனே டாப்சி ‘உங்களிடமிருந்து நான் ஜாலியான பதிலைத்தான் எதிர்பார்த்தேன். மற்றபடி எனக்கு எந்த வருத்தமும், விரக்தியும் இல்லை’ என்றார்.
    விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ் பல்லவி நடிப்பில் வெளியான ‘தாதா 87’ தெலுங்கில் கால் பதிக்க இருக்கிறது. #DhaDha87
    கலை சினிமாஸ் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ் பல்லவி நடிப்பில் உருவான தாதா 87 திரைப்படம் கடந்த மார்ச் 1ம் தேதி அன்று உலகெங்கும் வெளியானது.

    தாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தாதா 87 திரைப்படத்தில் ஒரு கதாநாயகி திருநங்கையாக நடித்தது, உலக சினிமா வரலாற்றில் முதல் முயற்சி என்ற சிறப்பைப் பெற்றது.



    நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் இத்திரைப்படம் தமிழகத்தில் முக்கியமான ஏரியாக்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட முடியாததால், தாதா 87 திரைப்படத்தை கோடை விடுமுறையில் மீண்டும் திரையிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள். 

    மேலும் இப்படத்தை தெலுங்கில் "பவுடர்" என்ற பெயரில் விரைவில் வெளியிட இருக்கிறார்கள். 
    மீசைய முறுக்கு படம் மூலம் அறிமுகமான நடிகை ஆத்மிகா, தன்னை கேலி செய்தவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். #Aathmika
    மீசைய முறுக்கு படம் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. சினிமாவில் ஆண் நடிகர்கள் பெண் வேடமிட்ட கதாபாத்திரங்களின் முகங்களை வைத்து ஆத்மிகாவின் புகைப்படத்தையும் சேர்த்து கிண்டலாக `பெண்கள் தின வாழ்த்துகள்’ என்று பதிவிட்டு ஒரு மீம் தயார் செய்துள்ளனர்.

    இந்த மீமை தன் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு மீமை தயாரித்தவருக்கு ஒரு கடுமையான பதிவை ஆத்மிகா பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில்,



    இதுபோல் அசிங்கமான சிந்தனையோட உன்னைச் சிறு வயதிலிருந்து இப்படி வளர்க்கப்பட்டு இருக்கிறாயே என்று வருத்தப்படுகிறேன். கடவுள் எங்களைப் படைத்த விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒவ்வொருவரும் அவரவர் விதத்தில் அழகுதான். ஆண்களை அவர்களின் தோற்றத்தை வைத்து நாங்கள் மதிப்பிடுவதில்லை. உங்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள்’’ எனப் பதிவிட்டிருந்தார். ஆத்மிகாவுக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
    தமிழக அரசுடன் கைகோத்து சூர்யா நடித்துள்ள பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. #Suriya #TNGovernment
    தமிழக அரசுடன் கைகோத்து பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார் சூர்யா.

    ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. தற்போது பல கடைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு இருந்தாலும், சில கடைகளில் இன்னும் உபயோகப்படுத்தப்பட்டுதான் வருகிறது.



    இதனால், பிளாஸ்டிக்கால் வரும் தீமைகளை குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது போல் அக்குறும்படம் அமைந்துள்ளது. 'மாறலாம், மாற்றலாம்' என்ற பெயரில் 2டி நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் இந்தக் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. இக்குறும்படத்தை ஹரிஷ் இயக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    படப்பிடிப்பு முடிந்து விஜய் வீட்டிற்கு செல்லும் வழியில், அவரை பின் தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ் கூறியிருக்கிறார். #Vijay #Thalapathy63
    ‘சர்கார்’ படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருக்கு 63-வது படம். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, ஆனந்த்ராஜ் ஆகியோரும் உள்ளனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

    சென்னையில் 2 மாதமாக பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். தினமும் விஜய்யை காண படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஏராளமான ரசிகர்கள் கூடுகிறார்கள். மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பின் போது வெளியே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர்.

    படப்பிடிப்பை முடித்து விட்டு புறப்படும் போது ரசிகர்களை பார்த்து விஜய் கையசைப்பதும் பதிலுக்கு அவர்கள் ஆரவாரம் செய்வதும் தினமும் நடந்தது. அதன்பிறகு காட்டாங்கொளத்தூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கும் ரசிகர்கள் கூடினார்கள்.



    படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் காரில் வீட்டுக்கு புறப்பட்டபோது ஏராளமான ரசிகர்கள் மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து தலைவா தலைவா என்று குரல் எழுப்பியபடி சென்றனர். இதனால் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடக்கூடாது என்று கார் கண்ணாடியை இறக்கி பின்தொடர்ந்து வரவேண்டாம், பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    ரசிகர்களுக்கு அவர் அறிவுரை சொல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் பிரச்சனையில் இருக்கும் போது வடிவேலு புதிய படத்தில் நடிப்பதால், அந்த படத்திற்கு தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Vadivelu
    சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து 2006-ல் திரைக்கு வந்து வசூல் குவித்த இம்சை அரசன் 23-ம் புலிகேலி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்தார். அந்த படத்திலும் வடிவேலுவையே கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார். படத்துக்கு இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்று பெயர் வைத்து அரண்மனை அரங்கு அமைத்து படப்பிடிப்பையும் துவக்கினர்.

    இதில் சில நாட்கள் நடித்த வடிவேலு, ஆடை வடிவமைப்பாளரை மாற்றியது உள்ளிட்ட சில பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு படத்தில் இருந்து விலகினார். இதனால் புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது.

    படம் நின்றுபோனதால் தனக்கு ரூ.9 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக ஷங்கர் கூறினார். இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது.



    இந்த நிலையில் வடிவேலு ‘பேய் மாமா’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தில் வடிவேலுவின் தோற்றத்தையும் வெளியிட்டனர்.

    தற்போது இந்த படத்துக்கும் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்து இருப்பதாகவும், இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தை முடிக்காமல் எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று வற்புறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    ×