search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக"

    • அரியானா சட்டசபையின் பதவிக் காலம் வருகிற அக்டோபர் மாதம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
    • இந்திய தேசிய லோக் தளம், அரியானா ஹோகித் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினா் உள்ளனா்.

    சண்டிகர்:

    அரியானாவில் முதல்-மந்திரி நாயப் சிங் சைனி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கடந்த 8-ந்தேதி வாபஸ் பெற்றனா். அத்துடன், முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

    90 உறுப்பினா்களைக் கொண்ட அரியானா பேரவையில் தற்போது 88 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா். பா.ஜ.க.வுக்கு 40, காங்கிரசுக்கு 30, ஜே.ஜே.பி. கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா். இந்திய தேசிய லோக் தளம், அரியானா ஹோகித் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினா் உள்ளனா். இதுதவிர 6 சுயேச்சைகள் உள்ளனா்.

    அரியானாவில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜே.ஜே.பி. கடந்த மாா்ச் மாதம் விலகிய நிலையில், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்தது. அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி நாயப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் பா.ஜ.க. அரசுக்கான ஆதரவை 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் திரும்பப் பெற்றதால், அக்கட்சிக்கு 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில் 2 இடங்கள் அக்கட்சிக்கு குறைவாக உள்ளன.

    பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வரப்பட்டால், அதை ஆதரிக்க தயாா் என்று ஜே.ஜே.பி. தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில், ஜே.ஜே.பி. தலைவரும் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான துஷ்யந்த் சவுதாலா, மாநில கவனர்னருக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    அரியானா பா.ஜ.க. அரசு பெரும்பான்மையை இழந்திருப்பது தெளிவாகியுள்ளது. தற்போதைய அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு, அரசமைப்புச் சட்டப் பிரிவு 174-ன்கீழ் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    பா.ஜ.க. அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பட்சத்தில், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பெரும்பான்மையை இழந்துவிட்ட பா.ஜ.க. அரசு, தாா்மீக அடிப்படையில் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான பூபிந்தா் சிங் ஹூடா வலியுறுத்தி உள்ளாா்.

    மேலும், மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

    இதற்கிடையே முதல்-மந்திரி நாயப் சிங் சைனி கா்னாலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. கடந்த மாா்ச் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றோம். நேரம் வரும்போது, மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் முதல்-மந்திரி மனோகா் லால் கட்டார் கூறுகையில், "பா.ஜ.க.வுடன் பல எம்.எல்.ஏ.க்கள் தொடா்பில் இருப்பதால் கவலைப்பட எதுவுமில்லை" என்றாா்.

    ஜே.ஜே.பி. கட்சி எம்.எல்.ஏ.க்களில் 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவளிப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த 4 எம்.எல்.ஏ.க்களும் நேற்று ரகசியமாக முன்னாள் முதல்-மந்திரி கட்டாரை சந்தித்துப் பேசினார்கள். எனவே அரியானா பா.ஜ.க. அரசுக்கு ஆபத்து ஏற்படாது என்று கூறப்படுகிறது.

    அரியானா சட்டசபையின் பதவிக் காலம் வருகிற அக்டோபர் மாதம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மோடி போன்ற வாட்ச்மேன் இருக்கும் போது, ​​உங்கள் உரிமைகளை பறிக்க முடியுமா?
    • போலி சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் என்னை உயிருடன் புதைக்கப் பேசுகிறார்கள்.

    மும்பை:

    பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பாரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    என்னைப் பொறுத்தவரை, பழங்குடியினருக்கு சேவை செய்வது எனது குடும்பத்திற்கு சேவை செய்வது போன்றதாகும். ஆதிவாசிகளின் நலன் குறித்து காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்படவில்லை.

    மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களின் முதுகில் குத்துவது போன்றதாகும். இது அளவிட முடியாத பாவம். இடஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது காங்கிரஸ் பொய்களைப் பரப்புகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஒரே இரவில் அனைத்து முஸ்லிம்களையும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது.

    உங்களது ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்குவதே காங்கிரஸின் மறைக்கப்பட்ட செயல்திட்டம். நான் உயிருடன் இருக்கும் வரை தலித்துகள், ஆதிவாசிகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க அனுமதிக்க மாட்டேன்.

    மதத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு சலுகைகளை வழங்குவது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதிப்புகள், கொள்கைகளுக்கு எதிரானது. கடந்த 17 நாட்களாக காங்கிரசுக்கு நான் சவால் விடுத்து வருகிறேன். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி இடஒதுக்கீட்டை துண்டு துண்டாக வெட்டி முஸ்லிம்களுக்கு ஒரு துண்டாக கொடுக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாகத் தருமாறு கேட்டுக்கொண்டேன்.

    ஆனால் அவர்கள் பதில் சொல்லவில்லை. நான் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்கு காவலன். மோடி போன்ற வாட்ச்மேன் இருக்கும் போது, உங்கள் உரிமைகளை பறிக்க முடியுமா?

    வளர்ச்சியில் மோடியுடன் போட்டியிட முடியாது என்பது காங்கிரசுக்கு தெரியும். எனவே இந்த தேர்தலில் பொய்களின் தொழிற்சாலையை அவர்கள் திறந்துள்ளனர். இந்து நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதியில் ஈடுபட்டுள்ளது. ராமர் கோவில் கட்டுவது இந்தியாவின் கருத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் இளவரசரின் (ராகுல்காந்தி) குரு சாம் பிட்ரோடா அமெரிக்காவிடம் கூறியுள்ளார்.

    போலி சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் என்னை உயிருடன் புதைக்கப் பேசுகிறார்கள். இது காங்கிரசுடன் இணைவதற்கு போலி தேசியவாத காங்கிரசும், சிவசேனாவும் முடிவெடுத்திருப்பதற்கான அறிகுறி ஆகும்.

    இவ்வாறு மோடி பேசினார்.


    • உ.பி. தியோரியா தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
    • வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 15-ந்தேதியாகும்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக 13 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே 15-ந்தேதி ஆகும்.

    தியோரியா தொகுதியில் ஜூன் 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஷஷாங் மானி திரிபாதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்தார்.

    தேர்தல் அலுவலகத்திற்கு முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்தவற்கான நேரம் முடியும் தருவாயில் இருந்து. இந்த நிலையில் ஷஷாங்க் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான பைல் உடன் அலுவலகத்தை நோக்கி ஓடோடி வந்தார்.

    அவசரமாக தொண்டர்களை விலகச் சொல்லி நேரம் முடிவதற்குள் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    பொதுவாக வேட்புமனு தாக்கல் செய்ய டோக்கன் வழங்கப்படும். அதன்படி வேட்பாளர்கள் சரியான நேரத்திற்கு முன்னதாகவே அங்கே இருப்பார்கள். ஆனால் தொண்டர்கள் காத்திருக்க வேட்பாளர் ஓடோடி வந்தது வியப்பாக பார்க்கப்படுகிறது.

    • பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாராளுமன்ற தேர்தலின் பொது ஒரு வாக்குச்சாவடிக்கு பாஜக உள்ளாட்சி உறுப்பினர் ஒருவர் தனது மகனை அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் இருப்பது பாஜகவின் பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹரின் மகன் என்றும், 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்த மே 7-ம் தேதி வாக்குச் சாவடிக்கு தனது தந்தையுடன் சென்று வாக்களிக்கும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    அந்த வீடியோவில் தந்தையும் மகனும் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக சின்னமான தாமரை சின்னத்துக்கு வாக்களிப்பது பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. தேர்தல் சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கவுசலேந்திர விக்ரம் சிங் உத்தரவிட்டுள்ளார். அந்த வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரி சந்தீப் சைனி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

    • பாஜக நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணமுல் கட்சியினருக்கு எதிராக போலியாக பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
    • பாஜகவினரால் தனக்கு ஏற்பட வாய்ப்புள்ள அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் புகார் கொடுத்தனர்.

    இதனிடையே பாலியல் புகார் தொடுத்த பெண் ஒருவர் , காவல்நிலையத்தை அணுகி தனது புகாரை திரும்ப பெற்றுள்ளார்.

    பாஜக மகிளா மோர்ச்சா நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக போலியாக பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    பாஜகவினர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்காக தன்னிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிய பாஜகவினர், பின்னர் அதனை தவறாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனக்கு எவ்வித பாலியல் வன்கொடுமையும் நடக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது இந்த முடிவால் பாஜகவினரிடம் இருந்து தனக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது . ஆகவே அதிலிருந்து தனக்கு பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்த ஸ்டிங் ஆபரேஷனில், பாஜக உள்ளூர் தலைவர் ஒருவர் சந்தேஷ்காலி விவகாரம் தங்கள் கட்சியின் நாடக நடவடிக்கை என்று பேசும் வீடியோ வெளியானது.

    இதனையடுத்து சந்தேஷ்காலி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    • பொய்யான செய்திகளை பரப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
    • இது புனையப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமா? என்ற கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு தொடர்பாக, சமீபத்தில் வெளியிட்ட ஆவணத்தின் உண்மைத்தன்மை குறித்து, சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் கச்சத்தீவு குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது, வெளியுறவு துறை அமைச்சகத்தில் இருந்து, தகவல் உரிமை சட்டமான ஆர்.டி.ஐ., வாயிலாக, தனக்கு கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது: கடந்த, 1961ல் அப்போதைய பிரதமர் நேரு, குட்டித் தீவான கச்சத் தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என்றும், அதன் உரிமையை இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    இது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் தனது எக்ஸ் தளபதிவில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்

    அதில் கூறியிருப்பதாவது,

    கச்சத்தீவு விவகாரம் புனையப்பட்டது. எனக்கு ஆச்சரியமில்லை. அவர்கள் பொய்யான செய்திகளை பரப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    கச்சத்தீவு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட RTI தகவல் தற்போது உண்மையில்லை என நிருபணமாகியுள்ளது.

    1976ல் எந்த பகுதியும் இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை என 2015ல் பிரதமர் மோடி அரசால் வெளியிடப்பட்ட மற்றொரு RTI தகவலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.

    இது புனையப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமா? என்ற கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது மாதிரி நடத்தை விதிகளை மீறுவதைத் தவிர, அரசாங்கப் பதிவேடுகளைத் திருத்துதல் மற்றும் பொய்யாக்குதல் போன்ற கிரிமினல் குற்றங்களை ஈர்க்கவில்லையா?

    இதுபற்றி காவல்துறையில் புகார் பதிவு செய்து இந்தப் பிரச்சனையை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன்.

    2024 பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் நாட்டின் பிரதமரால் கச்சத்தீவு பற்றி கண்டுபிடிக்க முடியும்? இது தேர்தல் பாசாங்குதனம் இல்லையா? 2024 ஜனவரியில் இருந்து மட்டும் எப்படி தமிழகத்தை நினைவு கூர்ந்தார்களோ அதேபோல் தான் கச்சத்தீவு விவகாரத்திலும் நுழைந்து இருக்கிறார்கள். கச்சத்தீவை மீட்பத்தில் பா.ஜ.க. அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் 2014 முதல் 2024 வரை ஏன் ஒரு சிறு விரலை கூட அசைக்கவில்லை? என்று அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் எஸ்சி/எஸ்டி மக்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.

    இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், எஸ்சி/எஸ்டி சமூகத்திற்கு எதிராக கர்நாடக பாஜக வெளியிட்ட வீடியோ தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா ஆகியோரை 7 நாட்களுக்குள் பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு கர்நாடக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    கர்நாடக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியான அனிமேஷன் வீடியோவை உடனடியாக நீக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டது. இதனையடுத்து எக்ஸ் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சைனி தலைமையிலான அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை 3 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் வாபஸ் பெற்றனர்.
    • தற்போது 88 எம்.எல்.ஏ.-க்கள் உள்ள நிலையில், பா.ஜனதா அரசு மைனாரிட்டி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    அரியானா மாநிலத்தில் சைனி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வந்த மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் பா.ஜனதாவின் பலம் 43 ஆக குறைந்துள்ளது.

    இதனால் பா.ஜனதா மெஜாரிட்டியை இழந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஹூடா தெரிவித்துள்ளார். அதேவேளையில் தங்களுக்கு போதுமான அளவு ஆதரவு இருப்பதாக பா.ஜனதா கூறி வருகிறது.

    ஜனநாயக் ஜன்தா கட்சி (ஜேஜேபி) ஆதரவு அளித்தால் பா.ஜனதா ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஜேஜேபி உடனான உறவை பா.ஜனதா முறித்திருந்தது.

    இந்த நிலையில் ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, சைனி தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டால், நாங்கள் ஆதரவு அளிப்போம் என துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக துஷ்யந்த் சவுதாலா கூறியதாவது:-

    சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றால், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அரசை கவிழ்ப்பதற்கு வாக்கு அளிப்பார்கள். ஜேஜேபி கொறடா உத்தரவு பிறப்பித்து அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள்.

    தற்போது மக்களவையில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவரான பூபிந்தர் சிங் ஹூடா, மக்களவை தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நிலையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கோரினால், நாங்கள் அவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலனை செய்வோம்.

    தற்போது காங்கிரஸ் பா.ஜனதா அரசை கவிழ்ப்பது குறித்து சிந்திக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என்பதில் தெளிவாக உள்ளோம்.

    இவ்வாறு துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.

    பா.ஜனதாவுக்கு 40 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர். ஜேஜேபி-க்கு 10 உறுப்பினர்கள் உள்ளனர்.

    தற்போது அரியானா சட்டமன்றத்தில் 90 இடங்களில் 88 உறுப்பினர்கள் உள்ளனர். மெஜாரிட்டிக்கு 45 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. பாஜனதாவுக்கு 2 சுயேட்சை எம்எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.
    • அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

    பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் பிரசாரம் செய்தார்.

    அப்போது பேசிய மோடி, "காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.

    ஒரே இரவில் அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்? இதில் காங்கிரஸ் நாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தொடர்பாக ரேபரேலியில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

    பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், "பெரும் தொழிலதிபர்களுடன் நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி தினமும் கூறுகிறார். நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார், ஆனால் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும்

    அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவர்களின் பெயரை கூட உச்சரிக்காத பிரதமர் மோடி, தேர்தலுக்காக இப்படி பேசுகிறார்" என்று தெரிவித்தார். 

    • ஜனாதிபதி தேர்தலின்போது திரவுபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தியபோது, காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவித்தது என்று ஆச்சர்யம் அடைந்தேன்.
    • அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தற்போது பழங்குடியினர் என்ற திரவுபதி முர்மு-வை ஏன் தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பது தெரிகிறது.

    சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் "சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது கடும் கண்டனம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    இளவரசர் (ராகுல் காந்தி), நீங்கள் சாம் பிட்ரோடா கருத்துக்கு பதில் அளிக்க வேண்டும். நமது நாட்டு மக்களவை நிறம் அடிப்படையில் அவமதிப்பதை நாட்டு ஏற்றுக் கொள்ளாது. மோடி இதை உண்மையிலேயே பொறுத்துக் கொள்ளமாட்டார்.

    ஜனாதிபதி தேர்தலின்போது திரவுபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தியபோது, காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவித்தது என்று ஆச்சர்யம் அடைந்தேன். அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தற்போது பழங்குடியினர் என்ற திரவுபதி முர்மு-வை ஏன் தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பது தெரிகிறது.

    இளவரசரின் (ராகுல் காந்தி) மாமா அமெரிக்காவில் உள்ளார். அவர்தான் இளவரசருக்கு வழிகாட்டி. கருப்பாக உள்ளவர்கள் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் எனக் கூறுகிறார். தற்போது, அவர்கள் திரவுபதி முர்முவை ஆப்பிரிக்கர் என நினைத்தார்கள் என்பது தற்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய தோல் கருமையாக இருப்பதால் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்
    • இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்

    மத்தியபிரதேச மாநிலம் தார் பகுதியில் நேற்று பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அவர், "விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்.

    1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் ஏன் அதை 3 துண்டுகளாக பிரித்தார்கள். அவர்கள் அப்போதே முழு நாட்டையும் பாகிஸ்தானாக மாற்றி இந்தியாவின் தடயங்களை அழித்திருக்க வேண்டும்.

    மோடி உயிருடன் இருக்கும் வரை போலி மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்தியாவை அழிக்க விட மாட்டேன். ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய காங்கிரஸ் விரும்புகிறது.

    பாஜக 400 இடங்களில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் 'பாபரின் பெயரில்' ராமர் கோவிலுக்கு காங்கிரஸ் பூட்டு போட்டுவிடும் மற்றும் ஜம்மு காஷ்மீரின் 370 சட்டப்பிரிவை காங்கிரஸ் மீண்டும் கொண்டுவரும்" என்று தெரிவித்தார்.

    • கேரள மாநில மக்களவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.
    • கட்சி தலைவர்களின் இந்த கணக்கீடு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினரின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடது சாரி ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

    இதனால் கேரள மாநில மக்களவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் நேரடியாக களம் கண்ட தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.

    ஏற்கனவே 19 தொகுதிகள் தங்களது கூட்டணியின் வசம் உள்ள செல்வாக்குடன் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் களம் கண்டது. பாரதிய ஜனதாவோ முதன்முறையாக வெற்றி பெற்று கேரளாவில் கால்பதித்து விட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது.

    மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி, தேசிய அளவில் கூட்டணியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து களம் கண்டது. பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் இந்த 3 கட்சிகளும் போட்டியிட்டன.

    ஏற்கனவே 19 தொகுதிகளை தன் வசம் வைத்துள்ள காங்கிரஸ் மற்றும் மாநிலத்தின் ஆளும் கட்சி கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை எதிர்த்து களம் கண்ட பாரதிய ஜனதா, அந்த கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெறும் வகையில் பிரபலங்களை வேட்பாளர்களாக களமிறக்கியது.

    இதன் காரணமாக கேரள மாநில மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் கேரளாவில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம்? கடந்த தேர்தலை விட தற்போது எத்தனை வாக்குகள் அதிகமாக கிடைக்கும்? வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்? உள்ளிட்ட விவரங்களை பாரதிய ஜனதா கணக்கிட்டு உள்ளது.

    அந்த விவரங்கள் தேர்தல ஆய்வு கூட்டத்தில் கணக்கிடப்பட்டு இருக்கிறது. மேலும் தங்களின் கணக்கீடு விவரங்களை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கேரளா மாநிலத்தில் இதற்கு முன்பு நடந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 31.80 வாக்குகள் கிடைத்தன. இந்த முறை 41.44 லட்சம் வாக்குகள் கிடைக்கும். கேரளாவில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் 22 சதவீதமாக அதிகரிக்கும்

    திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் 4 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார்கள். மத்திய மந்திரி முரளீதரன் போட்டியிட்ட அட்டிங்கல் தொகுதியிலும், ஏ.கே அந்தோணியின் மகன் அனில் ஆன்டனி போட்டியிட்ட பத்தினம்திட்டா தொகுதியிலும் பாரதிய ஜனதா வெற்றிபெறும்.

    அதேபோல் ஆலப்புழா தொகுதியில் போட்டியிடும் ஷோபா சுரேந்திரனும் வெற்றி பெறுவார். கேரளாவில் மொத்தம் 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறும். திருவனந்தபுரத்தில் கடந்த முறை 3,16,000 வாக்குகள் பெற்றிருந்தோம். இந்த முறை 4 லட்சம் வாக்குகளை பெறுவோம். நெய்யாற்றின்கரை தொகுதியில் பாரதிய ஜனதா இரண்டாவது இடத்தை பிடிக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    கட்சி தலைவர்களின் இந்த கணக்கீடு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினரின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×