search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் பல்கலைக்கழகம்"

    • கொப்பரையின் பண்ணை விலை கிலோ 75-80 ரூபாய் வரை இருக்கும்.
    • தேங்காயின் பண்ணை விலை 12-14 ரூபாய் வரை இருக்கும்.

    உடுமலை :

    தமிழகத்தில் 35.07 லட்சம் டன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்தே தேங்காய் அதிக அளவில் கிடைக்கிறது.

    தற்போது தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், சந்தை மதிப்பு அறிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விலை முன்னறிவிப்புக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் தரமான தேங்காயின் பண்ணை விலை 12-14 ரூபாய் வரை இருக்கும் எனவும், கொப்பரையின் பண்ணை விலை கிலோ 75-80 ரூபாய் வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்கலாம் என வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    • 33 முதுகலை படிப்புகளும், 28 துறைகளில் முனைவர் பட்டங்களும் வழங்கப்படுகின்றன.
    • மே 15ந் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடப்பு கல்வியாண்டில் முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் 33 முதுகலை படிப்புகளும், 28 துறைகளில் முனைவர் பட்டங்களும் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, https://admissionsatpgschool.tnau.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக, மே 15ந் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:- பல்கலைக்கழகத்தின் கீழ், 11 வளாகங்களில் முதுகலை, 33 பாடப்பிரிவுகள் உள்ளன. நடப்பாண்டில் பெரியகுளம் கல்லூரியில் எம்.டெக்., போஸ்ட் ஹார்வெஸ்ட் தொழில்நுட்ப படிப்பு துவங்கியுள்ளோம். பி.எச்டி., 28 பிரிவுகள் வழங்கப்படுகின்றன.

    இளங்கலை முடித்தவர்கள் அல்லது படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்கள், கடைசி பருவத்தேர்வு மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் முதுகலைக்கும், பி.எச்டி., படிப்புக்கு முதுகலை சான்றிதழ் அல்லது படித்துக்கொண்டு இருப்பவர்கள் முதலாமாண்டு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையிலும், விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை விபரங்களுக்கு 94890 56710 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்னை மரத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகம் காணப்படுகிறது.
    • மருந்து தெளிக்கும் போது பூச்சிகள் இறக்கும்.

     உடுமலை :

    பூச்சி மேலாண்மையில் அதிக மருந்துகளை தெளிப்பதால் பூச்சிகளின் அடுத்த தலைமுறை நோய் எதிர்ப்பு சக்தி பெற்று பாதிப்பின் அளவை அதிகரித்து விடுகிறது என வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தற்போது சற்று அதிகம் உள்ளது. உதாரணமாக தென்னை மரத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இப்பூச்சி உறிஞ்சுவதால் ஏற்படும் பாதிப்பை காட்டிலும் அதனால், ஏற்படும் அடுத்த கட்ட விளைவால் மகசூல் பாதிப்பு அதிகம் உள்ளது.

    அதாவது வெள்ளை ஈ சாறு உறிஞ்சும் போது தேன் போன்ற ஒரு திரவத்தை சுரக்கிறது. அதை சுற்றி பூஞ்சைகள் உருவாகி கருப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. இதற்கு விவசாயிகள் பலர் மருந்துகளை அதிகளவில் தெளித்து விடுகின்றனர். முதன்முறை மருந்து தெளிக்கும் போது பூச்சிகள் இறக்கும். அதன் அடுத்தகட்ட தலைமுறை, எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி விடுவதால் மருந்து பயனின்றி போகும் நிலை உருவாகும். இதனால் பூச்சியை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை வாயிலாக மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பூச்சி மேலாண்மையால் எப்படி கட்டுப்படுத்துவது? முதலில் மஞ்சள் நிறத்தில் எண்ணெய் தடவிய அட்டையை வைத்து பூச்சியை ஈர்க்க வேண்டும். இதன் வாயிலாக பாதியை கட்டுப்படுத்தலாம். பல்கலை தரப்பில் ஒட்டுண்ணி தயாரித்து வழங்கப்படுகிறது. அதை பத்து மரத்திற்கு ஒன்று என மரத்தில் கட்டி தொங்கவிடவேண்டும். ஒருவர் ஒரு நிலத்திற்கு இதை செய்வதால் பூச்சிகளை கட்டுப்படுத்த இயலாது. விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைந்த மேலாண்மையை பின்பற்ற வேண்டியது அவசியம்.

    வாடல் நோய் தென் மேற்கு மலைப்பகுதிகளில் உள்ள இடங்களில் துவங்கி, வேகமாக பிற தோட்டங்களுக்கும் பரவி வருகிறது. ஆரோக்கியமற்ற மரங்களே முதலில் பாதிக்கப்படுகின்றன. இதற்கு மரங்களை வலுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வேளாண் அதிகாரிகள் தோட்டங்களுக்கு சென்று, செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர். விவசாயிகள் பல்கலையில் அளிக்கும் திறன் மேம்பாடு பயிற்சி, ஒட்டுண்ணி போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் .

    • அனைத்து துறைகளிலும் அபரிவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
    • வேளாண் துறையிலும் தொழில்நுட்ப பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகியுள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பங்களை மையப்படுத்தி வரும் கல்வியாண்டில் இரண்டு புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ், மிஷின் லேர்னிங், டிரோன், ரோபோடிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் வரவால் அனைத்து துறைகளிலும் அபரிவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    வேளாண் துறையிலும் தொழில்நுட்ப பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறை, காலநிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம் போன்ற சவால்களை தொழில்நுட்ப உதவிகளுடன் கூடிய கண்டுபிடிப்புகளை வைத்தே எதிர்கொள்ள இயலும்.அதன்படி வேளாண் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி பிரிவில், பி.டெக்., அக்ரி இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்.டெக்., அக்ரி இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புகள் வரும் கல்வியாண்டு துவங்கவுள்ளன.

    இது குறித்து துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில் வேளாண் துறையில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பயன்பாடு அவசியம். அதற்காக, வேளாண் மாணவர்கள் தயாராகவேண்டியது அவசியம். பி.டெக்., அக்ரி இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டது. தற்போது பாடத்திட்டம் நவீன தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தி அறிமுகப்படுத்த பணிகள் நடந்து வருகின்றன.பி.டெக்., பிரிவு அறிமுகப்படுத்தலாமா அல்லது எம்.டெக்., அறிமுகப்படுத்தி அனைத்து வேளாண் மாணவர்களும் இதில் சேரும் வகையில் செய்யலாமா, இரண்டும் அறிமுகப்படுத்தலாமா போன்ற ஆலோசனையில் சிறப்பு குழு ஈடுபட்டுள்ளது என்றார்.

    • மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை வெளியிடப்படுகிறது.
    • கோடையில் மழை நீரை தக்க முறையில் வேரில் சேமிக்க உதவும்.

    குடிமங்கலம் :

    வறண்ட வானிலை நிலவு வதால் தென்னை மரங்களு க்கு உள்சாய்வு வட்டவடிவ பாத்தி அமைக்கலாம் என வேளாண் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை வெளியிடப்படுகி றது.அதில் திருப்பூர் மாவட்டத்துக்கான சாகுபடி பரிந்துரையில், வறண்ட வானிலை நிலவுவதால் தென்னை மரத்தை சுற்றி உள்சாய்வு வட்ட பாத்திகளை அமைப்பது, கோடையில் மழை நீரை தக்க முறையில் வேரில் சேமிக்க உதவும். சட்டிக்கலப்பை கொண்டு உழவு செய்து கோடை மழையினை சேமிக்க லாம்.காய்கறி பயிர்களில், சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கம் தென்பட்டால் 5 சதவீத வேப்பங்கொட்டை சாறு கரைசலை தெளிக்க வேண்டும்.வாழை சாகுபடியில் 5 மாதத்துக்கு மேல் வளர்ச்சி தருணத்திலுள்ள வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும். பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை உயர்ந்தும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் குறைந்தும் காணப்படுவதால் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, உள்ளூர் பகுதிகளில் சுழற்காற்று ஏற்பட வாய்ப்பு ள்ளது. தீவனப்பயிர்கள் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் பாசன வசதியுள்ள விவசாயிகள் 10 சதவீத நிலத்தில் தீவனப்பயிர்களை சாகுபடி செய்யலாம்.ஆட்டுக்கொள்ளை நோய் தாக்குதல் ஏற்படுவதை தவிர்க்க கால்நடை மருத்துவ மனையில் ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். நிலவும் வானிலையால் மா பூங்கொத்துகளில் தத்துப்பூச்சிகளின் தாக்குதல் தென்படுகிறது.ஒரு மில்லி தயோமீத்தக்ஸிம் மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு பரிந்துரைகள் வழங்கப்பட்டு ள்ளது.

    • நிலக்கடலை பயிரிடப்பட்டு 85.82 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என கணித்துள்ளது.
    • நிலக்கடலை பண்ணை விலை கிலோவிற்கு 75 முதல் 80 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் விலை முன்னறிவிப்பு திட்டத்தில் எண்ணெய் வித்துக்களு க்கான விலை முன்னறிவிப்பினை சந்தை நிலவரத்தின் அடிப்படை யில் வெளியிட்டுள்ளது.

    வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் இரண்டாவது முன்கூட்டிய அறிவிப்பின் படி, இந்தியாவில் 2022-23ம் ஆண்டுக்கான நிலக்கடலை 60.15 லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 85.82 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என கணித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவிய நிலக்கடலை விலை மற்றும் சந்தை ஆய்வுகளை வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொண்டது. அதன்படி அறுவடையின் போது ( மே-2023) தரமான நிலக்கடலை பண்ணை விலை கிலோவிற்கு 75 முதல் 80 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கோடைக்கால இறவை வரத்தை பொறுத்து நிலக்கடலை விலையில் சிறிய, ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் எள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

    தமிழகத்தில் 0.52லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 0.34லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும். விழுப்புரம், ஈரோடு, தஞ்சாவூர், கரூர், சேலம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் சித்திரை, ஆடி, கார்த்திகை, மாசி ஆகிய பட்டங்களில் எள் விதைக்கப்படுகிறது. சிவப்பு எள் எண்ணெய் உற்பத்திக்கும், கருப்பு எள் முக்கிய மிட்டாய் வகைகளில் பயன்படுத்தவும், வெள்ளை எள் ஏற்றுமதிக்கும் அதிகம் பயன்படுத்தப்ப டுகிறது. விலை முன்னறிவிப்பு குழு கடந்த 12 ஆண்டுகள் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய எள் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.ஆய்வு முடிவுகளின் படி அறுவடையின் போது( மே -2023)தரமான எள் பண்ணை விலை கிலோவிற்கு 120 முதல் 125 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேற்கூற ப்பட்ட சந்தை ஆலோசனையின் படி விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை த்துள்ளது. மேலும் விபரங்க ளுக்கு 0422-2431405/6611278/ 2450812 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 12 இளமறிவியல் படிப்புகள் உள்ளன.
    • 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்வித்தகுதி ஆய்வு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ கத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகள், 28 இணைப்பு கல்லூரிகளில் 12 இளமறிவியல் படிப்புகள் உள்ளன.இணைப்பு கல்லூரி களில் மாணவர்களின் சேர்க்கைக்கு கூடுதல் இடம் ஒதுக்க, கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.பல்கலைக்கழகம் தரப்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு கல்லூரிக ளின் உள் கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்வித்தகுதி ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான இடங்கள் அதிகரித்து அனுமதி வழங்கப்பட்டு ள்ளது. இது குறித்து டீன் வெங்கடேச பழனிசாமி கூறுகையில், உரிய ஆய்வுகளுக்கு பின் கல்லூரி களின் தரம், கட்டமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அனுமதி வழங்கியுள்ளோம்.

    ஒரு கல்லூரிக்கு வசதி குறைபாடு காரணமாக மாணவர்கள் எண்ணிக்கை 42 சதவீதம் குறைத்துள்ளோம். அதிகபட்சம் ஒரு கல்லூரியில் 20 சதவீத இடங்கள் மட்டும் அதிகரித்துள்ளோம். மொத்தம் 750 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றார்.

    • தீமை செய்யக்கூடிய பூஞ்சாணங்கள், பூச்சிகள் கோடை வெப்பத்தாலும், பறவைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
    • உளி கலப்பை பூமிக்கடியில் கிட்டத்தட்ட இரண்டு அடியில் உள்ள மண்ணை உடைக்கிறது.

    உடுமலை:

    கோடை கால உழவு முறை மற்றும் எந்திரங்கள் பற்றி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆனந்தராஜா, குகன் ஆகியோர் கூறியதாவது:-

    கோடையில் பெய்யும் மழை நீரை பூமிக்குள் சேகரிக்க கோடை உழவு மிக பயனுள்ளதாக இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை கொக்கி கலப்பை கொண்டும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டி கலப்பை கொண்டும் கோடை உழவு செய்ய வேண்டும். இதனால் மண் மிருதுவாகி மழைநீரை ஈர்க்கும் திறன் அதிகரிக்கிறது.

    கோடை உழவு காற்று, மழையால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும். முந்தைய பயிரின் தூர்கள், களைகளை உரமாக மாற்றும். தீமை செய்யக்கூடிய பூஞ்சாணங்கள், பூச்சிகள் கோடை வெப்பத்தாலும், பறவைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.

    உழவின் போது மேல் மண்ணை கீழாகவும், கீழ் மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு, காற்றோட்டம், நீர்ப்பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை உழவு செய்வதால் மண்ணின் வளம் அதிகரிக்கப்பட்டு கூடுதல் மகசூல் பெற வழிவகை செய்கிறது.

    இறகு வார்ப்பு கலப்பையானது தரையில் இருந்து மண்ணை தோண்டி குறைந்தபட்சம் இரண்டு அடி தள்ளி பக்கவாட்டு பகுதியில் போடும் . கலப்பையில் இருந்து இரண்டடி தள்ளி மண் பிரண்டு விழும். இப்படி செய்யும் பொழுது மண் இலகு தன்மையும், அடுத்த விவசாயத்திற்கான எளிய தன்மையும் கிடைக்கும். உளி கலப்பை பூமிக்கடியில் கிட்டத்தட்ட இரண்டு அடியில் உள்ள மண்ணை உடைக்கிறது.

    சட்டிக்கலப்பையானது ஒன்றை அடி ஆழமுள்ள மண்ணை வெட்டி மண்ணை கட்டியாக போடும். ஆரம்ப காலங்களில் இந்த வகை கலப்பைத்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் இறகு வார்ப்பு கலப்பை வந்தது.சட்டிக்கலப்பையை பயன்படுத்தினால் மண் கட்டி கட்டியாக விழும். அதை உடைப்பதற்கு ஒன்பது கொத்து கலப்பை கொண்டு மறுபடியும் உழவு செய்ய வேண்டியிருக்கும்.

    சுழல் கலப்பை, கட்டி உடைப்பான், மண்ணை பிளந்து கட்டிகளை உடைக்கிறது. மண்ணை பிளப்பதற்கு கத்தி போன்ற முனைகள் பயன்படுகின்றன. இவ்வகை கலப்பை 12 முதல் 15 செ.மீ., ஆழம் வரை உழக்கூடியது. இது இலகிய மண்ணிற்கு மிக பொருத்தமானது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×