search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிக மருந்துகள் தெளிப்பதால் மகசூல் பாதிக்கும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்
    X

    கோப்புபடம்.

    அதிக மருந்துகள் தெளிப்பதால் மகசூல் பாதிக்கும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்

    • தென்னை மரத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகம் காணப்படுகிறது.
    • மருந்து தெளிக்கும் போது பூச்சிகள் இறக்கும்.

    உடுமலை :

    பூச்சி மேலாண்மையில் அதிக மருந்துகளை தெளிப்பதால் பூச்சிகளின் அடுத்த தலைமுறை நோய் எதிர்ப்பு சக்தி பெற்று பாதிப்பின் அளவை அதிகரித்து விடுகிறது என வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தற்போது சற்று அதிகம் உள்ளது. உதாரணமாக தென்னை மரத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இப்பூச்சி உறிஞ்சுவதால் ஏற்படும் பாதிப்பை காட்டிலும் அதனால், ஏற்படும் அடுத்த கட்ட விளைவால் மகசூல் பாதிப்பு அதிகம் உள்ளது.

    அதாவது வெள்ளை ஈ சாறு உறிஞ்சும் போது தேன் போன்ற ஒரு திரவத்தை சுரக்கிறது. அதை சுற்றி பூஞ்சைகள் உருவாகி கருப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. இதற்கு விவசாயிகள் பலர் மருந்துகளை அதிகளவில் தெளித்து விடுகின்றனர். முதன்முறை மருந்து தெளிக்கும் போது பூச்சிகள் இறக்கும். அதன் அடுத்தகட்ட தலைமுறை, எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி விடுவதால் மருந்து பயனின்றி போகும் நிலை உருவாகும். இதனால் பூச்சியை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை வாயிலாக மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பூச்சி மேலாண்மையால் எப்படி கட்டுப்படுத்துவது? முதலில் மஞ்சள் நிறத்தில் எண்ணெய் தடவிய அட்டையை வைத்து பூச்சியை ஈர்க்க வேண்டும். இதன் வாயிலாக பாதியை கட்டுப்படுத்தலாம். பல்கலை தரப்பில் ஒட்டுண்ணி தயாரித்து வழங்கப்படுகிறது. அதை பத்து மரத்திற்கு ஒன்று என மரத்தில் கட்டி தொங்கவிடவேண்டும். ஒருவர் ஒரு நிலத்திற்கு இதை செய்வதால் பூச்சிகளை கட்டுப்படுத்த இயலாது. விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைந்த மேலாண்மையை பின்பற்ற வேண்டியது அவசியம்.

    வாடல் நோய் தென் மேற்கு மலைப்பகுதிகளில் உள்ள இடங்களில் துவங்கி, வேகமாக பிற தோட்டங்களுக்கும் பரவி வருகிறது. ஆரோக்கியமற்ற மரங்களே முதலில் பாதிக்கப்படுகின்றன. இதற்கு மரங்களை வலுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வேளாண் அதிகாரிகள் தோட்டங்களுக்கு சென்று, செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர். விவசாயிகள் பல்கலையில் அளிக்கும் திறன் மேம்பாடு பயிற்சி, ஒட்டுண்ணி போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் .

    Next Story
    ×