search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கொம்பு அணை"

    முக்கொம்பு அணையில் 19-வது மதகின் மேல் பகுதியில் தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், இந்த மதகு பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #MukkombuDam
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முக்கொம்புவில் உள்ள கொள்ளிடம் அணை கடந்த 22-ந் தேதி இரவு உடைந்தது. 45 மதகுகளில் 6 முதல் 14 வரை உள்ள 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட் டன. இதனால் கொள்ளிடத்தில் தண்ணீர் வீணாக வெளியேறியது.

    இதை தடுக்க ரூ.95 லட்சம் மதிப்பில் உடைந்த பகுதியில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. தண்ணீரின் வேகம் காரணமாக சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. முதற்கட்டமாக மதகுகள் உடைந்த பகுதி வழியாக ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் பணி முடிந்துள்ளது.

    மதகுகள் உடைந்த இடத்தில் 125 மீட்டர் இடைவெளியில் பாறாங்கற்கள் கொண்டு அடைக்கப்பட்டது. தற்போது பாறாங்கற்கள் மீது கிராவல் மண் நிரப்பப்பட்டது. ஆனாலும் பெரிய மற்றும் சிறிய பாறாங்கற்களுக்கிடையே உள்ள இடைவெளி வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது.

    இதனை தடுப்பதற்காக அணையின் மேற்குப்பகுதியில் மணல் மூட்டைகள், வாழை சருகுகள், கரும்பு சக்கைகள், வைக்கோல் கொண்டு வரப்பட்டு துளைகளுக்குள் செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் தண்ணீர் கசிந்து வருவதால் பிளாஸ்டிக் தார்ப்பாய்களை கொண்டு அடைக்கும் பணியில் பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    மதகு உடைந்த பகுதி 20 அடி ஆழமானது. 260 மீட்டர் நீளத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கி தடுப்புகள் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இன்னும் 75 முதல் 80 மீட்டர் வரை மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வடகரை மதகு பகுதியிலிருந்து 19-வது மதகிலிருந்து தெற்கு நோக்கி மணல் முட்டைகளை அடுக்கும் பணி நடந்து வந்தது. தண்ணீரின் வேகத்தால் பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது வடகரை பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. 19-வது மதகின் மேல் பகுதியில் தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    அந்த மதகு உடையும் அபாயத்தில் உள்ளது. அப்பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அசம்பாவிதத்தை தவிர்க்க 19-வது மதகு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், அணையின் மற்ற மதகுகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். 19-வது மதகில் விரிசல் இல்லை. அப்படி எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் வகையில் அப்பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தினமும் அணையை பராமரித்து வருகிறோம்.

    உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் ஓரளவு நிறைவடைந்தாலும் சிறிய இடைவெளி வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கரும்பு சக்கை, கிராவல் மண் கொண்டும் அடைத்து வருகிறோம். தொடர்ச்சியாக பாறையின் இடுக்குகளில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க கான்கிரீட் வைத்து பூச்சுகள் பூசப்பட உள்ளது.

    தண்ணீர் வெளியேறுவதை நிறுத்திவிட்டாலே 99 சதவீத பணிகள் நிறைவடைந்து விடும். புதிய பாலம் கட்ட தேர்வு செய்த இடத்தில் ஆய்வு பணிகள் முடிந்துவிட்டது. திட்ட மதிப்பீடு அரசுக்கு விரைவில் அனுப்பப்படும். விவசாய காலம் முடியும் வரை கண்காணிக்கப்படும். பின்னர் அரசு அனுமதி கிடைத்து நிதி ஒதுக்கப்பட்டதும் டெண்டர் விடப்பட்டு 2 அல்லது 3 மாதத்தில் புதிய பாலம் கட்டுமான பணிகள் துவங்கும்.

    அதுவரை டெல்டா மாவட்டங்களுக்கு பாசனம் பாதிக்காத வகையில் கண்காணித்து வருகிறோம். தற்போது காவிரியில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து கொள்ளிடத்துக்கு தண்ணீர் பாய்வது 3 நாட்களுக்கு முன்பே தடுக்கப்பட்டு விட்டது. தற்போது கொள்ளிடத்தில் ஆயிரம் கனஅடி நீரே திறக்கப்பட்டுள்ளது என்றனர்.  #MukkombuDam


    முக்கொம்பு அணை உடைப்புக்கு கண் திருஷ்டியே காரணம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். #TNMinister #Udhayakumar #Mukkombu
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஜெயலலிதா பேரவையினர் மற்றும் இளைஞர்கள் சைக்கிள் பேரணி நடத்தி வருகிறார்கள்.

    அருப்புக்கோட்டையில் நிறைவு பெற்ற சைக்கிள் பேரணியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் ஆர்.பி.உதய குமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் 214 பயனாளிகளுக்கு ரூ.1.21 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    ஏழை-எளிய மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவர் மக்களுக்காக சிந்தித்து செயல்படுத்திய அனைத்து திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு தொடர்ந்து கொண்டு செல்லும் பணியினை சிறப்பாக செய்து வருகிறார்.

    காவிரி உரிமை, எய்ம்ஸ் மருத்துவமனை, ஜல்லிக்கட்டு போன்ற முக்கிய உரிமைகளை அ.தி.மு.க. அரசு சட்டப்போராட்டம் நடத்தி பெற்று தந்துள்ளது.

    தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உழைக்கும் பெண்கள் பணிச்சுமை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயியின் மகன் என்பதால் எளிதில் அணுகக்கூடிய சாமானிய முதல்வராக இருந்து வருகிறார். திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் முக்கிய அணையான மேட்டூர் அணை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வறண்டு கிடந்தது. இந்த அணை நிரம்புமா? விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? என்றெல்லாம் விவசாயிகள் ஏங்கினர்.

    ஆனால் கடந்த மாதத்தில் மட்டும் 4 முறை மேட்டூர் அணை நிரம்பி வழிந்துள்ளது. மேட்டூர் அணை மட்டுமல்ல, கன்னியாகுமரி பக்கம் சென்றாலும் பேச்சிப்பாறை நிரம்பி வழிகிறது. அதுபோல வைகை, பவானி சாகர், பெருஞ்சாணி உள்ளிட்ட அத்தனை அணைகளும் நிரம்பி வழிகின்றன.

    பக்கத்து மாநிலங்களில் நாம் தண்ணீர் கேட்காமலேயே அவர்களே திறந்து விடுறார்கள். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் திறந்து விடுங்கள் நாங்கள் அதை பெற்றுக்கொள்கிறோம் என்ற அளவிலே தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள், நீர் நிலைகள் நிரம்பி உள்ளன.

    முதல்-அமைச்சருக்கு தண்ணீர் ராசி என்று நினைக்கிறேன். இங்கே பேசிய அமைச்சர் மற்றும் நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு தண்ணீர் ராசி இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள்.

    முக்கொம்பு அணை உடைப்புக்குக்கூட கண்திருஷ்டியே காரணமாக இருக்கலாம். அந்த அளவுக்கு மக்கள் நலப்பணிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவுபடுத்தி சிறப்பாக செய்து வருகிறார்.

    ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசுக்கு தமிழக மக்கள் துணை நிற்பார்கள். இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் மற்றும் அ.தி. மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். #TNMinister #Udhayakumar  #Mukkombu
    முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #EdappadiPalaniswami #MukkombuDam
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முக்கொம்பு அணையை ஆய்வு செய்யாமல் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிட்டதே பாதிப்புக்கு காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால் மதகு உடைந்துள்ளது. முன்கூட்டியே முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து தண்ணீர் திறந்து விட்டிருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. மதகுகளை சீரமைக்கும் பணியானது, 40 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. அணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.



    மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 40 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #EdappadiPalaniswami #MukkombuDam

    முக்கொம்பு அணையை பார்வையிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை 2-ந்தேதி மாலை திருச்சி வருகிறார். #mukkombudam

    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணை மதகு உடைந்ததை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உடைந்த அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு புதிய அணை கட்ட உத்தரவிட்டு சென்றுள்ள நிலையில் தற்போது தற்காலிக அணை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் முக்கொம்பு அணையை பார்வையிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை 2-ந்தேதி மாலை திருச்சி வருகிறார். இரவில் திருச்சியில் தங்கும் அவர் மறுநாள் திங்கட்கிழமை காலை முக்கொம்பு கொள்ளிடம் அணையை பார்வையிட செல்கிறார்.

    அவருடன் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான துரைமுருகன், திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, மற்றும் எம்.எல்.ஏக்கள் செல்கின்றனர்.  #mukkombudam

    முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் மேலும் சில மதகுகளில் விரிசல் மற்றும் அணையின் அடித்தளம் பிளாட்பாரத்தில் விரிசல் இருப்பதாக நீரில் மூழ்கி ஆய்வு செய்த நீச்சல் வீரர்கள் தெரிவித்துள்ளனர். #kollidam #kollidambridge #mukkombudam
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மதகுகளை அடைக்க 2½ லட்சம் மணல் நிரப்பிய சாக்கு மூட்டைகள் தயார் செய்யப்பட்டன. அணையின் முதலாவது மதகு முதல் 17-வது மதகு வரை, 220 மீட்டர் தூரத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது இதுவரை 1.25 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அணையில் இடிந்த 9 மதகுகள் மட்டுமின்றி மீதமுள்ள 36 மதகுகளும் நல்ல நிலையில் உள்ளதா? என்றும், கொள்ளிடம் அணையின் உறுதி தன்மை குறித்தும் ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

    இதற்காக, தண்ணீருக்கு அடியில் சென்று அணையின் மதகுகளில் விரிசல் உள்ளதா? அணையின் பிளாட்பாரம் விரிசல் விடாமல் இருக்கிறதா? என கண்டறிவதற்காக ஆழ்கடலில் மூழ்கி நீச்சல் பயிற்சி அனுபவம் உள்ள ‘ஹைடெக்’ சிவில் என்ஜினீயர்ஸ் ஏஜென்சியினர் தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

    அவர்களில், ஆழ்கடலில் மூழ்கி முத்து மற்றும் சிப்பிகளை சேகரிக்கும் அனுபவம் உள்ள நீச்சல் பயிற்சியாளர்கள் பாலு (வயது56), சிவா (40), சந்தனகுமார் (40) ஆகிய 3 பேரும் முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கு வந்தனர்.

    அவர்கள் தண்ணீரில் மூழ்கி அணையின் ஒவ்வொரு மதகையும் ஆய்வு செய்தனர். தூண்கள், மதகுகள் மற்றும் அணையின் உறுதித்தன்மை குறித்து உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தண்ணீரில் மூழ்கி ஆய்வு நடத்தினர். அப்போது, கொள்ளிடம் அணையில் உள்ள எஞ்சிய மதகுகள் சிலவற்றில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும், அணையின் அடித்தள பிளாட்பாரத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.


    இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் எஞ்சிய அணைப் பகுதியும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

    இதனிடையே காவிரி ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரிப்பு, திருச்சியில் பெய்த மழை ஆகியவற்றால் கொள்ளிடம் அணையில் தற்காலிக சீரமைப்பு பணி பாதிக்கப்பட்டது. இதையறிந்த பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்தார்.

    கொள்ளிடம் அணைப்பகுதிக்கு சென்று சீரமைப்பு பணியை பார்வையிட்ட அவர், அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்படாமல் விரைவாக முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதையும் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். தற்காலிக சீரமைப்பு பணியை விரைந்து முடிப்பது தொடர்பாகவும், மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அதனை சீரமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    தற்காலிக பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் ராசாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சேதமடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்ததாக பாறாங்கற்கள் அடுக்கும் பணி நடைபெற இருக்கிறது. பொதுப்பணித்துறை மூலம் 260 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் சுவர் அமைக்கப்படும். தற்போது முதல் கட்டமாக 60 சதவீத சீரமைப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. கொள்ளிடத்துக்கு வரும் தண்ணீரை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் 4 நாட்களில் நிறைவுபெறும். அதன் பின்னர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தாலும் கொள்ளிடம் அணைக்கு பாதிப்பு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தால் வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கடந்த மாதம் அதிக அளவு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக அணையின் மதகுகள் உடைந்தன. தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் மேலும் சில மதகுகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்கள், விவசாயிகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கர்நாடகாவில் மழை குறைந்ததன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது குறைக்கப்பட்டுள்ளது.

    அங்கு கூடுதலாக மழை பெய்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் திருச்சி கொள்ளிடம் மேலணையில் மேலும் சில மதகுகள் உடைந்து, அணையின் எஞ்சிய பகுதியும் உடைய விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அப்படியொரு நிலை ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து அங்கு புதிய அணை கட்டுவதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளனர். அதற்கான ஆய்வில் நிபுணர்கள் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நில அளவீடு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. #kollidam #kollidambridge #mukkombudam
    முக்கொம்பு அணைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கிண்டலடிக்கும் வகையில் கூறினார். #MukkombuDam #AnbumaniRamadoss #EdappadiPalaniswami
    ஆற்காடு:

    வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், விடுதிகளில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவற்றை தடுக்க கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். நான் மரண தண்டனைக்கு எதிரானவன். பா.ம.க.வும் மரண தண்டனையை ஒருபோதும் ஆதரிக்காது.

    அதே நேரத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்க மரண தண்டனை வழங்கலாம் என்பது என் கருத்து. மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்தது கண்டிக்கத்தக்கது.



    மனித உடலுக்கு திடீர் காய்ச்சல் வந்தது போல் முக்கொம்பு அணை மதகுகள் திடீரென உடைந்துவிட்டதாக கூறி மருத்துவம் பார்த்த எடப்பாடி பழனிசாமிக்கு ‘டாக்டர் பட்டம்’ தான் வழங்க வேண்டும். முக்கொம்பு அணை மதகு உடைப்புக்கு மணல் கொள்ளை முக்கிய காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MukkombuDam #AnbumaniRamadoss #EdappadiPalaniswami

    திருச்சி முக்கொம்பு அணை உடைந்ததற்கு பராமரிப்பு இல்லாததே காரணமாகும். தமிழக அரசு அனைத்து அணைகளையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார். #MukkombuDam #Vaiko
    நெல்லை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரள வெள்ளப் பாதிப்பிற்கு தமிழக மக்கள் பேருதவி செய்துள்ளனர். தமிழர்களின் மனிதநேயம் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக உள்ளது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு ம.தி.மு.க. சார்பாக ரூ.10 லட்சம் திரட்டி வழங்க இருக்கிறோம். திருச்சி முக்கொம்பு அணை உடைந்ததற்கு பராமரிப்பு இல்லாததே காரணமாகும். தமிழக அரசு அனைத்து அணைகளையும் முறையாக பராமரிக்க வேண்டும். ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் அணை கட்ட அறிவித்துள்ளனர். ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்த போது திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

    ஈரோட்டில் செப்டம்பர் 15-ந்தேதி ம.தி.மு.க. சார்பாக மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக 2 மாதத்திற்கு முன்பே சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவால் தி.மு.க. கட்சி கூட்டத்தை கூட்டி பல முடிவுகள் எடுக்க இருப்பதால் ம.தி.மு.க. மாநாட்டிற்கு வர முடியாத நிலை இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்.



    வருகிற 28-ந்தேதி நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்படலாம். ம.தி.மு.க. மாநாட்டில் கருணாநிதி படம் திறக்கப்படுகிறது.

    இதனை துரைமுருகன் திறந்து வைக்கிறார். மாநாட்டில் பினாங்கு துணை முதல்-அமைச்சர் ராமசாமி, தி.க. தலைவர் கி.வீரமணி, காஷ்மீர் முன்னாள் முதல்-அமைச்சர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், யஷ்வன்சின்கா மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த மாநாடு ம.தி.மு.க.வினருக்கு உந்துதலை ஏற்படுத்தும். திராவிட இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு வைகோ பதில் அளித்தார்:-

    கே: கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்படுமா?

    ப: பெரிய தலைவர்களுக்கு புகழஞ்சலி நடக்கும் கூட்டத்தில் இதுபோல் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது. கருணாநிதிக்கு அளிக்கும் புகழஞ்சலி அரசியல் எல்லைகளை கடந்தது. இது ஆரோக்கியமான அரசியல் ஆகும். எனவே இதை வேறு விதமாக பார்க்கக்கூடாது.

    கே: அ.தி.மு.க.வை கூட்டத்திற்கு அழைக்கவில்லையே?

    ப: கடற்கரையில் அண்ணா சமாதியில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க கோரிக்கை விடுத்தபோது அவர்கள் அதை உதாசனப்படுத்தினார்கள். பின்னர் நீதிமன்றத்தை அணுகி தங்களுக்கான உரிமைகளை பெற்றனர். இது தமிழக மக்கள் மனதிலேயே காயத்தை ஏற்படுத்தியது.

    இதனால் அ.தி.மு.க.வை அழைக்காமல் இருந்திருக்கலாம்.

    கே: கேரள வெள்ளம் ஏற்பட்டதற்கு தமிழகம் தான் காரணம் என்று கேரள முதல்வர் கூறியுள்ளாரே?

    ப: கேரளாவில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகுதான் முல்லை பெரியாறு அணை நிரம்பியது. மற்ற அணைகள் திறக்கப்பட்ட பிறகே முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டது. அதுவும் அணையில் இருந்து 1½ டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது. எனவே கேரள வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணை திறப்பு காரணம் அல்ல.

    மழை வெள்ளத்தில் துன்பப்படும் இந்த நேரத்தில் இதை பெரிதுபடுத்த வேண்டாம். கேரள வெள்ளத்தில் நம்மால் பாதிப்பு ஏற்படவில்லை.

    கே: ஜெயலலிதா மறைந்தபோது அ.தி.மு.க. பிரச்சினை ஏற்பட்டது போல், கருணாநிதி மரணத்தை தொடர்ந்து தி.மு.க.வில் பிரச்சினை ஏற்படுவது போல் உள்ளதே?

    ப: தி.மு.க. மிகவும் கவனமாக செல்கிறது. அங்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MukkombuDam #Vaiko
    முக்கொம்பு மேலணை மதகு உடைப்புக்கு மணல் கொள்ளையே காரணம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MukkombuDam #Vaiko

    கும்பகோணம்:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கும்பகோணத்தில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதவாது:-

    தமிழக அரசு நீர் மேலாண்மை கடமையை முறையாக செய்யவில்லை. மேலும் தொடர்ந்து நடந்த ஆற்று மணல் கொள்ளையாலும் பராமரிப்பு பணிகளை சரிவர செய்யாததாலும், 182 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சி முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்து விட்டன. இதற்கு தமிழக அரசின் பொறுப்பற்ற போக்கு தான் காரணம்.

    கடந்த 2014-ம் ஆண்டில் கொள்ளிடத்தில் ரூ.410 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்படும் என்று அப்போது முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.


    குதிரை ஓடிய பிறகு லாயத்தை கட்டி என்ன பயன்? அதுபோல் தான் முக்கொம்பு மேலணை உடைந்த பிறகு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என கூறுவது சரியில்லை.

    அணையில் ஓட்டை விழுந்துள்ளது என தகவல் வந்த போதே அதை முறையாக பராமரிப்பு பணி செய்திருந்தால் உடைப்பு ஏற்பட்டு இருக்காது.

    நமது முன்னோர்கள் சேமித்த இயற்கை வளம் மணல். மணலை கொள்ளையடித்தால் எதிர்க்கால சந்ததியினரின் வாழ்க்கையில் சீரழிவு ஏற்படும். முக்கொம்பு மேலணை உடைப்புக்கு மணல் கொள்ளைதான் காரணம்.

    இவ்வாறு வைகோ கூறினார்.

    திருச்சி முக்கொம்பில் வெள்ளப்பெருக்கினால் மதகுகள் உடைந்த மேலணைக்கு பதில் ரூ.325 கோடியில் புதிய கதவணை கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #MukkombuDam #EdappadiPalaniswami #NewGateway
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பில் உள்ள அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி காவிரி முக்கொம்பு அணையில் கொள்ளிடம் பிரியும் பகுதியில் உள்ள 9 ‌ஷட்டர் மதகுகள் உடைந்துள்ளது. அதனை தற்காலிகமாக சீரமைப்பதற்காக துரிதமாக, வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 4 நாட்களில் அந்த சீரமைப்பு பணிகள் நிறைவடையும்.

    கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி அணை உடையவில்லை சட்டர் பழுதானது. அது சரி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியை பொறுத்தவரை அதிகமான கழிவு நீர் டேமிற்குள் வந்துள்ளது. அதனால் ஏற்பட்ட அரிப்பினால் சட்டர்களில் பழுது ஏற்பட்டது. அதை மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.



    1836-ல் கட்டப்பட்ட பழமையான கதவணை கிட்டத்தட்ட 182 ஆண்டுகள் முன் கட்டப்பட்டுள்ளது. முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. கடந்த 1924, 1977, 2005 மற்றும் 2013-ல் வெள்ளம் வந்த போது, இந்த கொள்ளிடம் ஆற்றின் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அப்போது 5, 6 நாட்கள் தான் மேலணை வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    ஆனால் தற்போது முதற்கட்டமாக 8 நாட்கள் அதிக அளவிலான நீர் வெளியேறியது. அதற்கு பிறகு 2-ம் கட்டமாக 12 நாட்கள் தொடர்ந்து அதிக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அதன் அழுத்தத்தினால் தற்போது இந்த அணை உடைந்துள்ளது.

    ஆண்டுதோறும் அணைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. திடீரென ஏற்படும் உடல் நலக்குறைவு போன்றது தான் இந்த உடைப்பு. இது தற்காலிகமாக ஏற்பட்ட விபத்து. இதற்கான பொறியியல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    மேலணையில் இருந்து 100 மீட்டர் தள்ளி புதிய கதவணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முழுமையாக இரண்டு பக்கங்களிலும் காவிரி தவிர்த்து கொள்ளிடத்தில் மட்டும் அணை கட்டப்படும்.

    இந்த அணை ரூ.325 கோடியிலும், தெற்கு பகுதியில் உள்ள அய்யன் வாய்க்கால் அணை ரூ.85 கோடியிலும் சேர்த்து மொத்தம் ரூ.410 கோடியில் இரண்டு புதிய கதவணைகள் கட்டப்படும்.

    இந்த பணிகள் 15 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என பொறியியல் குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இதற்கான பணிகள் வேகமாகவும், துரிதமாகவும் தொடங்கப்படும்.

    இதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு அது சரிசெய்யப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். கதவணை எந்த விதத்தில் கட்டப்படும் என்று நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆராயப்படும். இதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது.

    காவிரி கொள்ளிடத்தை விட இரண்டு அடி தாழ்வாக உள்ளது. இப்போது 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் போய்க்கொண்டிருக்கிறது. இதில் ஒன்றரை மீட்டர் தடுப்பு ஏற்படுத்துகிறார்கள். மணல் மூட்டையை வைத்து தற்காலிகமாக தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர், கபினி அணையில் இருந்து வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. மேட்டூருக்கு வரும் தண்ணீரானது 15 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

    அணையில் மதகுகள் உடைந்ததற்கு மணல் குவாரிகள் காரணம் அல்ல. மணல் குவாரிக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. குறிப்பிட்ட தூரத்திற்கு தொலைவில்தான் மணல் குவாரிகள் இருக்கிறது. வரைமுறைக்கு உட்பட்டுதான் மணல் அள்ளப்பட்டுள்ளது. எல்லா ஆட்சிகளிலும் இப்படித்தான் மணல் அள்ளப்பட்டுள்ளது. அ.தி. மு.க. ஆட்சியில் மட்டும் தான் அள்ளப்படுகிறது என்பது தவறான கருத்து.

    இந்த மணல் அள்ளுவது படிப்படியாக குறைக்கப்படும். அதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. மணலின் செயல்பாட்டை படிப்படியாக குறைக்கும் வகையில் எம்.சாண்ட் மணல் பயன்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முக்கொம்பில் பலமிழந்த நிலையில் மேலும் பல மதகுகள் உடையும் அபாயம் இருந்ததால் முக்கொம்பு சுற்றுலா தளம் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே மேலணை மதகுகள் உடைந்த பாலம் துண்டானதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் சுமார் 50 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். #MukkombuDam #EdappadiPalaniswami #NewGateway
    திருச்சி முக்கொம்பு அணையில் உடைந்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். #EdappadiPalaniswami #Mokkumbudam
    திருச்சி:

    காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் திருச்சியில் உள்ள 182 ஆண்டு பழமையான முக்கொம்பு அணையில் 6 முதல் 14-ம் எண் வரையிலான 9 மதகுகள் இடிந்து விழுந்தன. இதனால் அணைக்கட்டின் மேல் பகுதி பாலமும் அப்படியே தண்ணீருக்குள் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த வழியாக தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மற்ற மதகுகள் அடைக்கப்பட்டுவிட்டன.

    தகவல் அறிந்து திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அணையின் இரு பகுதிகளிலும் இருந்த கேட்டுகள் மூடப்பட்டன. பாலம் இடிந்ததால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

    கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அணையின் உடைந்த பகுதிகளை சீரமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அணையை தற்காலிகமாக சீரமைப்பது தொடர்பான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். திருச்சி வந்து சேர்ந்த அவர், முக்கொம்பு அணையின் உடைந்த பகுதிகள் மற்றும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர், அணை சீரமைப்பு பணியை விரைவாக முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



    கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் உடைந்து அணை இடிந்துவிழுந்தாலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்படவில்லை. இதனால் விவசாய பணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படவில்லை. #EdappadiPalaniswami #Mokkumbudam
    முக்கொம்பு அணை, கொள்ளிடம் பாலம் உடைந்ததற்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MukkombuDam #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சி முக்கொம்பு அணையின் 8 மதகுகள் உடைந்து அணைக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு திருச்சி- கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி-நாமக்கல் செல்லும் சாலையை பயன்படுத்த முடியாத மோசமான நிலை உருவாகியிருக்கிறது.

    கொள்ளிடம் பாலம், தற்போது முக்கொம்பு மேலணை என்று ஒவ்வொன்றாக உடைந்து வருவது அணைகள் பாதுகாப்பு வி‌ஷயத்தில் அ.தி.மு.க அரசின் அக்கறையின்மையையும், அலட்சியத்தையும் காட்டுகிறது.



    அணைகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கிச் செலவிடுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அ.தி.மு.க அரசு, இந்த அணைகளின் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து கணித்திடத் தவறியது ஏன்? அணை சீரமைப்புப் பணிகளின் கீழ் முக்கொம்பு அணை மற்றும் கொள்ளிடம் பாலத்தின் தூண்களை முன் கூட்டியே சீரமைக்கத் தவறிய அ.தி.மு.க அரசே இந்த பாதிப்புகளுக்கு முழுப்பொறுப்பேற்க வேண் டும்.

    ஆகவே, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள அணைகள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கையாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்திட வேண்டும் எனவும், அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட சீரமைப்புப் பணிகளை இனியும் தாமதப்படுத்தாமல், மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    சுங்க சாவடி கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் கருத்து வருமாறு:-

    கடந்த ஏப்ரலில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 சதவீதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 10-15 சதவீதம் வரை கட்டண உயர்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

    மக்களை வெகுவாக பாதிக்கும் கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MukkombuDam #MKStalin

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை விமானம் மூலம் திருச்சி சென்று முக்கொம்பில் உடைந்த கொள்ளிடம் ஆற்று பாலத்தை பார்வையிடுகிறார். #MukkombuDam #EdappadiPalaniswami
    சென்னை:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆறு கரை புரண்டு ஓடி வரும்போது அதன் வேகத்தை குறைப்பதற்காக கட்டப்பட்டுள்ள முக்கொம்பு அணையில் உள்ள 45 மதகுகளின் வழியாகத்தான் வெள்ள காலங்களில் காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    182 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணையில் உடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 8.30 மணி அளவில் இந்த அணையில் உள்ள 6-ம் எண்ணில் இருந்து 13-ம் எண் மதகு வரை உள்ள 8 மதகுகள் திடீரென இடிந்தன. இதனால் அணைக்கட்டும், பாலத்தின் மேல் பகுதியும் அப்படியே ஆற்றுக்குள் இடிந்து விழுந்தன.

    இடிந்து விழுந்த மதகுகளின் வழியாக மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்ற மதகுகளில் தண்ணீர் திறந்து விடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு மதகு (14-வது மதகு) இடிந்து விழுந்தது.



    முக்கொம்பு அணையில் அணைக்கட்டுடன் கூடிய பாலத்தின் அகலம் 3 மீட்டர் ஆகும். அணைக்கட்டில் உள்ள பாலத்தின் வழியாக கார்கள் மற்றும் வேன்கள் செல்ல முடியும். திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி-நாமக்கல் சாலையை அடைவதற்கு இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். தூண்கள் இடிந்து விழுந்ததால் பாலம் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் கரூர் சாலை பகுதியில் இருந்து திருச்சி-சேலம் சாலை வாத்தலை பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் முக்கொம்பு சென்று உடைந்த கொள்ளிடம் ஆற்று பாலத்தை பார்வையிடுகிறார்.  

    முக்கொம்பில் கொள்ளிடம் பாலத்தில் உடைந்த பகுதியில் இன்று சீரமைப்பு பணிகள் தொடங்கின. இந்த பணி ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும். இதற்காக ராட்சத எந்திரங்கள், தொழில்நுட்ப குழுவினர்கள் வரவழைக்கப்படுகின்றனர். #MukkombuDam #EdappadiPalaniswami

    ×