search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டலபூஜை"

    • மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் நடைதிறப்பு.
    • நேற்று களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது.

    மகரவிளக்கு பூஜையையொட்டி நேற்று முன்தினம் சபரிமலையில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.நேற்று சன்னிதானம் பகுதியில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது.

    • சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
    • 20-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலை:

    2023-2024-ம் ஆண்டுக்கான மண்டல-மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜை வழிபாடு நடைபெற்று வந்த நிலையில் 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்றைய தினம் இரவே நடையும் அடைக்கப்பட்டது. இந்த மண்டல சீசனில் 33 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    சில நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. அந்த சமயத்தில் பக்தர்கள் 15 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பி.என்.மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

    நடை திறப்பையொட்டி நேற்று பிற்பகல் 2 மணிக்கு பின்னரே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். பிறகு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜைக்கு பிறகு 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    பின்னர் மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும், அதனைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    வருகிற 15-ந்தேதி அதிகாலை 2.46 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.

    அதேபோல் 15-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை மாளிகப்புரத்தம்மன் கோவிலில் இருந்து 18-ம் படி வரை இரவில் அய்யப்ப சாமி ஊர்வலமும், 19-ந் தேதி அன்று சரம் குத்தி வரை சாமி ஊர்வலமும் நடக்கும். இந்த சீசனில் 20-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

    ஏற்கனவே 15-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கான முன்பதிவு முடிவடைந்து விட்டது. அந்த வகையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதே சமயத்தில் உடனடி பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    • பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது.
    • வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சபரி மலையில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது.

    இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனிலும் அந்த நடைமுறையே கடை பிடிக்கப்பட்டது. மேலும் நிலக்கல்லில் உடனடியாக முன்பதிவு செய்தும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உடனடி முன்பதிவு செய்தும் பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்தனர். இதன் காரணமாக சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது.

    இதனால் பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் கூட, பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர். சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை நிலவியது.

    இதன் காரணமாக பக்தர்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் அவதிக்குள்ளானதாக பக்தர்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பல்வேறு கட்சியினரும் கருத்து வெளியிட்டனர்.

    இந்தநிலையில் மண்டல பூஜை விழா முடிந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. மகரவிளக்கு தரிசனம் ஜனவரி 15-ந்தேதி நடக்கிறது.

    • மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சுமந்து வந்தனர்.
    • பக்தர்கள் `சாமியே சரணம் ஐயப்பா’ என பக்தி கோஷம் முழங்கினர்.

    சபரிமலை:

    மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிப்பது வழக்கம்.

    இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இந்த தங்க அங்கி கடந்த 23-ந்தேதி சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் நேற்று பம்பை கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கிருந்து தங்க அங்கியை மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சுமந்து வந்தனர். தங்க அங்கி மாலை 5.15 மணிக்கு சரம்குத்தி வந்தடைந்தது.

    அப்போது திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர்கள் சார்பில் மேளதாளம் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு சன்னிதானம் வந்தடைந்த தங்க அங்கியை திருவிதாங்கூர் தேவஸ்தான மந்திரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டு தந்திரி மற்றும் மேல்சாந்தியிடம் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து தங்க அங்கி 18-ம் படி வழியாக கருவறைக்குள் எடுத்து செல்லப்பட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.

    பின்னர் மாலை 6.40 மணியளவில் மண்டல பூஜையின் முன் நிகழ்வாக சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது சன்னிதானத்தில் கூடி இருந்த திரளான பக்தர்கள் `சாமியே சரணம் ஐயப்பா' என பக்தி கோஷம் முழங்கினர். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகளுக்கு பின்னர் இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

    சபரிமலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் காலை 9.45 மணி வரை நெய்யபிஷேகம் போன்றவை நடைபெறும்.

    தொடர்ந்து காலை 10.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலான முகூர்த்த வேளையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை நிறைவு பெறுகிறது.

    • குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாம்படி.
    • பலனை எதிர்ப்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

    முதல்படி:

    விஷாத யோகம், பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பை விஷாத யோகம். இதுவே முதல்படி.

    இரண்டாம்படி:

    சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாம்படி.

    மூன்றாம்படி:

    கர்மயோகம், உபதேசம் பெற்றால் போதுமா? மனம்பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்ப்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

    நான்காம் படி:

    ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம்படி.

    ஐந்தாம்படி:

    சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

    ஆறாம்படி:

    தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.

    ஏழாம்படி:

    ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்... எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவதுபடி.

    எட்டாம்படி:

    அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.

    ஒன்பதாம் படி:

    ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம், கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத் தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மீகம் என்று உணர்வது ஒன்பதாம்படி.

    பத்தாம்படி:

    விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தை கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம்படி.

    பதினொன்றாம்படி:

    விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது பதினொன்றாம் படி.

    பன்னிரண்டாம்படி:

    பக்தி யோகம். இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை-பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம்படி.

    பதின்மூன்றாம்படி:

    ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம்படி.

    பதினான்காம்படி:

    குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

    பதினைந்தாம் படி:

    தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

    பதினாறாம் படி:

    சம்பத் விபாக யோகம், இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.

    பதினேழாம் படி:

    சிரித்தாத்ரய விபாக யோகம், சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாம் படி.

    பதினெட்டாம் படி:

    மோட்ச சன்யாச யோகம், யாரிடமும் எந்த உயிர்களிடமும் பைதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி.

    சத்தியம் நிறைந்த இந்த பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பைரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

    • கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.
    • தினசரி 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    சபரிமலை:

    மண்டலபூஜை சீசனையொட்டி, கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு சபரிமலையில் குவிந்து வருகிறார்கள். ஆன்லைன் முன்பதிவு தவிர நிலக்கல்லில் உடனடி முன்பதிவும் நடைபெற்று வருவதால் சபரிமலையில் தினசரி 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    ஆனால், 18-ம் படி வழியாக நிமிடத்திற்கு அதிகபட்சமாக 70 பக்தர்கள் மட்டுமே செல்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 4,200 பக்தர்கள் மட்டுமே சன்னிதானத்தில் தரிசனம் செய்ய முடியும். தினசரி 17 மணிநேரம் வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதால் சபரிமலையில் குவிந்து வரும் பக்தர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் சாமியை தரிசனம் செய்ய முடிவதில்லை. இதனால் 18 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.

    அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரித்து 18 மணி நேரமாக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. அதன்படி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு அதாவது ஒரு மணி நேரம் முன்னதாக நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.

    இந்த நிலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் ஐ.ஜி. ஸ்பர்ஜன் குமார் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் சபரிமலையில் முகாமிட்டு உள்ளனர்.

    இந்த நிலையில், 'சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வசதியாக, தரிசனம் முடிந்த பக்தர்கள் சன்னிதானத்தில் தங்காமல் உடனுக்குடன் மலையிறங்க வேண்டும்' என்று ஐ.ஜி ஸ்பர்ஜன் குமார் பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் சீசனையொட்டி பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், நிலக்கல்லில் நடந்து வரும் உடனடி தரிசன முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேவஸ்தானத்தையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.
    • மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று (17-ந்தேதி) தொடங்கியது.

    இதற்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். பின்பு 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது.

    தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ், மாளிகைபுரம் கோவிலின் புதிய மேல்சாந்தி பி.ஜி.முரளி ஆகியோர் இருமுடி கட்டி சன்னிதானம் நோக்கி வந்தனர். அவர்களுக்கு மேளதாளம் முழங்க 18-ம் படிகளுக்கு கீழ் அழைத்து வரப்பட்டனர்.

    பின்பு மாலை 6.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்திகள் மூலமந்திரம் கூறி பொறுப் பேற்றுக் கொண்டனர். பின்பு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர். பின்பு இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கபபட்டு, சாவி புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷிடம் ஒப்ப டைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து இன்று (17-ந்தேதி) அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோவில் நடையை திறந்து வைத்தார். பின்பு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடை பெற்றன. தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெற்றது.

    இந்தநிலையில் கோவில் நடை நேற்று மாலை திறக்கப் பட்டதால் சபரிமலையில் நேற்றே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மண்டல பூஜை தொடங்கிய தையடுத்து இன்றும் பக்தர்கள் குவிந்தனர். மழை பெய்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமரிமலையில் திரண்டனர்.

    சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப் பட்டது. ஆன்லைனில் முன்பதிவுசெய்த பக்தர்களே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.

    பக்தர்கள் வரும் வாக னங்களை நிலக்கல்லில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. அங்கிருந்து பம்பைக்கு பக்தர்கள் வருவதற்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.

    சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். ஜனவரி 15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடை பெறும். தொடர்ந்து 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். மறுநாள் 20-ந்தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் மகர விளக்கு பூஜை நிறைவு பெறும்.

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதி களில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    சபரிமலையில் இன்று

    அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு, 3.30 மணிக்கு கணபதி ஹோமம், 3.35 மணிக்கு முதல் 7 மணி வரை நெய் அபிஷேகம்

    காலை 7.30 மணிக்கு உஷ பூஜை,  8.30 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம்

    காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அஷ்டாபிஷேகம்

    மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜை, 1 மணிக்கு நடை அடைப்பு

    மாலை 3 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணி தீபாராதனை

    இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை புஷ்பாபிஷேகம்

    இரவு 9.30 மணிக்கு அத்தாழ பூஜை, 11 மணி நடை அடைப்பு

    • கீழடி 18 சித்தர்கள் கோவிலில் மண்டலபூஜை நடந்தது.
    • மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள கீழடி கிராமத்தில் 18 சித்தர்கள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. அதை தொடர்ந்து 48-ம் நாள் மண்டல அபிஷேகம் சிறப்பு யாகத்துடன் தொடங்கியது. 18 சித்தர்களுக்கு தனிசன்னதியில் புனிநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகர், தண்டாயுதபாணி, கட்டிக்குளம் சூட்டுகோல் மாயாண்டி சுவாமி, பாலாம்பிகை, அகத்தியருக்கு சிறப்பு பூஜை-தீபாராதனை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×