search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கல்விக் கொள்கை"

    • புதிய கல்விக் கொள்கை முற்போக்கானது, தொலை நோக்கு பார்வை கொண்டது.
    • மாணவர்களிடம் உள்ள திறமை, அறிவு, அணுகுமுறைக்கே முன்னுரிமை அளிக்கிறது.

    மொரதாபாத்:

    உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் உள்ள கிருஷ்ண மகா வித்யாலயாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது: 


    இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் ஆவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற புதிய கல்விக் கொள்கை உறுதுணையாக இருக்கும்.

    புதிய கல்விக் கொள்கை சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இது மிகப்பெரிய சீர்திருத்தம். இது முற்போக்கானது, தொலைநோக்கு பார்வை கொண்டது. அது மட்டுமின்றி 21ம் நூற்றாண்டின் தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    கல்வியுடன் பட்டங்களை இணைப்பது நமது கல்வி முறையிலும் சமூகத்திலும் பெரும் சுமையாக உள்ளது. இதனால் படித்து வேலைவாய்ப்பு இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதற்கு தீர்வு காண, மாணவர்கள் பட்டம் பெறுவதில் மட்டும் கவனம் செலுத்துவதை தவிர்த்து. அவர்களிடம் உள்ள திறமை, அறிவு, அணுகுமுறை ஆகியவற்றுக்கே தேசிய கல்விக் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது.

    வாழ்க்கையில் வெற்றியடைய மாணவர்கள் பலவகையான திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். நடப்பு கால திறன்களுடன் இருப்பவர்கள் உலகில் இன்று வியத்தகு செயல்களை செய்கிறார்கள் என்பதற்கு ஏரளாமான உதாரணங்கள் உள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • அகில இந்திய தேர்வுகளை எதிர் கொள்ள மாணவர்களை தயார் செய்வது அவசியம்.
    • மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் தேர்வு எழுத தயாராக இருக்கிறார்கள்.

    தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழசை சௌந்தராஜன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 

    தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. தேசிய கல்வி கொள்கையில் குறைபாடுகள் இருந்தால் அதை அரசிடம் சுட்டிக் காட்டலாம். அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்வது சரியானதாக இருக்காது.

    தேசிய கல்விக் கொள்கையை அரசியலாக்க வேண்டாம் என்றே நான் சொல்கிறேன். அனைவருக்கும் ஒன்றுபட்ட சமச்சீர் கல்வி கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அகில இந்திய தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார் செய்வது அவசியம். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களும் பெற்றோர்களும் தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    அதை முழுவதும் படித்து விட்டு எதனால் மறுக்கிறீர்கள் என்று கருத்து சொல்ல வேண்டும். மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து குழு அமைக்கப்பட்டு, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது பள்ளி குழந்தைகளின் மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந்தைகள் தேர்வு எழுத தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்கியுள்ளோம்.
    • கல்வி கொள்கை உருவாக்கத்தில் அனைத்து பகுதிகளும் இடம் பெற வேண்டும்.

    டெல்லி ஆசிரியர்கள் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    தேசியக் கல்விக் கொள்கையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. கல்வி தொடர்பான கொள்கைகள் உருவாக்கத்தில் அனைத்து பகுதிகளும் இடம் பெற வேண்டும். தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்திலும், அதை நடைமுறைப்படுத்துவதிலும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

    ஆசிரியர் பயிற்சி உள்பட பல்வேறு அம்சங்களை அதில் இணைக்க வேண்டும் என்பது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தொலைநோக்கு பார்வையாகும். டெல்லியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடிவு செய்தால், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு யார் பாடம் நடத்துவார்கள்? அந்த ஆசிரியர்களின் தகுதி என்ன? இன்னும் அது பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை. தற்போது டெல்லியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான எல்லா வசதிகளையும் எங்கள் அரசு வழங்கியுள்ளது.

    டெல்லி அரசும் ஆசிரியர் பல்கலைக்கழகமும் இணைந்து செயல்படுகின்றன, மேலும் ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்க அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்கியுள்ளோம். தேசியக் கல்விக் கொள்கையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதால் டெல்லியில் இப்போது அதனை அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மத்திய அரசு கடந்த கால முரண்பாடுகளை சரி செய்துள்ளது.
    • மாணவர்களின் திறமை, அறிவு மற்றும் திறனுக்கு முன்னுரிமையை அளிக்கிறது.

    டெல்லியில் நடைபெற்ற கல்வி உச்சி மாநாட்டில் உரையாற்றிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த கால முரண்பாடுகளை சரி செய்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் மிகப்பெரிய சீர்திருத்தம் மட்டுமல்ல முற்போக்கான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டது. 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப இது உள்ளது. தேசிய கல்வி கொள்கை சர்வதேச தரத்திற்கு இந்தியாவின் கல்வியை மாற்றியமைக்கும்.

    இது மாணவர்களின் திறமை, அறிவு மற்றும் திறனுக்கு முன்னுரிமையை அளிக்கிறது. மனித நேயத்தை உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான மற்றும் பலதரப்பட்ட பாடத் திட்டத்தை இது பரிந்துரைக்கிறது. சுவாமி விவேகானந்தரின் மனிதனை உருவாக்கும் கல்வி, ஸ்ரீஅரவிந்தரின் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் மகாத்மா காந்தியின் அடிப்படைக் கல்வி ஆகியவற்றை தேசிய கல்விக் கொள்கை பிரதிபலிக்கிறது.

    இன்று சுமார் 40 மில்லியன் இந்திய மாணவர்கள் உயர்கல்வி படித்து உள்ளனர், இது அமெரிக்காவை விட அதிகம். பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்கள் பாடத்திட்டத்தில் தொழில்முனைவோர் குறித்து பாடங்களை இணைக்க வேண்டும். இதை அர்த்தமுள்ள முறையில் செய்தால், குறுகிய காலத்தில் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளிக்கும்.

    முந்தைய கல்விக் கொள்கையின்படி மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மனித வள அமைச்சகம் என்ற பெயரிடப்பட்டது. மோடி அரசு தற்போது அதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்தது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசையில் இந்தியா முன்னேறியுள்ளது. 2015 ஆம் ஆண்டில் 81 வது இடத்தில் இருந்து 2021 இல் 46 வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆறுகள் அல்லது மலைகளால் மட்டுமே ஒரு நாடு சிறந்த நாடாக மாறாது.
    • புதிய தேசிய கல்விக் கொள்கை இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றும்.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

    தேசிய கல்விக் கொள்கை, பொதுமக்களின் ஆசைகளை பிரதிபலிக்கிறது. இதற்கு முந்தைய கல்விக் கொள்கை ஒரு மாணவரை வெற்றிகரமான நிபுணராக மாற்ற வடிவமைக்கப்பட்டது. ஆனால் புதிய கல்விக் கொள்கை ஒரு மாணவனை சிறந்த மனிதனாக மாற்றுவது மட்டுமல்லாமல், இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றும்.

    ஒரு நாடு ஆறுகள் அல்லது மலைகளால் மட்டுமே சிறந்த நாடாக மாறாது, சிறந்த நிலையை அடைய சிறந்த ஆளுமைகள் தேவை. தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கும். ஆங்கிலத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம், ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடையே தாழ்வு மனப்பான்மையை வளர்த்து, தங்கள் காலனித்துவ ஆட்சியை நீட்டிக்க முயன்றனர். புதிய கல்விக் கொள்கையில் இந்திய கலைகள், கலாச்சாரம், தாய்மொழி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களையும் நிச்சயம் இது ஈர்க்கும்.

    கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைவரும் தேசிய கல்விக் கொள்கை குறித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை அம்சமே, குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளி வருவதுதான்.
    • குழந்தைகளை திறனுடையவர்களாக மாற்றுவதில் தான், முழு கவனமும் செலுத்தப் படுகிறது.

    வாரணாசி: 

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வாரணாசில் தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான அகில இந்திய கல்வி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கல்வி மாநாட்டில், தேசிய கல்விக்கொள்கையின் கீழ் அடையாளம் காணப்பட்ட 9 அம்சங்கள் குறித்து குழு விவாதங்கள் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படை அம்சமே, கல்வியை குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளிக்கொண்டு வருவதோடு, 21-ம் நூற்றாண்டுக்கான நவீன சிந்தனைகளுடன் இணைப்பது தான் என்று தெரிவித்தார்.

    பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட கல்வி முறை ஒருபோதும் இந்திய கல்விமுறையாக இருக்க முடியாது என்று பிரதமர் கூறினார். நமது கல்வி முறை இளைஞர்களை பட்டதாரிகளாக மட்டும் உருவாக்காமல், நாடு முன்னோக்கிச் செல்வதற்கு உதவுபவர்களாக இருக்கும் வகையில் உதவ வேண்டும் என்றும், நமது ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்த உறுதிப்பாட்டிற்கு தலைமையேற்க வேண்டும் என பிரதமர் கூறினார்.

    குழந்தைகளை அவர்களது திறமை மற்றும் விருப்பத்திற்கேற்ற திறனுடையவர்களாக மாற்றுவதில் தான், புதிய கல்விக்கொள்கை முழு கவனமும் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார். நமது இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றவர்களாக, நம்பிக்கை உடையவர்களாக, நடைமுறைகளுக்கு உகந்தவர்களாக திகழ்வதற்கான அடித்தளத்தை கல்விக்கொள்கை உருவாக்குகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    ×