என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேங்கர் லாரி விபத்து"

    • நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கச்சா எண்ணை வெளியேறி வருகிறது.
    • ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் கணவாய், கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை போலீஸ் குடியிருப்பு பகுதி அருகே இன்று காலை 6:30 மணிக்கு மேல் புனேவில் இருந்து பெருந்துறைக்கு செந்தில் என்ற டிரைவர் டேங்கர் லாரியில் கச்சா எண்ணை பாராம் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

    அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர்லாரி முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதி வண்டி சாலையில் கவிழ்ந்தது விபத்துக்கு உள்ளானது.

    இதில் டேங்கர் லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கச்சா எண்ணை வெளியேறி வருகிறது. இந்த டேங்கர் லாரியை ஓட்டி வந்த செந்தில்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


    உடனே அந்த வழியாக சென்றவர்கள் தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம்பட்ட செந்தில்குமாரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கவிழ்ந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால், தொப்பூர் கணவாய் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    • இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்தது.
    • உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை, சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட டேங்கர் லாரி, மற்றொரு லாரி மீது மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. எரிவாயு கசிந்து டேங்கர் லாரி வெடித்து சிதறி தீப்பிடித்தது. அத்துடன், அந்த லாரிக்கு அருகில் சென்ற பல வாகனங்கள் தீப்பற்றி ஒன்றுடன் ஒன்று மோதின.

    இந்நிலையில், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 43 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

    விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே, முதல் மந்திரி பஜன்லால் சர்மா, முன்னாள் முதல் மந்திரி அசோக் கெலாட் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இது குறித்து முதல் மந்திரி சர்மாவிடம் விசாரித்து கேட்டறிந்த பிரதமர் மோடி, அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

    • விபத்துக்குள்ளான டேங்கரில் கியாசை பத்திரமாக மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையத்தில் உள்ள பழைய மேம்பாலம் நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கி வருகிறது.

    கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக தான் ரெயில்கள் அனைத்தும் சென்று வரும். ரெயில்கள் எளிதில் சென்று வரும் வகையிலும், வாகனங்கள் அந்த இடத்தை கடந்து செல்லும் வகையிலேயே அந்த மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    மேம்பாலத்தை சுற்றி நாலா புறமும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், ஆலயங்கள் என ஏராளமான உள்ளன. இந்த மேம்பாலத்தை தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு கொச்சியில் இருந்து கோவைக்கு சமையல் கியாஸ் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்தது. 18 டன் சமையல் கியாசை ஏற்றிக்கொண்டு வந்த அந்த லாரி, பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள கியாஸ் சிலிண்டர் பிரித்தனுப்பும் நிலையத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது.

    உக்கடத்தில் இருந்து வந்த டேங்கர் லாரி அவினாசி சாலை மேம்பாலம் வழியாக வந்து மேம்பாலத்தை கடக்க முயன்றது. லாரி மேம்பாலத்தின் மத்தியில் உள்ள ரவுண்டானாவை சுற்றி வந்தது. அப்போது திடீரென லாரியில் ஆக்சில் துண்டாகி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. நிலைதடுமாறிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    லாரியில் கியாஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் டேங்கர் கழன்று தனியாக விழுந்தது. விழுந்த வேகத்தில் சிலிண்டரின் கியாஸ் கசிவு ஏற்பட்டது. லாரியை ஓட்டிய டிரைவர் கீழே குதித்து தப்பினார். இதுபற்றி விவரம் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். கியாஸ் கசிந்து கொண்டே இருந்ததால் பதட்டம் ஏற்பட்டது. சிறு தீக்கங்கு அங்கு விழுந்ததாலோ, சூரிய ஒளி பட்டு விட்டாலோ டேங்கர் வெடித்து பெரும் சேதம் ஏற்படும் அபாயம் நிலவியது.

    இதனால் முதற்கட்டமாக சிலிண்டரில் ஏற்பட்ட கியாஸ் கசிவை நிறுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டன. மாநகராட்சி சார்பில் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டன. கியாஸ் டேங்கரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அதனை குளிர்விக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் ஆகியோர் நேரில் வந்து பணிகளை துரிதப்படுத்தினர். 4 மணி நேர போராட்டத்துக்கு பின் டேங்கர் லாரியில் ஏற்பட்ட கசிவை ஊழியர்கள் நிறுத்தினர்.

    மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மேம்பாலத்துக்குள் பொதுமக்கள் யாரும் வராமல் இருக்க நாலாபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பாலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உஷார்படுத்தப்பட்டனர். 500 மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி அந்த பகுதியில் உள்ள 37 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    இதற்கிடையே விபத்துக்குள்ளான டேங்கரில் கியாசை பத்திரமாக மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக திருச்சியில் இருந்து மீட்பு டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டு உள்ளது. அந்த லாரியில் விபத்துக்குள்ளான டேங்கரில் இருந்து கியாசை நிரப்பி அப்புறப்படுத்த ஏற்பாடுகள் நடந்தது.

    இந்த சம்பவம் கோவையில் இன்று பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தென்காசியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பின் கியாஸ் டேங்கர் மாற்று வாகனத்தில் ஏற்றப்பட்டு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
    • விபத்து தொடர்பாக ராதாகிருஷ்ணன் மீது கோவை மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை:

    கொச்சியில் இருந்து கோவைக்கு சமையல் கியாஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி நேற்று அதிகாலை அவினாசி சாலை ரெயில்வே மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் டேங்கர் தனியாக விழுந்து அதில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை நகரில் பதட்டம் ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக நேற்று அந்த பகுதிகளில் உள்ள 35-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.

    மேம்பாலத்தில் விழுந்த கியாஸ் டேங்கரை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்தது. சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பின் கியாஸ் டேங்கர் மாற்று வாகனத்தில் ஏற்றப்பட்டு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

    விபத்துக்குள்ளான கியாஸ் டேங்கர் லாரியை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிவராமபேட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்திருந்தது தெரியவந்தது. லாரி கவிழ்ந்ததும் அவர் கீழே குதித்து தப்பினார். அவருக்கு சிறு காயம் ஏற்பட்டது.

    விபத்து தொடர்பாக ராதாகிருஷ்ணன் மீது கோவை மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், வேகமாக வாகனத்தை இயக்குதல், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டிரைவர் ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

    வழக்கமாக கேரளாவில் இருந்து கியாஸ் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள் எல் அண்ட் டி புறவழிச்சாலை வழியாக அவினாசி சாலையை சென்றடைந்து, அங்கிருந்து சத்தி சாலையில் உள்ள கணபதிக்கு செல்லும். இந்த சாலை கனரக வாகனங்கள் செல்ல எளிதான பாதையாகும். ஆனால் எரிவாயு டேங்கர் லாரியை இயக்கி வந்த டிரைவர் உக்கடம், மரக்கடை வழியாக அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தை கடக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மண்எண்ணை ஏற்றி சென்ற டேங்கர் லாரி இன்று காலை நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    மேச்சேரி:

    சென்னையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு ஒயிட் மண்எண்ணை ஏற்றிய ஒரு டேங்கர் லாரி நேற்றிரவு புறப்பட்டது.

    இந்த லாரியை கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ராஜா (50) என்பவர் ஓட்டினர். ஒயிட் மண்எண்ணையை வாங்கி செல்லும் எர்ணாகுளம் மாட்டுகுழா பகுதியை சேர்ந்த நாசர் மற்றும் மற்றொரு டிரைவரும் அந்த லாரியில் அமர்ந்து இருந்தனர்.

    இந்த ஒயிட் மண்எண்ணை பெயிண்டில் கலப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த லாரி இன்று காலை 6 மணியளவில் சேலம் மாவட்டம் மேச்சேரி-மேட்டூர் பிரதான சாலையில் பொட்டனேரி குள்ளமுடையானூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது நிலை தடுமாறிய லாரி தாறு மாறாக ஓடியது. பின்னர் சாலையோரமாக கிடந்த கல்லில் ஏறிய லாரி நடு ரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த டிரைவர்கள் உள்பட 3 பேரும் லேசான காயத்துடன் தப்பினர். லாரியில் இருந்த ஒயிட் மண்எண்ணை சாலையில் ஆறாக ஓடியது. மேலும் லாரி கவிழ்ந்த இடத்தின் அருகே பெட்ரோல் பங்கும் இருந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    உடனே அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் தீயணைப்பு நிலையத்திற்கும், மேச்சேரி போலீஸ் நிலையத்திற்கும் அந்த பகுதியினர் தகவல் தெரிவித்தனர். மேட்டூரில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

    உடனே அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் வாகனங்கள் செல்லாத வகையில் சாலையின் இருபக்கமும் கயிறு கட்டி தடை ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால் பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் சுற்றி சென்றன.

    இதற்கிடையே தீ விபத்து ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு டேங்கர் லாரியை தூக்கி நிறுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசாரும் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி அருகே இன்று சாலையோரம் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல்-டீசலை பொதுமக்கள் கேன்களில் பிடித்து சென்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    சென்னை மணலியில் இருந்து 24 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், டீசலுடன் டேங்கர் லாரி ஒன்று மதுரை நோக்கி புறப்பட்டது.

    இந்த லாரியை கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த காளியப்பன் (வயது 29) ஓட்டி வந்தார். அவருடன் கீளினர் ஒருவரும் லாரியில் வந்தார்.

    அந்த டேங்கர் லாரி இன்று காலை 5 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகில் உள்ள செங்குறிச்சி சுங்கசாவடி அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவர் காளியப்பனின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி திடீரென்று தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரியின் இடுபாட்டுக்குள் சிக்கி டிரைவர் காளியப்பன், லாரி கிளீனர் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.

    தலைக்குப்புற கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல், டீசல் வெளியேறி அங்கிருந்த ஓடையில் ஆறு போல் ஓடியது.

    இந்த தகவல் செங்குறிச்சி பகுதியில் காட்டு தீ போல பரவியது. உடனே அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர்.

    டேங்கர் லாரியில் வெளியேறிய பெட்ரோல், டீசலை போட்டி போட்டு அவர்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்கள் மற்றும் கேன்களில் பிடித்து சென்றனர்.

    இந்த விபத்து குறித்து உளுந்தூர் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் லாரியில் டீசல், பெட்ரோல் பிடித்து கொண்டிருந்த பொது மக்கள் அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இடிபாடுக்குள் சிக்கி காயம் அடைந்த லாரி டிரைவர் காளியப்பன் மற்றும் கிளீனரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையிலான தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    விபத்துக்குள்ளான டேங்கர் லாரியிலிருந்து பெட்ரோல், டீசல் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர். கவிழ்ந்து கிடந்த லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கும் பணியில் தீயணைப்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டனர்.

    பெட்ரோல், டீசல் கீழே கொட்டி கிடந்ததால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
    ×