search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிகே சிவகுமார்"

    • பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பெங்களூரு:

    கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கர்நாடக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் கர்நாடக துணை முதல் மந்திரி கே.டி.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் இந்தப் பிரச்சனையை மிக மிக தீவிரமாகப் பார்க்கிறேன். அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

    அனைத்து தொட்டிகளையும் கையகப்படுத்தி அனைத்து நீர் கிடைக்கும் இடங்களையும் கண்டறிந்து வருகிறோம். 217 சுரங்கங்கள் முயற்சி செய்யப்பட்டுள்ளன.

    பெங்களூரு நகரில் 3,000க்கும் மேற்பட்ட போர்வெல்கள் வறண்டுவிட்டன. காவிரியில் இருந்து என்ன தண்ணீர் வருகிறதோ அதுதான் வருகிறது.

    எனது வீட்டில் உள்ள போர்வெல் உள்பட அனைத்து போர்வெல்களும் வறண்டு கிடக்கின்றன என தெரிவித்தார்.

    • பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவினரும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரி டிகே சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக முதல் மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக கோரியது பற்றி கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த சிவகுமார், அவர்கள் ராஜினாமாவை விரும்புகிறார்களா? அவர்கள் கேட்கும் ராஜினாமாவை அவர்கள் விரும்பியபடி அனுப்புவோம். இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வினர் வெறும் அரசியல் செய்து வருகின்றனர். பெங்களூருவின் இமேஜை கெடுக்கின்றனர். அவர்கள் காலத்தில் கர்நாடகாவில் என்ன நடந்தது என்பதை அறிய அவர்கள் கண்ணாடியைப் பார்க்க வேண்டும்.

    அவர்கள் கர்நாடகாவை காயப்படுத்தவில்லை. மாறாக நாட்டையும், தங்களையும் காயப்படுத்துகிறார்கள் என தெரிவித்தார்.

    • தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
    • தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது.

    பெங்களூரு:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரியும், காங்கிரஸ் தலைவர்களின் ஒருவருமான டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என முதல் மந்திரி சந்திரசேகர ராவ் முயற்சி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    இதுதொடர்பாக முதல் மந்திரி தங்களை அணுகியதாக எங்கள் வேட்பாளர்கள் எங்களிடம் கூறியுள்ளனர்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

    • பெங்களூருவில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் கடிதம் வந்தது.
    • காலையில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

    பெங்களுரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 13 பள்ளிகளுக்கு பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் கடிதம் இன்று அதிகாலையில் வந்தது. இதை பார்த்து பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். முன் எச்சரிக்கையாக பள்ளி ஊழியர்கள் அனைவரும் பள்ளியை விட்டு வெளியேறி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

    இந்த தகவல் பள்ளியை சுற்றிலும் உள்ள பகுதிகளில் காட்டுத்தீப்போல் பரவியது. இதனால் பள்ளி குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளி நுழைவு வாயில் முன்பு குவிந்தனர். மேலும் அங்கு பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

    போலீசார் விரைந்து சென்று அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு இருக்கிறதா என வகுப்பறைகள், கழிப்பிடம், சமையல் அறை, பள்ளி விடுதி மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை செய்தனர்.


    சோதனையின்போது ஒவ்வொரு நிமிடமும் திக், திக் என இருந்தது. காலையில் தொடங்கிய இந்த சோதனை வெகுநேரம் நடைபெற்றது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் போலீசார், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் நிம்மதி அடைத்தனர்.

    மின்னஞ்சல் அனுப்பி மர்ம நபர் புரளியைக் கிளப்பி இருப்பது தெரியவந்தது. இந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் ஐ.டி.யை கம்ப்யூட்டரில் இருந்து கைப்பற்றி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியது யார்? என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். பள்ளிக்கூடம் ஒன்று எனது வீட்டிற்கு எதிரே உள்ளது, இதை ஆய்வுசெய்ய இங்கு வந்தேன். இது சில மர்ம நபர்களின் போலி அழைப்பு போல் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர் என குறிப்பிட்டார்.

    • 2017-ல் டிகே சிவகுமாருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை.
    • அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்த தொடங்கியது.

    கர்நாடக மாநிலத்தில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார். கர்நாடகாவில் கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சி நடைபெற்றபோது, டி.கே. சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் வரிமான வரிச்சோதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.

    இதனடிப்படையில் டி.கே. சிவக்குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. கர்நாடக அரசிடம் அனுமதி கேட்டது. அப்போதைய பா.ஜனதா அரசு அனுமதி அளித்தது.

    இதனை எதிர்த்து டி.கே. சிவக்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது டி.கே. சிவக்குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் மேல்முறையீடு செய்துள்ளார்.

    இந்த நிலையில், கர்நாடக மாநில மந்திரிசபை கூட்டத்தில், டி.கே. சிவகுமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என செய்தி வெளியானது.

    இந்த நிலையில் மந்திரிசபை முடிவு குறித்து டி.கே. சிவகுமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு டி.கே. சிவகுமார் பதில் அளிக்கையில் "நான் செய்தித்தாளில்தான் இந்த தகவலை படித்து தெரிந்து கொண்டேன். மந்திசபை கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. யார் பேச வேண்டுமோ, அவர்கள் பேசுவார்கள்.

    நான் இரண்டு நாட்கள் தெலுங்கானாவில் பிரசாரம் செய்கிறேன். கட்சி கேட்டுக்கொண்டால் அதை நீட்டித்துக் கொள்வேன்" என்றார்.

    • ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள குறைபாட்டை காங்கிரஸ் கவனிக்கவில்லை- குமாரசாமி.
    • வாக்குறுதிகளுக்கும் குமாரசாமிக்கும் இடையே உள்ள தொடர்பை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்- டி.கே. சிவகுமார்.

    கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை அளித்து, தொடங்கி வைத்தது.

    இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி, "அருகில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. கர்நாடகாவில் முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள குறைபாடுகளை அவர்கள் கவனிக்கவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    அதற்கு துணை முதல்வர் சிவகுமார் "குமாரசாமிக்கும் ஐந்து வாக்குறுதிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு மதர்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் "டுப்ளிகேட் துணை முதல்வர் (Duplicate Chief Minister) மிகவும் கோபப்படுகிறார். அதிகமான கோபம் உடல் நலத்திற்கு மோசமானது. இந்த எச்சரிக்கையை அவர் நினைவில் வைத்துக் கொண்டால், நல்லது. குமாரசாமிக்கும் உத்தரவாதங்களுக்கும் எப்படி சம்பந்தம் இருக்கிறது என்று ஞான முத்துக்களை வழங்கியுள்ளார். பித்தம் தலைக்கேறி, மூளை செயலிழக்கும்போது, ஒருவர் இப்படி பேசுகிறார்" பதிலடி கொடுக்கப்பட்டது.

    குமாரசாமி கூறுகையில் "இது கர்நாடகா. கர்நாடகா என்பது டி.கே. சிவகுமார் குடியரசு அல்ல. ஜனநாயகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளன. கேள்விகள் கேட்பதற்காக மக்கள் எனக்கு எதிர்க்கட்சி பதவியை கொடுத்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜே.டி.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் உள்ளனர்.
    • அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வர உள்ளதாக சில காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமாரும் உள்ளனர்.

    இந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெறும் 76 இடங்களில் மட்டுமே வென்றது. அத்துடன், முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியின் ஜே.டி.எஸ். கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்றவர்கள் 4 இடங்களில் வென்றனர்.

    இதற்கிடையே துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும், குமாரசாமிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஜே.டி.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் உள்ளனர். விரைவில் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வர உள்ளதாக சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியும், ஜே.டி.எஸ். கட்சி தலைவருமான குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஜே.டிஎஸ். கட்சி எம்.எல்.ஏ.க்கள் வருவதாக தெரிவித்துள்ளனரா? அதுபற்றி கருத்து என கேள்வி எழுப்பியதற்கு, அவர் ஆவேசமாக கூறியதாவது:

    கர்நாடகாவில் பா.ஜ.க.வுடன் தொடர்பில் 50 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் உள்ளனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும்.

    தேவகவுடா எங்களுடன் வந்துவிடுங்கள். உங்களை அமைச்சராக்குகிறோம். உங்களின் மகனுக்கு நல்ல பதவி வழங்குகிறோம் என காங்கிரஸ் கட்சியினர் தினமும் எங்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

    துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்றால் எனது கட்சியின் 19 எம்.எல்.ஏ.க்களும் அவருக்கே ஆதரவு அளித்துவிட்டு போகிறோம். இதை விட்டுவிட்டு 10 பேர் வருகிறார்கள், 5 பேர் வருகிறார்கள், பேச்சுவார்த்தை நடந்துவிட்டது. தயாராக இருக்கின்றனர் என சொல்லிக்கொண்டே இருக்கவேண்டாம்.

    காங்கிரஸ் கட்சியில் தற்போது 135 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களின் தொகுதிக்கே வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலையில் இந்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிக்கு எப்படி பணம் கொடுப்பார்கள்? என தெரிவித்தார்.

    • கர்நாடகத்தில் கடுமையான வறட்சி காணப்படுகிறது.
    • மேகதாது அணைத் திட்டம் தொடர்பாகவும் முன்மொழிவு தயார் செய்திருக்கிறோம்

    பெங்களூரு:

    கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த முடியாது என்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். இதுதொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளோம்.

    மேகதாது அணைத் திட்டம் தொடர்பாகவும் முன்மொழிவு தயார் செய்திருக்கிறோம். மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் மாநில அரசு தீவிரமாக உள்ளது. அதற்குத் தேவையான எல்லா வகையான சட்ட நடவடிக்கைகளையும் தயார் செய்துள்ளோம்.

    கர்நாடகத்தில் கடுமையான வறட்சி காணப்படுகிறது. போதுமான தண்ணீர் கிடைக்கும் வரை புதிதாக எந்த பயிரையும் விளைவிக்க வேண்டாம் என்று வேளாண்மை துறையை கேட்டுக் கொண்டுள்ளோம்.

    அடுத்த மாதத்தில் சிறிது மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கிறோம். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது கர்நாடகாவுக்கு மிகப் பெரிய வலியான விசயம்.
    • நாங்கள் தமிழக விவசாயிகளை மதிக்கிறோம். அவர்களுக்கு தண்ணீர் தரக்கூடாது என நாங்கள் எண்ணவில்லை.

    புதுடெல்லி:

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீர் தங்கள் மாநிலத்தின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கு மட்டுமே உள்ளது என்றும், எனவே தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்றும் அந்த மாநில அரசு கூறி வருகிறது.

    தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க நேற்று முன்தினம் முதல் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா காவிரியில் திறந்து விட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    கர்நாடக அணைகளில் தற்போது உள்ள நீரை உரிய முறையில் பங்கீடு செய்ய வேண்டும். அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் 24 ஆயிரம் கன அடி நீர்திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இந்நிலையில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது கர்நாடகாவுக்கு மிகப் பெரிய வலியான விசயம். ஏனெனில், எங்கள் மாநிலத்தில் தண்ணீர் இல்லை. மழையும் இல்லை. இது குறித்து கர்நாடகா தரப்பில் ஆஜராக உள்ள வழக்கறிஞர் சுப்ரீம்கோர்ட்டில் தெரிவிப்பார். கர்நாடக விவசாயிகளின் உணர்வுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு மதிப்பளிக்கும் என்று நம்புகிறேன்.

    நாங்கள் தமிழக விவசாயிகளை மதிக்கிறோம். அவர்களுக்கு தண்ணீர் தரக்கூடாது என நாங்கள் எண்ணவில்லை. தண்ணீர் இருந்திருந்தால், நாங்கள் வழங்குவோம். கர்நாடகாவில் தண்ணீர் இல்லை. தற்போது வறட்சி நிலவுகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு. மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகாவுக்காக அல்ல, தமிழகத்துக்கு உதவுவதற்காகத்தான்.

    மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை மதிப்பிடுவதற்கு, நீர்த்தேக்கங்களைப் பார்வையிடுமாறு அதிகாரிகளை நாங்கள் அழைத்துள்ளோம். ஆணையம் எங்கள் கோரிக்கையை மதித்து, மாநிலம் மற்றும் அதன் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    எங்கள் மாநில விவசாயிகளின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். காவிரி மேலாண்மை வாரிய உத்தரவு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது குறித்து எங்களது சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து அடுத்த கட்ட முடிவை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    • வருகிற புதன்கிழமை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை உரிய வாதங்களுடன் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

    பெங்களூரு:

    காவிரி டெல்டா பாசனத்துக்காக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம், 38 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு திறக்கும்படி, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.

    இதற்கு கர்நாடக அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    இந்த நிலையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கர்நாடக மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றியும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதற்காக கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் மந்திரி சபை கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். அவரிடம் தமிழக அரசின் மனுவுக்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி கர்நாடக அணைகளின் நிலவரம் உள்ளிட்டவை குறித்து நாளை(திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளது. இதனிடையே காவிரி நீர் பிரச்சினை, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்துள்ளார்.

    இந்த கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று அறிவித்தார். கூட்டத்தில் மூத்த எம்.பி.க்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

    • மழை குறைவாக பெய்துள்ளதால் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • மத்தியில் உறுதியான அரசு இருந்தும், மகதாயி, கிருஷ்ணா நதிநீர் விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் கோர்ட்டு, சட்டம், அரசியல் சாசனத்தை நாம் மதிக்க வேண்டும். இதற்கு முன்பு இருந்த அரசுகளும் கோர்ட்டு உத்தரவை மதித்து தண்ணீரை திறந்து விட்டுள்ளன. ஆனால் நமது விவசாயிகளின் நலனை காப்பது எங்கள் மீது உள்ள மிகப்பெரிய பொறுப்பு. தண்ணீர் திறந்து விட்டுள்ளதை கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    இது சகஜம் தான். இத்தகைய நேரத்தில் அரசு சமநிலையில் செயல்பட வேண்டியுள்ளது. கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கவில்லை. கோர்ட்டு உத்தரவை மதித்து தண்ணீர் திறந்துள்ளோம். அதே போல் கர்நாடக விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

    மழை குறைவாக பெய்துள்ளதால் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் அந்த ஆணையத்திடம் கேட்டுள்ளோம். இதற்கு முன்பு இத்தகைய நெருக்கடியான நேரத்தில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் எவ்வளவு நீரை திறந்துவிட்டது என்பது குறித்த புள்ளி விவரங்களை எங்களால் வழங்க முடியும்.

    ஆனால் இதில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. காவிரி, மகதாயி, கிருஷ்ணா விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளோம். மத்தியில் உறுதியான அரசு இருந்தும், மகதாயி, கிருஷ்ணா நதிநீர் விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை. இதுகுறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது.
    • தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    பெங்களூரு:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. ஆனாலும் அங்குள்ள அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. மேலும் இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    இதற்கிடையே கர்நாடக மாநில துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவகுமார், எங்களிடம் நீர் இருப்பு இல்லாததால் தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்று கூறினார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையமும் 10ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 108.86 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 219 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதேபோல் 84 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டமும் 78.70 அடியாக உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 18ஆயிரத்து 145 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.

    தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பெங்களூருவில் உள்ள முதல்-அமைச்சரின் இல்லமான கிருஷ்ணாவில் முதல்-அமைச்சர் சித்தராமையா, துணை முதல் அமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான சிவகுமார் ஆகியோர் மைசூரு, மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மைசூரு, மண்டியா மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரை உடனடியாக நிறுத்திவிட்டு கர்நாடக விவசாயிகளுக்கு முடிந்த அளவு தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இந்த கூட்டம் முடிந்ததும் துணை முதல்அமைச்சர் டி.கே.சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்குமேல் எங்களிடம் போதிய நீர் ஆதாரம் இல்லாத காரணத்தால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் தண்ணீர் வெளியேற்றத்தை நிறுத்தக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்திடம் உரிய மனுதாக்கல் விரைவில் செய்யப்படும்.

    மேலும் தண்ணீர் திறப்பின் கட்டுப்பாடு தற்பொழுது வரை மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது. அதை புரிந்து கொள்ளாமல் கர்நாடக மாநில பா.ஜ.க. மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் காங்கிரஸ் அரசு தண்ணீர் வெளியேற்றி வருவதாக குற்றம் சாட்டி அரசியல் செய்து வருகின்றனர்.

    வறட்சி காலத்தில் தற்போது போல் பா.ஜ.க. அரசு காலத்தில் தமிழகத்திற்கு ஆணைய உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு குறித்து கடந்த கால குறிப்புகள் எங்களிடம் உள்ளது. அதை தக்கசமயத்தில் வெளியிட்டு இந்த பிரச்சினையில் அரசியல் செய்துவரும் எதிர்கட்சியினருக்கு தக்க பாடம் புகட்டப்படும்.

    மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என வலியுறுத்தி வரும் எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று விரைவில் கர்நாடக மாநில அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறும்.

    மழை இல்லாததால் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனால் முதலில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டோம். ஆனால் அவர்களை திருப்திப்படுத்த முடியவில்லை. விவசாய தேவைகளை விட குடிநீர் தேவைக்காக தண்ணீரை வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம். இந்த சூழலில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் பொம்மை அரசுக்கு கடிதம் எழுதினார். இதற்கு முன் அவரது ஆட்சிக் காலத்திலும், தமிழகத்திற்கு நெருக்கடியான காலங்களில் தண்ணீர் வழங்கப்பட்டது. தேவகவுடா பிரதமராக இருந்தபோதும் தண்ணீர் விடப்பட்டது. பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோதும் தண்ணீர் திறக்கப்பட்டது. இது பற்றிய பதிவுகள் உள்ளன. இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×