search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல் கியாஸ்"

    • தஞ்சாவூரில் உள்ள கியாஸ் சிலிண்டர் நிரப்பும் யூனிட்டில் முதலில் பிரச்சனை ஏற்பட்டது.
    • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கோவை பீளமேடு, தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது.

    சென்னை:

    நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகத்தில் மத்திய அரசின் ஐ.ஓ.சி. பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. மற்ற 2 நிறுவனங்களை விட ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு தான் அதிகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக பிரச்சனை நிகழ்ந்து வந்தது.

    லாரிகளில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு லாரி உரிமையாளர்களிடம் வலியுறுத்தினார்கள். இதையடுத்து கியாஸ் லாரி உரிமையாளர்கள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திடம் வாடகை, கூலி போன்றவற்றை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்தனர். கடந்த 5 ஆண்டுகளாக லாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை உயர்த்தி தரமால் இழுத்தடித்து வந்ததால் உரிமையாளர்கள் கடந்த 16-ந்தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூரில் உள்ள கியாஸ் சிலிண்டர் நிரப்பும் யூனிட்டில் முதலில் இந்த பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கோவை பீளமேடு, தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது.

    இதனால் இந்த 5 இடங்களில் இருந்து பாரத் சமையல் கியாஸ் சிலிண்டர்களை லாரிகள் வினியோகஸ்தர்களுக்கு கொண்டு செல்லவில்லை. தொழிற்சாலையில் சிலிண்டர்கள் தேங்கி கிடக்கிறது.

    சொந்தமாக லாரிகள் வைத்துள்ள கியாஸ் ஏஜென்சிகள் மட்டுமே சிலிண்டர்களை தொழிற்சாலையில் இருந்து ஏற்றி்ச் செல்கிறது. பெரும்பாலானவர்கள் ஒப்பந்த லாரிகள் மூலமே சிலிண்டர்களை பெறுவதால் வினியோகஸ்தர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் பாரத் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. வேலை நிரந்தரம் முடிவுக்கு வராவிட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சமையல் கியாஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் கியாஸ் தொழிலாளர்கள் யூனியன் பொதுச்செயலாளர் விஜயன் கூறியதாவது:-

    சிலிண்டர்களை கொண்டு செல்லும் லாரிகளுக்கு வாடகை மற்றும் கூலி போன்றவை நிர்ணயித்து பல ஆண்டுகள் ஆகிறது. அதனை உயர்த்தி தர வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடக்கிறது. பி.பி.சி. நிறுவனம் வாடகையை உயர்த்தி தர மறுக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு பிளாண்ட்டிலும் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் சிலிண்டர்களை ஏற்றாமல் நிற்கின்றன.இதன் காரணமாக சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2021-ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி லக்ஷ்மிர் பந்தர் என்ற திட்டத்தை கொண்டு வந்தது.
    • இந்த திட்டத்தின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறோம்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜி "2021-ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி லக்ஷ்மிர் பந்தர் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறோம். இந்த திட்டத்தை காப்பியடித்து பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அந்த கட்சி திட்டத்தை செயல்படுத்துகிறது.

    இந்த பட்ஜெட்டில் பொதுப்பிரிவைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவில் பின்தங்கிய பெண்களுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மத்திய அரசு சமையல் சிலிண்டர் ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டால், நாங்கள் மேற்கு வங்காளத்தில் நிறுத்தியுள்ள 42 வேட்பாளர்களையும் திரும்பப் பெறுகிறோம் என்பதை உறுதியாக கூறிகிறேன்.

    நாங்கள் என்ன வாக்குறுதி அளித்தோமோ, அதை செய்துள்ளோம். பிரதமர் மோடி ஒவ்வொரு மக்களின் வங்கி கணக்கில் 14 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்றார். ஆனால், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மம்தா பானர்ஜியின் வாக்குறுதியுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள். இது ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட பெண்களையும் சென்றடைகிறது.

    • மனமுடைந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார்.
    • பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு போலீஸ் நிலையத்துக்குட்பட்டது நாகொண்டன ஹள்ளி. இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 37 வயதான ஒரு இளம் பெண் தனது கணவர் மற்றும் 5 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அவருக்கும் அவரது கணவரின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து மனமுடைந்த அந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நீண்ட நேரம் கதவைதட்டியும் அந்த இளம்பெண் கதவை திறக்கவில்லை.

    உடனடியாக குடும்பத்தி னர் ஒயிட் பீல்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினரும் அந்த பெண்ணை கதவை திறக்க சொன்னார்கள். ஆனால் அவர் திறக்க மறுத்தார்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கட்டையால் கதவை உடைத்து அறைக்குள் சென்று தீப்பெட்டியுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணையும் 5 வயது குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் கியாஸ் கசிவையும் சரி செய்தனர். இது குறித்து பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது.
    • கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    சேலம்:

    பெண்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு ஆண்டும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே சென்று கடந்த மார்ச் மாதம் 1118 ரூபாய் 50 காசாக உயர்ந்தது.

    2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை முதல் முறையாக ரூ. ஆயிரத்தை தாண்டியது.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1068.50 ஆக இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்தது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை மேலும் உயர்ந்து ரூ.1118.50 ஆனது.

    கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படி சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ஏறிக் கொண்டே சென்றதால் குடும்ப தலைவிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    இந்த சிலிண்டர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதித்தது. தங்களது மாத வருவாயில் குறிப்பிட்ட தொகைைய கியாஸ் சிலிண்டருக்கே ஒதுக்க வேண்டியுள்ளது என்று கூறி அவர்கள் வேதனைப்பட்டு வந்தனர்.

    இப்படி சிலிண்டர் விலை தாறுமாறாக ஏறி இருந்ததால் கிராமப்புறங்களில் பலர் விறகு அடுப்புகளுக்கும் மாறினார்கள். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை வெகுவாக குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. சிலிண்டர் விலை குறையுமா? என இல்லத்தரசிகளும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் சேலத்தில் ரூ.1190 ஆக இருந்த கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.990 ஆக குறைந்திருக்கிறது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர் விலை 1000-க்கும் கீழ் குறைந்திருக்கிறது.

    இந்த விலை குறைப்பு இன்று முதல் (புதன்கிழமை)அமலுக்கு வந்துள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பெண்கள் பலர் சிலிண்டர் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக பெண்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு:-

    சேலம் புதுரோடு பகுதியை சேர்ந்த குடும்ப தலைவி கவுசல்யா (25): மின்சாரம், காய்கறிகள் மற்றும் அத்தியா வசிய பொருட்கள் விலை உயர்ந்தி ருக்கும் நிலையில் கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை வரவேற்கிறோம்.

    சேலத்தை சேர்ந்த வங்கி ஊழியர் கலைமதி (30): அரசு இலவசமாக எந்த பொருளையும் தர வேண்டாம். விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும். அந்த வகையில் கியாஸ் விலையில் ரூ.200 குறைத் துள்ளது வரவேற்கதக்கது. இதேபோல் காய்கறி உள்ளிட்டவற்றின் விலையை யும் கட்டுப் படுத்த வேண்டும்.

    அம்மாபேட்டையை சேர்ந்த பெரியநாயகி (40): ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளனர். குழந்தை களை படிக்க வைக்கவே சிரமப்பட்டு வருகிறோம். கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது ஒவ்வொரு மாதமும் பெரும் சுமையாகவே இருந்தது. தற்போது இந்த விலை குறைப்பு வரவேற்கத்தக்கது தான். மேலும் ரூ.200 குறைத்தால் நன்றாக இருக்கும்.

    மத்திய அரசு எந்த இலவசமும் கொடுக்காமல் பொதுமக்கள் வாழ்க்கை தரம் உயர நல்ல திட்டங்களை கொண்டு வந்து நாட்டு மக்கள் வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும்.

    • டீக்கடை, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு வணிக பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் விலை 2 மாதமாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.
    • வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் பெரும்பாலும் ஓட்டல், டீக்கடைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

    சென்னை:

    பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப விலை மாற்றம் செய்யப்படுகிறது.

    கடந்த 3 மாதமாக சமையல் கியாஸ் விலையில் மாற்றம் இல்லை. தொடர்ந்து ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 கிலோ சமையல் சிலிண்டர் விலை ரூ.1118.50-க்கு விற்கப்படுகிறது. ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்துகின்ற சமையல் சிலிண்டருக்கு ரூ.1200 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

    கடந்த மாதங்களில் பிற மாநிலங்களில் நடந்த தேர்தல் மற்றும் விரைவில் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல் காரணமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஒரே அளவில் உள்ளது.

    ஆனால் டீக்கடை, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு வணிக பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் விலை 2 மாதமாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

    கடந்த மாதம் ரூ.1937-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.1945 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் பெரும்பாலும் ஓட்டல், டீக்கடைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

    சிறு, சிறு தொழில் செய்வோர், சாலையோரம் கடை நடத்துபவர்கள் வணிக சிலிண்டர் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று உயர்ந்து இருப்பது பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தொழில் செய்வோர் கருதுகிறார்கள்.

    • இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக எடை குறைந்த அழகிய வடிவிலான புதிய 'காம் போசிட்' சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது.
    • சிலிண்டர், வாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு இன்டேன் என்ற பெயரில் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகிறது. வீடுகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும், வர்த்தக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்தநிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக எடை குறைந்த அழகிய வடிவிலான புதிய 'காம்போசிட்' சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த சிலிண்டர் பாலிமர் பைபர் கிளாஸ், அதிக அடர்த்தி வாய்ந்த பாலி எத்திலின் தெர்மோ பிளாஸ்டிக்காலான வெளிப்புற ஜாக்கெட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் உறுதித்தன்மை கொண்ட இந்த சிலிண்டர், வாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், தற்போது பயன்பாட்டில் உள்ள இரும்பிலான உருளையை ஒப்பிடுகையில் இந்த சிலிண்டர் 50 சதவீதம் எடை குறைவானது. எனவே, பெண்களே இந்த சிலிண்டரை எளிதாக கையாள முடியும். அத்துடன், இந்த சிலிண்டர் துருப்பிடிக்காது. இப்புதிய சிலிண்டரை பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.3,500 பாதுகாப்பு வைப்புத்தொகையாக (செக்யூரிட்டி டெபாசிட்) செலுத்த வேண்டும்.

    பழைய வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய காப்புத்தொகையுடன், புதிய பாதுகாப்பு வைப்புத் தொகையுடன் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ அத்தொகையை செலுத்தினால் போது மானது.

    மேலும், புதிய சிலிண்டர்களை பெற முன்பதிவு செய்ய 8655677255 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்கலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாளில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது.
    • புதிய சிலிண்டர்கள் கிடைத்த பிறகு சிலிண்டரை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாளில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சென்னையில் சில இடங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிய சிலிண்டர்கள் உடனே வராததால் பொது மக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    திருவான்மியூர் பகுதியில் வழக்கமாக முன்பதிவு செய்த 3 நாட்களுக்குள் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு விடும். ஆனால் அங்கு முன்பதிவு செய்த 8 நாட்களுக்கு பிறகே சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. சில வாடிக்கையாளர்கள் கியாஸ் அலுவலகங்களுக்கே சென்று காலி சிலிண்டர்களை கொடுத்து புதிய சிலிண்டர் கேட்கிறார்கள்.

    பல வாடிக்கையாளர்கள் 2 சிலிண்டர் வைத்திருந்தாலும் கடைசி நேரத்திலேயே முன்பதிவு செய்து சிலிண்டர் கிடைக்காமல் திணறுகிறார்கள். கொரோனா தொற்று ஊரடங்கின்போது கூட சிலிண்டர் தாமதமின்றி கிடைத்தது. தற்போது சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன ஆலையில் ஒரு சிலிண்டரின் அடிப்பகுதி வெடித்ததால் விபத்து ஏற்பட்டது. எனவே பழைய மற்றும் துருப்பிடித்த சிலிண்டர்கள் அகற்ற நிறுவனம் முடிவு செய்தது. பழைய சிலிண்டர்களை அகற்றிய நிலையில் அதற்கு பதிலாக புதிய சிலிண்டர்கள் போதுமான அளவில் வரவில்லை. இதன் காரணமாகவே கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

    சென்னையில் தற்போது முன்பதிவு செய்து 5 நாட்களுக்கு பிறகும், மற்ற இடங்களில் 3 நாட்களுக்கு பிறகும் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. புதிய சிலிண்டர்கள் கிடைத்த பிறகு சிலிண்டரை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமையல் கியாஸ் சிலிண்டரை வீடுகளுக்கு டெலிவரி செய்வதோடு ரூ.1100 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.
    • சிலிண்டர் விலை உயர்வுதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    வீட்டிற்கு தேவையான சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனையில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. சமையல் கியாஸ் விலையை ஒவ்வொரு மாதமும் எண்ணை நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

    கடந்த 2 மாதமாக சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    தற்போது 14 கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர் விலை ரூ.1,068.50 விற்கப்படுகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான மத்திய அரசு மானியம் வெறும் 24 ரூபாய் மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    சமையல் கியாஸ் சிலிண்டரை வீடுகளுக்கு டெலிவரி செய்வதோடு ரூ.1100 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இந்த மாதம் சமையல் கியாஸ் சிலிண்டர் புக்கிங் குறைந்துள்ளதாக வினியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மாதங்களைவிட இந்த மாதம் 5 சதவீதம் வரை புக்கிங் குறைந்துள்ளது. இதற்கு சிலிண்டர் விலை உயர்வுதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் சிலர் கூறியதாவது:-

    வழக்கமாக புக்கிங் ஆகும் சிலிண்டர் அளவைவிட இந்த மாதம் குறைவாக பதிவாகி உள்ளது. நிதியாண்டு நிறைவடையும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் வழக்கமாக சிலிண்டர் புக்கிங் குறையும். ஆனால் பிப்ரவரி மாதம் புக்கிங் கணிசமான அளவு குறைந்துள்ளது.

    கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இந்த மாதத்தில் 5 சதவீதம் சிலிண்டர் புக்கிங் குறைந்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கூலி வேலை செய்தவர்கள் சிலர் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். கொரோனா பாதிப்பு காலத்தில் சென்றவர்கள் இன்னும் வரவில்லை. அவர்கள் சிலிண்டரையும் சரண்டர் செய்யவில்லை.

    வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் மட்டும்தான் பெற முடியும் என்பதால் அந்த இலக்கை அடைந்தவர்களும் பெற முடியாத நிலை உள்ளது. அதனாலும் சிலிண்டர் முன்பதிவாகவில்லை. கூடுதலாக சிலிண்டர் தேவைப்படுவோர் கடிதம் கொடுத்து பெறவேண்டும். அதற்கு எண்ணை நிறுவனங்களிடம் அனுமதி பெற்ற பிறகு தான் சிலிண்டர் வழங்க முடியும்.

    மேலும் தற்போது பொதுத்தேர்வு தொடங்குவதால் பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துவதாலும் புக்கிங் செய்த ஓரிரு நாட்களில் சிலிண்டர் சப்ளை செய்யப்படுவதால் கடைசி நேரத்தில் தான் புக்கிங் செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நாகை மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • மணலி புதுநகர், விச்சூர் பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இறக்குமதி செலவை குறைப்பதற்காகவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில், திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறை முகத்தில் எல்.என்.ஜி. எனப்படும் திரவ நிலை எரிவாயு முனையத்தை அமைத்து உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் திரவ நிலையில் எரிவாயு இந்த முனையத்துக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குழாய் வழித்தடம் மூலம் எரிவாயு எடுத்து செல்வதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வழியாக குழாய் வழித்தடம் அமைந்துள்ளது.

    இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மணலியில் விச்சூர், மணலி புதுநகர் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்வதற்காக குழாய் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகம் செய்யும் திட்டம், நாகை மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகர், விச்சூர் பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீட்டர் மூலமாக எரிவாயு பயன்பாடு கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு வசூலிக்கப்படும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,200-க்குள் இருந்தால்தான் உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியும்.
    • அதிகளவில் ஏற்றி விட்டு சிறிதளவு குறைப்பதால் எந்த பயனும் இல்லை என்று ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கின்றன.

    அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான கியாஸ் விலை குறித்த அறிவிப்பு இன்று காலையில் வெளியானது. வர்த்தக சிலிண்டர் விலை ரூ.115.50 குறைக்கப்பட்டது. 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,859.50-ல் இருந்து ரூ.1,744 ஆக குறைந்துள்ளது.

    கடந்த மாதமும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.25.50 குறைக்கப்பட்டது. ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை குறந்த போதிலும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.

    சென்னையில் சமையல் சிலிண்டர் விலை ரூ.1,068.50-ஆக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது. வர்த்தக சிலிண்டர் விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து விலை குறைந்து வருவதால் ஓட்டல் தொழிலில் ஈடுபடுவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,200-க்குள் இருந்தால்தான் உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியும். அதிகளவில் ஏற்றி விட்டு சிறிதளவு குறைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

    • சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • கியாஸ் சிலிண்டர் மானியம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

    ஆந்திரா:

    சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டில் 13 லட்சம் குடும்பத்தினர் ஒரு முறை கூட புதிதாக கியாஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிக்கவில்லை.

    கடந்த 3 ஆண்டுகளில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ஒரே குடும்பத்தில் பல இணைப்புகளை வைத்திருப்பது, குடும்பங்களின் இடம்பெயர்வு காரணமாக புதியதாக கியாஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிக்காமல் உள்ளனர்.

    ஐதராபாத்தில் கடந்த 2014-ம் ஆண்டு கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு மேல் இருந்தது. தற்போது 1,105-க்கு மேல் வினியோகம் செய்யப்படுகிறது.

    ஆந்திரா தெலுங்கானாவில் சமையல் கியாஸ் விலை உயர்வால் விறகுக்கான தேவை அதிகரித்துள்ளது. நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் பெரும்பாலும் மீண்டும் விறகு அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இதுகுறித்து சமையல் கியாஸ் விநியோகஸ்தர்கள் கூறுகையில்:-

    ஆந்திராவில் கொரோனா தொற்று காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் ஏழைகள் அடிக்கடி கியாஸ் வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

    கியாஸ் சிலிண்டர் மானியம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களின் மீது இரட்டை அடியை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் 6.5 லட்சம் மற்றும் ஆந்திராவில் 6.2 லட்சம் இணைப்புகளுக்கு புதிய சிலிண்டர் பெற விண்ணப்பிக்கவில்லை.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தீபம் திட்டம் மற்றும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் கியாஸ் பெற்ற கிராமப்புற மக்கள் ஒரு முறை கூட மீண்டும் சமையல் கியாஸ் பெற விண்ணப்பிக்கவில்லை.

    அவர்களால் 1100-க்கு மேல் பணம் செலுத்தி சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியாது. இதனால் மாற்று எரிபொருளை பயன்படுத்துகின்றனர்.

    உணவு பழக்க வழக்கம் வேலைவாய்ப்பு மற்றும் மற்ற எரி பொருட்கள் எளிதில் கிடைப்பதாலும் சமையல் கியாஸை புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். கியாஸ் பயன்பாட்டை விட்டுவிட்டு மற்ற எரிபொருட்களை அதிகளவில் பயன்படுத்துவது சுற்று சூழலுக்கு நல்ல அறிகுறி அல்ல என என்றனர்.

    ×