search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிகும்பேஸ்வரர் கோவில்"

    • தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார்.
    • பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மாசிமக தீர்த்தவாரி தலங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் யானை ஒன்று உள்ளது. இந்த யானைக்கு மங்களம் என பெயர் சூட்டி உள்ளனர். இந்த யானை கடந்த 1982-ம் ஆண்டு காஞ்சி மகா பெரியவரால் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த யானைக்கு 58 வயதாகிறது.

    வயது அதிகமாவதை போல யானையின் சுட்டித்தனமும் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் யானை மங்களத்துக்கு சளி தொந்தரவு உள்ளது. இதனால் யானை தமிழக அரசின் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு செல்வதில்லை. சிறப்பு புத்துணர்வு முகாமில் வழங்கப்படும் உணவு, மூலிகை மருந்துகள், உடற்பயிற்சிகள் கோவில் வளாகத்திலேயே யானைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    வெயில் சுட்டெரித்து வருவதால், பாகன் அசோக்குமார் தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார். அதன்படி, வழக்கம்போல் யானை மங்களம் குளியல் தொட்டிக்கு அழைத்து வரப்பட்டது. தொட்டியில் இறங்கிய யானை மங்களம் சுமார் ஒரு மணிநேரம், துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சியும், இதனை வேடிக்கை பார்த்த பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது.

    கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    மேலும், சிலர் இதனை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • 2009-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி குடமுழுக்கு நடந்தது.
    • இன்று முதல் கால யாக சாலை பூஜை நடக்கிறது.

    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகை அம்பாளுடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்தக்கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி குடமுழுக்கு நடந்தது.

    இந்தநிலையில் மீண்டும் கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக அரசு மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் ரூ.8 கோடியில் திருப்பணி தொடங்க முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பாலாலய சிறப்பு யாகம் நடந்தது.

    இன்று(சனிக்கிழமை) முதல் கால யாக சாலை பூஜைகளும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. வருகிற 27-ந்தேதி 4-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சு.சாந்தா, செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் மகாமக விழா உலக அளவில் பிரசித்திப்பெற்றதாகும்.

    இந்த கோவிலில் மந்திர பீடேஸ்வரி என்கிற மங்களாம்பிகை அம்பாளுடன் ஆதி கும்பேஸ்வர சாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழமையான இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கோவில் விமான பாலாலய விழா வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு 24-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யா யாகவாசனம், கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து 25-ந் தேதி கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    26-ந் தேதி 3-ம் கால யாகசாலை பூஜைகளும், 27-ந் தேதி நான்காம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விமான பாலாலய விழா குழுவினர் மற்றும் மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் மங்களநாயகிக்கு, ‘மந்திரபீட நலத்தாள்’ என்ற திருநாமம் உண்டு.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் மங்களநாயகிக்கு, ‘மந்திரபீட நலத்தாள்’ என்ற திருநாமம் உண்டு.

    சம்பந்தர் இந்த அன்னையை ‘வளர்மங்கை’ என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார்.

    அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக ‘மந்திரபீடேஸ்வரி’ என்ற திருநாமமும் பெறுகிறாள். அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானதாக கருதப்படுகிறது.

    மங்களாம்பிகைக்கு செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    ×