என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Government"

    • தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி உள்ளது.
    • தி.மு.க. ஆட்சி அமைந்த 4.5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.

    திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் 'உங்க கனவ சொல்லுங்க' எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:

    * முறியடிக்க முடியாத சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பது தான் எனது பாலிசி.

    * மக்களின் தேவைகளை உணர்ந்து பல நல்ல திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம்.

    * இன்று தொடங்கி அடுத்த 30 நாட்கள் தன்னார்வலர்கள் குழு மக்களை நேரடியாக சந்திக்க உள்ளது.

    * மத்திய அரசு நிதி வழங்காத போதும் தி.மு.க அரசு அளித்த வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    * தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி உள்ளது.

    * உங்கள் வீடு தேடி வரும் தன்னார்வலர்களிடம் உங்கள் கனவுகளை சொல்லுங்க, 2030-க்குள் நிறைவேற்றி தரப்படும்.

    * மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்க உள்ளேன்.

    * தி.மு.க. ஆட்சி அமைந்த 4.5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.

    * எந்த ஆதிக்கத்திற்கும் தலைகுனியாமல் வெல்வோம் ஒன்றாக என தலைநிமிர்ந்து நிற்கிறோம்.

    * உங்கள் எண்ணங்களுக்கு நான் உருவம் கொடுப்பேன்.

    * சொன்னால் சொன்னதை செய்பவன் தான் உங்கள் முன்பு நிற்கும் ஸ்டாலின்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு, அடகு வைத்தது அ.தி.மு.க.
    • பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என முதல் கையெழுத்திட்டேன்.

    திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் 'உங்க கனவ சொல்லுங்க' எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு, அடகு வைத்தது அ.தி.மு.க.

    * தமிழ்நாட்டின் கஜானாவை அ.தி.மு.க.வினர் சுரண்டினர்.

    * அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழில் நிறுவனங்கள் அஞ்சி ஓடினார்கள்.

    * கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ஆட்சிக்கு வந்தபோதும் தமிழ்நாடு முதலிடம்.

    * மகளிருக்கு மாதம் ரூ.1000 தர முடியாது என அ.தி.மு.க கூறியது. ஆனால் உரிமைத்தொகை வழங்கினோம்.

    * மக்களின் உயிர்களை வீடுகளுக்கே சென்று காக்கும் வகையில் திராவிட மாடல் அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது.

    * பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என முதல் கையெழுத்திட்டேன்.

    * முட்டுக்கட்டை போடுவதே தனது முதல் வேலை என ஆளுநர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

    * பள்ளிக்கல்வி, உயர்கல்வி, போட்டித்தேர்வு என அனைத்திலும் தமிழக மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொருளாதாரத்தில் பிற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
    • மருத்துவ சுற்றுலாவுக்கான மையமாக தமிழ்நாடு மாறி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் 'உங்க கனவ சொல்லுங்க' எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்றைய நாள் சிறப்பு மிக்க நாள்.

    * மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உங்கள் கனவை கேட்டு அதனை நிறைவேற்றும் தொடக்க நாள் இன்று.

    * 2030-ம் ஆண்டில் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை வடிவமைப்பதற்கான திட்டம்.

    * மக்களின் கனவுகளை அவர்களது வீடுகளுக்கே நேரில் சென்று கேட்டறிவும் வகையில் புதிய திட்டம்.

    * 11.19% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது.

    * பொருளாதாரத்தில் பிற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    * இந்தியாவில் முதலீடு செய்ய நிறுவனங்கள் நினைக்கும்போது அவர்களின் முதல் தேர்வு தமிழகம் தான்.

    * விவசாயம், கல்வியிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்.

    * இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், காலைச் சிற்றுண்டி போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறோம்.

    * மருத்துவ சுற்றுலாவுக்கான மையமாக தமிழ்நாடு மாறி உள்ளது. பல மாநில மக்களும் சிறந்த மருத்துவத்திற்காக தமிழகம் வருகின்றனர்.

    * பிற மாநிலங்களில் தலைநகரங்கள் மட்டுமே வளரும். தமிழ்நாட்டில் மட்டும் தான் பரவலாக வளர்ச்சி.

    * அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாதது ஏமாற்றம் அளித்துள்ளது.
    • தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தராது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாதது ஏமாற்றம் அளித்துள்ளது. திமுக 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண். 309 ல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் சந்தா பிடிக்காத திட்டம்.

    பங்களிப்பு ஓய்வூதியம் என்பது பணத்தைப் பிடித்துக்கொண்டு அதற்கும் வட்டி தருகிறது. அவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள். அதற்கும் வட்டி தருகிறார்கள். அனைத்தையும் அதாவது முதலீட்டு பணத்தை தருவதாக அமைகிறது. ஆனால் தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தராது.

    இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உத்தரவாத ஓய்வூதியத்தால், பழைய ஓய்வுதியத் திட்டத்தின் முழுப் பயன் கிடைக்காது என்கின்றனர். எனவே தமிழக அரசு சுமார் 6½ லட்சம் ஆசிரியர்களையும் மற்றும் அரசு ஊழியர்களையும், தேர்தல் கால வாக்குறுதியையும் கவனத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும்.
    • தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் முழுமையான அக்கறையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என்று அறியாமல் ஓய்வு பெறும் நிலை கடந்த 20 ஆண்டுகளாக இருப்பதாகவும், இதனை அகற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

    அவர்களின் இந்த நீண்டகாலக் கோரிக்கைகள் என்பது ஒவ்வொரு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் குடும்பத்தினரின் வாழ்க்கையுடனும் அவர்களின் எதிர்காலத்துடனும் தொடர்பு உடையது என்பதை உணர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு, இவற்றின் மீது முழுக்கவனம் செலுத்தியதுடன், இந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து, அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை வழங்குவது குறித்து, தகுந்த பரிந்துரைகளை வழங்கிட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையையும் பெற்று உள்ளது.

    அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காப்பதில் உண்மையான அக்கறை கொண்ட இந்த அரசு, அந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து, தமிழ்நாடு அரசு தற்போது சந்தித்து வரும் நிதிச் சூழலில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து நிதி அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    அந்த ஆலோசனையின்போது, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோரிடம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அளித்த முக்கியக்கோரிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    அரசு அலுவலர்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், மாநிலத்தின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வித தடைகளுமின்றி முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு போன்ற பல அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களைத் தொடர்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    இந்தப் புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதி யத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

    50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

    ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

    அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும்போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக் காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

    புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

    பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.

    இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்துத் வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும்.

    அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடனும் நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய வகை யில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும், பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த உறுதியளிக்கப்பட்ட திட்டத்தினை, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்து வதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சந்தீப் மிட்டல் 'சைபர் கிரைம்' கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி. ஆனார்.
    • பிரேம் ஆனந்த் சின்ஹா தெற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.

    தமிழகம் முழுவதும் பதவி உயர்வு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 70 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    டேவிட்சன் தேவாசீர்வாதம்- சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த இவர், பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

    சந்தீப் மிட்டல்- 'சைபர் கிரைம்' கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி. ஆனார்.

    பால நாகதேவி- பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி. பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.

    அன்பு- சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யான இவர் பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

    பிரேம் ஆனந்த் சின்ஹா- தெற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். ஆவடி கமிஷனராக பதவியேற்பார்.

    செந்தில்குமார்- மேற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், பதவி உயர்வு பெற்று, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக கூடுதல் டி.ஜி.பி. யாக பதவியேற்பார்.

    அனிஷா உஷேன்- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

    சங்கர்- ஆவடி போலீஸ் கமிஷனரான இவர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆனார்.

    அமல்ராஜ்- அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. யான இவர், தாம்பரம் போலீஸ் கமிஷனராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேற்கண்ட அதிகாரிகள் உள்பட 70 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • நாட்டின் 77-வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
    • கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காதது சர்ச்சையானது.

    நாட்டின் 77-வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், குடியரசு தினவிழா அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம் பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காதது சர்ச்சையான நிலையில் இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    குடியரசு தினவிழா அணி வகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் பசுமை மின்சக்தி என்ற தலைப்பில் அலங்கார ஊர்தி பங்கேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    • உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
    • ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் கடந்த ஆண்டு உரிய ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த அக்டோபர் மாதம் 'கோல்ட்ரிப் இருமல்' (Coldrif Cough Syrup) மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

    அந்த மருந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்டது என்றும், அந்த மருந்தில் ஆபத்தான டைஎத்திலின் கிளைக்கால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசுக்கு மத்திய பிரதேச அரசு கடிதம் எழுதியது.

    இதனைத் தொடர்ந்து 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியது.

     

    அந்த நிறுவனம் தயாரிக்கும் இருமல் மருந்தை குழந்தைகள் மட்டுமின்றி எந்த வயதினரும் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    இதுதொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தில், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் நச்சுத்தன்மையுள்ள ரசாயனம் கலந்த கோல்ட்ரிப் (Coldrif Cough Syrup) என்ற இருமல் மருந்தே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் எனவும், இந்த மருந்தை தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த அக்.3-ந்தேதி ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் கைப்பற்றப்பட்டன. அதில் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு 48.6% டை எத்திலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அந்நிறுவனத்தின்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் கடந்த ஆண்டு உரிய ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

     

    இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சென்னை அசோக் நகரில் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனுக்கு, டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, மத்திய பிரதேசம் போலீசார் அவரை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.

    காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீசன் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் முழுமையான விசாரணை, ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டது.

    ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரித்த இந்த மருந்து, குழந்தைகளின் இறப்புக்குக் காரணமானதால், மருந்துப் பாதுகாப்பு விதிமுறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனமும் (WHO) கவலை தெரிவித்துள்ளது.

    • உழவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை தி.மு.க. அரசு தேவையின்றி திணிப்பது கண்டிக்கத்தக்கது.
    • வேளாண்மையில் வல்லமை பெற்ற ஒருவர் தோட்டக் கலைப் பயிர்களின் சாகுபடிகளுக்கு ஆலோசனை வழங்கினால் அது பயனுள்ளதாக இருக்காது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம் என்ற பெயரில் வேளாண் துறையின் பல்வேறு கிளைகளில் வெவ்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, அனைத்துப் பணிகளையும் செய்யும்படி தி.மு.க. அரசு கட்டாயப்படுத்துகிறது. அதிகாரிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது மட்டுமின்றி, உழவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை தி.மு.க. அரசு தேவையின்றி திணிப்பது கண்டிக்கத்தக்கது.

    அதிகாரிகள் எந்தெந்த துறைகளில் வல்லமை பெற்றிருக்கிறார்களோ, அவர்களை அந்தத் துறையின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்வது தான் அறிவார்ந்த செயலாகும். வேளாண்மையில் வல்லமை பெற்ற ஒருவர் தோட்டக் கலைப் பயிர்களின் சாகுபடிகளுக்கு ஆலோசனை வழங்கினால் அது பயனுள்ளதாக இருக்காது.

    எனவே, உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, ஒவ்வொரு துறையின் அதிகாரிகளும் அவரவர் துறைகளில் பணி செய்வதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களை இன்று நாடே பின்பற்றும் நிலை உருவாகி உள்ளது.
    • அடுத்த கல்வி ஆண்டு முதல் தெலுங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    தமிழகம் கல்வியில் இந்தியாவுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. தொடர்ந்து கல்வித் துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அந்தச் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி கடந்த செப். 25-ந்தேதி சென்னை நேரு விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

     

    இந்த விழாவின்போது பங்கேற்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நிகழ்ச்சியில் பங்கேற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்த மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

    தமிழகத்தை கல்வித் தந்தை காமராஜரின் மண் என்று குறிப்பிட்ட ரேவந்த் ரெட்டி, தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், மு.க. ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி வருவதாகவும், அவர் ஒரு சிறந்த முதலமைச்சராகத் திகழ்கிறார் என்றும் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி தமிழக இளைஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    கல்வி, ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் தமிழ்நாடு ஒரு சிறந்த மாநிலமாகத் திகழ்வதாக ரேவந்த் ரெட்டி புகழாரம் சூட்டினார். குறிப்பாக, தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களை இன்று நாடே பின்பற்றும் நிலை உருவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    இந்தியாவில் முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியது தமிழகம்தான் என்றும், தமிழகத்தைத் தொடர்ந்தே மற்ற மாநிலங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

    பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கும் தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் ஒரு மனதை தொடும் திட்டம் என்று குறிப்பிட்டு அவர் பாராட்டினார். தமிழகத்தின் சிறப்பான கல்வித் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட தெலுங்கானா அரசு, அவற்றை தங்கள் மாநிலத்திலும் அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.

     

    அடுத்த கல்வி ஆண்டு முதல் தெலுங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 'புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன்' உள்ளிட்ட முக்கிய கல்வித் திட்டங்களும் வரும் கல்வி ஆண்டு முதல் தெலுங்கானாவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்தியர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை உற்றுநோக்குகின்றனர் என்றும், தெலுங்கு மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே நூற்றாண்டு கால நட்புறவு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தமது மாநிலமான தெலுங்கானாவிலும் கல்விக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இதற்காகப் பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கல்வியில் முதலீடு செய்வது என்பது வெறுமன சேவை இல்லை.. அது நீதி மற்றும் உரிமை என்ற தமிழ்நாட்டின் கொள்கையை தெலுங்கானாவும் நம்புவதாக அவர் கூறினார்.

    • மக்களின் பயணத்தை 'சென்னை ஒன்' செயலி மிக எளிமையாக, சிக்கனமாக வடிவமைத்து கொடுத்து விடுகிறது.
    • 'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள சில்வர் மற்றும் கோல்ட் வகை மாதாந்திர பயண அட்டைகளை பெற முடியும்.

    சென்னையில் உள்ள மக்கள்தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் பொது போக்குவரத்தை தான் அன்றாடம் பயன்படுத்துகின்றனர். அதன்படி தினமும் அரசு மாநகர பஸ்களில் 35 லட்சம் பேரும், மின்சார ரெயில்களில் 12 லட்சம் பேரும், மெட்ரோ ரெயிலில் 3 லட்சம் பேரும் பயணிக்கின்றனர்.

    மக்களின், இந்த பயணத்தை எளிதாக்க அரசு பல்வேறு வழிகளில் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. உதாரணமாக அரசின் சிங்கார சென்னை அட்டை மூலம் மாநகர பஸ் மற்றும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். அதேபோல மின்சார ரெயில் பயணத்தை சீசன் அட்டை, யுடிஎஸ் மற்றும் ரெயில் ஒன் செயலிகள் மூலம் டிக்கெட எடுத்து கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு போக்குவரத்துக்கும் தனித்தனியாக டிக்கெட் வேண்டும்.

    ஆனால் இந்த நிலையை மாற்றி, அனைத்து பொது போக்குவரத்துக்கும் ஒரே செயலியில் டிக்கெட் பெறும் வசதியை தமிழக அரசின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பான கும்டா தொடங்கி உள்ளது. அதற்காக வடிவமைக்கப்பட்ட `சென்னை ஒன்' (chennai one) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி தொடங்கி வைத்தார்.

     

    இந்த செயலி, பொது போக்குவரத்துக்கு வெறும் டிக்கெட் எடுப்பதற்காக மட்டுமல்லாமல் மக்களின் பயணத்தை எளிதாக வகுத்து கொடுத்து இருக்கிறது. இந்த பயணத்தில் ஆட்டோ, கார் தேவை என்றாலும் அதற்கும் அதில் புக் செய்து விடலாம்.

    உதாரணமாக நீங்கள் நந்தனத்தில் இருந்து காசிமேடு மீன் மார்க்கெட் செல்ல வேண்டும் என்று வைத்து கொள்வோம். `சென்னை ஒன்' செயலில், நீங்கள் நந்தனத்தில் இருந்து மெட்ரோ மூலம் எழும்பூர் வரையும், அங்கிருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை மின்சார ரெயிலிலும், அங்கிருந்து ராயபுரம் வரை மாநகர போக்குவரத்து பஸ்சிலும், பின் அங்கிருந்து ஆட்டோ அல்லது கார் மூலம் காசிமேடு மீன் மார்க்கெட் செல்வதற்கும் மொத்தமாக பதிவு செய்து கொள்ளலாம்.

    ஆனால் அதில் ஆட்டோ மற்றும் கார் கட்டணத்தை மட்டும் டிரைவர்களிடம் செலுத்த வேண்டும். மற்ற மெட்ரோ, ரெயில், பஸ் ஆகியவற்றுக்கு பணம் செலுத்தி கியூ ஆர்கோடு டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அதில் சிறப்பு என்னவென்றால் மெட்ரோ, ரெயில், பஸ் எப்போது எந்த நேரத்தில் வரும், நீங்கள் எதில் செல்ல வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வதுடன் நீங்கள் பஸ் நிலையத்தில் இறங்கியவுடன் உங்களுக்கான ஆட்டோ, கார் தயாராக இருக்கும்.

    அதாவது, மக்களின் பயணத்தை இந்த செயலி மிக எளிமையாக, சிக்கனமாக வடிவமைத்து கொடுத்து விடுகிறது. அதேபோல ஒவ்வொரு இடங்களிலும் நேரடியாக சென்று டிக்கெட் எடுக்க தேவையில்லை. அதே போல, தனித்தனி செயலிக்கு சென்று டிக்கெட் பதிவு செய்யவேண்டியதும் இல்லை.

    இந்த செயலியில் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளிலும் பயன்படுத்த முடியும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம்.

    அதே போல் டிக்கெட்டிற்கு பணம் செலுத்த வசதியாக கும்டா யு.பி.ஐ. வசதியும் இருக்கிறது. அதனால் மற்ற யு.பி.ஐ. செயலிகள் தேவையில்லை. `சென்னை ஒன்' செயலியில், பல மேம்பட்ட அம்சங்கள் இருந்தாலும் இன்னும் சிலவற்றை மேம்படுத்த வேண்டி உள்ளது. நீங்கள் மெட்ரோ, ரெயில் மற்றும் பஸ்சையும் இணைந்து டிக்கெட் எடுத்துவிட்டால், அதில் ஒன்றை நீங்கள் ரத்து செய்ய முடியாது. பதிவு (புக்கிங்) செய்து விட்டால் ரத்து செய்ய முடியாது.

     

    மெட்ரோ ரெயில் சி.எம்.ஆர்.எல். செயலில் மை பாஸ் என்ற வசதி உள்ளது. அதில் நாம் பணம் செலுத்திவிட்டால், நாம் மெட்ரோவில் செல்லும் பயணங்களுக்கு மட்டும் பணம் செலுத்திக் கொள்ளலாம். அதேபோல் இந்த `சென்னை ஒன்' செயலியிலும் செல்லும் பயணத்துக்கு பணம் எடுத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

    இத்திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே 1 லட்சம் பேர் `சென்னை ஒன்' செயலியை பதிவிறக்கம் செய்தனர்.

    'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள சில்வர் மற்றும் கோல்ட் வகை மாதாந்திர பயண அட்டைகளை பெற முடியும். பயண தேவைகளுக்கு ஏற்ப அட்டையை தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

    செயலி வழியாக மாதாந்திர அட்டைகள் வாங்கும் பயணிகளுக்கு அட்டை ஒன்றுக்கு ரூ.50 சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை உடனடி தள்ளுபடியாகவோ அல்லது கேஷ்பேக் முறையிலோ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    கூகுள் பிளே ஸ்டோரில் 'சென்னை ஒன்' செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    மொபைல் எண்ணை பயன்படுத்தி, ஓடிபியை பதிவிட்டு உள்நுழைந்து வேண்டும்.

    மாநகரப் பேருந்து, சென்னை மெட்ரோ ரெயில் மற்றும் சென்னை புறநகர் ரெயில்சேவைகளுக்கு தனித்தனியாக பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வசதி முகப்பிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், புறப்படும் இடம் மற்றும் சென்று சேரும் இடத்தை பதிவிட்டு பயண வழித்தடத்தை பார்க்க முடியும். உதாரணத்திற்கு, தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் செல்வதற்கான போக்குவரத்து வழித்தடத்தை பதிவிட்டால் அனைத்துவிட சேவைகளும் காண்பிக்கப்படும்.

    இதே வழித்தடத்தில் புறநகர் ரெயில் சேவையை பயன்படுத்துவோர் அதற்கான பயணச்சீட்டை பெறலாம்.

    பொது போக்குவரத்து இல்லாத பகுதிகளுக்கு செல்ல வாடகை கார் மற்றும் ஆட்டோக்களும் இந்த செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

    பல செயலிகளைப் பயன்படுத்தும் சிரமத்தைத் தவிர்த்து, ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறுவதால் பயணிகள் இதனைப் பாராட்டுகின்றனர்.

    சென்னை ஒன் செயலி, சென்னையின் பொதுப் போக்குவரத்தை எளிமையாகவும், விரைவாகவும், திறமையாகவும் பயன்படுத்த உதவும் ஒரு புரட்சிகரமான செயலியாகும். இது 'One City, One App, One Ticket' என்ற கொள்கையுடன் செயல்படுகிறது. 

    • 1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா.
    • ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும்.

    தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப பாராளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதாகும்.

    இந்தியாவில் ஒரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளானது அந்த மாநிலத்தில் உள்ள மக்கள்தொகையின் அளவுக்கு ஏற்ப வரையறை செய்யப்படுகின்றன. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், கடந்த கால ஆட்சியாளர்கள் வெறுமனே மக்கள்தொகையை கணக்கில் கொள்ளாமல், அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை நிலைநாட்டும் வண்ணம் அரசியலமைப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு தொகுதி மறுசீரமைப்பை தடுத்து நிறுத்தினர்.

    ஆனால், தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பை 2026-ம் ஆண்டு நிகழ்த்த உள்ளது.

    1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 2026 வரை மாற்றக்கூடாது என்ற திருத்தத்தை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பு சட்டப் பிரிவு 82-ல் சேர்த்தார். இதனால், மக்கள்தொகை அதிகரித்தாலும் புதிய தொகுதிகளை உருவாக்க இயலாது. அதன்பின், 2001-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 25 ஆண்டுகள் ஒத்திவைத்தார். இன்று வரை இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்ற தொகுதிகளின் செயல்பாடு இருந்துள்ளது. தற்போது 25 ஆண்டு காலம் நிறைவுபெறும் தருணத்தில் பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. ஆனால் வட இந்தியாவில் இந்த பிரசாரம் எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். போதுமான கல்வி மற்றும் பகுத்தறிவு இல்லாத சமூகமாக மக்கள் வாழ்ந்த காலத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகவே இருந்தது.

    மக்களிடையே 'நாம் இருவர் - நமக்கு ஒருவர்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள்தொகை பெருக்க அளவை குறைத்த முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. இதனால் மனித வளக் குறியீடுகளிலும், தனிமனித பொருளாதார வளர்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் சராசரி கருவள விகிதம் 2.1% ஆக இருந்து தற்போது 1.4% என்கிற அளவில் கட்டுக்குள் இருக்கிறது. அதன்படி, இந்தியாவிலேயே மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எதிர்வரும் 2031-36-ஆம் கால கட்டங்களில் இது மேலும் குறையும் என்று இந்திய புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது. கருவள விகிதம் கட்டுப்படுத்தப்பட்டதால்தான் மக்கள்தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் பொருளாதார விகிதத்தில் தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது.

    தொகுதி மறுசீரமைப்புக்கு தொடக்கம் முதலே தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

    தொகுதி மறுசீரமைப்பு என்பதை பற்றி பா.ஜ.க. பேசவே இல்லை என்றும், தி.மு.க. தலைவர் வேண்டுமென்றே இது குறித்த வீண் வாதத்தை கிளப்புகிறார் என்றும், மத்திய அரசின் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் பேசி வருகின்றனர்.

    19-9-2023 அன்று பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார். அரசியல் சாசனத்தின் 128-வது திருத்த மசோதா-2023 என பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க வழிவகை செய்கிறது.

     

    இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பின்னரே இது அமலுக்கு வரும் என்று விளக்கம் அளித்தார்.

    அடுத்தாக, 28.05.2023 அன்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் மக்களவையில் 848 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடப்பில் 543 மக்களவை தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில் 848 இருக்கைகளுடன் பாராளுமன்றத்தை அமைப்பதன் பின்னணி என்ன? இதற்கு வலுசேர்க்கும் விதமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

     

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்டு தனி பெரும்பான்மையோடு நிலைபெற்ற ஆட்சியை தொடர வேண்டும் என்பதன் அடிப்படை தான் தொகுதி மறுசீரமைப்பின் முழு நோக்கம் ஆகும். இது எப்படி சாத்தியமெனில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் 31 என குறையும், அதே வேளையில் பா.ஜ.க. ஆளும் பீகார், உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை கிட்டதட்ட இரு மடங்காக உயரும்.

    2026-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 543 என நிர்ணயிக்கப்பட்டால் தென்னிந்தியாவில் தற்போது உள்ள மாநிலங்களின் இடங்கள் 130 என்பதிலிருந்து 103 என குறையும். மக்களவையில் 23.74% உள்ள தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம், 18.97% ஆக குறையும். தமிழ்நாட்டிற்கான மக்களவை தொகுதிகள் 39ல் இருந்து 31 ஆக குறையும். ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் இடங்கள் 42ல் இருந்து 34 ஆகும். அதேசமயம், அதிக மக்கள்தொகை மற்றும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் பெரும் ஆதாயத்தைப் பெறுகின்றன.

    குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இப்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும். எனவே மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளக் கூடாது என்பதை தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

     

    இதை வலியுறுத்தி கடந்த மார்ச் 5-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சில இயக்கங்கள் என 63 அமைப்புகளுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மட்டும் அல்லாமல் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பங்கேற்றன. இதில் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை பங்கேற்கவில்லை.

    இதில் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது, தமிழகத்தின் 7.18 சதவிகிதத்தை மாற்றக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

     

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 22-ந்தேதி பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

     

    2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள்தொகை 121 கோடி. 2021-ல் நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.

    1971-2011 இடைபட்ட காலத்தில் உத்தரபிரதேசத்தில் 138%, ராஜஸ்தானில் 166% மக்கள்தொகை அதிகரித்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75%, கேரளாவில் 56% மட்டுமே அதிகரித்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் சராசரியாக 15 லட்சம் பேருக்கு ஒரு மக்களை உறுப்பினர் இருக்கிறார். இது உத்தரபிரதேசத்தில் 25 லட்சமாக இருக்கிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு நிச்சயம் தீர்வு காணப்படத்தான் வேண்டும். ஆனால், 1952, 1963, 1973-ல் நடைபெற்ற மறுசீரமைப்புபோல அது சுலபமாக இருக்காது என்பது நிச்சயம்.

     

    ×