என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷபாஸ் ஷெரீப்"

    • பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது.
    • நமது நாட்டைக் காப்பாற்ற நமது விமானப்படை உள்நாட்டு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியது.

    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதையடுத்து இந்தியா பதிலடி தாக்குதல் கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

    இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதை முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. 4 நாட்கள் சண்டைக்கு பிறகு இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கியது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் நினைவுச் சின்னத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஷபாஸ் ஷெரீப் பங்கேற்று பேசியதாவது:-

    மே 9, 10-ந்தேதி இடைப்பட்ட இரவில் சுமார் 2.30 மணியளவில் ராணுவத் தலைவர் அசிம் முனீர், என்னை தொடர்பு கொண்டு இந்திய ஏவுகணைகள் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப் படை தளம் மற்றும் பிற பகுதிகளை தாக்கியதாக தகவல் தெரிவித்தார். இது மிகவும் கவலைக்குரிய தருணமாக இருந்தது.

    அவரது குரலில் தன்னம்பிக்கை மற்றும் தேசபக்தி இருந்ததை கடவுள் மீது சத்தியம் செய்வதன் மூலம் நான் உங்களுக்குச் சொல்ல முடியும்.

    அதன்பின் நான் எனது பாதுகாப்பான தொலைபேசியை எடுத்துக்கொண்டு நீச்சலடிக்கச் சென்றேன். அப்போது ராணுவ தளபதி 2-வது முறையாக என்னை தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பதிலடி கொடுத்ததாக தெரிவித்தார்

    நமது நாட்டைக் காப்பாற்ற நமது விமானப்படை உள்நாட்டு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியது. மேலும் சீன ஜெட் விமானங்களிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாகிஸ்தான் பிரதமர், சீனாவில் 2 நாள் அரசு முறை சுற்றுப் பயணம்.
    • சீன அதிபருடன், பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை.

    பெய்ஜிங்:

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப் முதன்முறையாக இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். அவருடன் அந்நாட்டு அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவும் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பாகிஸ்தானில் சீனா செயல்படுத்தி வரும் திட்டங்களில் பணியாற்றி வரும் தங்கள் நாட்டு பணியாளர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவது குறித்து ஷபாஸ் செரீப்பிடம் ஜி ஜின்பிங் கவலை தெரிவித்ததாக இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் சீனர்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களை அடுத்து, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்து அப்போது பாகிஸ்தான் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள அனைத்து சீன பணியாளர்கள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கான பாதுகாப்பை ஷபாஸ் செரீப் உறுதிபடுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இரு நாடுகள் இடையே அனைத்து தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த குறித்தும், பல்வேறு துறைகளில் தற்போதைய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அவர் லண்டனில் தஞ்சம் புகுந்தார்.
    • 4 ஆண்டுகளுக்கு பிறகு சுலைமான் ஷெஹ்பாஸ் நாடு திரும்பினார்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ். கடந்த 2018-ம் ஆண்டு இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சுலைமான் ஷெஹ்பாஸ் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்தார்.

    இதற்கிடையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்டு ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணை மந்தமாகின. இந்த சூழலில் ஊழல் வழக்கில் சுலைமான் ஷெஹ்பாசை கைது செய்வதற்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தடை விதித்தது. அதே சமயம் இந்த வழக்கில் ஜாமீன் பெற 13-ந் தேதிக்குள் அவர் கோர்ட்டில் சரணடைய வேண்டும் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் லண்டனுக்கு தப்பியோடிய 4 ஆண்டுகளுக்கு பிறகு சுலைமான் ஷெஹ்பாஸ் நேற்று நாடு திரும்பினார். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், தன் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், எனவே தனது பாதுகாப்பிற்காக பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

    • தனது தாயை இழந்து தவிக்கும் பிரதமர் மோடிக்கு எனது அனுதாபங்கள்.
    • உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    இஸ்லாபாத் :

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அனுதாபம் தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "ஒருவருக்கு அவரது தாயின் இழப்பைக் காட்டிலும் பெரிதான இழப்பு என்று எதுவும் இருந்து விட முடியாது. தனது தாயை இழந்து தவிக்கும் பிரதமர் மோடிக்கு எனது அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே என உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    • பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது.
    • கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானில் மின்பகிர்மான கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் மின்வெட்டு ஏற்பட்டது.

    இதனால் தலைநகர் இஸ்லாமாபாத், பொருளாதார நகரமான கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு, பல லட்சம் பேர் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

    கிட்டத்தட்ட 24 மணி நேரத்துக்கு பிறகு நேற்று காலை நாடு முழுவதும் மின்இணைப்பு திரும்பியதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் மின்வெட்டு காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மன்னிப்பு கேட்டார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நமது குடிமக்கள் அனுபவித்த சிரமத்திற்கு எனது அரசாங்கத்தின் சார்பாக நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது உத்தரவின் பேரில் மின்வெட்டுக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.

    • கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தான் மூன்று போர்களை நடத்தியுள்ளது.
    • நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கனிமவள உச்சி மாநாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து போராடும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் போர் ஒரு விருப்பமல்ல. இந்தியாவுடன் போரை நடத்த விரும்பவில்லை.

    அனைத்து தீவிரமான மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். அர்த்தமுள்ள விவாதங்கள் மூலம் நமது தீவிரமான பிரச்சினைகள் புரிந்த கொள்ளப்படா விட்டால் அண்டை நாடுடன் நட்பாக இருக்க முடியாது என்பதை அண்டை நாடுகளும் புரிந்து கொள்வது முக்கியம்

    பாகிஸ்தானின் அணு சக்தி, தற்காப்பு நோக்கத்திற்காகவே உள்ளது. அது ஆக்கிரமிப்புக்காக அல்ல. ஏனென்றால் அணு ஆயுதத்தை பயன்படுத்தினால் என்ன நடந்தது என்பதை சொல்ல யார் வாழ்வார்கள்? எனவே போர் ஒரு விருப்ப மல்ல.

    கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தான் மூன்று போர்களை நடத்தியுள்ளது. இதன் காரணமாக பொருளாதார இழப்பு மற்றும் வளங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

    நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். பரஸ்பர மரியாதை, நம்பிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவுடன் சிறந்த உறவுகளை வைத்திருக்க விரும்புகிறோம். நாங்கள் ஒருவரையொருவர் ஏமாற்ற முயற்சிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முழுவதுமாக கை விடும்வரை பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்றத்தை கலைக்கும்படி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடிதம் எழுதினார்.
    • அவரது பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 12-ம் தேதி நிறைவடைகிறது. பதவிக் காலம் முடியும் முன்பாகவே பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, பாராளுமன்றத்தைக் கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிபருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பாராளுமன்றத்தை கலைக்கும்படி அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பின்னர் இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்கும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைத்து அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார்.

    பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

    • செலவினங்களை குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என பாகிஸ்தான் முடிவுசெய்தது.
    • அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கான தடை அங்கு அமலுக்கு வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

    கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடந்த பொது தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன்படி, பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார். அவரது தலைமையிலான மத்திய மந்திரி சபை 16 உறுப்பினர்களுடன் கடந்த 11-ம் தேதி புதிதாக உருவாக்கப்பட்டது.

    இதற்கிடையே, முதல் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசுகையில், நட்பு நாடுகளிடம் இருந்து இனி கடன்களை கேட்கமாட்டேன். ஆனால் முதலீடுகளை மேற்கொள்ளும்படி கேட்பேன் என வெளிநாடுகளின் தூதர்களிடம் கூறியுள்ளேன். நாம் நமக்குள் சண்டையிட்டு கொள்வதற்கு பதிலாக, வறுமையை எதிர்த்து போராட வேண்டும். நாங்கள் சர்வதேச நாணய நிதிய அமைப்பை சார்ந்து இருப்பதில் இருந்து விலகி இருப்போம். வெளிநாட்டு கடன்களிலிருந்து பாகிஸ்தானை மீட்க உறுதி எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் வருகையின்போது இவற்றை பயன்படுத்துவது இனி நிறுத்தப்படும். பிரதமர் ஷெரீப்பின் உத்தரவின்கீழ் இந்த தடை அமலுக்கு வரும் என மந்திரி சபை பிரிவு தெரிவித்துள்ளது.

    ஆனாலும், அரசு நடைமுறையின்படி வெளிநாட்டு தலைவர்கள் வருகையின்போது சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் தார் நியமனம் செய்யப்பட்டார்.
    • இவர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சவுதி சென்றுள்ளார்.

    உலக பொருளாதார மாநாட்டின் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் எனர்ஜி தொடர்பான சிறப்பு ஆலோசனை கூட்டம் இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கிறது. ஷாபாஸ் ஷெரீப் உடன் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தார் சென்றுள்ளார்.

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொள்கிறார். அங்கு ஷாபாஸ் ஷெரீப் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் தாரை நியமனம் செய்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

    பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.179.86க்கும், டீசல் ரூ.174.15க்கும், மண்ணெண்ணெய் விலை ரூ.155.56க்கும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதாக கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) அறிவித்தது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில், இம்ரான்கான் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார். அதனால் அவற்றுக்கான மானியமாக அரசுக்கு மாதத்துக்கு 60 கோடி டாலர் செலவானது. இதனால், சர்வதேச நிதியம், கடன் திட்டத்தில் மீதி தொகையான 300 கோடி டாலரை நிறுத்தி வைத்து விட்டது.

    தற்போதைய சூழலில் சர்வதேச நிதியத்தின் நிபந்தனையால் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.30 அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நாட்டு மக்களுக்கு ஷபாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்த்தப்பட்டது குறித்து பேசியதாவது:

    நாட்டிற்கு மிகப் பெரிய கடனை வைத்ததுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் பாதகமான உடன்படிக்கையையும் இம்ரான் கான் அரசு மேற்கொண்டது. உண்மைகளை அப்பட்டமாகப் புறந்தள்ளிவிட்டு இம்ரான் கான் அரசு செயல்பட்டது.

    நாட்டின் பொருளாதார நலன் கருதி பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டன. கனத்த இதயத்துடன் வேறு வழியின்றியே இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டது.

    எரிபொருட்கள் மீதான விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அதை சரிகட்ட வரும் பட்ஜெட் அறிக்கையில் அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.2,000 வழங்குவதற்கு ஏற்ப ரூ.7,211 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
    பாகிஸ்தானும், இந்தியாவும் பரஸ்பர நன்மை உண்டாகும் வர்த்தகத்தில் இருந்து நிறைய பலன்களை பெற வேண்டும்.

    இஸ்லாமபாத்:

    பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் சமீபத்தில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றியபோது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது.

    ஆனால் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கும் வரை பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் துருக்கியை சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் புவிசார் பொருளாதார கூட்டாண்மைகளை உருவாக்க விரும்புகிறது. பாகிஸ்தானும், இந்தியாவும் பரஸ்பர நன்மை உண்டாகும் வர்த்தகத்தில் இருந்து நிறைய பலன்களை பெற வேண்டும்.

    இந்தியாவுடனான ஆரோக்கியமான வர்த்தக நடவடிக்கை மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை பற்றி நாங்கள் அறிவோம். இரு நாடுகளும் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.

    எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கிறார்கள். மேலும் பாகிஸ்தான் ராணுவமும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    உரி, மதன்கோட் மற்றும் புல்வாமா பயங்கரவாத தாக்குதல்களால் இந்தியா-பாகிஸ்தான் இடைேயயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பேச்சு வார்த்தையும், பயங்கரவாதமும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
    • தெற்காசியாவில் அமைதிக்கான உறுதிப்பாட்டில் நாங்கள் நிலையாக இருக்கிறோம்.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. இரு நாடுகளிலும் ஆயுதங்கள் இருந்தாலும், போர் ஒரு விருப்பமல்ல. அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

    1947 முதல் மூன்று போர்களை சந்தித்துள்ளோம். இதன் விளைவாக, இரு தரப்பிலும் துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை மட்டுமே அதிகரித்துள்ளது. தெற்காசியாவில் அமைதிக்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் நிலையாக இருக்கிறோம் என்று உலக மன்றத்திற்கு நான் உறுதியளிக்கிறேன்.

    ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்க இந்தியா நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரில் தனது ராணுவ நிலைகளை இந்தியா அதிகரித்துள்ளது. இதனால் அது உலகிலேயே மிகவும் ராணுவ மயமாக்கப்பட்ட மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ஜம்மு காஷ்மீர் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா பலமுறை கூறியுள்ளது. பயங்கரவாதம், மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இயல்பான உறவை விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×