search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Gandhi murder case"

    • ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு.
    • உரிய சான்றிதழ்களை பெற்று மத்திய அரசிடம் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும்.

    இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சாந்தன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்த நிலையில், அவரது உடல்நிலை மாரடைப்பால் மோசமானது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் சென்னை மருத்துவமனையில் மரணம் அடைந்தது வரை உள்ள தகவல்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.

    சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று, பயண ஆவணம், உடல் பதப்படுத்துதல் சான்று ஆகியவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    உரிய சான்றிதழ்களை பெற்று மத்திய அரசிடம் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, 4 ஆவணங்களும் வழங்கப்படும் பட்சத்தில் உடனடியாக உடலை அனுப்பி வைப்பதற்கான அனுமதி தாமதமின்றி வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியதை அடுத்து, வரும் மார்ச் 4ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.

    திருச்சி:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11-ந் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பதால் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் இவர்கள் சிறப்பு முகாமில் காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தங்களை உடனடியாக சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி, முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் கால வரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில்

    'ராபர்ட் பயஸ் மயக்கமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக' கடந்த 2 நாட்களுக்கு முன் அவரை காணச் சென்ற வழக்கறிஞர் புகழேந்தி குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில் முருகன் மனைவி எஸ். நளினி தமிழக அரசின் தலைமைச் செயலர், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உருக்கமான ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    நானும் எனது கணவர் முருகனும் கடந்த 11-11-2022 அன்று உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டோம். அதன் பின்னர் எனது கணவரை அவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைத்துவிட்டனர்.

    சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டது முதல் எனது கணவர் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்.

    எனது கணவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தும் இதுவரை அவரை இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சிறையில் இருந்து எனது கணவர் விடுதலை ஆனாலும் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளார். சிறப்பு முகாமிற்குள் எனது கணவர் நடைபயிற்சி கூட செய்ய அனுமதிப்பதில்லை.

    எந்தவித விளையாட்டும் விளையாட அனுமதிப்பதில்லை. மேலும் எனது கணவர் மட்டும் மற்ற முகாம் வாசிகளை பார்க்கவோ, பேசவோ, முடியாத அளவில் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    அவர் முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.

    இந்த சிறப்பு முகாமில் முறையான உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிறப்பு முகாமில் இறந்துவிட்டார்.

    அவர் தனக்கு மாத்திரை வேண்டும் என்று கேட்ட போது உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கொடுக்கவில்லை. ஏற்கனவே இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி எனது கணவர் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.

    எனது கணவரை கடந்த 5-ம் தேதி நான் முகாமில் சந்தித்தபோது அவர் உடல் மெலிந்து 15 கிலோ எடை குறைந்து காணப்பட்டார்.

    எனது கணவர் இன்றுடன் 12 நாட்கள் உணவு உட்கொள்ளாத நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

    மேலும் தற்போது எனது கணவர் சிறப்பு முகாமில் மயங்கிய நிலையில் உள்ளதாகவும் அவருக்கு முகாமில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் அவரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும் என அஞ்சுகிறேன் எனவே இந்த கடிதத்தை கருணையுடன் பரிசீலனை செய்து எனது கணவர் உயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி வழக்கு.
    • பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி உள்பட 4 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

    4 பேரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

    • 16 ஆண்டுகாலமாக எனது மகளை நான் பார்க்கவில்லை.
    • சாந்தன் இலங்கைக்கு செல்வதாக கூறுகிறார்.

    திருச்சி

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான இலங்கையை சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் முருகனை பார்ப்பதற்காக அவரது மனைவி நளினி நேற்று காலை சென்னையில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் திருச்சி சிறப்பு முகாமிற்கு வந்தார். அவருடன், 3 பெண்கள் மற்றும் வக்கீல்கள் உள்பட 7 பேர் வந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று காலை 10.20 மணி அளவில் முகாமிற்குள் சென்று முருகனை சந்தித்து பேசினார்கள்.

    இதனை தொடர்ந்து நேற்று மாலை 5.10 மணிஅளவில் நளினி சிறப்பு முகாமில் இருந்து வெளியே வந்தார். மத்திய சிறை வாசலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் கேள்விபட்டபடி, சிறைக்குள் 4 பேரும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. இத்தனை ஆண்டுகாலம் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் திடீரென மீண்டும் அவர்களை சிறப்பு முகாமில் அடைத்ததால் முதலில் ஒரு நெருக்கடியான சூழல் இருந்தது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. மத்திய-மாநில அரசுகள் விரைந்து அவர்களை விருப்பப்படும் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனது கணவரை லண்டனுக்கு அனுப்பி விடும்படி கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஏனென்றால் அங்கு எங்கள் மகள் வசிக்கிறார். 16 ஆண்டுகாலமாக எனது மகளை நான் பார்க்கவில்லை. அதனால் நாங்கள் மகளுடன் இருக்க ஆசைப்படுகிறோம். சாந்தன் இலங்கைக்கு செல்வதாக கூறுகிறார். ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் எந்த நாட்டிற்கு செல்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

    முதல்-அமைச்சரை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்று கிடையாது. அவரே அனைத்தையும் பார்த்து கொள்கிறார். எங்களை வெளிநாடு அனுப்புவதற்காக பணிகளை அரசு சார்பில் மும்முரமாக செய்து வருவதாக தான் நினைக்கிறேன். பல ஆண்டுகளாக சிறையில் கழித்து வந்தவர்களை வெளியே அனுப்பாமல் மீண்டும் சிறப்பு முகாமில் அடைத்து வைப்பதை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக தான் இருக்கிறது.

    அவர்களை வெளியே விட்டால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறுவது தவறு. ஏனென்றால் முகாமில் இருப்பவர்களின் குடும்பத்தினர் பலரும் வெளியே வசித்து கொண்டு தானே இருக்கிறார்கள். அவர்களால் சமூகத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை தானே. அதுபோல தானே முகாமில் இருப்பவர்களையும் வெளியே வாழவைக்க வேண்டும்.

    நான் காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். எனது தாயாருக்கு காந்தி தான் பெயர் வைத்தார். இந்திராகாந்தி இறந்தபோது கூட எங்கள் குடும்பத்தில் யாரும் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தோம். ராஜீவ்காந்தி இறந்தபோதும் 3 நாட்களாக சமைக்காமல் அழுது கொண்டு தான் இருந்தோம். ஆனால் அவருடைய மரணம் தொடர்பான குற்றத்தில் நான் ஈடுபட்டதாக என் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இது சரியானால் தான் என் மனதுக்கு நிம்மதி.

    சிறையில் இருந்து வெளியே வந்தபிறகும் எனது கணவரை முகாமில் வைத்துள்ளது எனது மனதை பாதித்துள்ளது. தற்போது எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நாங்கள் வெளிநாட்டுக்கு செல்வதற்காக தூதரகத்துக்கு அலைய வேண்டி உள்ளது. எனது கணவருக்கு தூக்குதண்டனை வந்தபோது, அவர் தூக்கு தண்டனையில் இருந்து விடுதலை பெற வேண்டி கோவில்களில் தீமிதிக்க நேர்த்திக்கடன் இருந்தது. திருப்பதி கோவிலுக்கு நடந்தே செல்வதாக வேண்டுதல் இருந்தது. அதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் என்று யாரையும் சொல்லமுடியாது. அப்படி எதுவும் எனக்கு தெரியவில்லை. அவ்வாறு காட்டி கொடுக்கும் பழக்கமும் எனக்கு கிடையாது. அப்படி இருந்திருந்தால் 30 ஆண்டுகள் சிறையில் கழித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால் ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகள் யாரென்று எனக்கு தெரியாது. தற்போது இலங்கையில் நெருக்கடியான சூழல் இருப்பதால் அங்கு செல்வது சரியாக இருக்குமா? என தெரியவில்லை.

    சிறையில் பிரியங்கா காந்தி என்னை சந்தித்தபோது, ராஜீவ் கொலை வழக்கு குறித்து என்னிடம் கேட்டார். அப்போது எனக்கு தெரிந்த விஷயங்களை அவரிடம் கூறினேன். அது அவருக்கு திருப்தியாக இருந்ததா? என எனக்கு தெரியாது. அதை அவரிடம் தான் கேட்க வேண்டும். சிறப்பு முகாமில் எனது கணவர் உள்பட 4 பேரை சந்தித்து பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை சந்தித்த அவர்களுக்கு நிறைய ஆறுதல் தேவைப்பட்டது. அவர்களை விரைந்து வெளியே எடுப்பதற்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நளினி சிறப்பு முகாமிற்கு வருவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலெக்டர் பிரதீப்குமார் நேரில் சென்று சிறப்பு முகாமில் ஆய்வு நடத்தினார்.

    • முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளால் முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் ஆபத்து நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • சுமார் 50 போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த போலி பாஸ்போர்ட், விசா மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    3 பிளாக்குகளை கொண்ட இந்த முகாமில் ஒரு பிரிவில் இந்த கைதிகள் இருக்கிறார்கள். அவர்கள் சொந்தமாக சமைத்து சாப்பிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கு முடிந்த பின்னர் அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    இதற்கிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலையான இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

    வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பிளாக்கில் ஒரு பிரிவில் இவர்கள் 4 பேருக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் உணவுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.175 பணம் வழங்கப்படுகிறது. வெளியில் இருந்தும் அவர்கள் உணவை பெற்றுக்கொள்ளவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வழக்கிலிருந்து கோர்ட்டு விடுதலை செய்த பின்னரும் இங்கேயும் அடைக்கிறீர்களே என 4 பேரும் வேதனை தெரிவித்ததாக முகாம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் மற்ற வெளிநாட்டு கைதிகளுடன் பேசவோ, தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை.

    அதேபோல் மற்ற வெளிநாட்டு கைதிகளை போன்று ஒருவருக்கொருவர் பேச கூட அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளை போன்று தங்களை சுதந்திரமாக நடமாட விடவேண்டும், தனி அறையில் அடைத்து வைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரும் இன்று காலை சிற்றுண்டியை தவிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

    இதுபற்றி அறிந்த கலெக்டர் பிரதீப்குமார், வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முகாமுக்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் வெளியே வந்த கலெக்டர் மா.பிரதீப் குமார் சிறை வாசலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெளிநாட்டினருக்கு இங்கு வீடு மற்றும் நிரந்தர தங்குமிடம் எதுவும் இருக்காது. எனவே வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகி தண்டனையிலிருந்து விடுதலை பெற்றவர்களை மீண்டும் அவர்களின் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வரை திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைப்பது வழக்கம்.

    அதன்படியே சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களை சிறப்பு முகாமில் ஏற்கனவே உள்ள வெளிநாட்டவருடன் சேர்த்து தங்க வைக்காமல் பாதுகாப்பான இடத்தில் தனியாக தங்க வைக்கிறோம்.

    இந்த 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறார்களா அல்லது இங்கேயே இருக்கப்போகிறார்களா என்பதை முதலில் உறுதி செய்ய உள்ளோம்.

    இதில் முருகன் தவிர மற்ற 3 பேரும் (சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்) இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். அவரவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல அந்த நாட்டின் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 4 பேரும் இன்று உண்ணாவிரதம் எதுவும் இருக்கவில்லை. அவர்கள் தாங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதி செய்து தரவேண்டும் என்றனர். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.

    மற்ற சிறைவாசிகளுக்கு உள்ளதுபோல் இந்த 4 பேருக்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 29-ந்தேதி நைஜீரியா நாட்டை சேர்ந்த கைதி ஒருவர் முகாமில் இருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது வரை அவர் பிடிபடவில்லை.

    அதேவேளையில் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளால் முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் ஆபத்து நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 50 போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று ஜெயிலில் இருந்து விடுதலையான நளினி, கணவர் முருகனை சந்திப்பதற்காக காட்பாடியில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் நேராக முகாமுக்கு சென்று கணவரை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் வழக்கறிஞர்கள் உள்பட 7 பேர் உடனிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற நளினி, கலெக்டரிடம் தனது மகன் லண்டனில் வசிப்பதாகவும், அங்கு தனது கணவரையும் அழைத்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டார். அதற்கு கலெக்டர் பிரதீப் குமார், இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்குமாறு கூறினார்.

    • என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன். எனது மகளுடன் லண்டனில் தங்கவே விரும்புகிறோம்.
    • தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது விடுதலைப் புலிகள் தற்கொலைப்படையால் கொல்லப்பட்டார்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேர் நேற்று ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தனர்.

    வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து முதலில் நளினி வெளியே வந்தார். அங்கிருந்து காரில் ஆண்கள் ஜெயிலுக்கு காரில் வந்தார். பின்னர் ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகன், சாந்தன் இருவரும் வெளியே வந்தனர். முருகன் கையை பிடித்து நளினி கண்ணீர் மல்க வரவேற்றார்.

    முருகன், சாந்தன் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை போலீசார் திருச்சியில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

    நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார். உடன் அவரது தாய் மற்றும் சகோதரர் தங்கி உள்ளனர்.

    பின்னர் நளினி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    1991-ம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியான ராஜீவ் காந்தி மற்றும் போலீசார் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக மிகவும் வருந்துகிறேன், நாங்கள் அதை நினைத்து பல வருடங்கள் வருத்தப்பட்டோம்.

    ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் என்னைச் சந்திக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் என்னைப் பார்க்க வேண்டிய நேரம் கடந்து விட்டதாக நான் நினைக்கிறேன்.

    அவர்கள் தங்கள் அன்பானவர்களை இழந்துவிட்டனர். அந்த சோகத்திலிருந்து எந்த நேரத்திலும் வெளியே வருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

    பிரியங்கா காந்தி என்னை சந்தித்து விட்டு சென்ற பிறகு அவர் பத்திரமாக செல்ல வேண்டும் என நான் கடவுளை வேண்டிக்கொண்டேன்.

    நரகம், சாக்கடை, புதைக்குழி, சுடுகாடு அப்படித்தான் சிறை வாழ்க்கையை நினைத்தேன். ஆனால் ஜெயில் ஒரு பெரிய பல்கலைக்கழகம். அங்கு நிறைய கற்றுக்கொண்டேன்.

    சிறையில் இருந்த போது முயற்சியை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். வழக்கு நடந்த போதும் சிறையில் இருந்த போதும் இந்த வழக்குக்காக நான் ஒருபோதும் பயப்படவில்லை. ஏனென்றால் நான் தவறு செய்யவில்லை. நான் நானாக இருப்பேன். என்னை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக என்னை ஏற்றுக் கொள்வார்கள்.

    என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன். எனது மகளுடன் லண்டனில் தங்கவே விரும்புகிறோம்.

    தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. இந்த 10 மாத பரோல் எனக்கு பெரும் உதவியாக இருந்தது.

    ஜெயிலில் இருந்த போது ஆன்மீகம், யோகா போன்றவற்றில் அதிக நாட்டம் செலுத்தினேன். இந்த விடுதலையை ஒரு மிராக்கிளாகவே எனது கணவர் பார்க்கிறார்.

    இன்னும் தாமதம் ஆகும் என நினைத்திருந்த நிலையில் இந்த விடுதலை பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    பேரறிவாளனும் நானும் தொடர்ந்து சட்ட போராட்டத்தை நடத்திக்கொண்டே இருந்தோம். பேரறிவாளன் என்னென்ன செய்கிறார் என்பதை நானும் தொடர்ந்து அறிந்து வந்தேன்.

    7 பேர் விடுதலை என நினைத்திருந்த நேரத்தில் ஒருவர் மட்டும் விடுதலையான தகவல் வந்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது.

    கெங்கையம்மன் கோவிலுக்கு போக வேண்டும். தீமிதிக்க வேண்டும் எனது மகளுக்கு துலாபாரம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

    நீ என் மகாராணி நீ யாரிடமும் கையேந்த கூடாது நான் உன்னை பார்த்து கொள்வேன் என்று எனது கணவர் கூறியுள்ளார். அவர் உள்ளவரை எனக்கு கவலை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய சிறைகளில் இருந்து நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    • மத்திய உள்துறை அனுமதி கிடைத்ததும் விரைவில் 4 பேரும் விடுவிக்கப்படுவார்கள்.

    திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர்.

    சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் உள்பட நைஜீரியா, பல்கேரியா, வங்காளதேசம், இந்தோனேசியா உள்பட 130 வெளிநாட்டினர் இந்த முகாமில் தங்கி உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்படும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.

    இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் சென்னை புழல் சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு நேற்று நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர்.

    அவர்களின் வருகையை சிறப்பு முகாமின் பொறுப்பு அதிகாரி சப்-கலெக்டர் வேலுமணி முறைப்படி பதிவு செய்தார். பின்னர் அவர்கள் அங்குள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக இவர்கள் 4 பேரும் இங்கு அழைத்து வரப்பட்டதையொட்டி, திருச்சி மத்திய சிறை வளாகத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    நான்கு பேரும் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் வெளிநாட்டினர் என்பதால் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்வதும், வெளிநாட்டினர் என பதிவு செய்து இந்தியாவில் தங்கி இருப்பதும், இலங்கை தமிழர் நலவாழ்வு முகாமுக்கு செல்வதும் அவர்களின் விருப்பம் என்றும், மத்திய உள்துறை அனுமதி கிடைத்ததும் விரைவில் அவர்கள் இங்கிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விடுதலைக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
    • நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரும் விடுதலை.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த பேரறிவாளன் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த கடந்த கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

    இதேபோல் மற்ற 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

    உச்சநீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பட்டதை அடுத்து மதுரை சிறையில் இருந்து ரவிச்சந்திரனும் விடுதலையானார். சிறைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், துயரம் தனக்கானது என்றும், மகிழ்ச்சி, தமிழ் கூறும் நல் உலகம் அனைவருக்குமானது என்றும் கூறினார்.

    ஏழு பேர் விடுதலைக்காக உயிர் நீத்த செங்கொடி தியாகத்தை நினைவு கூறுவதாக அவர் தெரிவித்தார். நீண்ட நெடிய வழக்கு முற்றுப் பெற்று ஏழு பேரும் விடுதலையாக காரணமாக இருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது.
    • உத்தரவு நகல் கிடைத்த நிலையில் நளினி இன்று விடுதலை ஆனார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1998ம் ஆண்டு 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில், படிப்படியாக 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர். அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே, பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. 32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பேரறிவாளன் கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

    இதையடுத்து நளினி உள்பட மற்றவர்களும் தங்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்பு நேற்று விசாரணை நடந்து வந்தது. இதன் முடிவில், நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினம் ஆகியோர் அதிரடியாக உத்தரவிட்டனர்.

    பரோலில் உள்ள நளினிக்கு விடுதலை தொடர்பான உத்தரவு நகல் கிடைத்தது. பரோலில் இருந்த நளினியை சிறைக்கு அழைத்துச் சென்று, விடுதலைக்கான நடைமுறைகளை செயல்படுத்தியது சிறைத்துறை.

    இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து வேலூர் மத்திய சிறையில் இருந்து நளினி விடுதலை ஆனார். 31 ஆண்டுகள் கழித்து என் மகள் விடுதலையாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என நளினியின் தாயார் பத்மா தெரிவித்தார்.

    நளினியைத் தொடர்ந்து முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் சிறை நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை ஆகினர்.

    • நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்பு நேற்று விசாரணை நடந்து வந்தது.
    • உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இன்று விடுதலையாக வாய்ப்பு இல்லை.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1998ம் ஆண்டு 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

    இதில், படிப்படியாக 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர். அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது.

    32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பேரறிவாளன் கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து நளினி உள்பட மற்றவர்களும் தங்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இதுதொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்பு நேற்று விசாரணை நடந்து வந்தது.

    இதன் முடிவில், நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினம் ஆகியோர் அதிரடியாக உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், பரோலில் உள்ள நளினி விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இன்று விடுதலையாக வாய்ப்பு இல்லை என்று வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனால், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் திங்கட்கிழமை விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    • 6 பேர் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற எஞ்சிய 6 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு விடுவிப்பதாக அறிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி இதனை தெளிவாக விமர்சிக்கிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்ற நிலையை எடுக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு செயல்பட்டுவிட்டது. 6 பேர் விடுதலை முற்றிலும் தவறானது, துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.

    • தாயார் ராஜேஸ்வரிக்கு மருத்துவச் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது.
    • பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, ரவிச்சந்திரன் கடந்த மாதம் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    எட்டயபுரம்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள சூரப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஆவார்.

    இவரது தாயார் ராஜேஸ்வரிக்கு மருத்துவச் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது. இதைத்தொடர்ந்து ரவிச்சந்திரன் சூரப்பநாயக்கன்பட்டிக்கு சென்று தங்கினார்.

    அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை, ஓய்வு தேவை என்ற அடிப்படையில் டிசம்பர் 17-ந் தேதியில் இருந்து அடுத்தடுத்து பரோல் நீட்டிக்கப்பட்டது.

    இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனையில் அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அவருக்கு இதய பாதிப்பு, மன அழுத்தம் இருப்பதால் கூடுதல் ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பை மேலும் நீட்டிக்குமாறு அவரது தாயார் மற்றும் வழக்கறிஞர் திருமுருகன் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இன்றுடன் பரோல் முடிவடைந்து சிறைக்கு செல்ல இருந்தார்.

    இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு மருத்துவர்களின் ஆலோசனையின்படி ஓய்வு தேவைப்படுவதால் தமிழக அரசு 8-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி உள்ளது.

    பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, ரவிச்சந்திரன் கடந்த மாதம் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×