search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராஜீவ் காந்தி கொலை வழக்கு - நளினி உள்பட 5 பேர் விடுதலை
    X

    நளினி

    ராஜீவ் காந்தி கொலை வழக்கு - நளினி உள்பட 5 பேர் விடுதலை

    • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது.
    • உத்தரவு நகல் கிடைத்த நிலையில் நளினி இன்று விடுதலை ஆனார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1998ம் ஆண்டு 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில், படிப்படியாக 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர். அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே, பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. 32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பேரறிவாளன் கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

    இதையடுத்து நளினி உள்பட மற்றவர்களும் தங்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்பு நேற்று விசாரணை நடந்து வந்தது. இதன் முடிவில், நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினம் ஆகியோர் அதிரடியாக உத்தரவிட்டனர்.

    பரோலில் உள்ள நளினிக்கு விடுதலை தொடர்பான உத்தரவு நகல் கிடைத்தது. பரோலில் இருந்த நளினியை சிறைக்கு அழைத்துச் சென்று, விடுதலைக்கான நடைமுறைகளை செயல்படுத்தியது சிறைத்துறை.

    இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து வேலூர் மத்திய சிறையில் இருந்து நளினி விடுதலை ஆனார். 31 ஆண்டுகள் கழித்து என் மகள் விடுதலையாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என நளினியின் தாயார் பத்மா தெரிவித்தார்.

    நளினியைத் தொடர்ந்து முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் சிறை நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை ஆகினர்.

    Next Story
    ×