search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajeev Shukla"

    மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாடமாட்டோம் என ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். #IPLChariman #RajeevShukla #India #Pakistan
    புதுடெல்லி:

    இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சேர்மன் ராஜீவ் சுக்லா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானதாகும். மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாடமாட்டோம். எல்லாவற்றையும் விட விளையாட்டு மேலானது தான். அதேநேரத்தில் யாரோ சிலர் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்தால் அது நிச்சயம் விளையாட்டையும் கூட பாதிக்க தான் செய்யும்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். அது குறித்து தற்போது எங்களால் எதுவும் சொல்ல முடியாது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பொறுத்து இருந்து பார்ப்போம்.

    பாகிஸ்தானின் செயல்பாட்டால் ஏற்பட்டுள்ள கோபத்தால் மக்கள் தங்கள் கருத்தை இதுபோன்று பிரதிபலிக்கிறார்கள். பாகிஸ்தான் தங்களது செயல்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். அவர்கள் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது. இதனை தான் நாம் தொடக்கம் முதலே சொல்லி வருகிறோம். தீவிரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து நமது அரசு நூற்றுக்கணக்கான ஆதாரங்களை அளித்து இருக்கிறது. அதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.
    உத்தரபிரதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வீரரிடம் பணம் கேட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வீரரிடம் பணம் கேட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஐ.பி.எல். சேர்மனான ராஜீவ் சுக்லா உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனராகவும் இருக்கிறார். இவரது நிர்வாக உதவியாளராக அக்ரம் சைபி என்பவர் இருந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.



    இந்த நிலையில் அக்ரம் சைபி மீது உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் ஷர்மா திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். ‘உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் பணம் மற்றும் இதர வகையில் தன்னை கவனிக்க வேண்டும் என்று அக்ரம் சைபி என்னிடம் தெரிவித்தார். மேலும் அவர் போலி வயது சான்றிதழ் அளித்து வருகிறார்’ என்றும் குற்றம் சாட்டி இருந்தார். அத்துடன் அக்ரம் சைபி, ராகுல் ஷர்மா ஆகியோர் இடையிலான உரையாடல் இந்தி சேனலில் ஒளிபரப்பானதால் சர்ச்சை கிளம்பியது.

    இதைத் தொடர்ந்து ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளர் அக்ரம் சைபியை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கமிஷனர் ஒருவரை நியமிக்கவும் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கமிஷனர் நியமிக்கப்பட்டதும் அவர் அக்ரம் சபியிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிப்பார். அந்த அறிக்கையை ஆய்வு செய்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு இறுதி தீர்ப்பை வழங்கும்.

    இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித்சிங்கிடம் கேட்ட போது, ‘டெலிவிஷனில் வெளியான ஆடியோ உள்பட அனைத்து விஷயங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தும் முன்பு நாங்கள் கருத்து எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவித்தார்.

    உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் சங்க இணைசெயலாளர் யுத்வீர் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘அணி தேர்வில் தவறு எதுவும் நடக்கவில்லை. எந்த மாதிரியான விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அணி தேர்வு விஷயத்தில் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் வெளிப்படையான முறையில் தான் செயல்படுகிறது. அவர்கள் இருவர் இடையே நடந்த உரையாடல் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட விஷயமாகும். ராகுல் ஷர்மா மாநில அணியின் உத்தேச பட்டியலில் கூட ஒருபோதும் இடம் பிடித்தது கிடையாது. அதற்குரிய தகுதியும் அவருக்கு இல்லை’ என்றார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரரும், உத்தரபிரதேச அணியின் முன்னாள் கேப்டனுமான முகமது கைப் தனது டுவிட்டர் பதிவில், ‘உத்தரபிரதேச கிரிக்கெட் அணி தேர்வில் ஊழல் நடப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெறுவதை ராஜீவ் சுக்லா உறுதி செய்வார் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே தன் மீதான புகாரை மறுத்துள்ள அக்ரம் சைபி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
    மாநில அணிக்கு இடம்பெற வேண்டுமென்றால் பெண்களை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கூறியதாக உபி வீரர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
    உத்தர பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தில் முஹமது அக்ரம் சைபி எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், இவர் அம்மாநில கிரிக்கெட் சங்கத்தில் செல்வாக்கு உள்ளவராகவே இருக்கிறார். இவர் ஐபிஎல் கிரிக்கெட் தலைவர் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளராக உள்ளார். இவர் பிசிசிஐயில் சம்பளம் பெறும் பணியாளராக இருக்கிறார்.

    உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா, தான் மாநில அணியில் விளையாட வேண்டுமானால் பெண்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என முஹமது அக்ரம் சைபி கேட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ராகுல் சர்மாவிடம் முஹமது அக்ரம் சைபி பணம் மற்றும் வேறு வகையான ஏற்பாடுகளை செய்ய கேட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது கிரிக்கெட் உலகில் புயலைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக, ஒரு இந்தி சேனல் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கத்தில் செல்வாக்குள்ள முஹமது அக்ரம் சைபி உள்நோக்கத்துடன் ராகுல் சர்மாவிடம் கேட்கிறார். மாநில அணியில் விளையாட விருப்பம் என்றால் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு பெண்களை அனுப்பு என கேட்கிறார்.

    மற்றொரு ஆடியோவில் சில போட்டிகளுக்குப் பிறகு மாநில அணியில் ராகுல் சர்மா இடம் பெறுவார் என்று உறுதியளித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த ஆடியோ பெரும் சர்ச்சைப் புயலை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பதிலளித்துள்ள முஹமது அக்ரம் சைபி, தன் மீதான குற்றச்சாட்டை முழுவதுமாக மறுத்துள்ளார். முஹமது அக்ரம் சைபி கூறுகையில், "எனக்கு பெண்ணை அனுப்பியதாக அந்த பையன் சொல்கிறான். அவனுடைய குற்றச்சாட்டு உண்மையாக இருந்திருந்தால் அவன் கிரிக்கெட் விளையாடியிருக்கனும். இதுதானே சரி?. அவர் விளையாடினானா? இல்லை. அவன் விளையாடியிருந்தார் குற்றச்சாட்டு உண்மையாக இருந்திருக்கும்.



    60 பேர் கொண்ட உத்தர பிரதேச அணிக்கான பட்டியலில் அவனது பெயர் இல்லை. அவன் இதுவரை எந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "விரைவில் உண்மை வெளிவரும். நான் ராஜீவ் சுக்லா போன்ற பெரிய மனிதர்களுடன் வேலை செய்கிறேன். அதனால், எல்லா மூலைகளிலிருந்தும் என் மீது பலர் தாக்குதல் நடத்துவது இயல்பு. இது எனக்கு நெருக்கமானவர்கள் உள்பட அதிருப்தியடைந்தவர்களால் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளேஆப் மற்றும் இறுதிப்போட்டிகள் துவங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #IPL2018 #RajeevShukla
    புதுடெல்லி:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களில் முதலாவது தகுதி சுற்று மும்பையில் வருகிற 22-ந் தேதியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் 23-ந் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் 25-ந் தேதியும், இறுதிப்போட்டி மும்பையில் 27-ந் தேதியும் நடக்கிறது.



    முதலில் இந்த ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆட்டங்கள் அனைத்தும் ஒரு மணி நேரம் முன்னதாக இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா நேற்று அறிவித்தார்.

    இது தொடர்பாக ராஜீவ் சுக்லா ஒரு டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடைபெற்று வருவதற்கு ரசிகர்களின் ஆதரவு தான் முக்கிய காரணம். மைதானம் வந்தும், வீட்டில் டி.வி.யிலும் ரசிகர்கள் ஐ.பி.எல். போட்டியை ரசித்து வருகிறார்கள். ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஸ்டேடியத்துக்கு வரும் பார்வையாளர்கள் மட்டுமின்றி வீட்டில் டி.வி.யில் பார்க்கும் அலுவலகம் செல்வோர் மற்றும் மாணவர்கள் அடுத்த நாள் காலையில் தங்களது பணிகளை கவனிக்க வேண்டியது உள்ளது. எனவே ஒரு மணி நேரம் முன்னதாக தொடங்கினால் அவர்கள் அடுத்த நாள் தங்களது பணிகளை கவனிக்க எளிதாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். #IPL2018 #RajeevShukla #tamilnews
    ×