என் மலர்
ஆன்மிகம்
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பச்சை பயறு சுண்டல், எலுமிச்சை சாதம் மற்றும் ரவை கேசரி செய்து துர்கைக்கு படைக்கலாம். முதலில், பச்சை பயறு சுண்டல் எப்படி செய்வது என்று பார்ப்போம்..
பச்சை பயறு சுண்டல்:
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சில இலைகள்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
* பச்சை பயறை நன்கு கழுவி, போதுமான தண்ணீர் சேர்த்து 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
* ஊறிய பயறை உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.
* வெந்த பச்சை பயறில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வடித்து, தனியாக வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பிறகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* இப்போது கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
* வடித்து வைத்துள்ள பச்சை பயறை வாணலியில் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
எலுமிச்சை சாதம்:
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப் (வேகவைத்து, ஆறவைத்தது)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1.5 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1.5 டீஸ்பூன்
வேர்க்கடலை - ½ கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 1-2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - ½

செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின்னர், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மற்றும் உப்பு சேர்க்கவும்.
அனைத்தையும் கலந்து, அடுப்பை அணைத்துவிட்டு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
இந்தக் கலவையை ஆறவைத்த சாதத்துடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
நவராத்திரியின் மூன்றாம் நாள் பிரசாதமாக வழங்கலாம்.
ரவை கேசரி
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி மற்றும் திராட்சை
சர்க்கரை அல்லது பனை வெல்லம்
தண்ணீர் அல்லது பால்
ஏலக்காய் தூள்

செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுக்கவும்.
* அதே நெய்யில் ரவையைச் சேர்த்து, நிறம் மாறாமல் நன்றாக வறுக்கவும்.
* தண்ணீரை கொதிக்க வைத்து, வறுத்த ரவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.
* ரவை வெந்ததும், சர்க்கரை அல்லது பனை வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறவும்.
* கடைசியாக, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறலாம்.
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
அதன்படி, நவராத்திரியின் 3ம் நாளான இன்று சந்திரகாந்தா தேவியை வழிப்படுகிறது.
சந்திரகாந்தா மந்திரம் என்பது நவதுர்கைகளில் மூன்றாவதான சந்திரகாந்தா தேவியை துதிக்கும் சக்திவாய்ந்த மந்திரங்களாகும்.
சந்திரகாந்தா தேவிக்கு உகந்த மந்திரங்கள் குறித்து பார்க்கலாம்..
மந்திரங்கள்:
*ஓம் தேவி சந்திரகாந்தாயை நமஹ.
* பிண்டஜ ப்ரவராரூடா சண்டகோபாஸ்த்ரகைர்யுதா பிரசாதம் தனுதே மஹ்யம் சந்திரகந்தேதி விஸ்ருதா
* யா தேவி சர்வபூதேஷு மாம் சந்திரகண்ட ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
விளக்கம்:
இந்த மந்திரம், துர்காதேவியின் ஒரு வடிவமான சந்திரகாந்தா தேவியை சரணடைவதாகவும், அவளுடைய அருள், தைரியம், பாதுகாப்பு, மற்றும் தடைகளை நீக்கும் வலிமையைக் கோருவதாகவும் பொருள்படும்.
இந்த மந்திரங்கள் தேவியின் அருளைப் பெறவும், தடைகளை நீக்கவும், ஞானம் மற்றும் பலத்தை பெறவும் உச்சரிக்கப்படுகின்றன.
- மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.
- கடந்த 2015, 2018-ம் ஆண்டுகளில் 2 பிரம்மோற்சவங்கள் நடந்தன.
புரட்டாசி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளே, திருப்பதி ஏழுமலையானின் பிறந்தநாளாக கருதப்படுகிறது.
இந்த நாளுக்கு முன்பாக 9 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாதான் 'பிரம்மோற்சவம்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதனை 'திருக்கொடி திருநாள்' என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.
கடந்த 2015, 2018-ம் ஆண்டுகளில் 2 பிரம்மோற்சவங்கள் நடந்தன. அதன்பிறகு 2023-ம் ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற்றன. அதன்படி 2026-ம் ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் கொண்டாடப்பட இருக்கிறது.
- லட்சுமி தேவியை பிரிந்த மகாவிஷ்ணு, பூலோகத்தில் சீனிவாசனாக அவதரித்தார்.
- திருமலையில் தேர்த்திருநாளன்று பெருமாளுடைய திருத்தேர் முன்பு பிரம்ம ரதம் இழுத்துச் செல்லப்படுகிறது.
பிரம்மோற்சவம்
திருமலையில் வேங்கடநாதனுக்கு, 'படைத்தல்' கடவுளான பிரம்மனே முன்னின்று நடத்திய விழாதான் 'பிரம்மோற்சவம்'.
புரட்டாசி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளே, உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானின் பிறந்தநாளாக கருதப்படுகிறது.
இந்த நாளுக்கு முன்பாக 9 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாதான் 'பிரம்மோற்சவம்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதனை 'திருக்கொடி திருநாள்' என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
இந்த விழா கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் குறித்து புராணங்களில் கூறப்படுவதாவது:-
பிரம்மோற்சவம் பிறந்த கதை
லட்சுமி தேவியை பிரிந்த மகாவிஷ்ணு, பூலோகத்தில் சீனிவாசனாக அவதரித்தார். அப்போது அவர், சேஷாசலம் என போற்றப்படும் திருமலையில் இருந்த ஒரு புற்றினுள் அமர்ந்து தவம் செய்தார். அப்போது முனிவர்களுக்கும், மக்களுக்கும் அரக்கர்கள் பெருந்துன்பம் செய்து வந்தனர்.
இதனால் துயருற்ற முனிவர்கள், புற்றினுள் தவம் இருந்த திருமாலை சந்தித்து தங்கள் குறை தீர்க்க வேண்டினர். இதைக்கேட்ட திருமால், அந்த அரக்கர்களை அழித்து வருமாறு, தமது கையில் இருந்த சக்கரத்தாழ்வாரான சுதர்சனருக்கு கட்டளையிட்டார்.
அவரும், வீரபுருஷனாக உருக்கொண்டு 4 திசைகளுக்கும் பறந்து சென்று எல்லா அரக்கர்களையும் அழித்து வெற்றிக்கொண்டார்.
பின்னர், திருமால் முன்னால் வந்து நின்ற சுதர்சனருக்கு, பரிசளிக்க விரும்பிய பெருமாள், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
பிரம்ம ரதம்
உடனே சுதர்சனர், "பகவானே, தாங்கள் வீற்றிருக்கும் இத்திருத்தலத்தில் தங்களுக்கு பெரியதொரு உற்சவம் நடத்தி காண விரும்புகிறேன்" என்று வேண்டினார்.
தனக்கென எதுவும் கேட்காத சுதர்சனரின் வேண்டுகோளுக்கு திருமால் இணங்க, பிரம்மதேவர் உரிய ஏற்பாடுகளைச் செய்தார். ஒரு புரட்டாசி மாதத்தில், சுதர்சனரின் வேண்டுகோளின்படி பிரம்மதேவனால் திருமலையில் கோலாகலமாக உற்சவம் நடத்தப்பட்டது. அன்று முதல் திருமலையில் பிரம்மோற்சவம் நடந்து வருவதாக அந்த கதை கூறுகிறது.
அதனால்தான், இன்றளவும் திருமலையில் தேர்த்திருநாளன்று பெருமாளுடைய திருத்தேர் முன்பு பிரம்ம ரதம் இழுத்துச் செல்லப்படுகிறது.
அதேபோல பிரம்மோற்சவ விழா நாட்களில் நடைபெறும் வாகனசேவைகளின்போது, சக்கரத்தாழ்வார் முன்னே செல்வது வழக்கமாக இருக்கிறது.
9 நாட்கள் உற்சவம்
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண (சிரவணம்) நட்சத்திரமும், நவராத்திரி கொண்டாட்டமும் இணைந்தே வரும். இச்சமயத்தில் திருமலையில் ஒரு பிரம்மோற்சவம் நடைபெறும்.
சில ஆண்டுகளில் புரட்டாசி மாதத்தில் இரண்டு திருவோண நட்சத்திர நாட்கள் வரும். அப்போது முதல் திருவோண நாளில் ஆகம முறைப்படி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா எடுப்பார்கள். பின்னர், இரண்டாவது திருவோண நாளில் 'லவுகீக' முறைப்படி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு உற்சவங்களும் சிரவண தீர்த்தவாரியுடன் (சக்கரஸ்நானம்) நிறைவடையும்.
பிரம்மோற்சவம் நடைபெறும் முந்தைய நாள் ஏழுமலையான் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வாசனை திரவியங்கள் பூசப்படும். தொடர்ந்து, ஏழுமலையானின் சேனாதிபதியாக கருதப்படும் விஸ்வசேனருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த ஆண்டு இன்று 24-ந்தேதி (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வரும் உற்சவரான மலையப்ப சாமியை காண, கண்கள் கோடி வேண்டும்.
ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக கருடசேவை, தங்கத் தேரோட்டம், தீர்த்தவாரி ஆகியவை நடைபெறும் நாட்களில், மலையா... பக்தர்களின் தலையா எனும் அளவுக்கு திருமலையே கோலாகலமாக இருக்கும்.
- முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
- ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.
முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.
பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் இரண்டாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..
மூன்றாம் நாள் போற்றி
ஓம் அறிவினுக்கறிவேபோற்றி
ஓம் ஞானதீபமேபோற்றி
ஓம் அருமறைப் பொருளேபோற்றி
ஓம் ஆதிமூலமாய் நின்றவளேபோற்றி
ஓம் புகழ்தரும் புண்ணியளேபோற்றி
ஓம் நற்பாகின் சுவையே போற்றி
ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி
ஓம் பரமனின் சக்தியேபோற்றி
ஓம் பாபங்கள் களைவாய்போற்றி
ஓம் அன்பெனும் முகத்தவளேபோற்றி
ஓம் அகிலத்தின் காப்பேபோற்றி
ஓம் செம்மேனியளேபோற்றி
ஓம் செபத்தின் விளக்கமேபோற்றி
ஓம் தானியந் தருவாய் போற்றி
ஓம் கல்யாணியம்மையேபோற்றி
- இன்று முதல் வருகிற 2-ந் தேதி வரை அனைத்து வி.ஐ.பி தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- தினமும் 60 டன் பூக்களை கொண்டு சாமிக்கு மலர் அபிஷேகம் நடத்தப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்க உள்ளார்.
பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்திற்கான கயிறு மற்றும் தர்ப்பை ஊர்வலமாக கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5.43 மணி முதல் 6.15 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 16 வகையான சிறப்பு உணவுகள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மாட வீதிகளின் வாகன சேவையை காண காத்திருக்கும் 35 ஆயிரம் பக்தர்கள் 45 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றப்பட்டு அனைவரும் வாகன சேவையை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
மாட வீதிகளுக்கு வெளியே உள்ள பக்தர்கள் வாகன சேவையை பார்க்கும் வகையில் 36 இடங்களில் பெரிய திரைகள் மூலம் ஒளிபரப்பப்படுகிறது.
இன்று முதல் வருகிற 2-ந் தேதி வரை அனைத்து வி.ஐ.பி தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் 60 டன் பூக்களை கொண்டு சாமிக்கு மலர் அபிஷேகம் நடத்தப்படும். 29 மாநிலங்களை சேர்ந்த 229 கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
3500 தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், டீ, காபி ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து மலைக்கு செல்ல 4 நிமிடங்களுக்கு ஒரு அரசு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்ற சம்பவங்களை கண்காணிக்க 3 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள், 4,700 போலீசார் மற்றும் 450 மூத்த அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக தினமும் 8 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். வெளியூர் பயணங்களை செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். பணவரவு திருப்தியாக இருக்கும். தொழில் வளர்ச்சி உண்டு.
மிதுனம்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உடல் நலனில் அக்கறை காட்டும் சூழ்நிலை அமையும். விரயங்களால் கலக்கமடைவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சனை உண்டு.
கடகம்
முட்டுக்கட்டைகள் அகன்று முன்னேற்றம் கூடும் நாள். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
சிம்மம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். சந்தோஷமான அனுபவங்கள் மூலம் மனதில் உற்சாகமும், தெம்பும் கூடும்.
கன்னி
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.
துலாம்
செல்வநிலை உயரும் நாள். பயணங்கள் செல்ல திட்டமிட்டுப் பின்னர் அதை மாற்றம் செய்வீர்கள். உங்கள் சொற்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு உண்டாகும்.
விருச்சிகம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் வெற்றி நடைபோடும்.
தனுசு
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். அதிக செலவில் முடிக்க நினைத்த வேலையொன்றை குறைந்த செலவில் முடிப்பீர்கள்.
மகரம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். வியாபாரத்தில் உள்ள மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சொந்த பந்தங்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் அகலும்.
கும்பம்
கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மீனம்
இறை வழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
- முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை.
- வாழ்க்கையில் சங்கடங்கள் நீங்கி, வெற்றி வாய்ப்புகள் பெருகும் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாதம் ஒரு புனிதமான மாதமாகும். கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் இம்மாதத்தில் பெண் தெய்வத்தை வழிபாட்டால் பெருமை சேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே சக்தி வழிபாட்டால் சஞ்சலம் தீர்க்கும் மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி விழாவை கொண்டாடினால் நலம் யாவும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான சிவன், பிரம்மா, விஷ்ணுவின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை பூமாலை சூடியும், பாமாலை பாடியும் வழிபட்டால் பிரச்சனைகள் அகலும். பொருள் செல்வம் கூடும். வாழ்க்கையில் சங்கடங்கள் நீங்கி, வெற்றி வாய்ப்புகள் பெருகும் என்பது ஐதீகம். அந்த அடிப்படையில் உருவானதுதான் நவராத்திரி விழா.
இந்த நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை. ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும்.
எனவே தான் 'வீரம்' தரும் துர்கா தேவியை முதல் மூன்று நாட்களும், 'செல்வம்' தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், 'கல்விச் செல்வம்' தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவ்வாறு வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.
இதனை தொடர்ந்து இல்லங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள்.
நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று திரிதியை திதியில் வரும் புதன்கிழமையான இன்று அசுரர்களை அழித்த சந்திரகாந்தா தேவிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் ராயல் ப்ளூ நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஏனெனில் இந்நிறம் அமைதியை பிரதிபலிக்கிறது. ராயல் ப்ளூ நிறத்திலான பொருட்களை கொண்டு பூஜை அறையை அலங்கரிக்கலாம்.
இந்நாளில் வீரியம், துணிவு, கருணை என பன்முகம் கொண்ட சந்திரகாந்தா தேவிக்கு பிடித்தமான வெள்ளை தாமரை மற்றும் மஞ்சள் நிற ரோஜாக்களை சமர்பித்து வழிபட்டு சகல செல்வங்களும் பெறுவோமாக!
- சந்திரகாந்தா தேவி துர்கா தேவியின் மூன்றாவது வடிவம்.
- அசுரர்களின் தலைவன் ஜதூகசுரன் தேவலோகத்தையும், மானிடர்களையும், பூலோகத்தையும் துன்புறுத்தினான்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை வழிபடுவதற்கான காலம்.
நவராத்திரி 3-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் சந்திரகாந்தா தேவி. இவர் துர்கா தேவியின் மூன்றாவது வடிவம் ஆவார்.
சந்திரகாந்தா தேவி
பார்வதி தேவி, மகிஷாசுரனை அழிக்க சக்தியாகிய துர்காவாக அவதரித்தபோது பல்வேறு வடிவங்களில் தோன்றினாள்.
சத்யுகத்தில், ஹிமவந்தன் (இமயமலை) மகளான பார்வதி, சிவபெருமானை கணவனாகப் பெற விரும்பினார். அவர் பல வருடங்கள் கடுமையான தவம் செய்து சிவனைத் துதித்தார். இறுதியில் சிவபெருமான் சம்மதித்து, அவர்களின் திருமண நாள் நிர்ணயிக்கப்பட்டது. பார்வதி திருமண அலங்காரத்தில் புனித வடிவம் எடுத்தார். அப்போது அவரது நெற்றியில் நிலவும் பிரகாசத்தைப் போல ஒரு சந்திரக்கலையுடன் தோன்றினார். அந்த வடிவமே சந்திரகாந்தா.
சந்திரகாந்தா தேவியின் கதை:
முன்னொரு காலத்தில் அசுரர்களின் தலைவன் ஜதூகசுரன் தேவலோகத்தையும், மானிடர்களையும், பூலோகத்தையும் துன்புறுத்தினான். அவனது சக்திக்கு முன் தேவதைகள் பலவீனமடைந்தனர். அப்போது, மகாதேவி பார்வதி ஒரு புதிய ரூபத்தில் தோன்றி, தன் நெற்றியில் சந்திரனை அலங்கரித்து, சிங்கத்தில் ஏறி, கையில் பல ஆயுதங்களுடன் அசுரர்களை அழிக்க முனைந்தார்.
ஜதூகசுரன் மிகுந்த பலம் நிறைந்தவனாக இருந்தான். அவனை எதிர்த்து, சந்திரகாந்தா தேவி தேவசேனையை வழிநடத்தி யுத்தம் புரிந்தார். அவர் சிங்கத்தில் ஏறி கம்பீரமாக போராடினார். அசுரர்களின் பல ஆயிரம் படைகளை அழித்து, இறுதியில் ஜதூகசுரனையும் வதம் செய்தார்.
சந்திரகாந்தா தேவியின் கதை, தைரியம், கருணை மற்றும் நீதியின் சக்தி என்பதைக் காட்டுகிறது.
சிவபெருமானை மணந்த பிறகு அவள் தலையை அரை நிலவால் அலங்கரித்ததாகக் கூறப்படுகிறது. அவர் துணிச்சலையும் தைரியத்தையும் பிரதிபலிக்கிறார். அவள் பத்து கைகளுடன் திரிசூலம், கதாயுதம், வில், அம்பு, தாமரை, வாள், மணி மற்றும் ஒரு நீர்க்குடம் ஆகியவற்றை ஏந்தியபடி காட்சியளிக்கிறாள். அவள் புலியின் மீது அமர்ந்திருப்பாள்.
ஸ்லோகம்:
"ஓம் தேவி சந்திரகண்டாயை நமஹ" என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
- மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோலாட்ட அலங்காரத்துடன் கொலு தர்பார் காட்சி.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-8 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை (முழுவதும்)
நட்சத்திரம் : சித்திரை மாலை 4.34 மணி வரை பிறகு சுவாதி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் பிரம்மோற்சவம் ஆரம்பம். பெரிய சேஷ வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோலாட்ட அலங்காரத்துடன் கொலு தர்பார் காட்சி. குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் அலங்காரம். சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் மகேஸ்வரி விருஷப சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம், மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-வெற்றி
கடகம்-உண்மை
சிம்மம்-துணிவு
கன்னி-லாபம்
துலாம்- சுகம்
விருச்சிகம்-வரவு
தனுசு- தேர்ச்சி
மகரம்-பெருமை
கும்பம்-உவகை
மீனம்-நன்மை
- திருப்பதி ஏழுமலையான் விழா தொடக்கம்
- மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி.
இந்த வார விசேஷங்கள்
23-ந் தேதி (செவ்வாய்)
* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலம்.
* காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், அருப்புக்கோட்டை சவுடாம்பிகை அம்மன் தலங்களில் நவராத்திரி அலங்கார சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சமநோக்கு நாள்.
24-ந்தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* நாட்டரசன்கோட்டை உற்சவம் ஆரம்பம்.
* திருப்பதி ஏழுமலையான் விழா தொடக்கம்
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜாங்க சேவை, மாலை அமிர்த வீணை மோகினி அலங்காரம்.
* சமநோக்கு நாள்.
25-ந் தேதி (வியாழன்)
* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் பட்டாபிஷேக அலங்காரம்.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி கோலத்துடன் காட்சி.
* காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி, அருப்புக்கோட்டை சவுடாம்பிகை தலங்களில் நவராத்திரி அலங்கார காட்சி.
* சமநோக்கு நாள்.
26-ந் தேதி (வெள்ளி)
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர் ராமாவதார காட்சி.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் அனுமன் வாகனத்தில் பவனி.
* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி.
* கீழ்நோக்கு நாள்.
27-ந்தேதி (சனி)
* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசன் கருட வாகனத்தில் பவனி.
* சிருங்கேரி சாரதாம்பாள் மோகினி அலங்காரம்.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
28-ந் தேதி (ஞாயிறு)
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிசாசூர மர்த்தினி கோலம்.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
29-ந் தேதி (திங்கள்)
* திருப்பதி ஏழுமலையான் அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம்.
* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் புறப்பாடு.
* திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் யானை வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
- கடற்கரை மற்றும் குலசை பகுதியில் திரும்பி பக்கம் எல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
- இன்று முதல் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா பெருந் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர். இன்று அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வைத்து ஊர்வலம் நடந்தது.
கொடிப்பட்டம் கோவிலை வந்துசேர்ந்ததும் அதிகாலை 5.36 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் தீர்த்தம் எடுத்து ஓம்காளி, ஜெய்காளி கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர்.
இதனால் கடற்கரை மற்றும் குலசை பகுதியில் திரும்பி பக்கம் எல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோவிலில் இலவசமாக வழங்கிய மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு வாங்கி வலது கையில் கட்டினர்.
இதைத்தொடர்ந்து தாங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்களுக்கு பிடித்தமானவேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் பிரிக்க தொடங்குவார்கள். காலை 10 மணிக்கு சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானம் வழங்கும் பணி தொடங்கியது.
இன்று முதல் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
இன்று முதல் 1-ந் தேதி வரை தினசரி காலை 7.30 மணி, காலை 9 மணி, காலை 10.30 மணி, பகல் 12 மணி, பகல் 1.30 மணி, மாலை 4.30 மணி, மாலை 6 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், தினசரி மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.
இன்று முதல் 9-ம் திருவிழாவான 1-ந் தேதி வரை தினசரி இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு கோலத்தில் வீதியுலா நடக்கிறது.
6-ம் திருவிழா முதல் 10-ம் திருவிழா வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடம் அணிந்து மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சி நடத்துவார்கள்.
எனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தசரா பக்தர்களாக காட்சியளிப்பார்கள். 10-ம் திருவிழா அன்று 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் தொடர்ந்து இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி தொடர்ந்த பலலட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
வருகிற 3-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்காரம் முடிந்தவுடன் கடற்கரையில் அன்னைக்கு அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவில் முன்பு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனையும், 3 மணிக்கு அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து தேரில் பவனி வந்து தேர் நிலையம் சென்றடைதல், 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அபிஷேக ஆராதனையும், 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்படுதல் நடைபெறுகிறது.
பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முடிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.
12-ம் திருவிழாவான அக்டோபர் 4-ந் தேதி காலை 6 மணி, காலை 8 மணி, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது.
தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகமும் தசரா விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.






