என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • தங்கள் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டால் மத வாழ்க்கையில் இருந்து விலகிவிடுவார்கள் என்றும் அஞ்சுகின்றனர்.
    • இஸ்ரேலிய பாராளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் ஷாஸ் கட்சி புதன்கிழமை விலகுவதாக அறிவித்துள்ளது.

    மதக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கட்டாய இராணுவச் சேவையில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை இயற்றத் தவறியதே இதற்கு முக்கிய காரணம் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    21 மாதங்களாக காசா உடனான போர் நடந்து வரும் சூழலில் இராணுவச் சேவை விலக்கு தொடர்பான இந்த விவாதம் இஸ்ரேலில் விவாதமாக மாறியுள்ளது.

    கடந்த ஆண்டு இஸ்ரேல் உச்ச நீதிமன்றம், அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மாணவர்களுக்கான இராணுவ விலக்கை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டது. புதிய இராணுவச் சேவை மசோதாவை உருவாக்க நாடாளுமன்றம் முயற்சி செய்து வருகிறது

    அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மத குருக்கள், புனித நூல்களை முழுநேரம் கற்பது புனிதமானது என்றும், தங்கள் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டால் மத வாழ்க்கையில் இருந்து விலகிவிடுவார்கள் என்றும் அஞ்சுகின்றனர்.

    ஷேஸ் கட்சி விலகுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மற்றொரு அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் கட்சியான யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) கட்சியும் இதே காரணத்திற்காக அரசாங்கத்திலிருந்து விலகியது.

    இந்த இரண்டு முக்கிய கட்சிகளின் விலகல், நேதன்யாகு அரசாங்கத்தை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

    இஸ்ரேலிய நளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. நெசெட்டில் 11 இடங்களைக் கொண்டுள்ளது. யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) நெசெட்டில் 7 இடங்களைக் கொண்டுள்ளது.

    இந்த இரு கட்சிகளின் விலகலுக்குப் பிறகு, நெதன்யாகுவின் கூட்டணிக்கு தற்போது 50 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் பெரும்பான்மைக்கு 61 இடங்கள் தேவை. எனவே நேதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்து சிறுபான்மை அரசாங்கமாக மாறியுள்ளது. 

    • வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • அவர்கள் இஸ்ரேலின் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

    இஸ்ரேலால் அக்கிரமிக்கப்ட்ட பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் வசிக்கும் இஸ்ரேலிய பொதுமக்கள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களைத் தாக்கியுள்ளனர்.

    பாலஸ்தீன கிராமமான காஃப்ர் மாலிக்கிற்குள் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்க முயன்றபோது இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் இராணுவ வாகனங்களுக்கும் தீ வைத்து அழித்தனர்.

    அவர்கள் கூட்டத்தை நெருங்கியபோது, அவர்கள் படையினரைத் தாக்கி பாதுகாப்பு வாகனங்களை அழித்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை கலைக்க வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலிய இராணுவத்தின் மீதான தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறினார்.

    இந்த மக்கள் ஒரு சிறிய சிறுபான்மையினர் என்றும், அவர்கள் இஸ்ரேலின் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் நேதன்யாகு மேலும் கூறினார்.

    • காசாவுக்கு செல்லும் நிவாரண பொருட்களை இஸ்ரேல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
    • காசா மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

    பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான இஸ்ரேலின் போர் 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது. இதில் குழந்தை கள், பெண்கள் உள்பட 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்நிலையில் காசாவின் சப்ரா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இணை நிறுவனர் ஹகாம் முகமது இசா அல்-இசா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

    2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்தியதில் அல்-இசா முக்கிய பங்கு வகித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

    இதற்கிடையே காசாவுக்கு செல்லும் நிவாரண பொருட்களை இஸ்ரேல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் காசா மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 66 குழந்தைகள் இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்களை அழிப்பதற்காக பட்டினியை ஒரு ஆயுதமாக வேண்டுமென்றே இஸ்ரேல் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினர்.

    காசா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அபாயகரமான விகிதத்தில் அதிகரித்து வருவதாக சமீபத்தில் ஐ.நா. குழந்தைகளுக்கான நிறுவனம் எச்சரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காமேனியை கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என்று காட்ஸ் கருத்து தெரிவித்தார்.
    • ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க முயன்றால் மீண்டும் தாக்குவதற்கு பச்சை கொடி காட்டியதாக காட்ஸ் கூறினார்.

    ஈரானுடனான 12 நாள் போரின் போது, அந்நாட்டின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொலை செய்ய குறிவைத்ததாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.

    இஸ்ரேலின் 'சேனல் 13' உடனான சமீபத்திய நேர்காணலில் பேசிய காட்ஸ், "நாங்கள் காமேனியை ஒழிக்க விரும்பினோம். ஆனால் எங்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

    தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த காமேனி, மிகவும் ஆழமான நிலத்தடிக்குச் சென்றார். ஆரம்பகட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதிகளுக்கு பதில் புதிதாக வந்தவர்களுடனும் தொடர்புகளை அவர் துண்டித்துவிட்டார்" என்று காட்ஸ் கூறினார்.

    மேலும் காமேனியினயை கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என்று காட்ஸ் கருத்து தெரிவித்தார். காமேனியை கொல்லும் யோசனையை அமெரிக்கா வீட்டோ செய்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவர் மறுத்தார்.

    கூடுதலாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க முயன்றால் மீண்டும் தாக்குவதற்கு பச்சை கொடி காட்டியதாக காட்ஸ் கூறினார்.

    இந்த தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அதன் அணுசக்தி நிலையங்களை மீண்டும் புதுப்பிக்கும் நிலையில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    • தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
    • இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை.

    ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    ஈரான் அணுஆயு தங்களை தயாரி ப்பதாகவும், அது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் முக்கிய அணு மையங்கள் தகர்க்கப்பட்டதுடன், அணுஆயுத விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக ஈரானும் தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங் கள் கடும் சேதமடைந்தன. குறிப்பாக இஸ்ரேலின் வான் கவச பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியது அந்நாட்டை அதிர்ச்சியடையச் செய்தது.

    இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை இயக்குநர் ஷே அகரனோவிச் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை. ஈரான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் 3 பில்லியன் டாலர் மதிப்பில் சேதம் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

    எனினும் சேதமடைந்த இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஆயுதங்களை கணக்கெடுத்தால் சேத மதிப்பு கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் நிதியமைச்சர் பெசாலல் ஸ்மோட்ரிச் கூறுகையில், போரின் காரணமாக இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    • இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
    • ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 860 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஜெருசலேம்:

    காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச்சென்றது.

    இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பிணைக்கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. சுமார் 21 மாதமாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை மொத்தம் 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் இதுவரை சுமார் 860 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • ஈரான்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
    • டிரம்ப் அறிவித்த பின்னரும் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல்- ஈரான் இடையில் கடந்த 12 நாட்களாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

    ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என அமெரிக்க தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் ஈரானில் உள்ள அணுஆயுத திட்டங்களை செயல்படுத்தும் இடத்தில் பயங்கர தாக்குதல் நடத்தியது.

    பின்னர் ஈரான் இஸ்ரேல் மீதும், கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில்தான் நேற்றிரவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல்- ஈரான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவித்தார்.

    டிரம்பின் போர் நிறுத்தம் அறிவிப்புக்கு முன், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம் எனக் கூறி, இன்று காலை இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலுக்குப் பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஈரான் தெரிவித்தது. அதேவேளையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்த பின் ஈரான், சுமார் இரண்டரை மணி நேரம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஒருவேளை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தும். இதனால் போர் நிறுத்தம் நீடிக்குமா? என்பது இஸ்ரேலில் நடவடிக்கையின் மூலம்தான் தெரியவரும்.

    ஈரானை பொறுத்த வரையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தக்க பதில் தாக்குதல் நடத்தப்படும் உறுதியாக தெரிவித்துள்ளது.

    • எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா "பங்கர்-பஸ்டர்" குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தது.
    • மூன்று அணுசக்தி தளங்களிலும் கதிர்வீச்சு மாசுபாட்டின் அறிகுறிகள் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

    ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

    இதனால் டெல் அவிவ், ஹைஃபா உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தது 11 பேர் காயமடைந்தனர்.

    ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி 30 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஈரானிய அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா "பங்கர்-பஸ்டர்" குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தது.

    மேலும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் சுமார் 30 டோமஹாக் ஏவுகணைகளை ஏவியுள்ளன.

    தாக்குதல்களுக்குப் பிறகு கதிர்வீச்சு குறித்த அச்சங்கள் எழுந்தாலும், மூன்று அணுசக்தி தளங்களிலும் கதிர்வீச்சு மாசுபாட்டின் அறிகுறிகள் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஈரானின் தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் ராணுவமும் ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளது. 

    • அமெரிக்கா உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது. பூமியில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது
    • அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் தாக்கப்பட்டது.

    ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    "வாழ்த்துக்கள், அதிபர் டிரம்ப். அமெரிக்காவின் வலிமையால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைக்கும் உங்கள் துணிச்சலான முடிவு வரலாற்றை மாற்றும்" என்று தனது உரையில் நேதன்யாகு நெகிழ்ந்தார். 

    டிரம்ப் தலைமை "மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் செழிப்பு மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வரலாற்றின் ஒரு மையப்புள்ளியை உருவாக்கியுள்ளது" என்று கூறிய நேதன்யாகு தாக்குதல் முடிந்தவுடன் அதிபர் டிரம்பிடம் இருந்து தனக்கு உடனடியாக அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.

    "ஆபரேஷன் ரைசிங் லயன், இஸ்ரேல் உண்மையிலேயே அற்புதமான காரியங்களைச் செய்துள்ளது. ஆனால் ஈரானின் அணுசக்தி வசதிகளுக்கு எதிரான இன்றைய நடவடிக்கையில், அமெரிக்கா உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது. பூமியில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது," என்று நேதன்யாகு சிலாகித்தார்.

    இந்திய நேரப்படி இன்று அதிகாலையில், அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் இஸ்ஃபஹான் (Isfahan) ஆகிய மூன்று அணுசக்தி வசதிகள் மீது தாக்குதல் நடத்தியது.

    ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  

    • அணுஆயுதம் திட்டம் குறித்த மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருக்கிறது.
    • இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஆர்வம் காட்டவில்லை.

    இஸ்ரேல்- ஈரான் இடையில் 8 நாட்களுக்கு மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. ஈரான் ஹைப்பர்சோனிக், கொத்து குண்டுகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதேவேளையில் ஈரானில் உள்ள அணுஉலை மற்றும் அணு ஆராய்ச்சி நிலையம் மீது இஸ்ரேல் பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

    இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் அமெரிக்கா மோதலில் தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்கும் என ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான சண்டையில், அமெரிக்கா தலையீடு செய்தால் அது எல்லோருக்கும் ஆபத்தானதாக இருக்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அப்பாஸ் அராக்சி கூறுகையில் "இஸ்ரேல் உடனான சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால் அது எல்லோருக்கும் ஆபத்தானதாக இருக்கும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க ராணுவம் தலையீடு குறித்து மதிப்பீடு செய்து வருவது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    அணுஆயுதம் திட்டம் குறித்த மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருக்கிறது. இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஆர்வம் காட்டவில்லை" என்றார்.

    • ஆய்வகக் கட்டிடங்களின் அழிவு பல வருட ஆராய்ச்சியை வீணாக்கியுள்ளது.
    • 1934 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலிய ஜனாதிபதியான சைம் வெய்ஸ்மானால் நிறுவப்பட்டது.

    இஸ்ரேலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமான வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனம் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் ஈரான் இஸ்ரேலுக்கு பெரும் அடியைக் கொடுத்துள்ளது.

    யாரும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்றாலும், ஆய்வகக் கட்டிடங்களின் அழிவு பல வருட ஆராய்ச்சியை வீணாக்கியுள்ளது.

    போரின் ஆரம்ப நாட்களில் இஸ்ரேலின் பெருமையை உடைத்தது ஈரானின் தார்மீக வெற்றி என்று கூறப்படுகிறது. வெய்ஸ்மேன் நிறுவனத்தின் மூலக்கூறு செல் உயிரியல் துறையின் பேராசிரியர் ஓரன் ஷால்டின், இஸ்ரேலின் அறிவியல் மகுடத்தின் மதிப்பை குறைப்பதில் ஈரான் தார்மீக வெற்றி பெற்றதாகக் கூறினார்.

    இஸ்ரேலின் "தொழில்நுட்ப மூளை" என்று அழைக்கப்படும் வெய்ஸ்மேன் நிறுவனம் உலகின் முன்னணி அறிவியல் ஆராய்ச்சி மையமாகும்.

    கணிதம், இயற்பியல், வேதியியல், மரபியல் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 2,500 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த மையத்தில் பணியாற்றினர்.

    ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளித்த இந்த மையம், 30 க்கும் மேற்பட்ட அதிநவீன ஆய்வகங்கள், விரிவான நூலகம் மற்றும் தங்குமிடம் மற்றும் படிப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.

    இஸ்ரேலிய இராணுவத்திற்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும் ஆராய்ச்சி நடத்துவதற்கும் வெய்ஸ்மேன் நிறுவனத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் பயன்படுத்தப்படும் பல புதிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டன.

    டிரோன் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, உயிரியல் ரீதியாக ஈர்க்கப்பட்ட பொருட்கள், போரில் செயற்கை நுண்ணறிவு, போரில் மறைகுறியாக்கப்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் புதுமையான ஆயுத அமைப்புகள் அனைத்தும் இந்த நிறுவனத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    அணு ஆராய்ச்சியை ஆதரிக்கும் செயல்பாடுகளும் இங்கு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு உபகரண நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு வெய்ஸ்மேன் நிறுவனத்தின் ஆதரவு குறிப்பிடத்தக்கது.

     

    இந்த நிறுவனத்தின் பட்டதாரிகளில் பலர் இஸ்ரேலின் ஆயுதத் துறையில் தலைமைப் பதவிகளை வகித்துள்ளனர்.

    இதற்கிடையே ஈரான், தனது அணு விஞ்ஞானிகளைக் கொன்றதற்குப் பழிவாங்கும் விதமாக வெய்ஸ்மேன் நிறுவனத்தைத் தாக்கியதாகக் தெரிவித்துள்ளது. சேதமடைந்த வெய்ஸ்மேன் வளாகத்தை பிரதமர் நெதன்யாகு பார்வையிட்டார். 

    • ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
    • கொத்து குண்டுகளை உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், மாற்றுதல் மற்றும் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒரு சர்வதேச ஒப்பந்தம் 2008 இல் கையெழுத்தானது.

    இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த 7 நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானை கடந்த வாரம் இஸ்ரேல் தாக்கிய நிலையில் ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்நிலையில் ஈரான் தங்கள் எல்லையில் கொத்து குண்டுகளை ஏவுவதாக இஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. பொதுமக்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தடை செய்யப்பட்ட குண்டுகளை ஈரான் பயன்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் ஏவிய ஏவுகணையின் போர்முனை சுமார் 7 கிலோமீட்டர் (4 மைல்) உயரத்தில் உடைந்து, மத்திய இஸ்ரேலிய பிரதேசத்தில் சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்) சுற்றளவில் சுமார் 20 சிறிய குண்டுகளாக வெடித்து சிதறடித்தது.

    சிறிய குண்டுகளில் ஒன்று மத்திய இஸ்ரேலில் உள்ள அசோர் நகரில் உள்ள ஒரு வீட்டைத் தாக்கி சேதம் ஏற்படுத்தியதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் இராணுவ நிருபர் இம்மானுவேல் ஃபேபியன் தெரிவித்தார். இருப்பினும், உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.


    வெடிக்காத குண்டுகளின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் ஒரு கிராஃபிக் வீடியோவையும் இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டது.

    கொத்து குண்டுகள் (Cluster bombs) என்பவை மிகவும் ஆபத்தான ஆயுதமாக வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். ஏவப்படும் ஒரு குண்டு பல சிறிய குண்டுகளாக இலக்கின் மீது விழுந்து வெடிக்கிறது.

    இவற்றில் சில உடனடியாக வெடிக்காமல் போகலாம். நீண்ட காலத்திற்குப் பிறகும் அவை வெடித்து பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே கொத்து குண்டுகளின் பயன்பாடு குறித்து சர்வதேச அளவில் சர்ச்சை நீடித்து வருகிறது

    கொத்து குண்டுகளை உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், மாற்றுதல் மற்றும் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒரு சர்வதேச ஒப்பந்தம் 2008 இல் கையெழுத்தானது. இதில் 111 நாடுகளும் 12 பிற அமைப்புகளும் கையெழுத்திட்டன. இருப்பினும், ஈரானும் இஸ்ரேலும் இந்த ஒப்பந்தத்தில் சேர மறுத்துவிட்டன.

    இதற்கிடையில், நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ரஷிய படைகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக அமெரிக்கா 2023 இல் உக்ரைனுக்கு கொத்து குண்டுகளை வழங்கியது. ரஷியாவும் கொத்து குண்டுகளை பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்கா, ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளும் கொத்து குண்டுகளுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×