என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அடிலெய்டு கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் டெஸ்ட் போட்டிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பான முறையில் விளையாட இருக்கிறார்கள்.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

    தற்போது கொரோனா தாக்கம் சற்று குறையத் தொடங்கியதால் மைதானத்திற்குள் ரசிகர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

    அடிலெய்டு மைதானம் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது. இன்று தெற்கு ஆஸ்திரேலியாவில் ஐந்து பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் தெற்கு ஆஸ்திரேலியா நிர்வாகம் எல்லையை கட்டுப்படுத்தியுள்ளது.

    தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில்தான் அடிலெய்டு உள்ளது. இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அடிலெய்டு டெஸ்ட் போட்டியை பொறுத்த வரைக்கும் தற்போதுள்ள நிலையே தொடரும். சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

    மேலும், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா, டாஸ்மானியா, குயின்ஸ்லாந்தில் உள்ள இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று சிட்னி புறப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

    உள்ளூர் கிரிக்கெட் போட்டியான மார்ஷ் ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரின் கடைசி சுற்று போட்டி தெற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது, அந்த வீரர்கள் தெற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறுகிறார்கள். இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு இந்த முடிவை எடுத்துள்ளது.

    டாஸ்மானியா நிர்வாகமும் எல்லைத் தொடர்பாக கட்டுப்பாடு விதித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் ஐந்து மாதமாக ஓய்வில் இருந்த இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து ஒரு வருடம் ஓய்வில்லாமல் விளையாட இருக்கின்றனர்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடவில்லை. சுமார் ஆறு மாதம் கழித்து செப்டம்பர் 19-ந்தேதி ஐபிஎல் தொடர் தொடங்கியபோதுதான் முதன்முறையாக போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்கினர்.

    ஆறு மாதங்களில் நடைபெற இருந்த பெரும்பாலான கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தத் தொடர்கள் அடுத்த வருடம் தொடக்கத்தில் இருந்து நடைபெற உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த வருடம் முழுவதும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    தற்போது இந்தியா மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தத் தொடர்கள் ஜனவரியில் முடிவடைகிறது. அதன்பின் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து தலா நான்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    ஏப்ரல்-மே-ஜூன் மாதத்தில் ஐபிஎல் தொடர்  நடக்கிறது. அதன்பின் ஜூன் மாதம் இந்தியா இலங்கை சென்று 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    ஜூன் - ஜூலையில் ஆசிய கோப்பை டி20 தொடர் நடக்கிறது. இதில் இந்தியா 6 போட்டிகளில் விளையாடும்.

    ஜூலை மாதம் இந்தியா ஜிம்பாப்வே சென்று 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.

    ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 

    அக்டோபர் மாதம் தென்ஆப்பிரிக்கா இந்தியா வந்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    அக்டோபர்- நவம்பரில் ஐசிசி டி20 உலக கோப்பை இந்தியாவில் நடக்கிறது. குறைந்தபட்சம் 6 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.

    நவம்பர் - டிசம்பரில் நியூசிலாந்து இந்தியாவில் வந்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டியில் விளையாடுகிறது. 

    டிம்சபர் மாதம் இந்தியா தென்ஆப்பிரிக்கா சென்று 3 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து ஐ.சி.சி. புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.

    மொத்தம் உள்ள 9 அணிகள் உள்ளூர், வெளிநாடு அடிப்படையில் குறைந்தது 6 தொடர்களில் பங்கேற்க வேண்டும்.

    இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.

    இதுவரை நடந்த போட்டியின் அடிப்படையில் இந்தியா 360 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 292 புள்ளிகளுடனும், நியூசிலாந்து 180 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் 166 புள்ளிகளுடனும் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

    கொரோனா வைரஸ் திடீரென ஏற்பட்டதால் பல்வேறு தொடர்கள் ரத்து செய்யப்பட்டன. டெஸ்ட் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

    இதனால் இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து ஐ.சி.சி. புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி புள்ளிகளின் சதவீத அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான அணிகளை தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சதவீத அடிப்படையில் ஆஸ்திரேலியா 82.2 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 75 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 60.83 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளனர்.

    இந்த புதிய முறையால் இந்திய அணி எஞ்சிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து தொடர்களில் வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றிபெற்றால் தான் முதல் 2 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழையமுடியும்.

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று ஆஸ்திரேலியா வேகப்பந்து வீரர் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    சிட்னி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி, மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 27-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் இந்தியா வுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று ஆஸ்திரேலியா வேகப்பந்து வீரர் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

    சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல். போட்டியில் அவர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடினார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி அணியில் அவர் இடம் பெற்றுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டிக்காக தொடர்ந்து 3 மாதங்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு (பயோபபுள்) வட்டத்தில் இருந்த கம்மின்ஸ் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக மீண்டும் அந்த வட்டத்துக்குள் உடனடியாக வரவேண்டி உள்ளது.

    இதன்காரணமாகவே அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கம்மின்ஸ் கூறியதாவது:-

    கொரோனா தடுப்பு பாதுகாப்பு மையத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் நீண்டகாலம் இருக்க வேண்டி உள்ளது. அப்போது அனைத்தையும் வெளிப்படையாக பேச வேண்டி உள்ளது.

    ஐ.பி.எல். போட்டியை பொறுத்த வரை வழக்கமாக ஒரு ஆட்டத்தின் அடுத்த நாளிலேயே நாங்கள் விமானத்தில் பயணிக்க வேண்டி இருக்கும். இது ஆட்டத்தின் போது ஒருவித களைப்பை ஏற்படுத்தலாம்.

    ஆனால் பயோபபுள் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் அதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை என்பது நல்லதாக அமைந்தது.

    இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஒரு டெஸ்டில் மட்டுமே ஆடுகிறார். அவர் 3 டெஸ்டில் ஆடாதது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமா? என்பதை இப்போது எதுவும் சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று தமிழக வீரர் எட்வின் நம்பிக்கை தெரிவித்தார்.
    சென்னை:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. இதில் 3 முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., ஒரு முறை சாம்பியன் பெங்களூரு உள்பட 11 அணிகள் கலந்து கொள்கின்றன. புதிய அணியாக ஈஸ்ட் பெங்கால் இடம் பெறுகிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங் களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    கொரோனா பிரச்சினை காரணமாக இந்த சீசனுக்கான ஆட்டங்கள் அனைத்தும் கோவா வில் உள்ள 3 ஸ்டேடியங்களில் அரங்கேறுகிறது. கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. தொடக்க லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. சென்னையின் எப்.சி. அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 24-ந் தேதி ஜாம்ஷெட்பூர் அணியை சந்திக்கிறது.

    இந்த போட்டி தொடருக்காக சென்னையின் எப்.சி. அணி கடந்த மாதமே கோவா சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த சீசனுக்கான போட்டி குறித்து சென்னையின் எப்.சி. அணியில் அங்கம் வகிக்கும் நெய்வேலியை சேர்ந்த 28 வயது நடுகள வீரரான எட்வின் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான போட்டி கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது. தனிமைப்படுத்துதல் உள்பட கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். வாரத்தில் 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கடந்த சீசனுக்கான இறுதிப்போட்டி (மார்ச் மாதம் நடந்தது) கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் இன்றி தான் நடந்தது. இந்த முறையும் ரசிகர்கள் முன்னிலையில் விளையாட முடியாமல் போவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ரசிகர்களின் பாராட்டு வீரர்களுக்கு மிகுந்த சக்தியும், ஊக்கமும் அளிக்கக்கூடியதாகும். அதேநேரத்தில் ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்.

    கால்பந்து ஆட்டத்தை பொறுத்தமட்டில் எந்த அணி பட்டம் வெல்லும் என்று எளிதில் கணிக்க முடியாது. இந்த போட்டி தொடரில் பங்கேற்கும் எல்லா அணிகளும் சவாலானதாகும். எனவே போட்டி தொடர் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 4 மாதம் பயிற்சியில் ஈடுபட முடியாமல் போனாலும், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த போட்டிக்காக நாங்கள் சிறப்பாக தயாராகி நல்ல நிலையில் இருக்கிறோம். அணியில் காயம் பிரச்சினை எதுவும் இல்லை. கடந்த சீசனை போல் இந்த முறையும் எங்களால் நிச்சயம் களத்தில் சிறப்பாக செயல்பட முடியும். ஏனெனில் அந்த அளவுக்கு நாங்கள் நன்றாக தயாராகி இருக்கிறோம். எங்களது முழு சக்தியை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஐரோப்பிய அணிகளுக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பெல்ஜியம், இத்தாலி அணிகள் வெற்றி பெற்றன.
    லிவென்:

    ஐரோப்பிய அணிகளுக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

    இதில் பெல்ஜியத்தில் உள்ள லிவென் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. பெல்ஜியம் அணி தரப்பில் யூரி டிலிமான்ஸ் 10-வது நிமிடத்திலும், டியஸ் மெர்டென்ஸ் 23-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

    பந்தை அதிக நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் (55 சதவீதம்) வைத்து இருந்த இங்கிலாந்து அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. 5-வது ஆட்டத்தில் ஆடிய பெல்ஜியம் அணி 4-வது வெற்றியை ருசித்ததுடன் அடுத்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் நடைபெறும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. 2-வது தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோனது.

    மற்றொரு லீக் ஆட்டத்தில் இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் போலந்தை சாய்த்தது. இத்தாலி அணியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஜோர்ஜின்ஹோ 27-வது நிமிடத்திலும், டோமினிகோ பெரார்டி 83-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 2 வெற்றி, 3 டிரா கண்டு இருக்கும் இத்தாலி அணி தனது பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது. இன்னொரு லீக் ஆட்டத்தில் டென்மார்க் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை பதம் பார்த்தது. 5-வது ஆட்டத்தில் ஆடிய டென்மார்க் அணிக்கு இது 3-வது வெற்றியாகும்.
    ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரபெல் நடால், ஜோகோவிச் ஆகியோர் தங்களது தொடக்க லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
    லண்டன்:

    உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதில் முதல்நாளில் நடந்த ஒற்றையர் (லண்டன் 2020 பிரிவு) ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவை சந்தித்தார்.

    77 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ஆந்த்ரே ரூப்லெவை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கினார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் ரபெல் நடால், அமெரிக்க ஓபன் சாம்பியனான டொமினிக் திம்முடன் (ஆஸ்திரியா) மோதுகிறார்.

    வெற்றிக்கு பிறகு ரபெல் நடால் கருத்து தெரிவிக்கையில், ‘இது எனக்கு நல்ல தொடக்கமாகும். இந்த போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் எப்பொழுதும் நெருக்கடி நிறைந்ததாக இருக்கும். மிகவும் சிறந்த வீரர்கள் பங்கேற்கும் இதில் எல்லா ஆட்டமும் கடினமாக தான் இருக்கும். எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற முடிவுடன் களம் இறங்கினேன். இந்த ஆட்டத்தில் எனது ‘செர்வ்’ மிகவும் நன்றாக அமைந்தது. அது என்னுடைய வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது. இந்த வெற்றி மிகவும் முக்கியமானதாகும். நேர்செட்டில் வென்று இருப்பதன் மூலம் எனது நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்றார்.

    நேற்று நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ‘நம்பர்’ ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் அர்ஜென்டினாவின் ஸ்வாட்ஸ்மேனை தோற்கடித்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 78 நிமிடமே தேவைப்பட்டது.
    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் எளிதில் வெற்றி பெற முடியாது என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    2018-19-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முதல்முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. 71 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இந்த வெற்றியை சாத்தியமாக்கியது. இந்த தொடரில் புஜாரா 3 சதம் உள்பட 521 ரன்கள் குவித்தார்.

    அதன் பிறகு தற்போது ஆஸ்திரேலியா சென்று இருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா இடம் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டி தொடர் குறித்து புஜாரா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் கடந்த முறை (2018-19) தொடரில் விளையாடாத ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் அணியில் இடம் பெற்று இருப்பதன் மூலம் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை முன்பை விட சற்று வலுவடைந்துள்ளது. எனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் எளிதில் வெற்றி கிடைத்து விடாது. வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியமானதாகும். சுமித், வார்னர், லபுஸ்சேன் ஆகியோர் சிறந்த வீரர்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. எங்கள் அணியில் இடம் பிடித்து இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த போட்டி தொடரில் விளையாடியவர்கள். அவர்கள் கடந்த தொடரில் ஆஸ்திரேலியாவில் வெற்றியை அனுபவித்து இருக்கிறார்கள். எனவே ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அதற்கான திட்டத்தை பந்து வீச்சாளர்கள் வைத்து இருப்பார்கள். அந்த திட்டத்தை நாம் நேர்த்தியாக செயல்படுத்தினால் அவர் கள் சுமித், வார்னர் போன்றோரின் விக்கெட்டை விரைவில் வீழ்த்தி விடுவார்கள்.

    கடந்த ஆஸ்திரேலிய தொடரில் செயல்பட்டது போல் இந்த முறையும் நாம் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் தொடரை வெல்ல நமக்கு எல்லா வகையிலும் வாய்ப்புள்ளது. ‘பிங்க்’ (பகல்-இரவு டெஸ்ட்) பந்தில் விளையாடுவது என்பது வித்தியாசமான சவாலாகும். அந்த சவாலை ஒரு அணியாக நம்மால் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன். மின்னொளியில் ஆடும் சவாலுக்கு தகுந்தபடி நம்மை விரைவில் பழக்க படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். கடந்த முறையை போல் இந்த முறையும் இந்த தொடருக்காக நான் நன்றாக தயாராகி வந்து இருக்கிறேன். அது எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உதவும் என்று நினைக்கிறேன். உங்களது தனிப்பட்ட சிறப்பான ஆட்டத்தால் மட்டும் வெற்றியை பெற்று விட முடியாது. வெற்றிக்கு மற்ற வீரர்களின் ஆதரவும் தேவையானதாகும். பந்து வீச்சாளர்கள் உள்பட அனைவரும் அணியாக இணைந்து சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

    இவ்வாறு புஜாரா கூறினார்.
    ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தபோது, 2-1 எனத் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுதான் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் சிறந்த தொடர் என சச்சின் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர். 20 வருடத்திற்கு மேலான அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான வெற்றித் தோல்விகளை சந்தித்து இருப்பார். ஏராளமான தொடர்களை இவர் விளையாடிய காலத்தில் இந்தியா வென்றிருக்கும்.

    ஆனால் 2001-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுதான் அவருடைய வாழ்க்கையில் சிறந்த டெஸ்ட் தொடர் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக், இதுதான் இந்திய மண்ணில் கடைசி டெஸ்ட் தொடர் எனத் அறிவித்திருந்தார். இதனால் அந்தத் தொடர் சொந்த மண்ணில் விளையாடிய எங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமானது இருந்தது.

    மும்பையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஒரு கட்டத்தில் நாங்கள் பின்தங்கியிருந்தோம். லக்‌ஷ்மண், டிராவிட் ஆகியோரின் அற்புதமான ஆட்டத்தால் நாங்கள் வெற்றி பெற்றோம். அதன்பின் சென்னையில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் வென்று தொடரை 2-1 என கைப்பற்றினோம். என்னுடைய வாழ்க்கையில் இதுதான் சிறந்த தொடர் என்பதை எந்த சந்தேகமும் இன்றி கூறுவேன்’’ என்றார்.
    பிக் பாஷ் டி20 லீக்கில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க 3 முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு.
    இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 லீக்கை நடத்துவதுபோல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டும் பிக் பாஷ் லீக் என்ற பெயரில் டி20 லீக்கை நடத்தி வருகிறது.

    பிக் பாஷ் டி20 லீக்கில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க அடிக்கடி விதிமுறைகளை மாற்றம் செய்யும். கிரிக்கெட்டில் டாஸ் சுண்டுவதற்குப் பதிலாக பேட்டை தூக்கிப்போட்டு மேடா? பள்ளமா? எனக்கேட்கும் முறையை அறிமுகப்படுத்தியது.

    இந்த சீசனில் மூன்று முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதை பார்ப்போம்.

    1. பவர் சர்ஜ் (Power surge)

    தற்போது டி20 போட்டியில் முதல் 6 ஓவர் பவர்-பிளேயாக கருதப்படுகிறது. இனிமேல் முதல் 4 ஓவர் பிளே-யாக கருதப்படும். அதன்பின் பேட்டிங் செய்யும் அணி 11-வது ஓவருக்குப்பின் தேவைப்படும் இடத்தில் மீதமுள்ள இரண்டு ஓவர்களை பவர் பிளே-யாக தேர்வு செய்து கொள்ளலாம். இந்த இரண்டு ஓவர்களும் பவர் சர்ஜ் என அழைக்கப்படும்.

    2. முக்கிய காரணி வீரர் (X-factor player)

    முக்கிய காரணி வீரர் என்பது மாற்று வீரரை இரண்டு அணியிலும் அனுமதிப்பது. ஆனால், இந்த வீரர் முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை ஆட்டத்தில் ஏற்படுத்த முடியாது.

    முதல் பாதி ஆட்டத்திற்குப் பிறகுதான் மாற்று வீரர் களம் இறங்க முடியும். ஒரு வீரர் மாற்று வீரராக களம் இறங்கினார், அவர் ஒரு பந்து வீச்சாளராக இருந்தால், ஒரு ஓவர் மட்டுமே பந்து வீச முடியும். அவர் பேட்ஸ்மேனாக இருந்தால், அதற்கு முன் களம் இறங்கியிருக்கக் கூடாது.

    3. பாஷ் பூஸ்ட் (Bash boost)

    வெற்றிபெறும் ஒவ்வொரு அணிக்கும் 3 புள்ளிகள் வழங்கப்படும். ஆனால், கூடுதலாக ஒரு புள்ளிகளும் பெற வாய்ப்புள்ளது.

    உதாரணத்திற்கு, முதலில் பேட்டிங் செய்யும் அணி 10 ஓவர்களில் 80 ரன்கள் அடித்திருந்து, 20 ஓவரில் 170 ரன்கள் சேர்த்தால், 2-வது பேட்டிங் செய்யும் அணி முதல் 10 ஓவரில் 70 ரன்கள் அடித்து 170 ரன்னை சேஸிங் செய்தாலும், 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு 3 புள்ளிகள் வழங்கப்படும்.

    அதேவேளையில் முதலில் பேட்டிங் செய்த அணி தோல்வியடைந்தாலும், முதல் பாதி ஆட்டத்தில் கூடுதல் ரன்கள் அடித்திருந்ததால் ஒரு புள்ளி வழங்கப்படும். இது பாஷ் பூஸ்ட் என அழைக்கப்படுகிறது.
    வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஷெர்ஃபான் ரூதர்ஃபோர்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கிட்டை அணிந்ததோடு, கையுறையை அணிந்து விளையாடினார்.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சுமார் இரண்டு மாதங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. கடந்த 10-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஷெர்ஃபேன் ரூதர்போர்டு இடம் பிடித்திருந்தார். ஆடும் லெவன் அணியில் இடம்பெறவில்லை என்றாலும் அணியுடன்தான் பயணம் செய்தார்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பிளேஆஃப்ஸ் ஆட்டங்கள் நேற்றுமுன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பை அணியில் இடம் பிடித்திருந்த ரூதர்போர்டு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளர்.

    இதனால் அவர் ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில் பாகிஸ்தான் சென்றார். அவர் பாகிஸ்தானுக்குச் செல்லும்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கிட்டை அணிந்து சென்றார். அதோடு மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கையுறையை அணிந்து பேட்டிங் செய்தார்.
    பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் எலிமினேட்டர் 2-ல் முல்தான் சுல்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லாகூர் குவாலண்டர்ஸ்.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. மார்ச் 17-ந்தேதி நடைபெற இருந்த பிளே-ஆப்ஸ் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

    அந்த ஆட்டங்கள் நேற்று முன்தினத்தில் இருந்து நடைபெற்று வருகின்றன. குவாலிபையர் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - முல்தான் சுல்தான் அணிகள் மோதின. இதில் கராச்சி கிங்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    எலிமினேட்டர் 1-ல் லாகூர் குவாலண்டர்ஸ் - பெஷாவர் ஜல்மி அணிகள் மோதின. இதில் லாகூர் குவாலண்டர்ஸ் அணி வெற்றி பெற்று எலிமினேட்டர் 2-க்கு முன்னேறியது.

    எலிமினேட்டர்-2 ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் குவாலிபையரில் தோற்ற முல்தான் சுல்தான் அணியும், எலிமினேட்டர்-1ல் வெற்றி பெற்ற லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் மோதின.

    முதலில் விளையாடிய லாகூர் குவாலண்டர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பஹர் ஜமான் 46 ரன்களும், 7-வது வீரராக களம் இறங்கிய வீஸ் 48 (21 பந்தில்) ரன்கள் அடித்தனர்.

    பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் முல்தான் சுல்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஆடம் லித் 29 பந்தில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். என்றாலும் மற்ற வீரர்கள் விரைவாக ஆட்டமிழக்க முல்தான் சுல்தான் 19.1. ஓவரில் 157 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

    இதனால் லாகூர் குவாலண்டர்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாரிஸ் ரஃப், டேவிட் வீஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் லாகூர் குவாலண்டர்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    ×