என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, நான் இந்தியாவின் பிரதிநிதி என கிரேக் சேப்பலுக்கு பதில் அளித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல், விராட் கோலி எல்லாக் காலக்கட்டத்திலும், ஆஸ்திரேலிய அல்லாத ஆஸ்திரேலியர். அதாவது ஆஸ்திரேலிய வீரர்களுக்கான அனைத்து பண்புகளையும் கொண்டவர்’’ எனத் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் எப்போதும் நானாகவே இருக்க விரும்புவதாக ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். என்னுடைய ஆளுமை மற்றும் கேரக்டர் வகையில் நான் ஒரு நியூ இந்தியாவின் பிரதிநிதி. என்னைப் பொறுத்த வரைக்கும் அப்படித்தான் பார்க்கிறேன்.

    என்னுடைய மனநிலையை ஆஸ்திரேலிய நாட்டினர் மனநிலையுடன் ஒப்பிட இயலாது. இந்திய கிரிக்கெட் அணியாக நாங்கள் எழுந்து நிற்கத் தொடங்கியதும் எனது ஆளுமை முதல் நாளிலிருந்தே இருந்து அப்படியே இருந்தது.

    புதிய இந்தியா சவால்களை எடுத்துக்கொள்கிறது மற்றும் நம்பிக்கை மற்றும் நேர்மறை ஆகியவற்றால் நிறைந்துள்ளது. எங்கள் வழியில் வரும் எந்த சவால்களுக்கும் நாங்கள் தயாராக இருப்பதை உறுதிசெய்கிறோம்’’ என்றார்.
    இந்தியாவுக்கு எதிரான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக பந்து வீசவில்லை என்றாலும், மிட்செல் ஸ்டார்க் பிங்க் பாலில் அச்சுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் நாளை அடிலெய்டில் நடக்கிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு டெஸ்டாக பிங்க்-பாலில் நடக்கிறது.

    ஆஸ்திரேலியா இதுவரை விளையாடியுள்ள பிங்க் பால் போட்டியில் தோல்வியை சந்தித்தது கிடையாது. இந்தியா வங்காளதேசத்திற்கு எதிராக மட்டுமே விளையாடியுள்ளது.

    ஒயிட்பால் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் நேர்த்தியாக பந்து வீசவில்லை. மேலும், குடும்ப உறுப்பினருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தொடரில் இருந்து வெளியேறினார்.

    தற்போது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இணைந்துள்ளார். பிங்க்-பால் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் எப்படிபட்டவர் என்பதை அவரது சாதனையே கூறும். ஆம்.... 7 போட்டிகளில் 42 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டிக்கு சராசரியாக 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்த சராசரி 19.23 ஆகும்.

    அதனால் நாளைய போட்டியிலும் இந்தியாவுக்கு கடும் அச்சுறுத்தலாக இருப்பார் எனக் கருதப்படுகிறது.
    ஆஸ்திரேலிய அணியுடன் நாளை முதல் டெஸ்ட்டில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியுடன் நாளை முதல் டெஸ்ட்டில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோலி தலைமையில் ஆன மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, அஸ்வின் , ஊமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  

    ரீஷப் பந்துக்கு பதிலாக விருதிமான் சாஹா விக்கெட் கீப்பராக விளையாட உள்ளார். ரசிகர்கள் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட சுப்மன் கில், கேஎல்ராகுல் ஆகியோர் அணியில் இடம்பெற வில்லை. 
    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பகல் இரவாக அடிலெய்டில் நாளை (17-ந் தேதி) தொடங்குகிறது.

    அடிலெய்டு:

    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

    அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடை பெறுகிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பகல் இரவாக அடிலெய்டில் நாளை (17-ந் தேதி) தொடங்குகிறது.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக பிங்க் பந்து (இளம் சிவப்பு) போட்டியில் ஆடுகிறது. அதாவது முதல் முறையாக பகல் இரவு டெஸ்டில் விளையாடுகிறது.

    ஒட்டு மொத்தத்தில் இந்திய அணி விளையாடும் 2-வது பகல் இரவு டெஸ்ட் ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சொந்த மண்ணில் வங்காளதேசத்துக்கு எதிராக பிங்க் நிற பந்தில் ஆடி இருந்தது.

    இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே ஒரு முறைதான் டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளது. 2018-19 ஆண்டில் வீராட் கோலி தலைமையிலான அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனால் தற்போதைய இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் கேப்டன் வீராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு நாடு திரும்புகிறார். இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    இந்திய அணி வெற்றியுடன் டெஸ்ட் போட்டியை தொடங்குமா ? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    சிட்னியில் நடந்த பகல் இரவு பயிற்சி ஆட்டத்தை இந்திய வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். இதனால் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்ளும்.

    ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் அதுவும் பகலிரவு டெஸ்டில் எதிர் கொள்வது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில் ஆஸ்திரேலியா அங்கு விளையாடிய அனைத்து பிங்க் பந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது.

    நாளைய டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு கேப்டன் வீராட் கோலிக்கு கடினமாக இருக்கும். தொடக்க வீரராக மயங்க் அகர்வாலுடன் விளையாடுவது பிரித்விஷாவா? சுப்மன்கில்லா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பயிற்சி ஆட்டத்தில் சுப்மன்கில் சிறப்பாக ஆடினார். அதேநேரத்தில் பிரித்விஷா எதிர்பார்த்த அளவுக்கு பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை. இதனால் சுப்மன்கில்லுக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    இதே போல விக்கெட் கீப்பரில் விர்திமான் சகாவா? ரி‌ஷப்பண்டா? என்பதிலும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ரி‌ஷப்பண்ட் பயிற்சி ஆட்டத்தில் வேகமாக சதம் அடித்து இருந்தார்.

    பேட்டிங்கில் வீராட் கோலி, புஜாரா, ரகானே, விகாரி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீரர்களில் முகமது ‌ஷமியும், பும்ராவும் இடம் பெறுவது உறுதி. இருவரும் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக வீசினார்கள்.

    3-வது வேகப்பந்து வீரருக்கான போட்டியில் உமேஷ் யாதவ், முகமது சிராஜ், நவ்தீப் சைனி ஆகியோர் உள்ளனர். சுழற்பந்து வீரர்களில் அஸ்வின், குல்தீப் யாதவ் இடையே போட்டி நடைபெறுகிறது. இதில் அஸ்வினுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

    டிம்பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்தியாவை எளிதில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. மேலும் அந்த அணி பகல்-இரவு டெஸ்டில் தோல்வியை சந்தித்தது இல்லை. இது அந்த அணிக்கு சாதகமே.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஆஸ்திரேலியா மிகவும் நல்ல நிலையில் உள்ளது. ஸ்டீவ் சுமித், லபுசேன், மார்க்கஸ் ஹாரிஸ், கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லயன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    நாளைய பகல்-இரவு டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவி‌ஷன் சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது. ஐதராபாத் அணியில் அரிடேன் சந்தனா (2 கோல்), ஹாலிசரன் நார்ஜாரி கோல் அடித்தனர். 5-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 3 ஆட்டங்களில் டிரா கண்டுள்ளது. ஈஸ்ட் பெங்கால் அணிக்கு இது 4-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-எப்.சி.கோவா (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.
    2022-ம் ஆண்டுக்கான பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது.
    துபாய்:

    8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி-மார்ச்சில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டி 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இதன்படி நியூசிலாந்தில் உள்ள 6 நகரங்களில் 2022-ம் ஆண்டு மார்ச் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில் எஞ்சிய 3 அணிகள் எவை என்பதை நிர்ணயிப்பதற்கான தகுதி சுற்று இலங்கையில் அடுத்த ஆண்டு ஜூன் 26-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது.

    உலக கோப்பை போட்டியின் தொடக்க லீக் ஆட்டத்தில் (மார்ச் 4-ந் தேதி) நியூசிலாந்து அணி தகுதி சுற்றின் மூலம் முன்னேறும் அணியை சந்திக்கிறது. இந்திய அணி தனது முதலாவது லீக்கில் (மார்ச் 6-ந் தேதி) தகுதி சுற்றில் மூலம் களம் காணும் அணியுடன் மோதுகிறது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் வருகிற 24-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக் கூட்டம் வருடந்தோறும் கூட்டப்படும். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இந்த நிலையில் இந்த வருடத்திற்கான ஆண்டு பொதுக்கூட்டம் வருகிற 24-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.

    தற்போது கொரோனா காலம் என்பதால், கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் 22-ந்தேதி ஆர்.டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கேஎல் ராகுலை டுவிட்டர் பக்கத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கேஎல் ராகுல். டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகமான கேஎல் ராகுல், அதிரடி பேட்டிங் மூலம் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார்.

    டெஸ்ட் போட்டியில் சற்று சொதப்பியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது ஆஸ்திரேலியா தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். இதில் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைத்து சிறப்பாக விளையாடினால் தொடர்ந்து இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    இவர் டுவிட்டரில் பல சுவாரஸ்யமான தகவல்களை பரிமாறக்கூடியர். இதனால் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று அந்த எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி 50,02,256 ஆக உள்ளது.

    இதுகுறித்து கேஎல் ராகுல் டுவிட்டர் பக்கத்தில் ‘‘உயர்வு மற்றும் தாழ்வு என எப்போதும், உங்களுடைய ஆதரவு இந்த பயணத்தை சிறப்பாக்கியது. அனைவருக்கும் நன்றி, உங்களுடைய ஆதரவுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    உடல் தகுதியை எட்டினால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் கேமரூன் கிரீன் விளையாடுவார் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்துள்ளார்.

    அடிலெய்டு:

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டரான கேமரூன் கிரீன் இடம் பெற்று உள்ளார்.

    இவர் இந்தியாவுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் (பகல்-இரவு) பந்து வீசிய போது பும்ரா அடித்த பந்து தலையில் தாக்கியது. இதனால் நிலை குலைந்த கேமரூன் கிரீன் தரையில் அமர்ந்தார். இதில் அவர் சிறிது அதிர்ச்சியான உணர்வு அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்தியாவுக்கு எதிராக நாளை மறுநாள் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் கேமரூன் கிரீன் இடம் பெறுவாரா என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கரிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கேமரூன் கிரீன் ஒரு திறமை மிக்க இளம் வீரர். உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் சிறந்த திறமையை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளார். பயிற்சி ஆட்டத்தில் அவரது தலையில் பந்து தாக்கிய சம்பவம் அசாதாரணமானது. நாங்கள் மூளை அதிர்ச்சி நெறிமுறைகளை கடந்து செல்கிறோம். அவர் உடல் தகுதியுடன் இருந்தால் நிச்சயமாக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தப்படுவார். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கும் கேமரூன் கிரீனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உற்சாகமாக இருக்கும்.

    தொடக்க வீரர் ஜோ பர்னஸ் மிகவும் நல்ல வீரர். ஒருநாள் இரவில் உங்களது திறமையை இழந்து விடமாட்டீர்கள். நான் முழு நேரமும் தனிப்பட்ட முறையில் மட்டும் பகிரங்கமாக பர்னசுக்கு ஆதரவு அளித்து வருகிறேன். எந்த ஒரு வீரருக்கும் ரன்கள் மிகப்பெரிய மதிப்பு என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவுக்கு எதிரான பயிற்சிஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறங்கிய ஜோ பர்னஸ் சொதப்பியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் சதம் அடித்தார்.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித்தொடரில் இன்று நடக்கும் 29-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.

    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டித்தொடரில் இன்று நடக்கும் 29-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத் அணி இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி 1 வெற்றி, 3 டிராவுடன் 6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ஐதராபாத் அணி, ஒடிசாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு, ஜாம்ஷெட்பூர், ஏ.டி.கே.மோகன்பகன் ஆகிய அணிகளுடன் டிரா செய்தது.

    ஈஸ்ட்பெங்கால் அணி இதுவரை விளையாடி உள்ள 4 ஆட்டத்தில் 3 தோல்வியை சந்தித்து உள்ளது. 1 ஆட்டத்தில் டிரா செய்தது. அந்த அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.

    ஆனால் அந்த அணி வீரர்கள் வெற்றி பெற ஒருங்கிணைந்து விளையாடுவது அவசியமா கும்.

    நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஜாம்ஷெட்பூர் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் சுப்மன் கில்லை 6-வது வீரராக களம் இறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் வருகிற 17-ந் தொடங்குகிறது. அன்று அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

    முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு கேப்டன் விராட் கோலி நாடு திரும்புகிறார். இதையடுத்து பொறுப்பு கேப்டன் பதவியை ரகானே வகிப்பார். விராட் கோலி விலகலால் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்படுகிறது. மிடில் ஆர்டர் வரிசையில் யாரை களம் இறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    இந்தநிலையில் டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் சுப்மன் கில்லை 6-வது வீரராக களம் இறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதா வது:-

    இந்திய அணியில் தற்போது ஒவ்வொருவரும் தொடக்க வீரர்களாக தெரிகிறார்கள். ஏனென்றால் மிடில் ஆர்டர் வரிசையில் புஜாராவுடன் ரகானே மற்றும் விகாரி ஆகியோர் விளையாடுவார்கள்.

    சுப்மன் கில்லை நிறைய பேர் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அவரை 6-வது வீரராக களம் இறக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

    முதல் தர கிரிக்கெட்டில் சுப்மன் கில் தொடக்க வீரராக களம் இறங்கி இருக்கிறார். ஆனால் அவரது சிறந்த நிலை டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் மிடில் ஆர்டர் வரிசையில் இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பயிற்சி ஆட்டங்களில் சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாடினார். 2-வது பயிற்சி ஆட்டத்தில் அரை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெலாண்டே அணியை தோற்கடித்தது.
    பார்சிலோனா:

    20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் லயோனல் மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா கிளப் அணி, லெவாண்டே அணியை எதிர்கொண்டது.

    பந்து அதிக நேரம் பார்சிலோனா அணியினரின் கட்டுப்பாட்டில் வலம் வந்தாலும் எதிரணியின் தடுப்பு அரணை தகர்த்து கோல் அடிக்க முடியாமல் தடுமாறினார்கள். இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 76-வது நிமிடத்தில் பார்சிலோனா அணி கோல் அடித்தது. அந்த அணி வீரர் பிரெங்கி டி ஜோங் கடத்தி கொடுத்த பந்தை கேப்டன் மெஸ்சி கோல் வளையத்துக்குள் திணித்தார். அதன் பிறகு இரு அணியினரும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

    முடிவில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெலாண்டே அணியை தோற்கடித்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய பார்சிலோனா அணி 5 வெற்றி, 2 டிரா, 4 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. ரியல் சோசிடாட் அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
    ×