என் மலர்
விளையாட்டு
அடிலெய்டு:
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடை பெறுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பகல் இரவாக அடிலெய்டில் நாளை (17-ந் தேதி) தொடங்குகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக பிங்க் பந்து (இளம் சிவப்பு) போட்டியில் ஆடுகிறது. அதாவது முதல் முறையாக பகல் இரவு டெஸ்டில் விளையாடுகிறது.
ஒட்டு மொத்தத்தில் இந்திய அணி விளையாடும் 2-வது பகல் இரவு டெஸ்ட் ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சொந்த மண்ணில் வங்காளதேசத்துக்கு எதிராக பிங்க் நிற பந்தில் ஆடி இருந்தது.
இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே ஒரு முறைதான் டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளது. 2018-19 ஆண்டில் வீராட் கோலி தலைமையிலான அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனால் தற்போதைய இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் கேப்டன் வீராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு நாடு திரும்புகிறார். இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்திய அணி வெற்றியுடன் டெஸ்ட் போட்டியை தொடங்குமா ? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
சிட்னியில் நடந்த பகல் இரவு பயிற்சி ஆட்டத்தை இந்திய வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். இதனால் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்ளும்.
ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் அதுவும் பகலிரவு டெஸ்டில் எதிர் கொள்வது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில் ஆஸ்திரேலியா அங்கு விளையாடிய அனைத்து பிங்க் பந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது.
நாளைய டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு கேப்டன் வீராட் கோலிக்கு கடினமாக இருக்கும். தொடக்க வீரராக மயங்க் அகர்வாலுடன் விளையாடுவது பிரித்விஷாவா? சுப்மன்கில்லா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சி ஆட்டத்தில் சுப்மன்கில் சிறப்பாக ஆடினார். அதேநேரத்தில் பிரித்விஷா எதிர்பார்த்த அளவுக்கு பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை. இதனால் சுப்மன்கில்லுக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
இதே போல விக்கெட் கீப்பரில் விர்திமான் சகாவா? ரிஷப்பண்டா? என்பதிலும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ரிஷப்பண்ட் பயிற்சி ஆட்டத்தில் வேகமாக சதம் அடித்து இருந்தார்.
பேட்டிங்கில் வீராட் கோலி, புஜாரா, ரகானே, விகாரி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீரர்களில் முகமது ஷமியும், பும்ராவும் இடம் பெறுவது உறுதி. இருவரும் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக வீசினார்கள்.
3-வது வேகப்பந்து வீரருக்கான போட்டியில் உமேஷ் யாதவ், முகமது சிராஜ், நவ்தீப் சைனி ஆகியோர் உள்ளனர். சுழற்பந்து வீரர்களில் அஸ்வின், குல்தீப் யாதவ் இடையே போட்டி நடைபெறுகிறது. இதில் அஸ்வினுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
டிம்பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்தியாவை எளிதில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. மேலும் அந்த அணி பகல்-இரவு டெஸ்டில் தோல்வியை சந்தித்தது இல்லை. இது அந்த அணிக்கு சாதகமே.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஆஸ்திரேலியா மிகவும் நல்ல நிலையில் உள்ளது. ஸ்டீவ் சுமித், லபுசேன், மார்க்கஸ் ஹாரிஸ், கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லயன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
நாளைய பகல்-இரவு டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவிஷன் சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது. ஐதராபாத் அணியில் அரிடேன் சந்தனா (2 கோல்), ஹாலிசரன் நார்ஜாரி கோல் அடித்தனர். 5-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 3 ஆட்டங்களில் டிரா கண்டுள்ளது. ஈஸ்ட் பெங்கால் அணிக்கு இது 4-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-எப்.சி.கோவா (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.
8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி-மார்ச்சில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டி 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அடிலெய்டு:
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டரான கேமரூன் கிரீன் இடம் பெற்று உள்ளார்.
இவர் இந்தியாவுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் (பகல்-இரவு) பந்து வீசிய போது பும்ரா அடித்த பந்து தலையில் தாக்கியது. இதனால் நிலை குலைந்த கேமரூன் கிரீன் தரையில் அமர்ந்தார். இதில் அவர் சிறிது அதிர்ச்சியான உணர்வு அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு எதிராக நாளை மறுநாள் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் கேமரூன் கிரீன் இடம் பெறுவாரா என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கரிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கேமரூன் கிரீன் ஒரு திறமை மிக்க இளம் வீரர். உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் சிறந்த திறமையை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளார். பயிற்சி ஆட்டத்தில் அவரது தலையில் பந்து தாக்கிய சம்பவம் அசாதாரணமானது. நாங்கள் மூளை அதிர்ச்சி நெறிமுறைகளை கடந்து செல்கிறோம். அவர் உடல் தகுதியுடன் இருந்தால் நிச்சயமாக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தப்படுவார். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கும் கேமரூன் கிரீனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உற்சாகமாக இருக்கும்.
தொடக்க வீரர் ஜோ பர்னஸ் மிகவும் நல்ல வீரர். ஒருநாள் இரவில் உங்களது திறமையை இழந்து விடமாட்டீர்கள். நான் முழு நேரமும் தனிப்பட்ட முறையில் மட்டும் பகிரங்கமாக பர்னசுக்கு ஆதரவு அளித்து வருகிறேன். எந்த ஒரு வீரருக்கும் ரன்கள் மிகப்பெரிய மதிப்பு என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவுக்கு எதிரான பயிற்சிஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறங்கிய ஜோ பர்னஸ் சொதப்பியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் சதம் அடித்தார்.
கோவா:
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டித்தொடரில் இன்று நடக்கும் 29-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.
ஐதராபாத் அணி இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி 1 வெற்றி, 3 டிராவுடன் 6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
ஐதராபாத் அணி, ஒடிசாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு, ஜாம்ஷெட்பூர், ஏ.டி.கே.மோகன்பகன் ஆகிய அணிகளுடன் டிரா செய்தது.
ஈஸ்ட்பெங்கால் அணி இதுவரை விளையாடி உள்ள 4 ஆட்டத்தில் 3 தோல்வியை சந்தித்து உள்ளது. 1 ஆட்டத்தில் டிரா செய்தது. அந்த அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.
ஆனால் அந்த அணி வீரர்கள் வெற்றி பெற ஒருங்கிணைந்து விளையாடுவது அவசியமா கும்.
நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஜாம்ஷெட்பூர் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் லயோனல் மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா கிளப் அணி, லெவாண்டே அணியை எதிர்கொண்டது.
பந்து அதிக நேரம் பார்சிலோனா அணியினரின் கட்டுப்பாட்டில் வலம் வந்தாலும் எதிரணியின் தடுப்பு அரணை தகர்த்து கோல் அடிக்க முடியாமல் தடுமாறினார்கள். இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 76-வது நிமிடத்தில் பார்சிலோனா அணி கோல் அடித்தது. அந்த அணி வீரர் பிரெங்கி டி ஜோங் கடத்தி கொடுத்த பந்தை கேப்டன் மெஸ்சி கோல் வளையத்துக்குள் திணித்தார். அதன் பிறகு இரு அணியினரும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
முடிவில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெலாண்டே அணியை தோற்கடித்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய பார்சிலோனா அணி 5 வெற்றி, 2 டிரா, 4 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. ரியல் சோசிடாட் அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.






