என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியன் சூப்பர் லீக் 57-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி.யை வீழ்த்தியது
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 57-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி.யை வீழ்த்தியது. சென்னை அணியில் இஸ்மாயில் கோன்கால்வ்ஸ் 15 மற்றும் 21-வது நிமிடங்களில் கோல் அடித்தார்.

    11-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 3 வெற்றி, 5 டிரா, 3 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியது. ஒடிசாவுக்கு இது 7-வது தோல்வியாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் எப்.சி.கோவா-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.

    இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
    காலே:

    ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் அங்கமான இந்த தொடர் கடந்த ஆண்டு நடக்க இருந்தது. கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த போட்டி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தற்போது அரங்கேறுகிறது.

    கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணிக்கு முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் திரும்பி இருக்கிறார். தசைப்பிடிப்பு காரணமாக கடந்த மாதம் நடந்த தென்ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலகிய மேத்யூஸ் உடல் தகுதியை எட்டியதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது வருகை அணியின் பேட்டிங் வரிசைக்கு வலுசேர்க்கும். இந்த தொடரில் மேத்யூஸ் 19 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடப்பார்.

    ஆடுகளம் சுழலுக்கு சாதகமானது என்பதால் இங்கிலாந்து அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் தாக்குதலை தொடுக்கும் வியூகத்துடன் களம் காணுகிறது. 2018-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி, இலங்கையை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் முழுமையாக வீழ்த்தி இருந்தது. அதே போல் மீண்டும் சாதிக்கும் உத்வேகத்துடன் இங்கிலாந்து அணி வரிந்து கட்டும். இவ்விரு அணிகளும் இதுவரை 34 டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் இங்கிலாந்தும், 8-ல் இலங்கையும் வெற்றி ெபற்றுள்ளன. 11 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்கில் மும்பை அணிக்கெதிரான 197 ரன் இலக்கை எளிதாக எட்டி கேரளா அசத்தல் வெற்றி பெற்றது.
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்கில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மும்பை- கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கேரளா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் (40), ஆதித்யா தரே (42) சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 19 பந்தில் 38 ரன்கள் அடிக்க மும்பை 196 ரன்கள் அடித்தது.

    பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கேரளா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் முகமது அசாருதீன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 54 பந்தில் 9 விக்கெட், 11 சிக்சருடன் 137 ரன்கள் விளாச கேரளா 15.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் முதன்மை சுற்றுக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா கடைசி சுற்றில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான முதன்மை சுற்றில் விளையாடுவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் இந்திய வீராங்கனை அங்கிதா கலந்து கொண்டு விளையாடினார். கடைசி சுற்றில் செர்பியாவின் ஒல்கா டேனிலோவிச்சை எதிர்கொண்டார். இதில் இரண்டு மணி நேரம் போராடிய அங்கிதா 2-6, 6-3, 1-6 எனத் தோல்வியடைந்து முதன்மை சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
    பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நோவல் மலோசியாவின் செல்வதுரை கிசோனாவை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-15, 21-15 என எளிதாக வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    கொரோனா பாசிட்டிவ் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட சாய்னா நேவால், அதன்பிறகு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வர விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் சவுரப் வர்மாவை 21-12, 21-11 என எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    காஷ்யப் 3-வது சுற்றில் 8-14 என பின்தங்கிய நிலையில், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் கனடா வீரர் ஜேசன் அந்தோணி ஹோ-ஷுயே 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    காஷ்யப் முதல் சுற்றை 9-21 என இழந்திருந்தார். அதன்பின் 2-வது சுற்றை 21-13 எனக் கைப்பற்றினார். ஆனால் 3-வது சுற்றில் இருந்து வெளியேறினார்.
    ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சாதகமான ஆடுகளத்தில் (பிரிஸ்பேன்) முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இந்திய அணி தொடரை நிர்ணயிக்கும் போட்டியில் களம் இறங்குகிறது.
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    4 டெஸ்ட் கொண்ட தொடரில் அடிலெய்டில் பகல் - இரவாக நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் வருகிற 15-ந்தேதி (வெள்ளிக் கிழமை) தொடங்குகிறது.

    இந்த டெஸ்டில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் எந்த அணி தொடரை வெல்ல போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெஸ்ட் தொடரில் இந்தியாவின் எழுச்சி பிரமிப்பை ஏற்படுத்தியது. முதல் டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. அதில் இருந்து நம்பமுடியாத அளவில் மீண்டு 2-வது டெஸ்டில் வென்று சரியான பதிலடி கொடுத்தது. சிட்னி டெஸ்டில் கடுமையாக போராடி தோல்வியை தவிர்த்தது.

    இதனால் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா தொடரை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி ஒரே ஒரு முறைதான் டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளது. கடந்த முறை (2018-19) 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று இருந்தது. தற்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடரை வென்றால் ஒட்டுமொத்தமாக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப்படும்.

    அதே நேரத்தில் வெற்றி பெறாவிட்டாலும் தோல்வியை தவிர்த்து டிரா செய்வதும் மிகவும் முக்கியமானதாகும். வீரர்களின் காயம் இந்தியாவுக்கு மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.

    சிட்னி டெஸ்டில் ஜடேஜா, ரி‌ஷப் பண்ட், விஹாரி, பும்ரா ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் ரி‌ஷப் பண்ட் தவிர மற்ற 3 பேரும் கடைசி டெஸ்டில் ஆடமாட்டார்கள். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஆகும்.

    ஜடேஜா இடத்தில் ‌ஷர்துல் தாகூரும், பும்ரா இடத்தில் தமிழக வீரர் நடராஜனும் இடம்பெறுவார்கள். விஹாரி இடத்தில் மயங்க் அகர்வால் அல்லது பிரித்விஷாவுக்கு வாய்ப்பு உள்ளது. இதில் அகர்வால் முழு உடல் தகுதி இல்லை என்றால் பிரித்வி ஷா இடம்பெறுவார்.

    காயத்துடன் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை இந்த டெஸ்டில் ஏற்பட்டுள்ளது.

    டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு சிட்னி டெஸ்டில் வெற்றிபெற நல்ல வாய்ப்பு இருந்தது. இதை தவற விட்டதால் அந்த அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்ல கடுமையாக போராடுவார்கள். இதனால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    இந்த போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவி‌ஷன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    பிரிஸ்பேன் கபா மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றை மாற்றி எழுதும் என சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா- இந்தியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி தொடர்பாக முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-

    பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத அணியாக இருக்கலாம். ஆனால் இந்த வரலாற்றை இந்திய அணி மாற்றி அமைக்கும். ரஹானே தலைமையிலான இந்திய அணியால் இதை சாதிக்க முடியும்.

    பிரிஸ்பேன் மைதானம் ஆஸ்திரேலியா கோட்டையாக இருக்கலாம். ஆனால் அங்கு இந்திய அணியின் கொடி பறக்கும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பிரிஸ்பேன் மைதானத்தில் 2 அணிகளும் 6 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 5-ல் வெற்றிபெற்றன. ஒரு டெஸ்ட் டிரா ஆனது.

    ஒட்டுமொத்தமாக இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா 62 டெஸ்டில் 40-ல் வெற்றி பெற்றது. 13 போட்டி டிரா ஆனது. 8 டெஸ்டில் தோற்றது, ஒரு போட்டி டை ஆனது.
    வீராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்ததையொட்டி பல்வேறு விளம்பர நிறுவனங்கள் அவரை மொய்த்துள்ளன.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) வீராட் கோலி கேப்டனாக உள்ளார்.

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வீராட் கோலி திகழ்கிறார். தனது விளையாட்டு மூலம் மட்டுமில்லாமல் விளம்பரங்கள் வாயிலாகவும் அவர் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்.

    கிரிக்கெட் வீரர்களில் விளம்பரங்கள் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் வீரராக வீராட் கோலி திகழ்கிறார். அவரது பிராண்ட் மதிப்பும் அதிகமாக இருக்கிறது. இதுதவிர இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் அவர் தனது வருவாயை பெருக்கிக் கொண்டுள்ளார்.

    வீராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சமீபத்தில் பெண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    பெண் குழந்தை பிறந்ததையொட்டி மேலும் பல்வேறு விளம்பர நிறுவனங்கள் அவரை மொய்த்துள்ளன. குழந்தைகளுக்குரிய பேம்பர்ஸ், ஷூ மற்றும் குளிர்பான நிறுவனங்கள் அவரை ஒப்பந்தம் செய்வதற்காக சமூக வலை தளங்கள் மூலம் தொடர்பு கொண்டுள்ளன.

    ஆனால் கோலி இதுவரை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. விரைவில் அவர் அதில் கையெழுத்து இடுவார். இதன் மூலம் அவரது விளம்பரங்கள் மேலும் அதிகரிக்கும். வீராட் கோலி ஏற்கனவே பல்வேறு விளம்பர நிறுவனங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
    பாங்காக்:

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்பெல்டை சந்தித்தார். 78 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-16,24-26, 13-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டியில் களம் கண்ட சிந்து முதல் ஆட்டத்திலேயே தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தார்.

    ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சாய் பிரனீத் 16-21, 10-21 என்ற நேர்செட்டில் கன்டபோன் வாங்சரோனிடம் (தாய்லாந்து) தோல்வி அடைந்து நடையை கட்டினார். கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-அஸ்வினி ஜோடி 21-11, 27-29, 21-16 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஹபிஸ் பைஜல்-குளோரியா விட்ஜே இணையை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
    ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்குள் தள்ளி ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் இடத்தில் நீடிக்கிறார். சிட்னி டெஸ்டில் சதம், அரைசதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    2-வது இடத்தில் இருந்த விராட் கோலி டெஸ்ட் போட்டியில் விளையாடாத காரணத்தினால் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

    இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த புஜாரா 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். ரகானே ஒரு இடம் சரிந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார். டேவிட் வார்னர் 3 இடங்கள் சரிந்து 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

    லாபஸ்சேன் 4-வது இடத்திலும், பாபர் அசாம் 5-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
    இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளத்தில் சீண்டியதற்காக அஸ்வினிடம், டிம்பெய்ன் மன்னிப்பு கேட்டு உள்ளார்.

    சிட்னி:

    இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின்-விகாரி ஜோடியை வீழ்த்த முடியாததால் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் விரக்தி அடைந்தனர்.

    ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன், லபுசேன், மேத்யூ வாடே ஆகியோர் “சிலெட்ஜிங்”கில் ஈடுபட்ட னர். அஸ்வின் களத்தில் இருந்த போது டிம்பெய்ன் வார்த்தைகளால் உசுப்பேற்றி சீண்டினார். மோசமான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தினார்.

    4-வது டெஸ்ட் நடைபெறும் பிரிஸ்பன் மைதானத்துக்கு வா, பார்ப்போம் என்று சீண்டினார். இதற்கு அஸ்வின், “நீ இந்தியா வா பார்ப்போம். அதுதான் உனக்கு கடைசி தொடராக இருக்கும்” என்று பதிலடி கொடுத்தார்.

    தொடர்ந்து பெய்ன் சீண்டியதால், அஸ்வின் நடுவரிடம் புகார் அளித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே விகாரி அடித்த கேட்சை பெய்ன் கோட்டை விட்டார்.

    இந்தநிலையில் ஆடுகளத்தில் சீண்டியதற்காக அஸ்வினிடம், டிம்பெய்ன் மன்னிப்பு கேட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் செயல்பட்ட விதத்துக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் என்னுடைய அணியை நன்றாக வழிநடத்த விரும்பினேன். ஆனால் நேற்று கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

    நெருக்கடி காரணமாகவே நான் தவறாக செயல்பட்டு விட்டேன். என்னுடைய அணியின் தரத்தை விட நான் குறைவாக நடந்து கொண்டேன். நேற்றைய ஆட்டம் எங்களது மதிப்பில் சரிவை ஏற்படுத்தி விட்டது. போட்டி முடிந்த பிறகு அஸ்வினுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டேன்.

    நான் முட்டாள் போல் காட்சி அளித்தேன். அடிக்கடி பேசினேன். ஆனால் கேட்சை விட்டு விட்டேன் என்று கூறி எனது தவறுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

    பின்னர் நாங்கள் சிரித்துக் கொண்டோம். அதன்பின் எல்லாம் சரியாகி விட்டது. அடுத்த டெஸ்ட் போட்டிக்காக காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தாய்லாந்து போட்டியில் பங்கேற்க சென்ற இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவாலுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

    பாங்காக்:

    இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால்.

    30 வயதான இவர் 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.

    சாய்னாநேவால் இன்று முதல் வருகிற 17-ந் தேதி வரை நடைபெற இருக்கும். தாய்லாந்து ஒபன் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்பதற்காக பாங்காக் சென்றார்.

    இந்த நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட 3-வது பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சாய்னா ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருந்தார். தற்போது 2-வது முறையாக அவரை கொரோனா தாக்கி உள்ளது.

    இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அங்குள்ள மருத்துவமனையில் சாய்னா குறைந்தபட்சம் 10 நாட்கள் தனிமையில் இருப்பார்.

    இதேபோல் முன்னணி வீரர்களில் ஒருவரான பிரனாய்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரும் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

    இதன் காரணமாக இருவருடனும் நெருக்கமாக இருந்த அனுராக் காஷ்யப்பும் தனிமைப்படுத்திக் கொண்டார்.

    ×