என் மலர்
விளையாட்டு




புதுடெல்லி:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் சென்னை, மும்பையில் போட்டிகள் முடிந்துவிட்டது. அகமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டெல்லி மைதானத்தில் இன்று முதல் போட்டிகள் ஆரம்பமாகிறது.
3 முறை சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.
சி.எஸ்.கே அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதன் பிறகு தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் பஞ்சாப் கிங்சை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 45 ரன் வித்தியாசத்திலும், 4-வது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்சை 18 ரன் வித்தியாசத்திலும், 5-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 69 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 6-வது போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை இன்று சந்திக்கிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
சி.எஸ்.கே. அணியின் அதிரடி இன்றும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஐதராபாத் அணியை வீழ்த்தி 5-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறும்.
ஆல்ரவுண்டர் பணியில் ரவீந்திர ஜடேஜா மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்தார். ஓரே ஓவரில் 36 ரன் விளாசி சாதனை படைத்ததார்.இதேபோல மொய்ன் அலி, சாம் கரண் ஆகியோரும் ஆல்ரவுண்டர் பணியில் சிறப்பாக செயல்படுபவர்கள்.
பேட்டிங்கில் டுபிளசிஸ் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 5 ஆட்டத்தில் 214 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோல ரெய்னா, அம்பதி ராயுடு போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள். பந்துவீச்சில் தீபக் சாஹர், நிகிடி, ஷர்துல் தாகூர் ஆகியோர் முத்திரை பதிக்கக் கூடியவர்கள்.
ஐதராபாத் அணி ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
ஐதராபாத் அணி பஞ்சாப்பை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கொல்கத்தா, பெங்களூர், மும்பை, டெல்லி அணிகளிடம் தோற்று இருந்தது.
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை ஆஸ்பத்திரிகள் வாங்குவதற்கு உதவும் வகையில், ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலரை (இந்திய மதிப்பில் ரூ.29 லட்சம்) பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றி வருபவருமான 44 வயதான பிரெட்லீ ஒரு பிட்காயினை (தற்போதைய வர்த்தக மதிப்பு ரூ.40 லட்சம்) கொரோனா தடுப்பு மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை வாங்க வழங்குவதாக நேற்று அறிவித்தார்.
இது குறித்து பிரெட்லீ தனது டுவிட்டர் பதிவில், ‘எனக்கு இந்தியா எப்போதும் 2-வது வீடு போன்றதாகும். நான் விளையாடிய காலத்திலும், ஓய்வு பெற்ற பிறகும் இந்திய மக்கள் என் மீது காட்டிய அன்பும், பாசமும் சிறப்பானதாகும். கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. தற்போதைய இந்த கடினமான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேவைப்படுபவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதை உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டி தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது சொந்த ஏற்பாட்டில் நாடு திரும்ப வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.
தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். போட்டி தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா (இருவரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்), ஆண்ட்ரூ டை (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகியோர் போட்டியில் இருந்து விலகி நாடு திரும்புகிறார்கள். இன்னும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவன் சுமித் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), டேவிட் வார்னர் (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), மேக்ஸ்வெல் (பெங்களூரு) உள்பட 14 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இந்திய பயணிகள் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு நேரடியாக வருவதற்கு மே 15-ந் தேதி வரை ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஐ.பி.எல். போட்டி முடிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் கருத்து தெரிவிக்கையில், ‘ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரர்களின் ஐ.பி.எல். ஒப்பந்தத்தில் இருந்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 10 சதவீத தொகையை பெறுகிறது. இந்த முறை ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு நாங்கள் தனி விமானம் மூலம் நாடு திரும்புவதற்கு அந்த தொகையை செலவழிக்கலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். நாங்கள் மிகவும் கட்டுப்பாடான கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கிறோம். அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்தி கொள்ளப்போகிறோம். எனவே நாங்கள் நாடு திரும்ப ஆஸ்திரேலிய அரசு தனி விமானம் அனுப்பும் என்று நம்புகிறோம். போட்டி முடிந்த பிறகு நாங்கள் பாதுகாப்பாக நாட்டுக்கு திரும்ப வேண்டும்’ என்றார்.

இதற்கிடையில் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பத்திரமாக வீடு திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் உறுதி அளித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தற்காலிக தலைமை செயல் அதிகாரி ஹேமங் அமின் ஐ.பி.எல். அணிகளுக்கு அனுப்பி இருக்கும் இ-மெயிலில், ‘இந்தியாவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக சிலருக்கு தயக்கங்கள் ஏற்பட்டு இருப்பதை அறிகிறோம். போட்டியில் இருந்து விலக சில வீரர்கள் எடுத்துள்ள முடிவை மதிக்கிறோம். அவர்களுக்கு எல்லாவிதமான ஆதரவையும் அளிப்போம். அதேநேரத்தில் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் பத்திரமாக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறோம். கொரோனா தடுப்பு நடைமுறைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த கொரோனா பரிசோதனை தற்போது 2 நாளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. முன்பு வெளியே உள்ள ஓட்டல்களில் இருந்து உணவு வாங்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. போட்டி முடிந்த பிறகு சொந்த நாட்டுக்கு எப்படி திரும்புவது என்று பலரும் கவலை கொள்வதை நாங்கள் அறிவோம். இதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய இடத்துக்கு பாதுகாப்பாக திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் எடுக்கும். இதற்கான ஏற்பாடுகளை அரசுடன் இணைந்து செய்வோம். கடினமான சூழ்நிலையில் இருந்து மக்களை சிறிது நேரம் திசைதிருப்பினாலும் அது சிறந்த பணியே. ஆடுகளத்தில் களம் இறங்கும் போது லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள். ஒருவரது முகத்தில் ஒரு நிமிடம் மகிழ்ச்சியை உண்டாக்கினாலும் நீங்கள் நன்றாக செயல்பட்டீர்கள் என்று அர்த்தமாகும். வழக்கமாக நீங்கள் வெற்றி பெறுவதற்காக விளையாடுவீர்கள். ஆனால் இந்த முறை அதைவிடவும் மிகவும் முக்கியமான மனிதநேயத்துக்காக விளையாடுகிறீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. ஆர்சிபி-க்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 12 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 17 ரன்னிலும் வெளியேறினர். மேக்ஸ்வெல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
3-வது வீரராக களமிறங்கிய ராஜத் படிதார் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 6 ரன்னில் வெளியேறினார்.
கடைசி வரை நின்று அதிரடி காட்டிய ஏபி டி வில்லியர்ஸ் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்தார்.
இறுதியில், ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணி சார்பில் இஷாந்த் சர்மா, ரபடா, அவேஷ் கான், அமித் மிஷ்ரா, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா 21 ரன்னும், ஷிகர் தவான் 6 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்னும், ஸ்டோய்னிஸ் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ரிஷப் பண்ட் நிதானமாக ஆடினார். அவருக்கு ஹெட்மயர் ஒத்துழைப்பு கொடுத்தார்.

இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் 53 ரன்களும், பண்ட் அரை சதமடித்து 58 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.ஆர்சிபி அணி. 5வது வெற்றி பெற்ற ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.








