என் மலர்
விளையாட்டு

புதுடெல்லி:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லி, அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பையில் ஏற்கனவே போட்டிகள் முடிந்துவிட்டது. இனி பெங்களூர், கொல்கத்தாவில் போட்டிகள் நடைபெறும்.
இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து 5 வீரர்கள் விலகி இருந்தனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்ட்ரூ டை, கானே ரிச்சர்ட்சன், ஆடம் சம்பா ஆகியோர் அவசரமாக நாடு திரும்பினார்கள். இதேபோல இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் பாதுகாப்பு வளையத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விலகினார். இந்திய வீரர்களில் சென்னையை சேர்ந்த அஸ்வின் பாதியிலேயே விலகினார்.
இதைதொடர்ந்து ஐ.பி.எல். போட்டி தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் போட்டி தொடர்ந்து நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டியில் இருந்து 2 நடுவர்கள் விலகி உள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த நிதின்மேனன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பால்ரீபல் ஆகியோர் ஐ.பி.எல். போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளனர்.

நடுவர் நிதின் மேனனின் சொந்த ஊர் இந்தூர் ஆகும். அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாக அவர் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் இருந்து விலகிய மேனன், பால் ரீபலுக்கு பதிலாக மாற்று நடுவர்களை கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி ஐதராபாத்தை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது.
டெல்லியில் நடந்த 23-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணிக்கு 172 ரன் இலக்காக இருந்தது.
மனிஷ் பாண்டே 46 பந்தில் 61 ரன்னும் (5பவுண்டரி, 1 சிக்சர் ), கேப்டன் டேவிட் வார்னர் 55 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நிகிடி 2 விக்கெட்டும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 9 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 172 ரன் இலக்கை எளிதில் எடுத்தது. அந்த அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்தில் 75 ரன்னும் (12 பவுண்டரி), டுபெலிசிஸ் 38 பந்தில் 56 ரன்னும் (6 பவுண்டரி,1 சிக்சர்) எடுத்தனர். ரஷீத்கான் 3 விக்கெட் கைப்பற்றினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 5 -வது வெற்றியாகும். இந்த 5 வெற்றியையும் தொடர்ச்சியாக பெற்று சாதித்தது. இதன் மூலம் சி.எஸ்.கே. மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியது.
இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதா வது:-
எங்களது பேட்டிங் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் அதற்காக பந்துவீச்சு நன்றாக இல்லை என்பது அர்த்தமில்லை.
டெல்லி ஆடுகளம் ஆச்சரியமளிக்கும் வகையில் சிறப்பாக இருந்தது. இதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. இதற்கு முன்பு இங்குள்ள பிட்ச் இப்படி இருந்ததில்லை. பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது. பனித்துளிகள் எதுவுமில்லை.
தொடக்க ஜோடியின் பார்ட்னர்ஷிப் மிகவும் பிரமாதமாக இருந்தது. கடந்த சீசனில் அப்படி அமையவில்லை. நீண்ட நாள் தனிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அப்போது இருந்தது.
இந்த சீசனில் வீரர்கள் அதிக பொறுப்பை ஏற்று உள்ளனர். கடந்த 8 முதல் 10 ஆண்டாக பார்த்தால் நாங்கள் அணியில் இருந்து வீரர்களை மாற்றவில்லை. வாய்ப்பு கிடைக்காத வீரர்களையும் நாங்கள் பாராட்டி உள்ளோம்.
நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். வீரர்களின் அறை சிறப்பாக இருப்பது முக்கியமானது. விளையாடாத வீரர்களுக்கு கூடுதலாக பாராட்டுக்களையும் நாங்கள் தெரிவிப்பது அவசியமாகும்.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
ஐதராபாத் அணி 5-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் வார்னர் கூறும்போது, “தோல்விக்கு நானே முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். என்னால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. சி.எஸ்.கே. அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது” என்றார்.
சி.எஸ்.கே. அணி 7-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் வருகிற 1-ந் தேதி மோதுகிறது. ஐதராபாத் அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 2-ந் தேதி சந்திக்கிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 4-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. நெல்லை, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய இடங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. தொடக்க ஆட்டம் நெல்லையிலும், இறுதிப்போட்டி சேலத்திலும் அரங்கேறுகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
இதற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி தினசரி போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இரண்டு ஆட்டங்கள் இருக்கும் நாளில் முதல் ஆட்டம் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் நாட்களில் (அதாவது ஜூன் 19, 20, 22-ந் தேதிகளில்) போட்டிகள் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
தொடக்க லீக் ஆட்டத்தில் (ஜூன் 4) திண்டுக்கல் டிராகன்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது லீக் ஆட்டங்களில் ஜூன் 5-ந் தேதி நெல்லை ராயல் கிங்சையும், ஜூன் 10-ந் தேதி திண்டுக்கல் டிராகன்சையும், ஜூன் 12-ந் தேதி திருப்பூர் தமிழன்சையும், ஜூன் 15-ந் தேதி சேலம் ஸ்பார்டன்சையும், ஜூன் 17-ந் தேதி கோவை கிங்சையும், ஜூன் 23-ந் தேதி திருச்சி வாரியர்சையும், ஜூன் 27-ந் தேதி மதுரை பாந்தர்சையும் எதிர்கொள்கிறது.
உலக தடகள தொடர் ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் உள்ள சிலிசியாவில் மே 1 மற்றும் 2-ந் தேதிகளில் நடக்கிறது. இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டியாகும். இந்த போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். இந்த தகுதி சுற்று போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஹிமா தாஸ், டுட்டீ சந்த், தனலட்சுமி (தமிழ்நாடு), அர்ச்சனா சுசீந்திரன், தனேஷ்வரி, ஹிமாஸ்ரீ ராய் ஆகியோர் அடங்கிய இந்திய அணியும், ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், ஆரோக்ய ராஜீவ் (தமிழ்நாடு), அமோஜ் ஜேக்கப், நிர்மல் நோக் டாம், சர்தாக் பாம்ப்ரி ஆகியோர் அடங்கிய இந்திய அணியும் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தது. இந்திய அணியினர் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் இருந்து ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து) வழியாக செல்லும் விமானம் மூலம் போலந்து செல்ல டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு நெதர்லாந்து அரசு திடீரென தடை விதித்துள்ளது. இதனால் டெல்லியில் இருந்து ஆம்ஸ்டர்டாம் செல்ல வேண்டிய விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஒலிம்பிக் தகுதி சுற்று உலக தொடர் ஓட்ட பந்தயத்தில் இந்திய அணியினர் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய தடகள சம்மேளன தலைவர் சுமரிவாலா கூறுகையில் ‘இந்த தருணத்தில் நாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம். இந்தியாவில் இருந்து போலந்துக்கு நேரடி விமான போக்குவரத்து எதுவும் கிடையாது. மாற்று விமானங்கள் மூலம் இந்திய அணியை அனுப்ப எடுத்த முயற்சிகளுக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. கடந்த 24 மணி நேரமாக இந்த பயணத்துக்கான மாற்று வழியை கண்டுபிடிக்க நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். போட்டி அமைப்பாளர்கள், உலக தடகள சம்மேளனம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமான நிறுவனங்களிடம் எல்லாம் கலந்து ஆலோசித்து விட்டோம். தற்போதைய சூழ்நிலையில் யாரிடம் இருந்தும் எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை’ என்றார்.










