என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கேன் வில்லியம்சன்தான் விராட் கோலியை விட சிறந்தவர் என்ற கருத்தில் சல்மான் பட்டுக்கும், மைக்கேல் வாகனுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். தற்போது வர்ணனையாளராக உள்ளார். அவ்வப்போது சமூக இணையத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தும் கருத்துகளை பதிவிட்டு, ரசிகர்களின் விமர்சனத்திற்கும் உள்ளாவார்.

    அடுத்த மாதம் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இதுகுறித்து பேசும்போது ‘‘விராட் கோலியை விட கேன் வில்லியம்சன்தான் சிறந்த பேட்ஸ்மேன். அவர் இந்தியாவில் பிறந்திருந்தால் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று அழைக்கப்பட்டிருப்பார்’’என்று வாகன் தெரிவித்திருந்தார்.

    மைக்கேல் வாகனின் இந்த கருத்துக்கு கடும் விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. மைக்கேல் வாகனின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் தொடக்க வீரர் சல்மான் பட் ‘‘இப்போது, ஒரு தொடக்க வீரராக, நீங்கள் ஒரு சதம் கூட பெறவில்லை என்றால், அது விவாதிக்கத்தக்கதல்ல. ஒரு விவாதத்தைத் தூண்டும் விஷயங்களைச் சொல்வதில் ஒரு திறமை இருக்கிறது. தவிர, ஒரு தலைப்பை நீ்ட்டிக்கொண்டே செல்ல மக்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது.

    மேலும், ஒப்பிடுவது யார்? மைக்கேல் வாகன். அவர் இங்கிலாந்தின் தலைசிறந்த கேப்டன் ஒரு விசயம் என்னவெனில் அவர் பேட்டிங்கில் சிறந்தப்பாக செயல்படவில்லை. சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். ஆனால் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை’’ எனத் தெரிவித்திருந்தார்.

    இதனால் கோபம் அடைந்த மைக்கேல் வாகன் ‘‘இது மிகவும் உண்மை சல்மான். ஆனால், எங்களுடைய சிறந்த விளையாட்டு சிலரை போன்று கரைபடிய நான் மேட்ச் பிக்சர் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்தில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டு சல்மான் பட் கைது செய்யப்பட்டதோடு, கிரிக்கெட் விளையாட தடையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவில் கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அஷ்வின் தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் அஷ்வின். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னையில் நடைபெற்ற போட்டிக்குப்பின், அணியில் இருந்து விலகினார். அவரது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளவதற்கான விலகினார்.

    நேற்று ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்குவதற்கான சென்னை நேர் உள்விளையாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, ஒன்றாக கூடி ஒருவருக்கொரும் இடித்துக் கொண்டு நின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறத்தியுள்ளார்.

    முன்னாள் சவுராஷ்டிரா வேகப்பந்து வீச்சார்கள் மற்றும் பிசிசிஐ நடுவரான ராஜேந்திரசின் ஜடேஜா கொரோனா தொற்றால் உயிரழந்தார்.

    மேலும், தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை அஷ்வின் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கை இல்லாதது குறித்து டுவிட் செய்திருந்தார்.

    இந்த நிலையில் மக்கள் முண்டியடித்த படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அஷ்வின் ‘‘பயமாக இருக்கிறது. பயங்கரமான விஷயங்களை பரப்ப வேண்டாம் என அனைவரும் சொல்கிறார்க்ள. தயவு செய்து பயப்படுங்கள். மிகவும் பயப்படுங்கள். இதனால் மட்டுமே நாம் இந்த தொற்றை எதிர்த்து போரிட முடியும். இந்த வைரஸை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்வது அவசியம்.

    உங்களுடைய பயத்தை நான் புரிந்து கொள்கிறேன். என்னுடைய குடும்பத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, நான் அருகில் இருந்து கவனித்துள்ளேன். உங்களுக்கும், எனக்கும் சூழ்நிலை பற்றி நன்றாக தெரிந்துள்ளது. அனைத்து முன்நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஆனால், ஏராளமானோர் இந்த கொடிய நோயின் ஆபத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
    காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் கடந்த 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின் டெஸ்ட் போட்டியில் இடம்பிடிக்காமல் உள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஷ்வர் குமார். பந்தை ஸ்விங் செய்வதில்  திறம்பட செயல்படக்கூடியவர். ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பெறவில்லை.

    ஐந்து போட்டிகளில் கொண்ட டெஸ்ட் போட்டிக்கான உடற்குதியை அவர் இன்னும் பெறவில்லை. அடிக்கடி காயம் ஏற்படுகிறது என்பதால் அவரை எடுக்கவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதற்கிடையில் புவேனஷ்வர் குமார் டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்பவில்லை என்ற செய்திகள் வெளியாகின.

    ‘‘புவனேஷ்வர் குமார் டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்பவில்லை. அருடைய உத்வேகம் போய்விட்டது. உண்மையச் சொல்ல வேண்டுமென்றால், 10 ஓவர்கள் வீசுவதைக் கூட அவரிடம் தேர்வாளர்கள் பார்க்க முடியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் மறந்துவிட்டது. இது இந்திய அணிக்கு இழப்புதான். அதில் சந்தேகம் இல்லை. ஒரு பந்து வீச்சாளர் இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்துவார் என்றால், அது புவனேஷ்வர் குமாராகத்தான் இருக்க முடியும்’’ எனச் செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில் அந்த செய்திகளில் உண்மையில்லை புவனேஷ்வர் குமார் விளக்கம் அளித்துள்ளார். டெஸ்ட் போட்டி குறித்து புவனேஷ்வர் குமார் கூறுகையில் ‘‘நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்பவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அணிக்கான தேர்வை பொருட்படுத்தாமல் நான் தாமாகவே, மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கும் தயாராகிவருகிறேன். இனிமேலும் அதைத்தொடர்ந்து செய்வேன். தகவல் அடிப்படையில் உங்கள் அனுமானத்தை தயவு செய்து செய்தியாக்காதீர்கள்’’ என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    புவனேஷ்வர் குமார் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 63 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 3 அரைசதங்களுடன் 552 ரன்கள் அடித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் ஆஸ்திரேலியா வீரர்கள் பால் டேம்பரிங்கில் ஈடுபட்ட விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கடந்த 2018-ம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்றது. அப்போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் உப்புத்தாள் வைத்து பந்தை சேதப்படுத்தியது தெளிவாக தெரிந்தது.

    இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு விசாரணை நடத்தியது. அப்போது கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு இந்த விவகாரம் தெரியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதத் தடையும் வார்னர், ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது.

    மேலும், இந்த விவகாரம் குறித்து வீரர்கள் புதுத்தகவல்களை தெரிவித்தால் அதனடிப்படையில் விசாரணை நடத்தப்படும் எனவும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பான்கிராப்ட் பால் டேம்பரிங் விவகாரம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தெரியும் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இதுகுறித்து புதிததாக விசாரணை நடத்தப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் சிக்கலில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அப்போது மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
    டெல்லி சத்ராசல் அரங்கில் நடந்த மோதலில் பலத்த காயமடைந்த சாகர் உயிரிழந்ததையடுத்து, இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.
    புதுடெல்லி:

    ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணா (வயது 23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 4ந்தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சாகர் ராணாவை அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இது தொடர்பாக  சாகர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

    மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட சிலரை போலீசார் தேடி வந்த நிலையில் சுஷில் குமார் தலைமறைவானார். சாகர் உயிரிழந்ததையடுத்து, இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். 

    இந்த சம்பவம் நடந்தபின், சுஷில் குமார் ஹரித்துவார் சென்று, அங்கிருந்து ரிஷிகேஷ் சென்றுள்ளார். பின்னர் சுஷில் குமார் தொடர்ந்து தனது இடத்தை மாற்றிக்கொண்டே வருகிறார். இதனால் சுஷில் குமார் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர். இதனையடுத்து, சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.

    இந்த நிலையில், மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் டெல்லி கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதேபோன்று அவரை பிடிப்பதற்கு பரிசு தொகை அறிவிக்கவும் டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது.
    லண்டன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது. அந்த அணியின் இளம் பேட்ஸ்மேன் கேமரூன் பான்கிராப்ட் உப்புத்தாளை கொண்டு பந்தை ஒரு பக்கம் தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயற்சித்தது கேமரா பதிவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. பந்து ஸ்விங் ஆக வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்ததும், இதற்கு சூத்ரதாரியாக துணை கேப்டன் டேவிட் வார்னர் செயல்பட்டதும், இது விதிமுறைக்கு புறம்பானது என்று அறிந்திருந்தும் கேப்டன் ஸ்டீவன் சுமித் அதை கண்டுகொள்ளாமல் விட்டதும் தெரியவந்தது. அவர்கள் தங்களது தவறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர். இது குறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பான்கிராப்ட்டுக்கு 9 மாதமும், சுமித், வார்னருக்கு ஓராண்டும் தடை விதித்தது. சுமித் கேப்டன் பதவியையும் இழந்தார்.

    இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர் 28 வயதான பான் கிராப்ட் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள அவரிடம் நீங்கள் பந்தை சேதப்படுத்திய யுக்தி அணியின் மற்ற பவுலர்களுக்கு தெரியுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நிச்சயமாக என்று பதில் அளித்தார். ‘நான் இவ்வாறு செய்தது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். எனவே அனேகமாக அவர்களுக்கு இது தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார். ஆனால் பவுலர்களின் பெயர் விவரத்தை அவர் வெளியிடவில்லை. அந்த டெஸ்டில் பேட் கம்மின்ஸ் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகிய ஆஸ்திரேலிய பவுலர்கள் ஆடியது குறிப்பிடத்தக்கது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் புதிய தகவல்கள் இருந்தால் தங்களுக்கு அனுப்பலாம், இது குறித்து மீண்டும் விசாரிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியிருக்கிறது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.
    இத்தாலி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
    ரோம்:

    இத்தாலி நாட்டில் நடந்து வரும் ஆடவர் ஒற்றையர் இத்தாலி ஓப்பன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால், அமெரிக்காவை சேர்ந்த ரெய்லி ஒபால்கா ஆகியோர் விளையாடினர்.

    இதில், அதிரடியாக விளையாடிய ரபேல் நடால் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் நடால் இத்தாலி ஓப்பன் இறுதிப்போட்டிக்கு 12வது முறையாக முன்னேறியுள்ளார்.
    இங்கிலாந்து தொடருக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் முதல்முறையாக ஷபாலி வர்மா சேர்க்கப்பட்டு உள்ளார்.
    புதுடெல்லி:

    இங்கிலாந்து தொடருக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் முதல்முறையாக ஷபாலி வர்மா சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் ஜூன் 16-ந் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டி முறையே ஜூன் 27-ந் தேதி, ஜூன் 30-ந் தேதி, ஜூலை 3-ந் தேதிகளிலும், 20 ஓவர் போட்டி முறையே ஜூலை 9, 11, 15 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.

    இந்திராணி ராய், ஷபாலி வர்மா


    இங்கிலாந்து தொடருக்கான இந்திய பெண்கள் அணியை நீது டேவிட் தலைமையிலான தேர்வு குழுவினர் தேர்வு செய்து அறிவித்துள்ளனர். 20 ஓவர் போட்டி அணியின் அதிரடி தொடக்க வீராங்கனையான 17 வயது ஷபாலி வர்மா முதல்முறையாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷிகா பாண்டே, இடக்கை சுழற்பந்து வீச்சு வீராங்கனை எக்தா பிஷ்த், விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா ஆகியோர் மூன்று வடிவிலான அணியிலும் இடம் பிடித்துள்ளனர்.

    ஜார்கண்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் இந்திராணி ராய் அறிமுக வீராங்கனையாக இடம் பெற்றுள்ளார். முதுகுவலி பிரச்சினையில் இருந்து மீண்டுள்ள ஸ்னே ராணா 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். கொரோனா தொற்றுக்குள்ளான இடக்கை சுழற்பந்து வீச்சு வீராங்கனை ராஜேஸ்வரி கெய்க்வாட், பாதிப்பில் இருந்து மீண்ட போதிலும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்கான இந்திய பெண்கள் அணி வருமாறு:-

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), பூனம் ரவுத், பிரியா பூனியா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஸ்னே ராணா, தானியா பாட்டியா, இந்திராணி ராய், ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், எக்தா பிஷ்த், ராதா யாதவ்.

    20 ஓவர் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ரிச்சா கோஷ், ஹர்லீன் டியோல், ஸ்னே ராணா, தானியா பாட்டியா, இந்திராணி ராய், ஷிகா பாண்டே, பூஜா வஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், எக்தா பிஷ்த், ராதா யாதவ், சிம்ரன் பகதூர்.
    பல்வேறு திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த தொகையை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.
    சென்னை:

    தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி மூலமாகவோ நிவாரண உதவி வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதையடுத்து பல்வேறு திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த தொகையை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் அர்ஜுனா விருது சென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரன், முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட சத்யன் ஞானசேகரன் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜூன் 2ல் இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படும் முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
    பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * இந்திய வீரர்கள் மே 19ந்தேதி மும்பைக்கு வரும் முன் 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

    * பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்தால் மட்டுமே இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்படுவர்.

    * ஜூன் 2ல் இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படும் முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

    * இந்தியா-நியூசிலாந்து உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18ல் தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்தது.

    2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    தற்போது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது.

    ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொள்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

    வில்வித்தை: ரீகர்வ் தனிநபர் பிரிவில் தருண்தீப் ராய், அட்டானு தாஸ், பிரவீன் ஜாதவ் பங்கேற்பு. அணிகள் பிரிவில் இவர்கள் கூட்டாக கலந்து கொள்வார்கள். மகளிர் தனிநபர் ரீகர்வ் பிரிவில் தீபிகா குமாரி பங்கேற்பு.

    தடகளம்: நீரஜ் சோப்ரா, சிவ்பால் சிங் ( ஈட்டி எறிதல்), பாவ்னா, பிரியங்கா கோஷ்வாமி (மகளிர் 20 கி.மீ நடை பந்தயம்), இர்பான் தோடி , ராகுல் , சந்தீப் குமார் (20 கி.மீ. நடைபந்தயம்), முகமது அனாஸ், வி.கே.விஷ்மயா, நிர்மல் நோவா, ஜிஷ்னா மேத்யூ (4ஜ்400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம்), அவினாஷ் சேபிள் (3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்)

    எம்.ஸ்ரீசங்கர் ( நீளம் தாண்டுதல்), கமல்பிரீத் கவுர் (மகளிர் வட்டு எறிதல்).

    குத்துசண்டை: சதீஷ் குமார் (91 கிலா), ஆஷிஸ் குமார் (74 கிலோ), லோவ்லினா போர்கோஹெய்ன் (மகளிர் 69கிலோ), விகாஷ் கிருஷ்ணன் ( 69 கிலோ), பூஜா ராணி (மகளிர் 75 கிலோ), அமித் பங்கால் ( 52 கிலோ), மேரி கோம் (மகளிர் 51 கிலோ), சிம்ரன்ஜி (மகளிர் 60 கிலோ), மணீஷ் கவுசிக் (63 கிலோ).

    குதிரையேற்றம்: பவுத் மிர்சா ( தனிநபர் பிரிவு)

    வாள்வீச்சு: பவானி தேவி (மகளிர் சேபர்)

    ஜிம்னாஸ்டிக்: பிரணதி நாயக் (மகளிர் ஆர்ட்டிஸ்டிக்)

    ஆக்கி: ஆண்கள், பெண்கள் அணி.

    துடுப்பு படகு: அர்ஜுன் லால் ஜத், அர்விந்த் சிங் ( லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ்)

    பாய்மரபடகு: நேத்ரா குமணன் (மகளிர் லேசர் ரேடியல்), விஷ்ணு சரவணன் (லேசர் ஸ்டாண்டர்டு), கே.சி.கணபதி, வருண் தாக்குர் (ஸ்கீப் 49இஆர்)

    துப்பாக்கிச் சுடுதல் (தனிநபர் பிரிவு): அஞ்சும் மவுத்கில், தேஜஸ்வினி சாவந்த், அபூர்வி சண்டிலா, இளவேனில் , மனு பாகர், ய‌ஷஸ்வினி தேஸ்வால், ராகி சர்னோபாத், திவ்யானேஷ் பன்வார், சஞ்ஜீவ் ராஜ்புத், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, தீபக் குமார், அங்கத் வீர் சிங் பஜ்வா, மைராஜ் அகமது கான்.

    (கலப்பு அணிகள் பிரிவு): திவ்யானேஷ் சிங் பன்வார், இளவேனில் மற்றும் தீபக் குமார், அஞ்சும் மவுத்கில். சவுரப் சவுத்ரி, மனு பாகர் மற்றும் அபிஷேக் வர்மா, ய‌ஷஸ்வினி சிங் தேஸ்வால்.

    டேபிள் டென்னிஸ்: சரத் கமல், சத்யன் ( ஒற்றையர்), மணிகா பத்ரா சுதிர்தா முகர்ஜி (மகளிர் ஒற்றையர்). சரத்கமல், மணிகா பத்ரா (கலப்பு இரட்டையர் பிரிவு)

    மல்யுத்தம்: ரவி தகியா, பஜ்ரங் புனியா, தீபக் புனியா, வினேஷ் போகத், அன்ஷு மாலிக் (மகளிர் 57 கிலோ), சோனம் மாலிக் (மகளிர் 62 கிலோ), சுமித் மாலிக் (125 கிலோ), சீமா பிஸ்லா (மகளிர் 50 கிலோ).

    பந்துவீச முடியவில்லை என்றால் இந்திய அணியில் இடம் பெற ஹர்திக் பாண்ட்யா தகுதியற்றவர் என முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் சரன்தீப்சிங் கூறினார்.
    புதுடெல்லி: 

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் சரன்தீப்சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவை சேர்க்காதது ஏன்? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. முதுகுவலி காயத்துக்கு ஆபரேஷன் செய்த பிறகு அவரால் வழக்கம் போல் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை. இந்திய அணிக்காக ஆடும் லெவனில் அவர் இடம் பெறும் போது ஒரு நாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்களும், 20 ஓவர் போட்டியில் 4 ஓவர்களும் பந்து வீசியாக வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் அவர் விளையாட முடியாது. அவர் பவுலிங் செய்யவில்லை என்றால் அணியின் சரிசம கலவையை பெரிய அளவில் பாதித்து விடும். இதனால் கூடுதலாக ஒரு பவுலரை சேர்க்க வேண்டி உள்ளது. சூர்யகுமார் யாதவ் போன்ற ஒரு பேட்ஸ்மேனை வெளியே உட்கார வைக்க வேண்டி இருக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இதை பார்த்தோம்.

    அணியில் இப்போது வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் பட்டேல் போன்ற ஆல்-ரவுண்டர்கள் இருக்கிறார்கள். காயத்தில் இருந்து மீண்ட ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பியிருக்கிறார். ஷர்துல் தாகூர் கூட ஆல்-ரவுண்டராக ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார். ஒரு ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா பந்து வீசவில்லை என்றால் அந்த பணியை இவர்களால் செய்ய முடியும்.

    பிரித்வி ஷா திறமையான பேட்ஸ்மேன். ஷேவாக் இந்திய அணிக்காக எப்படி ஆடினாரோ அதே போன்று இவரால் ஆட முடியும். இளம் வீரரான அவரை இப்போதே ஓரங்கட்டக்கூடாது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு பிறகு நீக்கப்பட்டதில் இருந்து முதல்தர கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். அத்துடன் தனது பேட்டிங்கில் உள்ள தொழில்நுட்ப பிரச்சனைகளையும் சரி செய்துள்ளார். எனவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×