என் மலர்tooltip icon

    விளையாட்டு

    2021-ம் ஆண்டு டி.என்.பி.எல். தொடரை பார்வையாளர்கள் இன்றி கடுமையான கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு நடத்துவதற்கு தமிழக அரசு முறையாக அனுமதி வழங்கியுள்ளது.
    8 அணிகள் பங்கேற்கும் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை முதலில் நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. இப்போது இந்த போட்டி முழுமையாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு, தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 5-வது   டி.என்.பி.எல். கிரிக்கெட் வருகிற 19-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி வரை நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி, சேலம் ஸ்பார்டன்சுடன் மோதுகிறது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் லீக்கில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 20-ந்தேதி எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து 24-ந்தேதி நெல்லை ராயல் கிங்சையும், 28-ந்தேதி சேலம் ஸ்பார்டன்சையும், ஆகஸ்டு 1-ந்தேதி திண்டுக்கல் டிராகன்சையும், 4-ந்தேதி மதுரை பாந்தர்சையும், 6-ந்தேதி கோவை கிங்சையும், 8-ந்தேதி திருச்சி வாரியர்சையும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சந்திக்கிறது.

    ‘2021-ம் ஆண்டு டி.என்.பி.எல். தொடரை பார்வையாளர்கள் இன்றி கடுமையான கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு நடத்துவதற்கு தமிழக அரசு முறையாக அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலை முடித்த பிறகு 9-ந்தேதி முதல் அணியினர் சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்க உள்ளனர்’ என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்தார்.
    இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட இந்திய வீரர்கள் அனைவருமே இப்போது 2-வது தவணையை பெற தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

    லண்டன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4-ந் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

    இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டனர்.

    அதன்பின் அவர்கள் மும்பை ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த தனிமைப்படுத்துதல் 16 நாட்கள் முடிவடைந்த பிறகு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்திய வீரர்கள் அனைவரும் வருகிற 14-ந் தேதி லண்டனில் ஒன்றுகூடுகிறார்கள். பின்னர் டர்ஹாமுக்கு சென்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறார்கள்.

    இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசியை இந்த வாரத்துக்குள் செலுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும்போது, பெரும்பாலான இந்திய வீரர்கள் லண்டனிலும் அதை சுற்றியும் உள்ளனர்.

    இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட இந்திய வீரர்கள் அனைவருமே இப்போது 2-வது தவணையை பெற தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணியின் 3 வீரர்கள் மற்றும் 4 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, நிலைமையை நாங்கள் அறிவோம். இங்கிலாந்து கிரிக்கெட் மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு நெறிமுறைகளில் மாற்றம் செய்தால் எங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். அது உடனடியாக பின்பற்றப்படும் என்றார்.

    தற்போது விடுமுறையை கழித்து கொண்டிருக்கும் இந்திய வீரர்களுக்கு லண்டனில் 17-ந் தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோல்கீப்பர் அபாரமாக செயல்பட, பெனால்டி சூட்அவுட்டில் கொலம்பியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா.
    கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம், இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் அர்ஜெண்டினா- கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடியது. மெஸ்சி கொடுத்த பந்தை லாட்டாரோ மார்ட்டினெஸ் சுலபமாக கோலாக்கினார். இதனால் 7 நிமிடத்திலேயே 1-0 என அர்ஜெண்டினா முன்னிலை பெற்றது.

    அதன்பின் பல வாய்ப்புகள் கிடைத்தும் அர்ஜெண்டினா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும், 61-வது நிமிடத்தில் கொலம்பியா பதில் கோல் அடித்தது. அந்த அணியின் லூயிஸ் டயாஸ் கோல் அடித்தார்.

    அதன்பின் இரு அணி வீரர்களாலும் ஆட்டம் முடியும் வரை கோல் அடிக்க இயலவில்லை. 90 நிமிடம் முடிந்த நிலையில், கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

    இதனால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இரு அணிகளும் தலா ஐந்து முறை வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் முன்னிலை பெறும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

    அர்ஜெண்டினா வீரர்கள்

    முதல் வாய்ப்பில் இரு அணி வீரர்களும் கோல் அடித்தனர். அதன்பின் கொலம்பிய வீரர்கள் அடித்த இரண்டு வாய்ப்புகளிலும் அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ் அபாராக செயல்பட்டு தடுத்தார். இதன் காரணமாக இறுதியில் அர்ஜென்டினா 3-2 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா பிரேசில் அணியை எதிர்கொள்கிறது. கொலம்பியாவின் ஐந்து வாய்ப்புகளில் மூன்று முறை எமிலியானோ மார்ட்டினெஸ் கோல் அடிக்க முடியாமல் தடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர், ஸ்டம்பிங் கிங், மூன்று உலக கோப்பையை வென்ற ஒரே கேப்டனுமான எம்.எஸ். டோனியின் பிறந்த நாள் இன்று.
    இன்று தனது 41 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் ‘தல’ எம்.எஸ். டோனி. கபில்தேவுக்கு பிறகு இன்னொரு உலக கோப்பையை வெல்ல இந்திய அணி போராடி கொண்டிருந்த தருணம். இந்திய ரசிகர்களின் 28 ஆண்டு கால ஏக்கத்தை தனது ஒரே ஹெலிகாப்டர் ஷாட்' மூலம் நிவர்த்தி செய்தவர்தான் எம்.எஸ். தோனி என்ற சகாப்தம்.

    இந்திய கிரிக்கெட்டில் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி வங்காளதேசம் அணிக்கெதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். சந்தித்த முதல் பந்திலேயே ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்தார். இவர் எங்கே ஜொலிக்க போகிறார் என்று இந்திய ரசிகர்கள் நினைக்க, கேப்டன் கங்குலி தொடர்ந்து வாய்ப்பு வழங்கினார்.

    அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் நீங்காத இடம் பிடித்தார். அதிரடி, நீளமான தலைமுடி ஆகியவற்றின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். 2006-ம் ஆண்டு டி20யில் அறிமுகம் ஆனார்.

    2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். டோனி தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்று சாதித்தது. இதன்மூலம் இந்திய அணி என்றாலே டோனிதான் என்ற அளவிற்கு உயர்ந்தார்.

    மின்னல் வேக ஸ்டம்பிங், ஹெலிகாப்ட்டர் ஷாட்ஸ் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார். எந்தவொரு சூழ்நிலையிலும் கோபத்தை வெளிக்காட்டாமல் புன்னகையை மட்டுமே வெளிப்படுத்துவார். இதனால் அவரை கூல் கேப்டன் என்று அழைத்தனர்.

    எம்.எஸ். டோனி

    ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டனாக பொறுப்பேற்றும் அசத்தினார். சிஎஸ்கே-வுக்கு விசில் போடுவதை விட, ரசிகர்கள் டோனிக்குதான் விசில் போடுவது அதிகம். இந்தியாவில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்திய அணி கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. அதன்பின் 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி டோனி தலைமையில் உலகக்கோப்பையை வென்று சாதித்தது.

    2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி-யின் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்திய அணி டோனி தலைமையில் வென்றது. இதன்மூலம் ஐசிசி-யின் மூன்று டிராபிகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.

    90 டெஸ்ட்,  350 ஒருநாள், 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள எம்எஸ் டோனி 16 சதங்கள், 105 அரைசதங்களுடன் 17,266 ரன்கள் குவித்துள்ளார்.
    யூரோ கோப்பை கால்பந்தின் மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து - டென்மார்க் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.
    லண்டன்:

    16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது.

    இதில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, 6-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 60-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் பெட்ரிகோ சிய்சா முதல் கோலடித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா 80வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    போட்டியை கண்டுகளித்த ரசிகர்கள்

    கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

    இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கு இத்தாலி அணி முன்னேறியது.
    பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை தேடித் தந்தவர் என்ற சாதனை படைத்தவர் மிதாலிராஜ்.
    துபாய்:

    பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

    இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் மீண்டும் முதலிடத்தை (762 புள்ளி) பிடித்துள்ளார். 
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக 8-வது இடத்தில் இருந்த மிதாலிராஜ் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் (72, 59, 75 ரன்) விளாசியதன் மூலம் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார்.

    2005-ம் ஆண்டு முதல் முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்த மிதாலிராஜ் கடைசியாக 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் உச்சத்தில் இருந்தார். தற்போது 8-வது முறையாக முதலிடத்தை அலங்கரிக்கிறார். 
    அவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் லிசல் லீ 758 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    ஒட்டுமொத்த சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் மிதாலிராஜ் முதலிடத்துக்கு (10,337 ரன், 317 ஆட்டம்) முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் காலிறுதிக்கான ஆட்டங்கள் நடைபெற்றன.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-1,6-3 என்ற நேர் செட்டில் அஜ்லா டாம்ஜனவோவிச்சை (ஆஸ்திரேலியா) வெளியேற்றி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு காலிறுதியில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் கரோலினா முச்சோவாவை (செக் குடியரசு) தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் சுவிட்சர்லாந்தின் விக்டோரியா கொலுபிக்கை தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தார். 

    பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-4, 6-3 என்ற நேர் செட்களில் துனிசியாவின் ஒன்ஸ் ஜாபிரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி கண்டார்.
    கோபா அமெரிக்கா கால்பந்தில் இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கொலம்பியா, அர்ஜெண்டினா அணிகள் மோதுகின்றன.
    ரியோடிஜெனீரோ:

    47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. அதில் நேற்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் பிரேசில் அணியும், பெரு அணியும் மோதின.

    விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியின் 35வது நிமிடத்தில், பிரேசிலின் நெய்மர் பாஸ் செய்த பந்தை லூகாஸ் பகுட்டா கோலாக மாற்றினார். இதன்மூலம் முதல் பாதியில் பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து இரண்டாம் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. பெரு அணியினரும் ஒரு கோலும் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பிரேசில் அணி 21-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.
    சென்னை:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள 26 இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் குறித்த அறிவிப்பை இந்திய தடகள சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

    அதில் தமிழகத்தைச் சேர்ந்த ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் ஆகிய 3 தடகள வீராங்கனைகள் மற்றும் ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி ஆகிய 2 தடகள வீரர்கள் என மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஆரோக்கிய ராஜ்,  தனலட்சுமி சேகர்


    இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டு தடகள வீரர், வீராங்கனைகள் 5 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தேர்வான தமிழக வீரர்கள் 7 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய தடகள அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.
    ஜப்பான் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 26 போ் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. 
    இதில் தனிநபா் தடகள போட்டிகளில் பங்கேற்கும் 16 போ், ஆண்களுக்கான 4x 400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 5 போ், கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டத்தில் 2 வீரர்கள், 3 வீராங்கனைகள் ஆகியோர் உள்ளனர்.

    காயம் காரணமாக கர்நாடகத்தின் பூவம்மா, கலப்பு 4x400மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்களான ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய இருவரும் 4x400 மீ தொடர் ஓட்டத்துக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர்.
    பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியை எதிர்த்து விளையாட இருந்த இங்கிலாந்து அணியில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து ஒயிட்பால் கிரிக்கெட் அணி இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான தொடர் முடிந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 8-ந்தேதி (நாளை மறுநாள்) தொடங்குகிறது. 2-வது போட்டி 10-ந்தேதியும், 3-வது போட்டி 13-ந்தேதியும் தொடங்குகிறது.

    இந்தத் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து வீரர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 48 மணி நேரமே இருக்கும் நிலையில், இங்கிலாந்து வீரர்கள் மூன்று பேருக்கும், நிர்வாகத்தின் ஸ்டாஃப்கள் நான்கு பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் அணியில் இடம் பிடித்த வீரர்கள் ஆகியோரை தனிமைப்படுத்த வேண்டிய நிலைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தள்ளப்பட்டுள்ளது.

    இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு புதிய அணியை பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறக்கிறது. அந்த அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் போட்டியில் விளையாடிய பின்னர், இங்கிலாந்து அணிக்காக விளையாடாமல் உள்ளார்.

    இதனால் அவர் மற்ற வீரர்களிடம் இருந்து விலகியே உள்ளார். இதனால் பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம் பெறுவதில் சிக்கல் ஏதுமில்லை.
    தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த வீராங்கனை ரேவதி தேர்வு பெற்று உள்ளார்.
    மதுரை:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை சர்வதேச ஒலிம்பிக் போட்டி நடக்கிறது.

    இதில் தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த வீராங்கனை ரேவதி (வயது 22) தேர்வு பெற்று உள்ளார்.

    இதற்காக அவர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பயிற்சி பெற்று வருகிறார். ரேவதி கூறியதாவது:-

    எனக்கு மதுரை சக்கிமங்கலம், சொந்த ஊர். நான் 4-ம் வகுப்பு படிக்கும்போது தந்தை இறந்து விட்டார். 5-ம் வகுப்பு படிக்கும்போது தாயை பறி கொடுத்தேன். நானும், தங்கையும் பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்தோம்.

    நான் 2-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு விடுதி மற்றும் பள்ளிக்கூடத்தில் தங்கி படித்தேன். 12-ம் வகுப்பு படிக்கும்போது மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டேன்.

    அப்போது நான் காலில் ஷூ இல்லாமல் ஓடுவதை பார்த்து பயிற்சியாளர் கண்ணன் எனக்கு விளையாட்டு உபகரண பொருட்கள் வாங்கி கொடுத்தார். நான் பள்ளி படிப்பை முடித்த பிறகு சக்கிமங்கலத்தில் உள்ள பைக் மெக்கானிக் கடையில் வேலை பார்த்தேன்.

    அப்போது பயிற்சியாளர் கண்ணன் என்னை சந்தித்து “உனக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் இடம் வாங்கி தருகிறேன். படிப்பு கட்டணம், தங்குமிடத்துக்காக நீ பணம் எதுவும் கட்ட தேவையில்லை” என்று தெரிவித்தார்.

    இதையடுத்து நான் அந்த கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாமாண்டு சேர்ந்தேன். அப்போது எனக்கு இளைப்பு நோய் ஏற்பட்டது. இதன் காரணமாக நான் மிகவும் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டேன். கல்லூரியில் முதலாமாண்டு படிப்பை கைவிட வேண்டி இருந்தது.

    டோக்கியோ ஒலிம்பிக்

    நான் மீண்டும் சக்கிமங்கலம் வீட்டுக்கு வந்து, பைக் மெக்கானிக் கடையில் மறுபடியும் வேலை பார்க்க தொடங்கினேன். அப்போது கண்ணன் என்னை மீண்டும் சந்தித்து கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்க உதவினார்.

    நான் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பல்வேறு விருதுகள், பதக்கங்களை பெற்றுள்ளேன். எனக்கு தென்னக ரெயில்வேயில் வேலை கிடைத்தது. இதன் மூலம் பாட்டி மற்றும் தங்கையை பராமரித்து வருகிறேன்.

    ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது என் கனவாக உள்ளது. இதற்காக பாட்டியாலா முகாமில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன்.

    ஜப்பான் ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை பெற்றுத்தருவதே என் குறிக்கோள்.


    ×