என் மலர்
விளையாட்டு

லண்டன்:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4-ந் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டனர்.
அதன்பின் அவர்கள் மும்பை ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த தனிமைப்படுத்துதல் 16 நாட்கள் முடிவடைந்த பிறகு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்திய வீரர்கள் அனைவரும் வருகிற 14-ந் தேதி லண்டனில் ஒன்றுகூடுகிறார்கள். பின்னர் டர்ஹாமுக்கு சென்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறார்கள்.
இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசியை இந்த வாரத்துக்குள் செலுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும்போது, பெரும்பாலான இந்திய வீரர்கள் லண்டனிலும் அதை சுற்றியும் உள்ளனர்.
இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட இந்திய வீரர்கள் அனைவருமே இப்போது 2-வது தவணையை பெற தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணியின் 3 வீரர்கள் மற்றும் 4 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, நிலைமையை நாங்கள் அறிவோம். இங்கிலாந்து கிரிக்கெட் மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு நெறிமுறைகளில் மாற்றம் செய்தால் எங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். அது உடனடியாக பின்பற்றப்படும் என்றார்.
தற்போது விடுமுறையை கழித்து கொண்டிருக்கும் இந்திய வீரர்களுக்கு லண்டனில் 17-ந் தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை சர்வதேச ஒலிம்பிக் போட்டி நடக்கிறது.
இதில் தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த வீராங்கனை ரேவதி (வயது 22) தேர்வு பெற்று உள்ளார்.
இதற்காக அவர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பயிற்சி பெற்று வருகிறார். ரேவதி கூறியதாவது:-
எனக்கு மதுரை சக்கிமங்கலம், சொந்த ஊர். நான் 4-ம் வகுப்பு படிக்கும்போது தந்தை இறந்து விட்டார். 5-ம் வகுப்பு படிக்கும்போது தாயை பறி கொடுத்தேன். நானும், தங்கையும் பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்தோம்.
நான் 2-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு விடுதி மற்றும் பள்ளிக்கூடத்தில் தங்கி படித்தேன். 12-ம் வகுப்பு படிக்கும்போது மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டேன்.
அப்போது நான் காலில் ஷூ இல்லாமல் ஓடுவதை பார்த்து பயிற்சியாளர் கண்ணன் எனக்கு விளையாட்டு உபகரண பொருட்கள் வாங்கி கொடுத்தார். நான் பள்ளி படிப்பை முடித்த பிறகு சக்கிமங்கலத்தில் உள்ள பைக் மெக்கானிக் கடையில் வேலை பார்த்தேன்.
அப்போது பயிற்சியாளர் கண்ணன் என்னை சந்தித்து “உனக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் இடம் வாங்கி தருகிறேன். படிப்பு கட்டணம், தங்குமிடத்துக்காக நீ பணம் எதுவும் கட்ட தேவையில்லை” என்று தெரிவித்தார்.

நான் மீண்டும் சக்கிமங்கலம் வீட்டுக்கு வந்து, பைக் மெக்கானிக் கடையில் மறுபடியும் வேலை பார்க்க தொடங்கினேன். அப்போது கண்ணன் என்னை மீண்டும் சந்தித்து கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்க உதவினார்.
நான் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பல்வேறு விருதுகள், பதக்கங்களை பெற்றுள்ளேன். எனக்கு தென்னக ரெயில்வேயில் வேலை கிடைத்தது. இதன் மூலம் பாட்டி மற்றும் தங்கையை பராமரித்து வருகிறேன்.
ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது என் கனவாக உள்ளது. இதற்காக பாட்டியாலா முகாமில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன்.
ஜப்பான் ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை பெற்றுத்தருவதே என் குறிக்கோள்.






