என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் அடித்த 333 ரன்களே அவரது அதிகபட்சமாகும்.
    பனாஜி:

    கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்குள்ள பல்வேறு நகரங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகிறது. சுற்றுலாவாசிகளின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு வந்தது.

    இதற்கிடையே, டிடோ கிளப் நிறுவனத்தை விற்கும் முடிவுக்கு வந்துள்ளதாக அதன் உரிமையாளர்களான டேவிட் மற்றும் ரிகார்டோ டிசோசா ஆகியோர் கடந்த மாதம் 28ம் தேதி அறிவித்தனர்.

    இந்நிலையில், கோவாவில் உள்ள அர்போரா பகுதியில் செயல்படும் டிடோ கிளப் உரிமையை வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் வாங்கியுள்ளார். அவர் தனது கிளப்புக்கு 333 தந்த்ரா என பெயரிட்டுள்ளார்.

    2010-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கெயில் அடித்த அதிகபட்ச ரன்கள் 333 என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதுதொடர்பாக கிறிஸ் கெயில் கூறுகையில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கேளிக்கை நிகழ்ச்சிகள், தரமான உணவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தந்த்ரா நிறுவனம் அளிக்கும் என தெரிவித்தார்.
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச் 12-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோ–விச் (செர்பியா), 20-ம் நிலை வீரரான கிறிஸ்டியன் காரினை (சிலி) சந்தித்தார்.

    ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கிறிஸ்டியன் காரினை தோற்கடித்து 12-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-5, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் இத்தாலியின் லாரன்சோ சொனாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    ரோஜர் பெடரர்

    மற்ற ஆட்டங்களில் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி, கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ், ரஷ்ய வீரர் கரென் கச்சனோவ் ஆகியோர் வெற்றியை ருசித்து காலிறுதிக்குள் கால் பதித்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்போரா கிராஜ்சிகோவாவை (செக் குடியரசு) வெளியேற்றி முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா, பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா, துனிசியாவின் ஒன்ஸ் ஜாபிர் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி கண்டனர்.
    2015-ல் அறிமுகமான சுபோத் பாட்டி டெல்லி அணிக்காக ரஞ்சி, சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பைகளில் விளையாடி வருகிறார்.
    புதுடெல்லி:

    டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்கெட் 20 ஓவர்  போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி லெவன் அணி 20 ஓவர் முடிவில் 256 ரன்களை எடுத்தது. இதில் விளையாடிய சுபோத் பாட்டி 79 பந்துகளில் 205 ரன்களை குவித்தார். இதில் 17 சிக்சர்களும், 17 பவுண்டரிகளும் அடங்கும்.

    இதன்மூலம் 20 ஓவர் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுபோத் பாட்டி.

    30 வயதாகும் சுபோத் பாட்டி, அடிப்படையில் ஒரு பவுலர். வலது கை வேகப்பந்து வீச்சாளர். ஆனால், பேட்டிங்கிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    சர்வதேச 20 ஓவர்  கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக  அவுட் இல்லாமல் 66 பந்துகளில் 175  ரன்கள் விளாசியிருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் 76 பந்துகளில் 172 ரன்களை விளாசியுள்ளார். அடுத்த இடத்தில் மசகட்சா இருக்கிறார். இவர் அவுட் இல்லாமல் 71 பந்துகளில் 162  ரன்கள் விளாசி இருக்கிறார். 

    இவர்களின் ஒட்டுமொத்த சாதனைகளையும் இந்திய வீரர் சுபோத் பாட்டி தற்போது தகர்த்து சாதனை படைத்துள்ளார்.
    ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில், முதலில் அனைத்து நாடுகளின் அணிவகுப்பு நடைபெறுவது மரபாகும்.
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது. 

    ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில், முதலில் அனைத்து நாடுகளின் அணிவகுப்பு நடைபெறுவது மரபாகும். போட்டிகளில் பங்கேற்கும் பெரும்பாலான விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் நாடு வாரியாக விளையாட்டரங்கினுள் அணிவகுத்து நுழைவார்கள். ஒவ்வொரு அணியிலும், முதலில் வரும் வீரர் தங்கள் நாட்டின் தேசியக்கொடியை ஏந்தி செல்வார். இது அவர்களுக்கு கிடைக்கும் கவுரவமாக கருதப்படுகிறது.

    அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் இந்தியா சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசியக்கொடிகளை ஏந்தி செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் பஜ்ரங் புனியா தேசியக்கொடியை ஏந்தி செல்ல உள்ளார். 

    மன்பிரீத் சிங்

    ஒவ்வொரு நாட்டின் அணி சார்பிலும் ஒருவர் மட்டுமே தேசியக் கொடி ஏந்தி செல்வது வழக்கம். ஆனால், இந்தியா இந்த முறை பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேரை தேசியக்கொடியை ஏந்தி செல்வதற்கு அனுமதி அளித்துள்ளது. 

    பஜ்ரங் புனியா

    2016ல் ரியோ டிஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவின்போது இந்திய அணி சார்பில் அபினவ் பிந்த்ரா தேசியக்கொடியை ஏந்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 63 வீரர்கள், 52 வீராங்கனைகள் என மொத்தம் 115 பேர் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். 

    ஐபிஎல் முதல் பகுதியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
    ஐபிஎல் 2021 சீசன் இந்தியாவில் நடைபெற்றது. ஐபிஎல் தொடருக்கு முன் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனுமான ஷ்ரேயாஸ் அய்யர் இங்கிலாந்துக்கு எதிரான ஒயிட்பால் கிரிக்கெட்டில் விளையாடினார். பீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால், ஷ்ரேயாஸ் அய்யர் ஐபிஎல் 2021 சீசனில் விளையாடமாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்ததால், அந்த அணி ரிஷாப் பண்ட்-ஐ மாற்று கேப்டனாக அறிவித்தது. ரிஷாப் பண்ட் தலைமையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக விளையாடியது. 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்துவிடும்.

    ஆனால் தொடரின் பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று வீரர்களை தாக்க ஆரம்பித்தது. இதனால் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

    மீதமுள்ள ஆட்டங்கள் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஷ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். ஐபிஎல் மீதமுள்ள போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவேன் என அவரே தெரிவித்துள்ளார்.

    கோப்புப்படம்
    காயம் அடைந்தபோது எடுத்த படம்

    ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லிக்கு அணிக்கு திரும்பினால், யாரை கேப்டனாக செயல்பட வைப்பது என்ற தலைவலி அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘கேப்டன் பதவி குறித்து எனக்குத் தெரியாது. அது உரிமையாளர்கள் கையில் உள்ளது. ஆனால், டெல்லி அணி சிறப்பாக விளையாடி முதலிடத்தில் உள்ளது. இதுதான் எனக்கு முக்கியமான விசயம். என்னுடைய இலக்கே, டெல்லி அணிக்கு முதன்முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான்’’ என்றார்.
    இங்கிலாந்து தொடருக்காக கூடுதல் வீரர்களை சேர்த்து ஏற்கனவே உள்ளவர்களை அவமதிக்க வேண்டாம். இதுபோன்ற முடிவு சரியானது அல்ல. அணி தேர்வில் கேப்டனுக்கும், நிர்வாகத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ரவிசாஸ்திரி பயிற்சியாளராக உள்ளார். அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையோடு அவரது பதவி காலம் முடிவடைகிறது.

    இதற்கிடையே இலங்கை சென்றுள்ள இந்திய அணிக்கு ராகுல்டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவிசாஸ்திரிக்கு பதிலாக டிராவிட் நியமிக்கப்பட வேண்டுமா? என்று முன்னாள் கேப்டன் கபில்தேவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    இதைபற்றி தற்போது பேச வேண்டிய தேவையில்லை. இலங்கை தொடர் முடியட்டும். அங்கு வீரர்கள் வெளிப்படுத்திய செயல் திறனை அறிந்து கொள்வோம். ஒரு புதிய பயிற்சியாளரை நியமிக்க முயற்சி செய்யலாம். அதில் எந்த தவறும் இல்லை.

    தற்போது ரவிசாஸ்திரி தனது பயிற்சியாளர் பதவியில் சிறப்பாகதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் அவரை நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை.

    இங்கிலாந்து தொடருக்காக கூடுதல் வீரர்களை சேர்த்து ஏற்கனவே உள்ளவர்களை அவமதிக்க வேண்டாம். இதுபோன்ற முடிவு சரியானது அல்ல. அணி தேர்வில் கேப்டனுக்கும், நிர்வாகத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டும்.

    இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியை காண 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி, பிரிட்டனின் எமிலி வெப்லி, ஸ்மித் ஹைடன் மெக்ஹக் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சானியா, போபண்ணா ஜோடி வென்றது. மொத்தம் 47 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் வெற்றி பெற்ற சானியா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.
    இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் டாம் கர்ரன் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை 41.1 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாசன் ஷனகா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

    விக்கெட்டை பறிகொடுத்த குசால் பெராரா

    இங்கிலாந்து அணி சார்பில் டாம் கர்ரன் 4 விக்கெட்டும், வோக்ஸ், வில்லே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    அப்போது பெய்த மழை ஆட்டம் முடியும் வரை தொடர்ந்தது. இதனால் ஆட்டம் பாதியில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது. தொடர் நாயகன் விருது டேவிட் வில்லேவுக்கு அளிக்கப்பட்டது.

    ஏற்கனவே, டி20 தொடரை 3-0 என இலங்கை அணி இழந்திருந்தது நினைவிருக்கலாம்.
    சாய்னா எப்போது விளையாடுவதை நிறுத்துவார்? என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா கேட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 75 தலைவர் பதவிகளில் 67 இடங்களை பாஜக கைப்பற்றியது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 5 சீட்களை மட்டுமே வென்றது. 

    அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் பாஜகவினருக்கு, இந்த வெற்றி உத்வேகத்தை கொடுத்துள்ளது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். 

    அவ்வகையில், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும், யோகி ஆதித்யநாத்துக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனால் அந்த பதிவு எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை பெற்றுள்ளது.

    ‘சாய்னா நேவால் அரசாங்க பேட்மிண்டன் வீராங்கனை’ என ராஷ்டிரிய லோக்தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி கூறி உள்ளார்.

    சாய்னா நேவால்

    சாய்னா எப்போது விளையாடுவதை நிறுத்துவார்? என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா கேட்டுள்ளார். 

    ஐதராபாத்தைச் சேர்ந்த சாய்னா நேவால், கடந்த ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    2-ம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் (ரஷியா) 6-7 (3-7), 3-6, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு குரோஷியாவை சேர்ந்த சிலிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.


    லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சினி கோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

    2-ம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் (ரஷியா) 6-7 (3-7), 3-6, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு குரோஷியாவை சேர்ந்த சிலிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.


    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 10 பதக்கங்கள் கிடைக்கும் என்று எதிர் பார்ப்பதாகவும் ராஜீவ் மேத்தா தெரிவித்தார்.

    சென்னை:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 63 வீரர்களும், 52 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 115 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

    வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், வாள்வீச்சு, கோல்ப், ஜிம்னாஸ்டிக், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மரப் படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 18 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.

    ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வருகிற 14-ந்தேதி டோக்கியோ புறப்பட்டு செல்கிறது. இதை இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜீவ் மேத்தா சென்னையில் நடந்த விழா ஒன்றில் தெரிவித்தார்.

    115 வீரர்-வீராங்கனைகளும், பயிற்சியாளர்களும், அதிகாரிகளும் முதல் கட்டமாக செல்ல இருப்பதாக அவர் கூறினார். பயிற்சியாளர், அதிகாரி என மொத்தம் 66 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு செல்கிறார்கள்.

    டோக்கியோ சென்றடைந்ததும் இந்திய அணியினர் 4 நாட்கள் தனிமைபடுத்தப்படுவர்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 10 பதக்கங்கள் கிடைக்கும் என்று எதிர் பார்ப்பதாகவும் ராஜீவ் மேத்தா தெரிவித்தார்.

    அர்ஜென்டினாவின் வெற்றிக்கு கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரருமான லியோனல் மெஸ்சி முக்கிய காரணமாக இருந்தார். அவரது ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது.

    கொய்னியா:

    47-வது கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இதன் கால்இறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது.

    பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் சிலியையும், பெரு பெனால்டி ஷூட்டில் பராகுவேயையும் தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்று இருந்தன.

    இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு நடந்த கடைசி கால்இறுதியில் அர்ஜென்டினா- ஈக்வடார் அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

    அர்ஜென்டினாவின் வெற்றிக்கு கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரருமான லியோனல் மெஸ்சி முக்கிய காரணமாக இருந்தார். அவரது ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. முதல் 2 கோல் அடிக்க அவர் உதவியாக இருந்தார். 3-வது கோலை அவர் அடித்தார்.

    40-வது நிமிடத்தில் ரோட்ரிக்கோ டி பவுலும், 84-வது நிமிடத்தில் மார்டினசும், 93-வது நிமிடத்தில் பிரீ கிக் மூலம் மெஸ்சியும் கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தில் ஈக்வடார் வீரர் ஹின்கேப், 92-வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

    அர்ஜென்டினா அரை இறுதியில் கொலம்பியாவுடன் மோதுகிறது. முன்னதாக நடந்த கால் இறுதியில் கொலம்பியா பெனால்டி ஷூட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் உருகுவேயை தோற்கடித்தது. ஆட்டத்தின் முடிவிலும், கூடுதல் நேரத்திலும் கோல் விழாததால் பெனால்டி ஷூட் கடை பிடிக்கப்பட்டது.

    பிரேசில்-பெரு அணிகள் மோதும் முதல் அரை இறுதி 6-ந்தேதியும், அர்ஜென்டினா- கொலம்பியா மோதும் 2-வது அரை இறுதி 7-ந்தேதியும் நடக்கிறது.

    ×