என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் 125 வார்டுகளை தி.மு.க. வென்றது.
    விருதுநகர்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றியுள்ளது. 

    விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகள் உள்ளன. இதில் இடம் பெற்றுள்ளன 171 வார்டுகளில் தி.மு.க. 125 வார்டுகளை கைப்பற்றி யுள்ளது.  அ.தி.மு.க. 15 வார்டுகளிலும், காங்கிரஸ் 12 வார்டுகளிலும், ம.தி.மு.க. 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 3, அ.ம.மு.க. 2, பா.ஜனதா 1 இடங்களை பிடித்துள்ளன. 

    இதே போல் மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 143 வார்டுகளில் தி.மு.க. 92, அ.தி.மு.க. 21, இந்திய கம்யூனிஸ்டு 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 3, அ.ம.மு.க. 2, சுயேட்சைகள் 27 இடங்களை பிடித்துள்ளன. 

    மல்லாங்கிணறு பேரூராட்சியில் 15 வார்டுகளையும் தி.மு.க. வேட்பாளர்களே வென்றுள்ளனர். சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் தி.மு.க.-அ.தி.மு.க. தலா 7 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணி 8 இடங்களை வென்றிருப்பதால் இங்கு தி.மு.க.தான் தலைவர் பதவியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு பெரும் சரிவை தந்துள்ளது. கடந்த தேர்தலில் 7 நகராட்சிகளில் 6 அ.தி.மு.க. வசம் இருந்தது. 9 பேரூராட்சிகளில் 6 அ.தி.மு.க. கைப்பற்றி வந்தது. ஆனால் தற்போது அந்த கட்சி நகராட்சி, பேரூராட்சிகளை இழந்துள்ளது. 

    மேலும் பல வார்டுகளில் அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் பா.ஜனதா 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
    விருதுநகர் அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்ததாக தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருவிருந்தாள்பட்டியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவார்கள். இதன் காரணமாக அந்த சிறுமி வீட்டில் தனியாக இருப்பார். 

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான கருப்பசாமி என்ற மனோஜ் (வயது 48), சிறுமியிடம் நைசாக பேசி பலமுறை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

    இந்தநிலையில்  கடந்த சில வாரங்களாக சிறுமிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். 

    இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அப்பையநாயக்கன்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். 
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலியானார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 46). இவர்  அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

    காலை கோவிந்தராஜ் வீட்டிலிருந்து மோட்டார்சைக்கிளில் வெளியே புறப்பட்டார். மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு வாட்டர் சர்வீஸ்  அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென மனநலம் பாதித்த ஒருவர் ரோட்டை கடக்கமுயன்றார்.

    அப்போது கோவிந்தராஜ் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளின் வேகத்தை திடீரென கட்டுப்படுத்த முயன்றார். இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோவிந்தராஜ் கீழே விழுந்தார். 

    அவரது மார்பு பகுதியில் பலத்த அடி விழுந்தது. இருப்பினும் சுதாரித்து எழுந்த கோவிந்தராஜ் உடனே தனது சகோதரர் பழனிச்சாமிக்கு  தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த அவர் கோவிந்தராஜை ஸ்ரீவில்லி புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். 

    அதுவரை இயல்பானநிலையில் இருந்த கோவிந்தராஜ் ஆஸ்பத்திரியில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் இறந்துவிட்டதாக கூறினர். இதனால் அவரது குடும்பத் தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பழனிச்சாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி மாநகராட்சியில் தி.மு.க. 24 இடங்களை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 6 இடங்களிலும், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.
    விருதுநகர்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் வெளியானது. இதில் தி.மு.க. இமாலய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாநகராட்சி சிவகாசி.

    முதன்முறையாக மாநகராட்சி ஆக்கப்பட்ட பிறகு இங்கு உள்ளாட்சித் தேர்தல் தற்போது நடந்துள்ளது. சிவகாசி, திருத்தங்கல் ஆகிய 2 நகராட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டது தான் சிவகாசி மாநகராட்சி.

    பட்டாசு, தீப்பெட்டி, அச்சகத்திற்கு புகழ்பெற்ற சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகள் இடம் பெற்றிருந்தன. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வசிக்கும் திருத்தங்கல் இந்த மாநகராட்சியில் தான் உள்ளது.

    எனவே அ.தி.மு.க. இங்கு கடும் போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் தி.மு.க., - அ.தி.மு.க 32 வார்டுகளில் நேரடியாக போட்டியிட்டன. முதல்  முறையாக மாநகராட்சியாக சிவகாசி தேர்தலை சந்தித்ததால் இதில் வெற்றி பெற்று தங்கள் செல்வாக்கை நிரூபிக்க தி.மு.க., - அ.தி.மு.க இடையே கடும் பலப்பரீட்சை நடைபெற்றது.

    தேர்தல் பிரசாரத்தின் போது இதனை பலரும் காண முடிந்தது. இந்த நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தி.மு.க. 24 இடங்களை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 6 இடங்களிலும், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.

    பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட அ.தி.மு.க. 11 இடங்களிலும் 4 இடங்களை சுயேச்சைகளும் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் சிவகாசி மாநகராட்சியை தி.மு.க. வசம் சென்றுள்ளது. இந்த மாநகராட்சி மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    எனவே அந்த பதவியை கைப்பற்ற தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதைபோல் துணை மேயர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

    வருகிற 4-ந் தேதி இந்த பதவிகளுக்கான மறைமுக தேர்தல் என்றாலும் தற்போது இருந்தே பலரும் ஆதரவை திரட்ட தொடங்கி விட்டனர். இதனால் சிவகாசி மாநகராட்சி முதல் பெண் மேயர் யார்? என்பதை நிர்ணயிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மனைவி தேர்தலில் தோற்றதால் அவருடைய கணவர் மனவருத்தம் அடைந்து திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் சுகுணாதேவி (வயது 52) போட்டியிட்டார். இவருடைய கணவர் நாகராஜன் (57). இவர் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று சாத்தூரில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தனது வார்டில் 380 ஓட்டுகள் வித்தியாசத்தில் சுகுணாதேவி, தி.மு.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

    இதனால் மனவருத்தம் அடைந்த அவருடைய கணவர் நாகராஜன், தனது வீட்டுக்கு சென்று திடீரென விஷம் குடித்தார்.

    இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் நகர் போலீசார், நாகராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தமிழக அரசின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடி ஒன்றியம் அனுமந்தகுடி கிராமத்தில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.  கண்ணங்குடி யூனியன் தலைவர் சித்தானூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக் தொடங்கி வைத்தார்.

    வட்டார மருத்துவ அலுவலர் ராஜாராம் தலைமை தாங்கினார். அனுமந்தகுடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி முத்துராமன், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தனர். கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பிரியா வரவேற்றார். வெங்களூர் மருத்துவ அலுவலர் சண்முகம் திட்ட விளக்கஉரையாற்றினார். 

    இந்த முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனைகளும் சிகிச்சையும் அளிக்கப்பட்டன. கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, தொற்றா நோய் பரிசோதனை, பல் மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் கண் நோய் பரிசோதனை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. 

    இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பொது சுகாதார துறையை சேர்ந்த அலுவலர்களும் பணியாளர்களும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினர். 

    குழந்தைகள் வளர்ச்சித்திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சஞ்சய்காந்தி துறை சார்ந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். 

    சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன், செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துவேல் நன்றி கூறினார்.
    மல்லாங்கிணறு பேருராட்சியில் 15 வார்டுகளையும் தி.மு.க. கைப்பற்றியது.
    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:

    1-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் உதயசெல்வியும், 2வது வார்டில் செல்லம்பாளும், 3வது வார்டில் அழகும், 4வது வார்டில் துளசிதாசும், 5வது வார்டில் அனிதாவும் வெற்றி பெற்றனர்.

    6&வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பாலசந்திரனும், 7வது வார்டில் புகழேந்திரனும், 8வது வார்டில் மிக்கேலம் மாளும், 9வது வார்டில் ராஜேஸ்வரியும்,  10வது வார்டில் மகாலிங்கமும் வெற்றி பெற்றனர். 

    11வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவும், 12வது வார்டில்  செல்வராஜூம், 13வது வார்டில் சுமதியும், 14வது வார்டில் ஜெயச்சந்திரனும், 15வது வார்டில் வைஷ்ணவியும் வெற்றி பெற்றனர்.

    இவர்களை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். இந்த வெற்றியின் மூலம்  மல்லாங் கிணறு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டு களையும் தி.மு.க. கைப்பற்றி இருக்கிறது என்பது குறிப் பிடத்தக்கது. 

    சேத்தூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 12, இந்திய கம்யூனிஸ்டு, சுயேட்சை, அ.தி.மு.க. தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன.
    செட்டியார்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 11 இடங்களை கைப்பற்றியது. சுயேட்சை 3 இடங்களிலும், அ.தி.மு.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 11, விடுதலை சிறுத் தைகள் 1, அ.தி.மு.க. 3 வார்டுகளை கைப்பற்றியது. 

    மம்சாபுரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 10, கம்யூனிஸ்டு, காங்கிரஸ், அ.ம.மு.க. தலா 1 வார்டிலும், அ.தி.மு.க. 3 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில்   உள்ள ஒரே மாநகராட்சி சிவகாசி மாநகராட்சி. சிவகாசி மாநகராட்சியாக   உயர்ந்த பிறகு தற்போதுதான் முதல் தேர்தல் நடக்கிறது.  இங்கு மொத்தம் 48 வார்டுகள் உள்ளன.  

    தேர்தலில் 68.47 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் தேர்தலில் போட்டியிட்டன.  வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணும் மையமான சிவகாசி அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. 

    இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.காலை 10 மணி நில வரப்படி 6 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 4 வார்டுகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்றிருந்தன. 

    11 மணி நிலவரப்படி தி.மு.க. 10 வார்டுகளிலும், தி.மு.க.வும், அ.தி.மு.க. 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தது.  12 மணி நிலவரப்படி தி.மு.க. 15 வார்டுகளிலும், அ.தி.மு.க. 10 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. 4 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
    அ.தி.மு.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருதுநகர்

    அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த 19-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தேர்தலின்போது துப்புரவு பணியாளர்கள் பணியில் இருந்தனர். இதையடுத்து தங்களுக்கு தபால் ஓட்டு வழங்க வேண்டும் என துப்புரவு பணியாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி 174 துப்புரவு பணியாளர்கள் தபால் ஓட்டுபதிவு செய்ய அனுமதி அளித்தார். அதன்படி அவர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.

    இதற்கிடையில் துப்புரவு பணியாளர்களின் தபால் ஓட்டுகளை முறைகேடு செய்து தி‌.மு.க.வினர் முறை கேடு செய்திருப்பதாக அ‌.தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர். எனவே அந்த தபால் ஓட்டுக்களை எண்ண கூடாது என்று அ.தி.மு.க.வினர் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அ.தி.மு.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்த நிலையில் அருப்புக்கோட்டை கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமியை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இதை கண்டித்து அருப்புக் கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    அப்போது அருப்புக்கோட்டை நகரச்சயலாளர் சக்திவேலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே கட்சியினர் அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை மறியல் முற்றுகை போராட்டம் காரணமாக அருப்புக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான வார்டுகளை தி.மு.க. கைப்பற்றி வருகிறது.
    விருதுநகர்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.

    இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் நகராட்சியை தி.மு.க. முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.

    மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக - 20, காங்கிரஸ் -8, அதிமுக - 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
    உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம்தாகூர் ராஜபாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மத அரசியலை வைத்து பா.ஜ.க. போட்டியிடுகிறது. தந்திர அரசியல் மற்றும் பண அரசியலையும், பய அரசியலையும், பிண அரசியலையும் கலந்து பா.ஜ.க. அரசியல் நடத்தி வருகிறது.

    கர்நாடக பா.ஜ.க. நடத்தி வரும் பணம் மற்றும் பிண அரசியலை தமிழக தலைமையும் நடத்தி வருகிறது. அனைத்து கட்சிகளும் இதை சவாலாக எடுத்துக்கொண்டு பா.ஜ.க. அரசியலை முறியடிக்க வேண்டும்.

    மேலூரில் உள்ளாட்சி தேர்தலின் போது ஹிஜாப் அணிந்த பெண்ணை கழற்றும்படி கூறிய பா.ஜ.க. முகவர் மற்றும் அவரது மனைவியிடம் ரூ.2 லட்சம் தருவதாக கூறி அதை கழற்ற செய்ய ஏற்பாடு செய்யுமாறு பா.ஜ.க. பிரமுகர் கூறியது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்பதை பா.ஜ.க. நிர்ணயம் செய்வது அழகல்ல. பொன் ராதாகிருஷ்ணன் கூறும்போது, பா.ஜ.க. முகவர் சொன்னது தவறில்லை சரிதான் என்று கூறியுள்ளார். நாகரீகமான அரசியல் சூழ்நிலையில் இப்படி தரம் தாழ்ந்து பேசுவது அவருக்கு அழகல்ல.

    உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும். உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வை விரட்டுவது ஒன்றே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. வீழ்வது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, நகர தலைவர் சங்கர்கணேஷ், மூத்த தலைவர் எஸ்.ஆர். பீமராஜா உள்பட பலர் இருந்தனர்.

    வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளின் மின்னணு வாக்கு எந்திரங்கள் 3 மையங்களில் வைத்து எண்ணப்படட திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இன்று காலை அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் வ. புதுப்பட்டி பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வைத்து எண்ணப்பட்டது.

    அங்கு இன்று காலை வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.இதில் முதலில் தபால் ஓட்டுக்களை என்ன அதிகாரிகள் தயாரானார்கள்.

    இதனைத் தொடர்ந்து தபால் ஓட்டுகள் வைக்கப்பட்டிருந்த பெட்டி வாக்கு எண்ணும் அதிகாரிகள் மேஜைக்கு கொண்டு வரப்பட்டது. அதனை திறந்து வாக்குகளை மேஜையில் கூட்டுவதற்காக வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் சுற்றி நின்றனர்.

    அப்போது தபால் ஓட்டு வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சாவி கிடைக்கவில்லை. அது யாரிடம் இருக்கிறது என்பது தெரியவில்லை. பலரிடம் விசாரித்த போதும் அந்த பெட்டிக்கான சாவி எங்கே இருக்கிறது என தெரிய வில்லை. இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தபால் ஓட்டுகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் பூட்டை உடைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பெட்டியின் பூட்டு உடைக்கும் பணி தொடங்கியது. அதற்கான கருவிகள் வர வழைக்கப்பட்டு பூட்டு அறுத்து எடுக்கப்பட்டது.

    அதன் பிறகு தபால் வாக்குகள் வெளியே எடுக்கப்பட்டன. தொடர்ந்து அதனை அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர். பூட்டு உடைக்கப்பட்டு தபால் வாக்குகள் எண்ணப்பட்ட சம்பவத்தால் கிருஷ்ணன்கோவில் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பதற்றமான நிலை காணப்பட்டது. இருப்பினும் அதன் பின்னர் சகஜ நிலை திரும்பியது.

    ×