என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாவட்டத்தில் இன்று 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெருக்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    இதுவரை 50,543 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49,244 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை 1,143 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர் பலியானார்கள்.
    கடந்த வாரம் வரை 20& க்கும் கீழ் பாதிப்பு இருந்தது. இன்று ஒரே நாளில் 71 பேர்
    பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாநகராட்சி பகுதியில் 32 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன ஒரே தெருவில் 4 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டால் அந்த தெருக்கள் மூடப்பட உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் ஒமைக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து வேலூருக்கு வருபவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சோதனை செய்யப்படுகிறது.

    இது தவிர ஆந்திர எல்லைகளில் தமிழகம் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் வீடுகளில் 7 நாட்கள் தனிமைப் படுத்தப் படுகின்றனர். பின்னர் மீண்டும் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே வெளியே நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்திற்கு 209 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்தனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் ஒமைக்ரான் பாதிப்பு எதுவும் இல்லை என தெரிய வந்தது
    வேலூர் மாநகர பகுதியில் மட்டும் 10 பேர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர்.அவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை முடிவடைந்தது. இதில் பாதிப்பு எதுவும் இல்லை. தொடர்ந்து வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    கொரோனா பரவுவதால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.3.44 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.3 கோடியே 44 லட்சத்துக்கு மது பானங்கள் விற்பனை யாகியுள்ளது.

    புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று நள்ளிரவு நாடு முழுவதும் கொண்டாட்டம் நடந்தது. வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்களில் மது விற்பனை களைகட்டியது.

    மது பிரியர்களின் வசதிக்காக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக மது பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. காலை முதலே விற்பனை அதிகரிக்க தொடங்கியது. இரவு 7 மணிக்கு மேல் அனைத்துடாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    மது பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மது பானங்களை வாங்கி சென்றனர். மேலும் சிலர் சாலை ஓரங்களில் கும்பல் கும்பலாக நின்று மது அருந்தினர். அப்போது ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்று கோஷம் எழுப்பினர்.

    வேலூரில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பின்னரும் பலர் கடைகளுக்கு வந்து ஏமாந்து சென்றனர். வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் 108 டாஸ்மாக் கடைகள் உள்ளன. 

    நேற்று ஒரே நாளில் ரூ.3.44 கோடிக்கு மது விற்பனையானது.
    கடந்த ஆண்டைவிட மது விற்பனை குறைந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தவிர ஓட்டல்களில் உள்ள மது பார்களில் அதிகளவில் மது பானங்கள் விற்பனை யாகியுள்ளது.
    சென்னையிலிருந்து காட்பாடிக்கு வரும் வாகனங்கள் கிரீன் சர்க்கிள் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நெரிசலை குறைக்க அவ்வப்போது போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. இந்த நிலையில் போக்குவரத்து மாற்றம் இன்று அமலுக்கு வந்தது.

    வேலூர் பகுதியில் இருந்து காட்பாடி மற்றும் ஆந்திரா நோக்கிச் செல்லும் வாகனங்கள் பழைய பைபாஸ் சாலையில் அம்பிகா பெட்ரோல் பங்க் மற்றும் ராமஜெயம் பஸ் ஷெட் வழியாகச் சர்வீஸ் சாலையில் இணைந்து சேண்பாக்கம் தீரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வலதுபுறமாக திரும்பி சர்வீஸ் சாலை வழியாகச் சென்று புதிய பாலாறு பாலம் வழியாக காட்பாடி செல்ல வேண்டும். 

    வேலூரில் இருந்து காட்பாடி செல்பவர்கள் கிரீன் சர்க்கிள் பகுதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

    மேலும், வாலாஜாவில் இருந்து காட்பாடி செல்ல வேண்டிய வாகனங்கள் சென்னை சில்க்ஸ் அருகே சர்வீஸ் சாலையில் இறங்காமல் நேராக கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தை கடந்து செல்வம் பெட்ரோல் பங்க் அருகில் சர்வீஸ் சாலையில் இறங்கி சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் வழியாகச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
    கனரக வாகனங்கள்

    இன்று முதல் கட்டமாக சென்னை வாலாஜா பகுதிகளில் இருந்து காட்பாடி வரும் கனரக வாகனங்கள் கிரீன் சர்க்கிள் பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. சென்னை சில்க்ஸ் அருகே போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு காட்பாடிக்கு வரும் கனரக வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் திருப்பிவிட்டனர். 

    இந்த வாகனங்கள் நேரடியாக சென்று செல்வம் பெட்ரோல் பங்க் அருகே சர்வீஸ் ரோட்டில் இறங்கி அங்கிருந்து சேண்பாக்கம் ரெயில்வே பாலம் வழியாக திரும்பி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலத்தின் வழியாக காட்பாடி சென்றன.

    சென்னை, அரக்கோணம், ராணிப்பேட்டை பகுதியில் இருந்து நேரடியாக காட்பாடிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அதனால் கிரீன் சர்க்கிளில் கனரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி இல்லை.இதனால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
    புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீரென ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி அருகே கொத்தமாரி குப்பத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் வினித் (வயது23). ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு அந்த கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் அருகே இளைஞர்கள் ஒன்றுகூடி புத்தாண்டை கொண்டாடினர். இதில் வினித் கலந்துகொண்டார்.

    அப்போது அதே ஊரைச் சேர்ந்த அசோகன் (44) அவரது மகன் ஆகாஷ் (23) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களுக்கும் வினித்தின் உறவினர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அதனை வினித் தட்டிகேட்டார்.

    அப்போது அசோகனும் அவரது மகனும் சேர்ந்து வினித்தை கட்டையால் தாக்கினர். மேலும் கத்தியால் வினித்தை குத்தினர். இதில் நிலைகுலைந்த வினித் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    புத்தாண்டு கொண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வினித்தை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக அசோகன், ஆகாஷ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீரென ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    குடியாத்தம் அருகே ஆந்திராவில் இருந்து பைக்கில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் கிருபாகரன், போலீசார் மஞ்சுநாதன் உள்ளிட்டோர் சைனகுண்டா சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் வந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தியனர். அவர்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் சீட்டை புரட்டிப் பார்த்த போது அதில் சிறு சிறு பொட்டலங்களாக 400 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து பிடிபட்ட 2 வாலிபர்களையும் போலீசார் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், குமரன் ஆகியோர் அந்த வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குடியாத்தம் ஆர்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த குமரன் மகன் ராஜ்குமார் (வயது 22) என்றும் சென்னையில் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருவதும் மற்றொருவர் குடியாத்தம் ஜீவா நகரை சேர்ந்த ஜெயக்குமார் மகன் தினகரன் (19) என்றும் மேளம் அடிப்பவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்த ராஜ்குமார், தினகரன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலம் பலமநேர் அடுத்த காலவப்பல்லி பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கி வருவது தெரியவந்தது.

    இந்த காலவப்பல்லி பகுதியில் இருந்து பலர் கஞ்சா பொட்டலங்களை வாங்கி குடியாத்தம் பகுதியில் விற்பனைக்கு கொண்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    போலீஸ் உயர் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி காலவப்பல்லி பகுதியில் கஞ்சா மொத்த விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரக்கோணம், வாலாஜா, காவேரிப்பாக்கம் பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் வரை இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பிறகு மார்கழி மாதம் குளிர்வாட்டி வதைக்க தொடங்கியது. இதனால் பகலிலேயே ஸ்வெட்டருடன் மக்கள் சுற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் மீண்டும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது.

    மாவட்டத்தில் அரக்கோணம், வாலாஜா, காவேரிப்பாக்கம் பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    வேலூர் காட்பாடி திருவலம் பகுதியில் மிதமான மழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

    வேலூர் மாநகர பகுதியில் தொடர் மழை காரணமாக பாதாளச் சாக்கடை, கால்வாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியது. தெருக்களில் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர் 22.2, காட்பாடி 14.1, பொன்னை 3.6, குடியாத்தம் 12, திருவலம் 30, வாலாஜா 30.5, அரக்கோணம் 47.8, ஆற்காடு 21.3, காவேரிபாக்கம் 40, அம்மூர் 42, சோளிங்கர் 6, கலவை 12.4.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    அணைக்கட்டு அருகே உள்ள மலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி 8-ம் வகுப்பு படிக்கும் அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து அவரது தாயாரிடம் தெரிவித்தார்.

    மாணவியின் தாயார் இதுபற்றி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    காதலியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அல்லிவரம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு மகன் அஜித்குமார் (வயது 25).ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் சாத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

    விடுமுறையில் ஊருக்கு வந்தபோது அடிக்கடி காதலியை தனிமையில் சந்தித்தார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அவரிடம் இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த அஜித்குமார் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது மேலும் இது குறித்து வெளியே சொன்னால் வெட்டி புதைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் ஷாகின் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அஜித் குமாரை கைது செய்து நேற்று வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
    ரெசார்ட்டுகள், ஓட்டல்கள், உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிளப்புகளில் புத்தாண்டு தொடர்பான கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இந்த இடங்களில் நடனம், இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி கிடையாது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புத்தாண்டையொட்டி நாளை இரவு மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா மீண்டும் பரவி வரும் சூழ்நிலையில் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

    எனவே மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களில் நாளை இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. இதனால் மக்கள் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாட வேண்டும். கோவில்கள், தேவாலயம் போன்ற வழிபாட்டு தலங்களில் தமிழக அரசினால் அறிவுறுத்தப்பட்ட கொரோனா நடத்தை வழிமுறைகளை பின்பற்றுமாறும், புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும், பூங்கா மற்றும் அணை போன்ற இடங்களில் கூட்டம் கூடுவதையும், இருசக்கர வாகனங்களில் சுற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.

    நாளை இரவு காவல்துறையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. மீறி மது அருந்தி ஓட்டினால் ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

    நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இருசக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து, ரெயிலிலும், பஸ்சிலும் பயணிக்க வேண்டும். அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

    இதனால் விபத்துகளை தவிர்க்கலாம். அவசரத்தேவைகளுக்காக 4 சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணிப்பவர்கள் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தினை தொடர வேண்டும். ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இரவு 11 மணி வரை செயல்படும்.

    ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா? என ஓட்டல் நிர்வாகம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    ரெசார்ட்டுகள், ஓட்டல்கள், உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிளப்புகளில் புத்தாண்டு தொடர்பான கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இந்த இடங்களில் நடனம், இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி கிடையாது.

    வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்த தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால், ரோந்து காவலர்கள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்.

    இதனால் திருட்டு சம்பவங்கள் தவிர்க்கப்படும். பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் ரோந்து வாகன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். கண்ணியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர், பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100, 112 எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது (காவலன் எஸ்.ஓ.எஸ்.) என ஆப் ஐ பயன்படுத்தலாம்.

    வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு தின பாதுகாப்பிற்காக மொத்தம் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
    ஆந்திராவில் இருந்து வருபவர்களுக்கு காட்பாடியில் மாநில எல்லையில் சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
    காட்பாடி:

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஒமைக்ரான் பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநில எல்லைகளையும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    காட்பாடியில் வெடிமருந்துத் தொழிற்சாலை அருகே உள்ள மாநில எல்லையில் ஆந்திராவிலிருந்து வருபவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று சித்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வாகனங்களில் வருபவர்கள் 2 கட்ட கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்யப்படுபவர்களின் முகவரி மற்றும் அவர்களுடைய செல்போன் எண்கள் பதிவு செய்யப்படுகிறது.

    2 தவணை தடுப்பூசி போட்டிருந்தாலும் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். கடைகள் மற்றும் பொது இடங்களில் கூடும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஒமைக்ரான் கொரோனாவை விட அதிக வேகத்தில் பரவக் கூடும் என்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.
    கற்பகம் கூட்டுறவு அங்காடி பெண் அதிகாரி வீட்டில் ரூ.2.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய காட்சி.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை கற்பகம் சிறப்பு அங்காடி வேலூர் அண்ணா சாலையில் செயல்பட்டு வருகிறது. அதன் இணை பதிவாளராகவும் மற்றும் மேலாண்மை இயக்குனராகவும் ரேணுகாம்பாள் என்பவர் பணியாற்றி வருகிறார். 

    இவர் புத்தாண்டை முன்னிட்டு சோப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் டீலர்களிடம் லஞ்சமாக பணம் பெறுவதாகவும், மற்றும் பல்வேறு வகைகளில் பில் தொகை வழங்குவதற்காக லஞ்சம் பெறுவதாகவும் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், விஜய் மற்றும் போலீசார் நேற்று இணைப்பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்தனர். 

    இந்தநிலையில் மாலை 6 மணி அளவில் திடீரென அலுவலகத்துக்குள் நுழைந்த போலீசார் அங்கு இணைப்பதிவாளர் அறை மற்றும் ஊழியர்களின் மேஜைகளில் சோதனை செய்தனர்.

    அப்போது அலுவலகத்தில் இருந்து ஏஜெண்டு சீனிவாசன் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் பறிமுதல் செய்தனர். மற்றும் அலுவலகத்தில் இருந்து ரூ.63000 பறிமுதல் செய்தனர். 

    இந்த சோதனையின் முடிவில் அலுவலகம் மற்றும் அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே அலுவலகத்திற்கு வெளியாட்கள் யாரும் வராத  வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    இந்த சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் லஞ்சமாக பெற்றது தெரிய வந்தது. மேலாண்மை இயக்குனர் ரேணுகாம்பாள் கற்பகம் கூட்டறவு அங்காடி ஊழியர்கள் சண்முகம், நவீன்குமார், ஏஜெண்டு சீனிவாசன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள பெண் அதிகாரி ரேணுகாம்பாள் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 1 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.  

    இந்தசம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    வேலூர் தனியார் ஆஸ்பத்திரி வளாக விடுதியில் மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    மதுரையை சேர்ந்தவர் ஜோஸ்வா (வயது 23). வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் முதுகலை பட்ட படிப்பு படித்து வந்தார்.

    இவர் சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை.

    இதனால் அங்கிருந்தவர்கள் அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது அறையில் உள்ள படுக்கையில் ஜோஸ்வா இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவ மாணவர் ஜோஸ்வா எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சி.எம்.சி. ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×