என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் அருகே ஆந்திராவில் இருந்து பைக்கில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது
குடியாத்தம்:
குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் கிருபாகரன், போலீசார் மஞ்சுநாதன் உள்ளிட்டோர் சைனகுண்டா சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் வந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தியனர். அவர்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் சீட்டை புரட்டிப் பார்த்த போது அதில் சிறு சிறு பொட்டலங்களாக 400 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து பிடிபட்ட 2 வாலிபர்களையும் போலீசார் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், குமரன் ஆகியோர் அந்த வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குடியாத்தம் ஆர்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த குமரன் மகன் ராஜ்குமார் (வயது 22) என்றும் சென்னையில் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருவதும் மற்றொருவர் குடியாத்தம் ஜீவா நகரை சேர்ந்த ஜெயக்குமார் மகன் தினகரன் (19) என்றும் மேளம் அடிப்பவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்த ராஜ்குமார், தினகரன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலம் பலமநேர் அடுத்த காலவப்பல்லி பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கி வருவது தெரியவந்தது.
இந்த காலவப்பல்லி பகுதியில் இருந்து பலர் கஞ்சா பொட்டலங்களை வாங்கி குடியாத்தம் பகுதியில் விற்பனைக்கு கொண்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
போலீஸ் உயர் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி காலவப்பல்லி பகுதியில் கஞ்சா மொத்த விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






