என் மலர்
திருப்பூர்
+2
- திருப்பூர் ஒன்றிய தே.மு.தி.க. சார்பாக பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- பெருமாநல்லூர் நால்ரோட்டில் உள்ள கொடிக்கம்பத்தில் தே.மு.தி.க. கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
திருப்பூர்:
தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்தின் 71-வது பிறந்தநாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியும் கட்சி கொடிகளை ஏற்றியும், ஏழை எளியோருக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ஒன்றிய தே.மு.தி.க. சார்பாக பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தைவேல், பொருளாளர் காளியப்பன், அவைத்தலைவர் சரவணகுமார் ஆகியோருடன் துணை செயலாளர் ஏ .எஸ். அக்பர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து பெருமாநல்லூர் நால்ரோட்டில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அப்போது அந்த வழியாக வந்த பேருந்தில் சென்ற பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர். அதனைத்தொடர்ந்து பாண்டியன் நகரில் பகுதி செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் கொடியினை ஏற்றி வைத்த மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தைவேல், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் பொட்டு காளியப்பன், மாவட்ட பொருளாளர் ராயபுரம் பா. ஆனந்த், வெள்ளியங்கிரி, பிரபு, வசந்த், யுவராஜ், கிட்டுசாமி உள்ளிட்ட ஏராளமான மாவட்ட, ஒன்றிய, பகுதி, கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொண்டர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கியும், கட்சி கொடி ஏற்றியும் விஜயகாந்தின் 71 -வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
- கடைமடை பகுதியாக உள்ள வெள்ளக்கோவில் சுற்றுவட்டார பகுதிக்கு, தண்ணீர் வந்து சேர்வதில்லை
- கிளை வாய்க்காலில் குப்பை, இறந்த கோழிகள் வீசுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கயம்:
பி.ஏ.பி., பாசன திட்டத்தில் கடைமடை பகுதியாக உள்ள வெள்ளக்கோவில் சுற்றுவட்டார பகுதிக்கு, தண்ணீர் வந்து சேர்வதில்லை என்ற விவசாயிகளின் தொடர் ஆதங்கம் எதிரொலியாக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினர் சுல்தான்பேட்டை துவங்கி பொங்கலூர், காங்கயம், வெள்ளகோவில் வரை விரிவான கள ஆய்வு நடத்தினர்.
இதில் காங்கயத்தில் கால்வாயின் இருபுறமும் திடக்கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன. கால்வாய் மற்றும் கரையோரங்களில் மதுபாட்டில், பிளாஸ்டிக் பை அடைந்து கிடப்பதால் நீர்வழித்தடம் தடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக கால்வாயில் திறந்து விடப்படுகிறது. பல ஆண்டுகளாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகள், கால்வாயில் வெளியேற்றப்படுவதால், நீரின் தரம் மற்றும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்துள்ளது என அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பாசனத்தில் விதிமீறல்களை சரி செய்து 4வது மண்டலத்துக்கு குறைந்தபட்சம் 10 சுற்று தண்ணீர் பாசனத்திற்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காண்டூர் கால்வாய் அடைப்பு நீக்க நடவடிக்கை எடுப்பது,அடுத்து வரும் 4வது மண்டலத்துக்கு அரசாணை பெறும் போது நீர் வளத்துறையின் செலவினம், நீர் பரிமாற்ற இழப்பு ஆகியவற்றை கருத்துருவில் தெளிவாக குறிப்பிட்டு நீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பது.
கிளை வாய்க்காலில் குப்பை, இறந்த கோழிகள் வீசுவதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பது, காலாவதியான பாசன சபை வாக்காளர் பட்டியலை சரி செய்வது, கிளை வாய்க்கால் பராமரிப்பு, கால்வாய் ஓரம் கம்பிக்கட்டி, கான்கிரீட் தடுப்பு அமைப்பது, பரம்பிக்குளம், சோலையாறு அணை பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர், முதன்மை பொறியாளர் ஆகியோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதை கண்டித்து, வெள்ளக்கோவில் கிளை (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்கத்தினர் கூட்டத்தை புறக்கணித்தனர்.
தங்களது கோரிக்கையை முன்வைத்து பட்டினி போராட்டம் நடத்துவது எனவும் முடிவெடுத்துள்ளனர்.
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் குமாஸ்தாக்கள் சேமநல உறுப்பினர் தேர்தல் திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் இன்று நடைபெற்றது.
- தேர்தலில் திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள கோர்ட்டுகளில் பணியாற்றும் 91 பேர் வாக்கு அளிக்க உள்ளனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் குமாஸ்தாக்கள் சேமநல உறுப்பினர் தேர்தல் திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் இன்று நடைபெற்றது. இதில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் .அதற்காக 18 பேர் போட்டிட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட வக்கீல் சங்க தலைவர் எம்.பழனிசாமி தேர்தல் அதிகாரியாகவும் வக்கீல் பாலகுமார் தேர்தல் பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வழக்கறிஞர் அணி செயலாளர் பத்மநாபன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் ஒருங்கிணைந்து இந்த தேர்தலை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் ரகுபதி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இந்த தேர்தல் இன்று மாலை வரை நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெறும் நபர்கள் சேம நல நிதி கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த தேர்தலில் திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள கோர்ட்டுகளில் பணியாற்றும் 91 பேர் வாக்கு அளிக்க உள்ளனர்.
- பள்ளிகளில் 15 நாட்களுக்கு மேல் விடுப்பில் உள்ளவர்களை பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
- வீட்டிற்கே சென்று பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்க முடிவு.
தாராபுரம்:
பள்ளிகளில் 15 நாட்களுக்கு மேல் விடுப்பில் உள்ளவர்களை இடைநிற்றல் தழுவ வாய்ப்புள்ளவர்களாக கருதி பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் இடைநிற்றல் தழுவியோருக்கான சிறப்பு கணக்கெடுப்பு இம்மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.வழக்கமாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 1ந் தேதி வரை நடத்த வேண்டும்.
இதற்கு பிறகும் பள்ளிகளில் சேராதவர்களை கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து கல்வி பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.சமீபத்தில் சுதந்திர தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்திலும், இடைநிற்றல் இன்றி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில் பள்ளிக்கு தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தவர்களின் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்கள் இடைநிற்றல் தழுவ வாய்ப்புள்ளதால் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான சிறப்பு கணக்கெடுப்பு திட்டத்தின் வாயிலாக உரிய மாணவர்களின் வீட்டிற்கே சென்று பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கட்டிட உரிமையாளர்கள் தாமாக முன் வந்து அவற்றை சரி செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- அடுத்த கட்டமாக தனியார் நிறுவனம் மூலம் நேரடியாக கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு செய்யப்படாத மற்றும் குறைந்த வரி விதிப்பு செய்த கட்டிட உரிமையாளர்கள் தாமாக முன் வந்து அவற்றை சரி செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-
மாநகராட்சி பகுதியில் வணிக மற்றும் தொழிற்சாலை கட்டிடங்கள் பெருமளவு உரிய வகையில் வரி விதிப்பு செய்யப்படாமல் உள்ளது. இதனால் நிர்வாகத்துக்கு உரிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது.ஏராளமான கட்டிடங்கள் குறைந்த வரி விதிப்பு செய்தும், வரி விதிப்பே செய்யாமலும் பயன்பாட்டில் உள்ளது. இரு வார்டுகளில் நடத்திய ஆய்வில் 309 சதவீதம் அளவு வரி விதிப்பில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. வருவாய் பிரிவினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்கள் பகுதியில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து இதனை சரி செய்து, முறையான வரி விதிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது. கால அவகாசம் இம்மாத இறுதி வரை வழங்கப்பட்டது. இந்த அவகாசம் வரும் செப்டம்பர் 15ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உரிமையாளர்கள் தாமாகவே முன் வந்து அதற்கு முன்னதாக உரிய வரிவிதிப்பு செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், கடும் அபராதம் விதிக்கப்படும். முதல் கட்டமாக வணிக மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கான வரி விதிப்புகள் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பணிக்காக ஓராண்டுக்கும் மேலாக தற்காலிக மற்றும் வணிகரீதியான மின் இணைப்புகள் பெற்ற கட்டிடங்கள் குறித்த விவரங்கள் மின் வாரியம் மூலம் பெறப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக தனியார் நிறுவனம் மூலம் நேரடியாக கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில் அனைத்து கட்டிடங்களும் ஆய்வு செய்து வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும் என்றார்.
- அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.
- வனத்துறை சார்பில் வனப்பகுதியை சுற்றி 15க்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள ஊதியூர் காப்புக்காட்டில் கடந்த மார்ச் மாதம் சிறுத்தை தென்பட்டது. நாமக்கல், கரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.அவ்வப்போது காட்டில் இருந்து வெளியே வரும் சிறுத்தை அருகேயுள்ள விவசாய தோட்டங்களில் மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகள், வளர்ப்பு நாய், பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு உள்ளிட்ட விலங்குகளை அடித்து, தூக்கி சென்ற சம்பவம் அவ்வப்போது நடந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையை ஒட்டியிருந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் காப்புக்காடு பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வனத்துறை சார்பில் வனப்பகுதியை சுற்றி 15க்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா வைத்து, சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. சிறுத்தையை பிடிக்க ஆங்காங்கே கூண்டும் வைக்கப்பட்டது. அவ்வப்போது கேமராவில் சிக்கிய சிறுத்தை கூண்டுக்குள் அகப்படவில்லை.
தற்போதைய நிலை குறித்து காங்கயம் வனத்துறையினர் கூறியதாவது:-
ஊதியூர் காப்புக்காடு வளம் நிறைந்த காடாக இருப்பதால் சிறுத்தை அங்கேயே தங்கிவிட்டது. முள்ளம்பன்றி, குரங்கு உள்ளிட்ட விலங்கினங்களை சிறுத்தை அடித்து உணவாக்கி கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.கடந்த 42 நாளாக கேமராவில் சிறுத்தை அகப்படவில்லை. இந்த காப்புக்காடு வளம் நிறைந்தது என்பது இதன் வாயிலாக தெரிய வருகிறது.சிறுத்தை வெளியே வராமல் அப்பகுதியை தனது வாழ்விடமாக்கிக் கொண்டிருக்கலாம்.அல்லது தான் வந்த வழியே வெளியே சென்றிருக்கலாம். இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பயிர் சாகுபடி சார்ந்த விவசாயிகளுக்கான காரீப் பருவத்திற்கான முதல் கட்ட தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது
- உரச் செலவை குறைத்து இயற்கை முறையில் உரங்கள் பெற திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துதல், மகசூலை அதிகரிக்க தானிய நுண்ணூட்டம் இடுதல் பற்றியும் விரிவாக கூறினார்.
திருப்பூர்:
உடுமலையை அடுத்த எலையமுத்தூர் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி சார்ந்த விவசாயிகளுக்கான காரீப் பருவத்திற்கான முதல் கட்ட தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது.
உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி வரவேற்புரை ஆற்றியதுடன் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து உரைத்தார்.
பயிற்சியில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன் கலந்து கொண்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
அப்போது அவர் கூறுகையில், தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து விவரங்களையும், அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும், கோடை உழவு செய்யும் முறை மற்றும் பயன்கள் பற்றி கூறினார். மேலும் குறுகிய கால தானியம் மற்றும் தட்டு மகசூல் தரவல்ல கோ (எஸ்) -32 ரக சோளத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றியும் விதை, வேர் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் விதை நேர்த்தி, உரச் செலவை குறைத்து இயற்கை முறையில் உரங்கள் பெற திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துதல், மகசூலை அதிகரிக்க தானிய நுண்ணூட்டம் இடுதல் பற்றியும் விரிவாக கூறினார்.
- தொழில்துறையினர் சாயமிடுதலுக்காக துணிகளை ஜாப்ஒர்க் அடிப்படையில் சாய ஆலைகளுக்கு அனுப்பி வருகிறது.
- வரி செலுத்த தவறியவர்களுக்கு வங்கி கடனை முடக்குவதாக அச்சுறுத்தல்கள் வருகின்றன.
திருப்பூர்:
தமிழ்நாடு வணிகத்துறை சார்பில் அனைத்து வணிக சங்க பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் சைமா சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் கலந்து கொண்டு 2 மனுக்களை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம் வழங்கினார். அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொழில்துறையினர் சாயமிடுதலுக்காக துணிகளை ஜாப்ஒர்க் அடிப்படையில் சாய ஆலைகளுக்கு அனுப்புவதும், அதன் அடிப்படையில் வரவு, செலவு செய்வதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நடைமுறையின் போது சாய ஆலைகள் செலுத்த வேண்டிய வாட் வரிக்கு ஏன் டி.டி.எஸ். பிடித்தம் செய்து கட்டவில்லை என்று கூறி அபராதத்துடன் கட்டுமாறு அறிக்கை அனுப்பப்படுகிறது.
வாட் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட சாய ஆலைகளிடம் இருந்து வரி வசூலிக்க வாய்ப்பு இருக்கும்போது பின்னலாடை நிறுவனங்களிடம் கேட்பது நியாயமான ஒன்றல்ல. மேலும் வணிக வரித்துறை உத்தரவின்படி டி.டி.எஸ். பிடித்தம் செய்ய வேண்டியதில்லை என்று ஈரோடு ஜவுளி வியாபாரிகள் சங்கத்திற்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. எங்களது சில நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் அனுப்பிய அறிக்கைகளை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வியாபார பரிவர்த்தனைகளில் வரி நிலுவை உள்ளதாக அனுப்பப்படும் அனைத்து அறிக்கைகளையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் பாரம்பரியமிக்க தொழிலை இதுபோன்ற சிரமங்களில் இருந்து மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மற்றொரு மனுவில், பனியன் தொழிலில் வெளி மாநில விற்பனைக்கான சி படிவம் சமர்ப்பித்து 1 சதவீத வரி செலுத்தும் ஆணை நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டபோது சி படிவம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. இந்த சூழலில் 1 சதவீத வரி செலுத்தி கணக்கு முடித்த உறுப்பினர்களுக்கு கூட 2002-2003-ம் ஆண்டு அதாவது 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கணக்குகள் குறித்து கேட்பு அறிக்கைகள் வருகின்றன. வரி செலுத்த தவறியவர்களுக்கு வங்கி கடனை முடக்குவதாக அச்சுறுத்தல்கள் வருகின்றன.
எனவே 1 சதவீத வரி கட்டிய எங்களது சங்க உறுப்பினர்களின் கணக்கை ஏற்றுக் கொள்ளவும், 10 ஆண்டுகளுக்கு மேலான கணக்குகளுக்கு கேட்பு அறிக்கை அனுப்புவதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- தொலைதூர கல்வி முறையில் இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர்:
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைதூர கல்வி முறையில் இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.எட்., உள்ளிட்ட அனைத்து பாட, மாத தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 28ந் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேணடும்.தொலைதூர கல்வி தேர்வு சார்ந்த விபரங்களை https://sde.b-u.ac.in/SSS/OLP/ என்ற பல்கலை க்கழக இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்யப் படுகிறது.
- சிலிண்டர் தீர்ந்து விடும் சமயத்தில் சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
திருப்பூர்:
இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு தமிழகத்தில் 1.48 கோடி வீட்டு வாடிக்கையாளர் உள்ளனர். தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்யப் படுகிறது.
இந்தியன் ஆயிலின் கட்டணமில்லா தொலைபேசி எண், இணையதளம், மிஸ்டு கால், வாட்ஸ் ஆப் எண் ஆகியவற்றின் வாயிலாக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்கள் சில நேரங்களில், வேலை நிமித்தம் காரணமாக, சிலிண்டர் முன்பதிவு செய்ய மறந்து விடுகின்றனர். இதனால் சிலிண்டர் தீர்ந்து விடும் சமயத்தில் சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதை தவிர்க்க தற்போது, சிலிண்டர் பதிவு செய்வது குறித்து நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
அந்த எஸ்.எம்.எஸ்.,-ல் கடைசி சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட தேதி மற்றும் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டிய மிஸ்டு கால் எண், இணையதள, 'லிங்க்' ஆகியவையும் அனுப்பப்படுகிறது.
- இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து கடந்த 16 ந் தேதி உத்தரவிட்டுள்ளது.
- சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய எவ்வித மானியமும், சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை.
உடுமலை:
சின்ன வெங்காய ஏற்றுமதி முடங்கி கிடப்பதைத் தவிா்க்க அதற்கு தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த வெள்ளக்கோவில் ஆா். பி. சாமி கூறியதாவது:-
இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து கடந்த 16 ந் தேதி உத்தரவிட்டுள்ளது. இதில் வெங்காயம் என்பது பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இரண்டும் ஒன்றாகவே உள்ளது. பெரிய வெங்காயம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. இதன் விலை ஏற்றத் தாழ்வு என்பது இந்திய அளவிலான பிரச்னையாகும்.
ஆனால் சின்ன வெங்காயம் என்பது தமிழ்நாட்டின் கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்கக் கூடியது. தமிழா்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து, ஒவ்வொரு முறையும் தடைகளை விதித்தும், வரிகளை விதித்தும் தமிழ்நாட்டு சின்ன வெங்காய விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
ஏற்றுமதி செய்யப்படும் போது கொடுக்கப்படும் குறியீட்டு எண் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுக்கும் ஒரே எண்ணாக இருந்து வருகிறது. சின்ன வெங்காயத்துக்கு தனி ஏற்றுமதி குறியீட்டு எண் உருவாக்க வேண்டுமென்கிற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் குறைந்தபட்ச உற்பத்திச் செலவு 30 ரூபாயாகும். விவசாயிகள் கிலோ ரூ. 45க்கு விற்றால் மட்டுமே நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும். ஆனால் தற்போதைய ஏற்றுமதி வரி விதிப்பு கிலோவுக்கு 20 ரூபாயைக் குறைத்துள்ளது.
சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய எவ்வித மானியமும், சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை. நஷ்டத்துக்கு நிவாரணமும் இல்லை. அப்படியிருக்க வரி விதிக்க எவ்வித தாா்மீக உரிமையும் கிடையாது. கஷ்டப்படும் விவசாயிகளைக் கண்டு கொள்ளாமல், நுகா்வோரை மட்டுமே அரசு கருத்தில் கொள்கிறது.
ஏற்றுமதி தரத்தில் சந்தை நிலவரத்தை அனுசரித்து கொள்முதல் செய்யப்பட்ட சின்ன வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய இயலாமல் வியாபாரிகளும் தவித்து வருகின்றனா்.
எனவே, வரி விதிப்பை ரத்து செய்வதுடன், சின்ன வெங்காயத்துக்கு தனியாக ஏற்றுமதி குறியீட்டு எண்ணையும் விரைந்து வழங்க வேண்டும் என்றாா்.






