என் மலர்
திருப்பூர்
- 3000 சதுர அடியில் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு ஒரே கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது.
- ஊத்துக்குளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெருமாநல்லூர்:
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள கூலிபாளையம் பகுதியில் தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3000 சதுர அடியில் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு ஒரே கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. மேற்கூரையில் அலுமினிய தகடுகளால் ஆன கூலிங் சீட் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கட்டிங், டெய்லரிங், அயர்னிங் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழ் நாட்டு தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்றும் (செவ்வாய்க்கிழமை) பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட வேலைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து மாலை வேளையில் டீ அருந்துவதற்கான இடைவேளையில் அனைவரும் வெளியே உள்ள கடைக்கு சென்று உள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் பனியன் நிறுவனத்திற்குள் இருந்து பணியை செய்து வந்தனர்.
அப்போது கனமழையோடு கூடிய சூறைக்காற்று வீசியதில், அலுமினியத்தால் ஆன தகர கொட்டகை, காற்றில் பறந்தது. மேலும் பலத்த சூறைக் காற்றின் வேகம் தாங்காமல் பனியன் நிறுவனத்தின் ஹரலோ பிளாக் சுவர்கள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
திடீரென நடந்த இந்த விபத்தில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர் .இதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஸ்கேட்டிங் போட்டிகள் அவிநாசி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றன.
- காவல் ஆணையா் பிரவின்குமாா் அபிநபு தொடங்கி வைத்தாா்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட ரோலா் ஸ்போா்ட்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷன், திருப்பூா் ரோல்ஸ்ப்ரோ அகாதெமி சாா்பில் ஸ்கேட்டிங் போட்டிகள் அவிநாசி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றன. 200 மீட்டா், 400 மீட்டா், 1000 மீட்டா் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளை திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவின்குமாா் அபிநபு தொடங்கி வைத்தாா்.இதில் 4 வயது முதல் 19 வயதுக்குள்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
போட்டிகளை மாவட்ட ரோலா் ஸ்போா்ட்ஸ் அசோசியேஷன் மாவட்டச் செயலாளா் பிரகாஷ், தலைவா் தெய்வராஜ், துணைச்செயலாளா் ஜெயகுமாா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் இந்திரா சுந்தர்ராஜம் கூறுகையில், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சென்னையில் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனா் என்றாா்.
- குமாரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.
- வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 48). இவர் காங்கயம் அரசு போக்குவரத்து கழக கிளையில், அரசு பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் தனது மகள் யாழினியை (15) பின் இருக்கையில் உட்கார வைத்துக் கொண்டு வெள்ளகோவில், அய்யனூர் ரோட்டில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது திடீர் என நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் பின்னால் அமர்ந்திருந்த யாழினிக்கு லேசான காயம் ஏற்பட்டது. குமார் பலத்த காயம் அடைந்தார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குமாரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.
ஆனால் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன குமாருக்கு சங்கீதா என்ற மனைவியும், யாழினி என்ற மகளும், பூவேந்திரன் என்ற மகனும் உள்ளனர்.
- பால் பாக்கெட்களை அனுப்புவதற்காக சரக்கு வேன் வாடகைக்கு எடுத்து அனுப்பி வருகின்றனர்.
- பால் பாக்கெட்களை ஆய்வு செய்த போது, பால் பாக்கெட்கள் அதிகம் இருப்பது தெரியவந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான பால் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோவை மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த கௌதம் (வயது34) சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பால் பாக்கெட்களை அனுப்புவதற்காக சரக்கு வேன் வாடகைக்கு எடுத்து அனுப்பி வருகின்றனர்.
இதன் ஓட்டுனராக பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் செந்தில்குமார் (வயது41) பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, பால் நிறுவனத்தில் இருந்து, குறிப்பிட்ட அளவுக்கு மேல் பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்தனர்.
இதற்கிடையே நேற்று சரக்கு வேனில் ஏற்றப்பட்ட பால் பாக்கெட்களை நிறுவன மேலாளர் சகாய பாபு ஆய்வு செய்த போது, குறிப்பிட்ட அளவைவிட பால் பாக்கெட்கள் அதிகம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் விசாரித்த போது இருவரும் பால் பாக்கெட்களை திருடி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, பால் பாக்கெட்டுகள் திருட்டு குறித்து மேலாளர் சகாய பாபு புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மின்சாரப் பயன்பாட்டை குறைக்கும் வகையில் சூரிய ஒளி மின் தகடுகள் பொருத்துவதற்காக திட்டமிட்டனர்.
- தீ மளமளவென பரவி சூரிய ஒளி மின் தகடுகளில் தீ பற்றியது.
பல்லடம்:
பல்லடம்- பொள்ளாச்சி பைபாஸ் ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான டெக்டைல்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் மின்சாரப் பயன்பாட்டை குறைக்கும் வகையில் சூரிய ஒளி மின் தகடுகள் பொருத்துவதற்காக திட்டமிட்டனர். இதற்காக சூரிய மின் ஒளி தகடுகள் வாங்கி இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
அதனைப் பொருத்தும் வேலைகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. டெக்டைல்ஸ் நிறுவனத்தில் உள்ள காலி இடத்தில் சூரிய ஒளி மின் தகடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று மாலை அந்த இடத்தில் அருகே இருந்த காய்ந்த புற்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவி சூரிய ஒளி மின் தகடுகளில் தீ பற்றியது.
தீப்பிடித்து எரிவதை கண்ட தொழிலாளர்கள், இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து சூரிய ஒளியில் மின் தகடுகளில் பற்றி எரிந்த தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்குள் அங்கிருந்த ஏராளமான சூரிய ஒளி மின் தகடுகள் தீயில் இருந்து சேதம் ஆகியது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடைபெற்றது.
- விண்ணப்பங்கள் பதிவு செய்தது குறித்து சரி பார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
குடிமங்கலம் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பதிவு செய்தது குறித்து சரி பார்க்கும் பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடைபெற்றது. விண்ணப்ப பதிவு முகாம்களில் பொதுமக்கள் வழங்கிய கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்தது குறித்து சரி பார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் பல்லடம் வட்டம் கள்ளக்கிணர் பகுதி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பூளவாடி ஊராட்சி வார்டு எண்-1 பகுதியில் மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி ரங்கநாதன்நகர், மைவாடி ஊராட்சி, ராஜாவூர் கள்ளியங்காடு ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பதிவு செய்தது குறித்து சரி பார்க்கும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது என்றார்.
இந்த ஆய்வின் போது உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், உடுமலை தாசில்தார் சுந்தரம் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மானாசிபாளையத்தில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 80 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கேத்தனூர் ஊராட்சி, மானாசிபாளையத்தில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில் மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டனர்.
அந்த காரில் வந்த சூலூர் வதம்பச்சேரி, நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் ராஜேந்திரன் (வயது 37) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அனுமதி இன்றி மதுபான பாட்டில்கள் கடத்தியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 80 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- நான்கு வழி சந்திப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.
- அங்காளம்மன் கோவில் இடமானது குன்னத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமானதாகும்.
ஊத்துக்குளி:
குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கொமரசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜோதிமணி சோமசுந்தரம், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குன்னத்தூர் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள நான்கு வழி சந்திப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும். இதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் இடமானது குன்னத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமானதாகும்.
அந்த நிலத்தில் ஊத்துக்குளி சாலையையொட்டி மேற்புறம் 4 மீட்டர் அகலத்திலும், கோவிலில் வடபுறம் பெருமாநல்லூர் சாலையை ஒட்டி 4 மீட்டர் அகலத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா அமைப்பதற்கு ஏதுவாக நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- சம்பா நெல் சாகுபடி கால்வாய் வழியாக கடந்த 19-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
- மங்களப்பட்டி கிராமம் மற்றும் அஞ்சூர் கிராம ஊராட்சி பகுதியை சென்றடைய 9 நாட்கள் ஆகும்
காங்கயம் :
பவானிசாகர் அணையில் இருந்து நஞ்சை சம்பா நெல் சாகுபடி கால்வாய் வழியாக கடந்த 19-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் கடைமடை பகுதியான மங்களப்பட்டி கிராமம் மற்றும் அஞ்சூர் கிராம ஊராட்சி பகுதியை சென்றடைய 9 நாட்கள் ஆகும். ஆனால் இந்த ஆண்டு பாசன பிரதான கால்வாய் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டதால் தண்ணீர் வந்து சேர்ந்தது.
இதனை தொடர்ந்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள், கடைமடை விவசாயிகள் மங்களப்பட்டி கிராமத்திற்கு வந்து சர்க்கரை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் தண்ணீரில் மலர் தூவி வணங்கினர்.
இதுபற்றி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூறியதாவது:-
பவானிசாகர் அணை கட்டப்பட்ட கடந்த 66 ஆண்டுகளில் கீழ் பவானி பாசன கால்வாய் தூர்வாரப்படாமல் ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவின்படி திருப்பூர், ஈரோடு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழுவினர் ஒருங்கிணைந்து கீழ்பவானி பாசன கால்வாயை தூர்வாரி இருந்தனர்.
கீழ்பவானி பாசன கால்வாயில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் காலநிலை கோடை வெயில் காரணமாக குறைந்து இருந்த கிணறுகள், ஆழ் குழாய் கிணறுகளின் நீர்மட்டம் விரைவில் கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களின் குடிநீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். எனவே பவானிசாகர் அணையில் இருந்து நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்ட தமிழ்நாடு அரசுக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 3 ஊராட்சிகளில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- பல்லடம் காவல் நிலையத்திற்கு 97 கிராமங்கள் மற்றும், பல்லடம் நகரம் ஆகியவை உள்ளடங்கியுள்ளது.
பல்லடம்:
பல்லடத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் உட்கோட்ட காவல்துறையில் பல்லடம், மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசி பாளையம், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் என 5 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் பல்லடம் காவல் நிலையத்திற்கு 97 கிராமங்கள் மற்றும், பல்லடம் நகரம் ஆகியவை உள்ளடங்கியுள்ளது. இந்த நிலையில் பல்லடம் நகரம், மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் வேகமான வளர்ச்சி அடைந்து மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதில் ஆறுமுத்தாம் பாளையம், கரைப்புதூர், கணபதிபாளையம், ஆகிய 3 ஊராட்சிகளில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
மேலும் இங்கு பனியன் நிறுவனங்கள், சாய ஆலைகள் அமைந்துள்ளதால் வட மாநிலத் தொழிலாளர்கள், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராமங்களில் ஏதாவது சம்பவங்கள் நடைபெற்றால் பல்லடம் காவல் நிலையத்தில் இருந்து அங்கு செல்வதற்கு தாமதமாகிறது.
இதனால் குற்றவாளிகள் எளிதாக தப்பி விடுகின்றனர். மேலும் பல்லடம் காவல் நிலையத்தில் தினமும் சுமார் 10க்கும் குறையாமல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதால் போலீசாருக்கு வேலை பளு அதிகரித்துள்ளது. பணிச்சுமையால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையும் உள்ளது. இதனால் பல்லடம் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து அருள்புரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளிகளில் மின் இணைப்புகளை சோதனை செய்ய மேயர் தினேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
- மாநகராட்சி பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
திருப்பூர் :
திருப்பூர், செரங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கழிப்பறையில் மின் வயல் உரசி, மாணவி ஒருவருக்கு கழுத்து, கையில் எலும்பு முறிவு மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகளில் மின் இணைப்புகளை சோதனை செய்ய மேயர் தினேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மின் இணைப்புகள், வயர்கள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்து, பராமரிப்பு மேற்கொள்ள, மாநகராட்சி பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பகுதி வாரியாக அனைத்து பள்ளிகளிலும் மின் இணைப்பு முழுமையாக சோதனை செய்து, வெளிப்பகுதியில் எங்கும் மின்சார வயர்கள் இல்லாத வகையில், பி.வி.சி., குழாய் பொருத்தப்படும். முழுமையாக அவற்றை சரி செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆட்சி நடக்கிறது.
- மதுரையில் நடைபெற்ற மாநாடு மக்கள் எழுச்சி மாநாடாக அமைந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், அவைத்தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு இணையாக திருப்பூர் மாநகராட்சிக்கும், திருப்பூர் மாநகராட்சியை விட அதிகமாக பொள்ளாச்சி நகராட்சிக்கு வரி விதிப்பு நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆட்சி நடக்கிறது. மின் கட்டண உயர்வால் திருப்பூர் பின்னலாடை தொழில் மிகவும் நலிவடைந்து வரக்கூடிய நிலையில் அதனை மீட்டெடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தி.மு.க., ஆட்சி வரும் போதெல்லாம் தொழில்துறையினர் பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மதுரையில் நடைபெற்ற மாநாடு மக்கள் எழுச்சி மாநாடாக அமைந்தது. மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு வந்தார்கள். எடப்பாடி பழனிச்சாமி நினைத்தால் மட்டும்தான் அதுபோன்று இன்னொரு மாநாட்டை நடத்த முடியும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பது தான் இந்தியாவிற்கு பாதுகாப்பு . எம்ஜிஆர்., அறிமுகப்படுத்தி கொண்டு வரப்பட்ட சத்துணவு திட்டத்தில் எம்ஜிஆரின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வகையில் தி.மு.க. வேறொரு பெயரினை வைத்து மறைத்து வருகிறது. இதே நிலை தொடருமானால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் .
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர்கள் கருணாகரன், பட்டிலிங்கம், ஹரிஹரசுதன், கே.பி.ஜி. மகேஷ்ராம், கேசவன், பி.கே. முத்து, திலகர் நகர் சுப்பு, மற்றும் ஜெயலலிதா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிச்சாமி, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






