search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadaimadai area"

    • சம்பா நெல் சாகுபடி கால்வாய் வழியாக கடந்த 19-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • மங்களப்பட்டி கிராமம் மற்றும் அஞ்சூர் கிராம ஊராட்சி பகுதியை சென்றடைய 9 நாட்கள் ஆகும்

    காங்கயம் : 

    பவானிசாகர் அணையில் இருந்து நஞ்சை சம்பா நெல் சாகுபடி கால்வாய் வழியாக கடந்த 19-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் கடைமடை பகுதியான மங்களப்பட்டி கிராமம் மற்றும் அஞ்சூர் கிராம ஊராட்சி பகுதியை சென்றடைய 9 நாட்கள் ஆகும். ஆனால் இந்த ஆண்டு பாசன பிரதான கால்வாய் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டதால் தண்ணீர் வந்து சேர்ந்தது.

    இதனை தொடர்ந்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள், கடைமடை விவசாயிகள் மங்களப்பட்டி கிராமத்திற்கு வந்து சர்க்கரை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் தண்ணீரில் மலர் தூவி வணங்கினர்.

    இதுபற்றி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    பவானிசாகர் அணை கட்டப்பட்ட கடந்த 66 ஆண்டுகளில் கீழ் பவானி பாசன கால்வாய் தூர்வாரப்படாமல் ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவின்படி திருப்பூர், ஈரோடு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழுவினர் ஒருங்கிணைந்து கீழ்பவானி பாசன கால்வாயை தூர்வாரி இருந்தனர்.

    கீழ்பவானி பாசன கால்வாயில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் காலநிலை கோடை வெயில் காரணமாக குறைந்து இருந்த கிணறுகள், ஆழ் குழாய் கிணறுகளின் நீர்மட்டம் விரைவில் கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களின் குடிநீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். எனவே பவானிசாகர் அணையில் இருந்து நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்ட தமிழ்நாடு அரசுக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×