என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • எஸ்.ஆர்.வி.வி. பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
    • 10-ம் வகுப்பு மாணவர் வெற்றிசெல்வம் முதலிடத்தை பெற்றார்.

    காரைக்குடி

    மத்திய அரசின் இடை நிலைக்கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் மானகிரி எஸ்.ஆர்.வி.வி பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

    10-ம் வகுப்பு மாணவர் வெற்றிசெல்வம் இந்த பள்ளியில் முதலிடத்தை பெற்றார். மாணவர் ஆதிஸ்குமார் 2-ம் இடத்தையும், மாணவி விலாஷினி பள்ளி அளவில் 3-ம் இடத்தையும் வென்றனர்.

    சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தலைவர் அய்யப்பன் பாராட்டி பேசுகையில், பள்ளி ெதாடங்கிய காலம் முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறோம். எஸ்.ஆர்.வி.வி.சி.பி.எஸ்.இ. பள்ளியில் கல்வியுடன் விளையாட்டு மற்றும் பிற கலைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

    மேலும் அவர் சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் ஐஸ்வர்யா, நிர்வாக அலுவலர் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பணியாளர்களும் பாராட்டினர்.

    • இளையான்குடி கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
    • கல்லூரி முதல்வர் முகமது முஸ்தபா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக சாதிக் அலி, சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியின் செயலர் ஜபருல்லாகான், ஆட்சி குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர் சபினுல்லாகான், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முகமது முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    இதில் உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு மாணவ, ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

    • தேவகோட்டையில் டவுன் பஸ்கள் இயங்காதால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
    • டவுன் பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுவது தொடர் கதையாக உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு போக்கு வரத்து கழக பணிமனையில் 27 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தேவகோட்டையில் இருந்து கல்லல், வெற்றியூர், முப்பையூர், கோவிந்த மங்கலம், திருப்பாக் கோட்டை, ஆறாவயல், கண்ணங்குடி, சிறுவாச்சி, உஞ்சனை, புதுவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு வர அரசு பஸ் மட்டுமே உள்ளது.

    கிராம பகுதி மக்கள் தேவகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடை பெறும் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க அதிகளவில் வந்து செல்வார்கள். இந்த நிலையில் நேற்று 9 டவுன் பஸ்கள் இயங்காததால் கிராம மக்கள் பல மணி நேரமாக தேவகோட்டை பஸ் நிலையத்தில் நீண்டநேரம் காத்திருந்தனர்.

    இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகினர். சிலர் ஆபத்தான நிலையில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.பெரும்பாலான டவுன் பஸ்களின் டயர் மோசமான நிலையில் உள்ளன. தரம் குறைந்த பஸ்கள் தான் கிராமங்களுக்கு சென்று வருகிறது. அவ்வப்போது இந்த டவுன் பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுவது தொடர் கதையாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு டவுன் பஸ்களின் அவல நிலையை வீடியோவாக அரசு பஸ் டிரைவர் எடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் தேவகோட்டையில் இருந்து 9 டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    • திருப்பத்தூர் அருகே ஜல்லிகட்டில் காளைகள் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர்.
    • திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் அங்காள பரமேசுவரி, கணவாய் கருப்பர் வருடாபிஷேக விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 600 காளைகளும், 50 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் அடக்க முற்பட்டனர். இதில் காளைகள் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக 7 பேர் பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாநில ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவை தலைவர் ஒண்டிராஜ், மாநில இளைஞரணி தலைவர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்ட அளவிலான லோக் அதாலத்தில் 1,583 வழக்குள் முடித்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 59 ஆயிரம் வழங்கப்பட்டது.
    • ராஜாராம் ராமலிங்கம் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    சிவகங்கை

    தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 9 மக்கள் நீதிமன்றங்கள் (ேலாக் அதாலத்) அமைக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

    மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்தியதாரா, போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேஸ்வரி, குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் சத்திய நாராயணன், வக்கீல் ராஜாராம் ராமலிங்கம் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    125 குற்றவியல் வழக்குகள், 150 காசோலை மோசடி வழக்குகள், 117 வங்கிக்கடன் வழக்குகள், 131 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், 85 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள், 215 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள், 1,574 மற்ற குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 2 ஆயிரத்து 397 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அதில் 1,564 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.95லட்சத்து 64ஆயிரத்து 692 வழக்காடிகளுக்கு கிடைத்தது. அதுபோல் வங்கிக்கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 550 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அதில் 19 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.18 லட்சத்து 95 ஆயிரம் வரை வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.

    இதில் வக்கீல்கள் திரளாக கலந்து கொண்டனர். வழக்காடிகளும் ஏராளமானோர் பங்கேற்று தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர்.

    • அரளிகோட்டையில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
    • திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அரளிகோட்டை கிராமத்தில் கோசியப்ப அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா விமரிசையாக நடந்தது.

    திரளான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக வான வேடிக்கைகள் முழங்க மண் குதிரைகளை சுமந்து வந்து கோவில் முன்பாக கொண்டு வந்து சேர்த்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து மந்தை எனப்படும் சவுக்கையில் தாரை தப்பட்டையுடன் இளைஞர்கள் ஆடி பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

    அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தனது பிறந்த ஊர் என்பதால் விழா தொடக்கத்தில் இருந்து பொதுமக்களோடு மக்களாக இணைந்து திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அரளி கோட்டை கிராமத்தார்கள் மற்றும் கோசியப்ப இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • சி.பி.எஸ்.இ. தேர்வில் மாவட்ட அளவில் செல்லப்பன் வித்யா மந்திர் சர்வேதச பள்ளி முதலிடம் பிடித்தது.
    • ஆசிரியர்கள் பாராட்டினர்.

    காரைக்குடி

    மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தது. பிளஸ்-2 மாணவர் லோகேஷ் 483/500 மதிப்பெண்களைப் பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றார்.

    ஆங்கிலத்தில் 96, கணிதம் 95, உயிரியல் 97, இயற்பியல் 95, வேதியியல் 100 என மதிப்பெண்களை பெற்றார். 2-ம் இடத்தை மாணவர் கவுரிசங்கர நாராயணன் 482/500 மதிப்பெண் பெற்றார். 3-ம் இடத்தை மாணவர் பிரியதர்ஷன் 481/500 மதிப்பெண் பெற்றார்.

    10-ம் வகுப்பு தேர்வில் மாணவர் தியாகராஜன் 493/500 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அவர் ஆங்கிலம் 99, பிரெஞ்சு 100, கணிதம் 99, அறிவியல் 97, தகவல் தொழில்நுட்பம் 100 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

    2-ம் இடத்தை விஷால் 487 மதிப்பெண் பெற்றார். 3-ம் இடத்தை மாணவி சுவாதி 485 மதிப்பெண் பெற்றார். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் நிறுவனர் செல்லப்பன், தாளாளர் செ.சத்தியன், நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன், கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி முப்பெரும் விழா நடந்தது.
    • கேக் வெட்டி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரியின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம், செவிலியர்கள் தினம் மற்றும் நர்சிங் பயின்ற மாணவர்களின் நிறைவு நாள் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

    முதல்வர் சுரேஷ் பிரபாகர் தலைமை தாங்கினார். இந்த கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு காரைக்குடி, திருப்புத்தூர், மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    மாணவ-மாணவிகள், செவிலியர்கள் தின விழா, நிறைவு நாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
    • பாத்திமா கனி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள சாகீர்உசேன் கல்லூரியில் ''நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம்'' சார்பில் தமிழக அரசின் ''நான் முதல்வன்'' திட்டத்தின் கீழ் "கல்லூரிக்கனவு-2023" என்னும் தலைப்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் திருப்புவனம், அல்லிநகரம், சாலைகிராமம், முனைவென்றி, அனுமந்தகுடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலுவதின் முக்கியத்துவம் மற்றும் உயர்கல்வி பாடப்பிரிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ்சேக் அப்துல்லா, பாத்திமா கனி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்

    • சுத்தானந்த பாரதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • இதில் நூலக பணியாளர்களும், வாசகர்களும் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட மைய நூலகமும்-நூலக தன்னார்வலர் குழுவும் இணைந்து கவி யோகி சுத்தானந்த பாரதியின் 126-வது பிறந்தநாள் விழா மாவட்ட மைய நூலகத்தில் கொண்டாடப்பட்டது. பேராசிரியர் ஹேமமாலினி குத்துவிளக்கு ஏற்றினார். நூலக கண்காணிப்பு அலுவலர் சாமிநாதன் சுத்தானந்த பாரதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நூலகர்கள் முத்துக்குமார், சாந்தி, எழுத்தாளர் ஈஸ்வரன் ஆகியோரும் மரியாதை செய்தனர். நூலக தன்னார்வலர் ரமேஷ் கண்ணா வாசகர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார். இதில் நூலக பணியாளர்களும், வாசகர்களும் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் ரூ.10 கோடியில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • கட்டுமான பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட பொதுப்பணி த்துறையின் சார்பில் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ10.03கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்பு அவர் கூறியதாவது:-

    திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் ரூ3.71கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டுமான பணிகளின் நிலை குறித்தும், காரைக்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் ரூ1.98கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகக் கட்டிடத்தின் கட்டுமான பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    அதேபோன்று காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் ரூ4.34 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சீர்மரபினர் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் ரமணன், உதவி பொறி யாளர் சந்தோஷ் குமார், வட்டாட்சி யர்கள் வெங்க டேசன் (திருப்ப த்தூர்), தங்கமணி (காரை க்குடி) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எடை அளவைகளுக்கான முத்திரையிடும் முகாம் தொடங்குகிறது.
    • ரூ.5 ஆயிரம் வீதம் அபதாரம் கட்ட நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதிகளில் உள்ள வணிகர்கள் நலன் கருதி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் எடை அளவுகள் முகாம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள வணிகர்கள் வருகிற 15-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நகரில் உள்ள முத்து வடுகநாதர் சித்தர் கோவில் வளாகத்தில் நடைபெறும் முகாமில் தாங்கள் பயன்படுத்தி வரும் மின்னணு தராசுகள், மேடை தராசுகள், வில் தராசுகள், விட்ட தராசுகள், எடை கற்கள், நீட்டல் அளவைகளை ஆய்வாளர் முன்பு மறு பரிசீலனை செய்து அவற்றிற்கு முத்திரை வைத்து பயன்பெறலாம். மேலும் வணிகர்கள் முத்திரை வைக்க தவறும் பட்சத்தில் எடை அளவு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபதாரம் கட்ட நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×