என் மலர்tooltip icon

    சேலம்

    கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற கோபி மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் ரெட்டிபட்டி இண்டேன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 24) இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற கோபி மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோபி உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள் 3 மற்றும் கல்லாவில் இருந்த ரொக்கம் ரூ.15 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.இது குறித்து கோபி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடையில் திருடிய ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் சசிகுமார் (20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 20-ந் தேதி கடை மேலாளர் நகையை சரிபார்க்கும் போது அதில் 10 கிராம் நகை குறைவாக இருந்தது
    • சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது நகையை அங்கு வேலை செய்யும் கார்த்திக் எடுத்தது தெரிய வந்தது.

    சேலம்

    சேலம் ஓமலூர் மெயின் ரோடு டி.வி.எஸ் பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் சூரமங்கலம் ஜாகீர் அம்மாப்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோ மகன் கார்த்திக் (வயது 38) என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-ந் தேதி கடை மேலாளர் நகையை சரிபார்க்கும் போது அதில் 10 கிராம் நகை குறைவாக இருந்து தெரியவந்தது. இதையடுத்து சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது நகையை அங்கு வேலை செய்யும் கார்த்திக் எடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் நகையை திருடி வேறு இடத்தில் அடகு வைத்தது தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கலெக்டர் அலுவலக 2-ம் தள கூட்ட அறை எண்.215-ல் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட தபால் அலுவலக தலைமை கண்காணிப்பாளர் அருணாசலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-இந்திய தபால் துறை தீனதயாள் ஸ்பேர்ஸ் யோஜனா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தபால் தலை சேகரிப்பு குறித்த வினாடி, வினா போட்டி நடத்தப்பட உள்ளது. 6 முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். மேலும் அவர்கள் தபால் தலை சேகரிப்பு மன்றம் அல்லது தபால்தலை வைப்பு கணக்கு உள்ளவராகவோ இருக்க வேண்டும். விண்ணப்படிவம் www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டி அக்டோபர் மாதம் 15-ந்தேதி நடக்கிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • கோவிந்தன் (56). இவரது மகன் நந்தீஸ்வரன் (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • சித்தையன், மகன் நந்தீஸ்வரன் ஆகியோருடன் எடப்பாடி அருகே உள்ள பெரிய ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம் மணியக்காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (56). இவரது மகன் நந்தீஸ்வரன் (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் கோவிந்தன் நேற்று முன்தினம் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சித்தையன், மகன் நந்தீஸ்வரன் ஆகியோருடன் எடப்பாடி அருகே உள்ள பெரிய ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.

    அங்குள்ள ஏரிக்கரையில் மகனை அமர வைத்துவிட்டு நண்பர் சித்தையனுடன் கோவிந்தன் ஏரிக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    மாயம்

    மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய கோவிந்தன் அங்கே மகனை காணாமல் திடுக்கிட்டார். பின்னர் தனது உறவினர்களுடன் ஏரிக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடினார்.

    எங்கு தேடியும் நந்தீஸ்வரன் கிடைக்காத நிலையில் இது குறித்து கோவிந்தன் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவன் நந்தீஸ்வரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • திருமணம் செய்யாமலேயே 2 பேரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் திருமலைகிரி அருகே உள்ள கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). இவரது மனைவி அமுதா (40). இவர்களுக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவனை பிரிந்த அமுதா கடைசி மகன் பிரகாஷூடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (35) என்பவருடன் அமுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் தங்கராஜ் அடிக்கடி அமுதாவின் வீட்டிற்கு சென்று வந்தார். மேலும் இருவரும் வெளிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தனர்.

    அப்போது அவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து திருமணம் செய்யாமலேயே 2 பேரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

    நேற்று தங்கராஜ் வழக்கம் போல் அமுதாவின் வீட்டிற்கு சென்றார். மகன் பிரகாஷ் தச்சு வேலைக்கு சென்று விட்டதால் இரவில் தங்கராஜூம் அமுதாவும் வீட்டில் ஒன்றாக தங்கி இருந்ததாக தெரிகிறது.

    இன்று காலை வேலைக்கு சென்று திரும்பிய பிரகாஷ் வீட்டின் கதவை வெகுநேரமாக தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் கூறினார். இதையடுத்து அங்கு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    பின்னர் பிரகாஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அமுதா உடலில் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மேலும் அவரது அருகில் தங்கராஜூம் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார்.

    அமுதாவை கத்தியால் குத்தி கொன்று விட்டு தங்கராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் தங்கராஜ் அமுதாவுக்கு அதிக அளவில் பணத்தை செலவு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன வேதனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலில் அமுதாவை கொன்று தங்கராஜ் தற்கொலை செய்தது தெரியவந்தது.

    இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறியிருந்தார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் மேட்டூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    இந்த நிலையில் இவரது மருமகள் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி வீரக்காரன் கோவில் பகுதியை சேர்ந்த மனோலியா (24) என்பவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    அதில் தன்னை தனது கணவர் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறியிருந்தார்.

    அதன்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் எம்.எல்.ஏ. சதாசிவம், அவரது மகன் உள்ளிட்ட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேசவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்து விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

    சங்ககிரி:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா இருகாலூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 34).

    இவர் சங்ககிரி குப்பனூர் பகுதியில் உள்ள தனியார் கியாஸ் குடோனில் லோடிங் மேனாக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு கேசவன் தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் திருமணத்திற்கு செல்வதற்காக சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.

    அப்போது வேலம்மா வலசு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் நூல் மில் வேன் மோதியது. இதில் கேசவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்து விட்டார்.

    இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவரான தேவூர் வட்ராம்பாளையத்தைச் சேர்ந்த பாலு (43) என்பவர் வேனை அதே இடத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றனர். பலியான கேசவனுக்கு செல்வராணி என்ற மனைவியும், சாய்கவுசிக் (6), வினிதா (3) என்ற குழந்தைகளும் உள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தலைவாசலில் 23 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
    • நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மங்களபுரம் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக தலைவாசல் பகுதியில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர்பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதே போல சேலம் மாநகரில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சாரல் மழை பெய்தது. கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் லேசான மழையுடன் நின்று போனதால் ஏமாற்றமே மிஞ்சியது.

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தலைவாசலில் 23 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலத்தில் 2.7 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 25.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மங்களபுரம் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக எருமப்பட்டியில் 15 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மங்களபுரம் 8, குமாரபாளையம் 4.6, ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 29.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • சந்திரன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து ஆத்தூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மதுபோதை தகராறில் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டை தெற்கு காட்டை சேர்ந்தவர் சந்திரன் (வயது 55).

    அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (54). தொழிலாளிகளான இருவரும் நேற்று இரவு 11 மணியளவில் துலுக்கனூர் தெற்கு காடு செல்லும் வழியில் சேரன் சாலை என்ற இடத்தில் வைத்து ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.

    அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே கைகலப்பாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த முருகேசன் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து சந்திரனை தலை மற்றும் கையில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்திரன் துடித்துடித்து இறந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் சந்திரன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து ஆத்தூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே முருகேசன் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மதுபோதை தகராறில் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக 17 ஆயிரத்து 960 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் தற்போது நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரியிலும் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி 7-வது நாளாக இன்றும் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தபடி உள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 13 ஆயிரத்து 638 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 14 ஆயிரத்து 159 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 55.14 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 55.64 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.
    • குறிப்பாக தலைவாசல் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழையாக கொட்டியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தலைவாசல் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழையாக கொட்டியது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை சாரல் மழையாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியதால் மக்கள் நிம்மதியாக தூங்கினர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக இன்று காலை 8.30 மணி வரை தலைவாசலில் 14 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 4.5, ஆத்தூர் 3.6, ஏற்காடு 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 25.10 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    சேலம்

    சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் வாரியத்தால் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை மேட்டூர் தொட்டில்பட்டியில் உள்ள மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டம் செயல்படாது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் கேட்டுக் கொண்டுள்ளார். 

    ×