என் மலர்
புதுக்கோட்டை

கருணாநிதியின் உடல்நலம் பற்றி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று மருத்துவமனைக்கு சென்று, கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவேரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும், அவர் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகவும் கூறினார்.
மேலும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் உள்ள சில ஷரத்துக்களை நீக்கிவிட்டு அதனை நிறைவேற்ற தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
இதற்கிடையே, சென்னை காவேரி மருத்துவமைனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், நடிகர் சங்க தலைவர் நாசர், பொன்வண்ணன் உள்ளிட்டோரும் வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். #KarunanidhiUnwell #KauveryHospital #Vijayabaskar
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் பூபதி கண்ணன் (வயது 45). இவர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வேளாண்மை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு இவர் வீட்டில் இருந்து காரில் வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இன்று காலை அவரை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் இன்று காலை மாத்தூர் பைபாஸ் சாலையோரம் புதர் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக மாத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது பூபதி கண்ணன் என்பது தெரியவந்தது. அவரது சட்டைப்பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் உறவினர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அடையாளம் கண்டனர்.
பூபதி கண்ணனின் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது. இதனால் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்றிரவு அவர் வெளியே செல்லும் போது காரை மறித்து மர்மநபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேளாண் அதிகாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Murdercase #agriculturalofficermurder
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மைவயல் கிராமத்தில் காளிதாஸ் என்பவருக்கு சொந்தமான திடல் உள்ளது. இந்த திடலில் சாகுபடி சமயத்தில், காளிதாஸ் வயல்களுக்கு வேலை பார்க்க வரும் வேலை ஆட்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்ப்பது வழக்கம்.
சமீபகாலமாக இயந்திரம் மூலம் சாகுபடி செய்வதால், வேலை ஆள்களின் தேவை குறைந்து விட்டது. இதனால் அந்த திடல் பயன்பாடுஇல்லாமல் புதர் மண்டிக் கிடந்தது. இந்த நிலையில் அந்த இடத்தின் உரிமையாளர் காளிதாஸ் ஜேசிபி இயந்திரம் மூலம் புதர்களை அகற்றி சீரமைத்தார்.
சீரமைக்கப்பட்ட இடத்தில் நேற்று காலை சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது ஜேசிபி இயந்திரம் தோண்டி வைத்திருந்த மணல் குவியலில் சுமார் முக்கால் அடி உயரமுள்ள, சங்கு, சக்கரங்களை இருகைகளில் ஏந்தியபடி, பெருமாள் அமர்ந்திருக்கும் உலோகத்திலான சிலை கிடந்தது. சிறுவர்கள் இதுகுறித்து பெரியர்வர்களிடம் தெரிவித்தனர்.
இதுதொடர்பான இடத்தின் உரிமையாளர் காளிதாஸ், அறந்தாங்கி தாசில் தாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெருமாள் சிலையை மீட்டனர். மேலும் சிலை ஐம்பொன் சிலையாக என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
அறந்தாங்கி அருகே மண்ணில் புதையுண்டு கிடந்த பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விராலிமலை:
தமிழக முதல்வர் சட்டமன்ற கூட்டத் தொடரில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தேனீர் கோப்பைகள், பிளாஸ்டிக் தூக்குபைகள், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள் போன்றவை இலுப்பூர் பேரூராட்சியில் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவுரையின் படி பேரூராட்சியில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வாரச்சந்தை கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷாராணி மற்றும் பேரூராட்சி பணியாளர்களால் இன்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் வாரச்சந்தை கடைகளில் பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அபராத கட்டணமும் வசூலிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி ஊராட்சியில் சாந்தம்பட்டி, தெற்குபல்லவராயன்பத்தை ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 4 சிறுமின்விசை தொட்டிகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தெற்கு பல்லவராயன் பத்தை கிராமத்தில் இருந்த மின்மாற்றி வெடித்து பழுதானது. இதனால் மின்சாரம் இல்லாமல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மின்மாற்றியை சரிசெய்து குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மின்சாரவாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை சூரக்காட்டில் உள்ள கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெட்டன்விடுதி மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் மகாதேவராஜ், மழையூர் வருவாய் ஆய்வாளர் சசிக்குமார், கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின்மாற்றியை சரிசெய்து, குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி இணைசெயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் ஈடுபடுத்தும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் என்ற புதிய விருதினை தமிழக அரசு இந்த ஆண்டு முதல் வழங்குகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த ஆறு ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் பள்ளியில் மிகசிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தியமைகாக புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றியம் உடையாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் சுப்பிரமணியன் என்பவருக்கும் இந்த ஆண்டிற்கான கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா விருதுநகரில் நடந்தது. விழாவில் ஆசிரியர் சுப்பிரமணியனுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விருது வழங்கினார். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி. பள்ளிகல்வித் துறை இயக்குனர், தொடக்க பள்ளி இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருது பெற்ற ஆசிரியர் சுப்பிரமணியன் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் 8-ம் வகுப்பு மாணவர்களையும் பங்கேற்க செய்து வெற்றி பெற செய்துள்ளார். தொழில்நுட்ப பாடங்களையும் நடத்தி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்தி வருகிறார்.
விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஊர்பொதுமக்கள் வாழ்த்துக்களை கூறினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் நிர்மல் (வயது 30). இவர் அங்கு ஷூமார்ட் வைத்துள்ளார். இந்தநிலையில் திருச்சியில் வசித்து வரும் அவரது மாமனாரை பார்ப்பதற்காக நேற்றிரவு காரில் கோவில்பட்டியில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார். காரை நிர்மலே ஓட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் செல்லும் போது சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காருக்குள் இருந்த நிர்மல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனிடையே லாரி டிரைவர், லாரியை எடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் பலியான நிர்மலுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
திருச்சி -மதுரை நான்கு வழிச்சாலையில் டிரைவர்கள் ஓய்வு எடுப்பதற்காக டோல் கேட்டுகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் டிரைவர்கள் சிலர் ஆங்காங்கே லாரிகளை நிறுத்தி ஓய்வு எடுத்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் சாலையோரம் லாரிகளை நிறுத்தியிருப்பது தெரியாததால், அந்த வழியாக வரும் வாகனங்கள் லாரிகள் மீது மோதி, அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #tamilnews
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 40), பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 9-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வியாபாரத்திற்கு வந்த அவர், கே.புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடம் இருந்து 92 பவுன் பழைய நகைகளை வாங்கினார். மேலும் பழைய நகைகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.1லட்சத்து 82 ஆயிரம் பணம் அவருக்கு கிடைத்தது.
வியாபாரம் முடிந்ததும் அன்று இரவு காரைக்குடிக்கு காரில் புறப்பட்டார். புதுக்கோட்டை கே.புதுப்பட்டி அருகே பாம்பாற்று பாலம் பகுதியில் செல்லும் போது திடீரென 9பேர் கொண்ட கும்பல் , விக்னேஷின் காரை வழிமறித்ததோடு, அவரது கை, கால்களை கட்டி போட்டி விட்டு, அவர் வைத்திருந்த 92 பவுன் நகை மற்றும் ரூ.1.82லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். கொள்ளை போன நகை- பணத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும்.
இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க பொன்னமராவதி டி.எஸ்.பி. தமிழ்மாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில் இன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை, காரைக்குடி பகுதியை சேர்ந்த சத்தியராஜ், மாரிமுத்து, சதீஷ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 32 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினால் இந்த சம்பவத்தில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. #Robberycase






