search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public road block"

    வேளாங்கண்ணி அருகே புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    வேளாங்கண்ணி:

    கஜா புயலினால் தன்னிலப்பாடி மற்றும் நீடுர் பகுதியில் உள்ள வீடுகள் பாதிக்கப்பட்டன. ஆதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி நீடுரில் நேற்று கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் அமுல்ராஜ், தி.மு.க. ஊராட்சி செயலாளரும், மாவட்ட நெசவாளர் அவை துணைத்தலைவருமான குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாய தொழிற்சங்க மாவட்ட தலைவர் சித்தார்தன், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் பாரபட்சமின்றி நிவாரண தொகை வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக பயனாளிகள் பட்டியலை முறையாக கணக்கெடுக்க வேண்டும்.

    மரைக்காயர் கட்டளை கிராமத்திற்கு 4 ஆண்டு காலமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும். 2017-2018-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையும், வெள்ள நிவாரண தொகையும் உடனே வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் கொள்முதல் செய்யும் நெல்லுக்குரிய பணத்தை உடனடியாக அவரது வங்கி கணக்கில் ஏற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மறியலில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தார் அமுதவிஜயரங்கன், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இன்னும் ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள், மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக செம்பியன்மகாதேவி-களத்திடல்கரை மெயின் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பாஸ்கரன், தி.மு.க. அவைத்தலைவர் பழனிவேல், விவசாய தொழிற்சங்க ஒன்றிய துணை தலைவர் வீராச்சாமி உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
    குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    செஞ்சி:

    செஞ்சியை அடுத்த வல்லம் ஒன்றியம் பெரும்பூண்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றியதால், கடந்த சில நாட்களாக அந்த கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் கிராம மக்கள், அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீரை பிடித்து வந்து, அதை பயன்படுத்தி வருகின்றனர்.

    குடிநீர் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பெரும்பூண்டியில் உள்ள செஞ்சி-நெசூர் சாலையில் காலிகுடங்களுடன் நேற்று காலை திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் புருஷோத்தமன் மற்றும் வளத்தி இன்ஸ்பெக்டர் குமரபாலன், சப்-இன்ஸ்பெக்டர் சாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கிராம மக்கள், ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    மேல்மலையனூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மேல்மலையனூர்:

    மேல்மலையனூர் அருகே உள்ளது கெங்கபுரம் கிராமம். இங்குள்ள அம்பேத்கர் காலனி பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீர்த் தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்ற பயன்படும் மின்மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென பழுதானது. இதனால் காலனி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் கெங்கபுரம் கிராமத்தில் கள்ளப்புலியூர்-வளத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேங்கடம், வளத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்தி, ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழுதடைந்த மின்மோட்டாரை உடனடியாக சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், மேலும் குடிநீர் கிணற்றை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகரிகள் உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
    குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    லாலாபேட்டை:

    பழையஜெயங்கொண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட தொட்டியப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து காவிரி நீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 30 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த தொட்டியப்பட்டி பொதுமக்கள் நேற்று காலிக் குடங்களுடன் பழையஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டு குடிநீர் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் தொட்டியப்பட்டி பகுதியில் விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
    தளிக்கோட்டை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த தளிக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் மனு அளிக்க திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு தளிக்கோட்டை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலி குடங்களுடன் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில்கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த தளிக்கோட்டை ஊராட்சியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக

    நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டது. இதுகுறித்து நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் குடிக்க தண்ணீர் இன்றி கிராம மக்கள் சிரமப்பட்டு வருகிறோம். தினசரி எங்கள் ஊரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று வடசேரி என்ற பகுதியில் இருந்து குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கும் செல்லும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ஆழ்குழாயை சீரமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    முன்னதாக தண்ணீர் பிரச்சினைக்காக மனு அளிக்க வந்த பெண்கள் சரக்கு வேனில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது விதிமுறைகளை மீறி சரக்கு வேனில் மக்களை ஏற்றி வந்ததால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் 2 சரக்கு வேன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.


    முத்தம்பட்டியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது.
    லாலாபேட்டை:

    கடவூர் ஒன்றியம் வடவம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதன் அருகே நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதில் நீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி நேற்று கரூர்- பஞ்சப்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மனோ கரன் மற்றும் லாலாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், முத்தம்பட்டி பகுதியில் உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கரூர்- பஞ்சப்பட்டி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொல்லாபுரம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வராததை கண்டித்தும், குடிநீரை சீராக வினியோகிக்க கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கொல்லாபுரம் பெண்கள் உள்பட பொதுமக்கள் நேற்று மாலை கையில் காலிக்குடங்களுடன் அரியலூர்-செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணி வகுத்து நீண்ட வரிசையில் நின்றன. இது குறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் கிராமத்திற்கு குடிநீர் வரும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வரவில்லை என்றும், அதனை சீரமைக்க வரை தற்காலிகமாக தற்போது குடிநீர் வழங்கப்படும் என்றும், பின்னர் குழாயில் உள்ள அடைப்பை எடுத்த பிறகு குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதனை தொடர்ந்து அந்தப்பகுதிக்கு உடனடியாக தற்காலிகமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி கொல்லாபுரம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி வார்டு எண் 22-ல் அதிக அளவில் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள குடியிருப்புகளுக்கு முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தினமும் தண்ணீருக்காக பகல், இரவு என அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வேதனைக்கு ஆளான மக்கள் இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆணையர் சுதா பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். ஆனால் போராட்டம் நடத்திய நாள் மட்டும் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

    அதன் பின்னர் இதுவரை தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று காலை மணப்பாறை நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட அதைப்பற்றி யாரும் கண்டுகொள்வதாக இல்லை. ஆனால் போராட்டம் நடத்தினால் மட்டும் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைக்கின்றீர்கள். ஆகவே தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறி தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து நகராட்சி ஆணையர் சுதா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அந்த பகுதியை பார்வையிட்டு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன் ஆழ்குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர் அந்த பகுதியை பார்வையிட சென்றதை தொடர்ந்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
    காவேரிப்பாக்கம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பனப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஆயல் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நீண்டதூரம் நடந்து சென்று விவசாய கிணற்றில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி டேங்க் ஆபரேட்டரிடம் பலமுறை முறையிட்டும், ஆயல் ஊராட்சி செயலாளர் மற்றும் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் கிராம மக்கள் சார்பில் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை அம்பேத்கர் நகர் பஸ் நிறுத்தம் அருகே சோளிங்கர் செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முறையாக தங்கள் ஊருக்கு குடிநீர் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் பாணாவரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசேகரகுப்தா இங்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசேகரகுப்தா சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    நல்லம்பள்ளி:

    நல்லம்பள்ளி அடுத்த தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட அவ்வைநகர், சவுளுப்பட்டி, கொட்டாவூர், நேருநகர், சித்தேஸ்வரநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு ஊராட்சி நிர்வாகம் பஞ்சாயத்து குடிநீர் மற்றும் ஒகேனக்கல் குடிநீர் ஆகியவை வழங்கி வந்தது. இந்த குடிநீரை கடந்த 3 மாத காலமாக முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்த பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று, பழைய குவார்ட்ஸ் பகுதியில் உள்ள தர்மபுரி-சேலம் பைபாஸ் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழிதேவன், ஆனந்தன் மற்றும் தாசில்தார் பழனியம்மாள், அதியமான்கோட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தனர். அப்போது 3 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்றும், ஊராட்சி செயலரை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்த போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 
    குடிநீர் வினியோகிக்க கோரி கீழக்கணவாய் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் காசு கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே குடிநீர் வினியோகிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தினர்.

    ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்தகிராமமக்கள் நேற்று காலையில் கீழக்கணவாய் பஸ் நிறுத்தம் அருகே பெரம்பலூர்-செட்டிக்குளம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணி வகுத்து நீண்ட வரிசையில் நின்றன.

    இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் தற்காலிகமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பின்னர் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

    இதனை தொடர்ந்து அந்தப்பகுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கறம்பக்குடி அருகே சூரக்காட்டில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி ஊராட்சியில் சாந்தம்பட்டி, தெற்குபல்லவராயன்பத்தை ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 4 சிறுமின்விசை தொட்டிகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தெற்கு பல்லவராயன் பத்தை கிராமத்தில் இருந்த மின்மாற்றி வெடித்து பழுதானது. இதனால் மின்சாரம் இல்லாமல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மின்மாற்றியை சரிசெய்து குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மின்சாரவாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை சூரக்காட்டில் உள்ள கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெட்டன்விடுதி மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் மகாதேவராஜ், மழையூர் வருவாய் ஆய்வாளர் சசிக்குமார், கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின்மாற்றியை சரிசெய்து, குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ×