என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • குடும்ப பிரச்சினை காரணமாக மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பாடாலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் மனைவி வைரம் (68). குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வைரம் காலை விஷம் குடித்து மயக்கமடைந்தார். உடனடியாக அவரை அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அகரம்சீகூரில் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து வணிகர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் பேருந்து நிலையம் எல்லை பகுதியில் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் நெடுஞ்சாலைத் துறையினர் அகரம்சீகூர் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைந்துள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக அளவீடு செய்து, அடையாளம் வைத்தனர். இதனால் அவருக்கு சாதகமாகவும், வியாபாரிகளை பாதிக்கக்கூடிய வகையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி, அதை கண்டித்து அப்பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் சார்பில் நேற்று காலை முதல் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.இதையொட்டி அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் மதியம் 12 மணி வரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால், வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து அங்கு வந்த குன்னம் உதவி கோட்ட பொறியாளர் தமிழ் அமுதன், மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை(புதன்கிழமை) அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிகாரிகள் அழைத்தனர். இதையடுத்து மறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் அரியலூர்-அகரம் சீகூர் எல்லை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் குழந்தைகளுடன் மாயமான பெண் பக்கத்து வீட்டு சிறுமிகளையும் அழைத்து சென்றதால் பரபரப்பு
    • வழக்கு பதிந்த போலீசார் 5 பேரை தேடி வருகின்றனர்

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பொத்தவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 30). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அங்கு வேலை செய்த ரேவதி (27) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு கயல்விழி (3), சாதனா (2) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.திருமணத்துக்கு பின் மனைவியை அழைத்து கொண்டு சரத்குமார் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் இங்கு கூலி வேலை செய்து வந்தார். சரியாக வேலை கிடைக்காததால் சென்னைக்கு புறப்பட்டு சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மனைவி குழந்தைகள் பொத்த வாசல் கிராமத்தில் வசித்து வந்தனர்.இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சரத்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. செல்போனில் பேசிய இருவரும் சண்டையிட்டனர்.பின்னர் கடந்த 3ம் தேதி ரேவதி தனது 2 குழந்தைகளுடன் ஊரிலிருந்து மாயமானார்.அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகன் மகள்கள் ப்ரீத்தா (17) திவ்யா (14) ஆகியோரும் மாயமாகியுள்ளனர். ரேவதி அவர்களை அழைத்து சென்றதாக தெரிகிறது. பின்னர் 5 பேரையும் அவர்களின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து சரத்குமார் மற்றும் முருகன் குடும்பத்தினர் குன்னம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் தேடி வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறும் போது,மாயமான ரேவதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த அந்த சிறுமிகளுடன் நன்கு பழகி வந்துள்ளார். அப்போது இரு தரப்பினரும் தங்கள் குடும்பத்தில் இருக்கும் வறுமை மற்றும் பிரச்சனைகளை பகிர்ந்துள்ளனர்.இந்த நிலையில் ரேவதி வீட்டிலிருந்து வெளியேற முடிவு செய்ததை அறிந்து தாங்களும் கஷ்டப்படுகிறோம். உங்களுடன் எங்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று அந்த சிறுமிகளும் வீட்டை விட்டு ரேவதி உடன் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.கணவருடன் ஏற்பட்ட மோதலில் மனைவி பக்கத்து வீட்டு சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு மாயமான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாடாலூர் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு நாற்காலி வழங்கும் விழா நடைபெற்றது
    • பாடாலூர் எதிர்நீச்சல் சமுதாய நற்பணி மன்றம் சார்பில் வழங்கப்பட்டது

    பாடாலூர்,

    ஆலத்தூர் தாலுகா பாடாலூர் எதிர்நீச்சல் சமுதாய நற்பணி மன்றம் சார்பில் ஊராட்சிக்கு உட்பட்ட அரச மரத்தெரு அங்கன்வாடி மையம் மற்றும் நடுத்தெரு அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி குழந்தைகள் அமர்ந்து பாடத்தை கவனிக்கும் வகையில் அவர்களுக்கு சேர் வழங்கப்பட்டது. மேலும் பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் அமரும் வகையில் அதன் அதன் வளாகத்தில் சிமெண்ட் இருக்கையும் எதிர்நீச்சல் சமுதாய நற்பணி மன்றம் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள் மணிவேல், ஆனந்த், பாலு, ராஜா கனகராஜ், கலாநிதி, சுரேஷ், சீனிவாசன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • செட்டிகுளத்தில் மலை தண்டாயுதபாணி சுவாமி கோவில் சாமி சிலையை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • கைது செய்யப்பட்டவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது

    பாடாலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் மலையின் மீது பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில், படிக்கட்டுகளில் ஏறும் பகுதியின் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனி சன்னதி கட்டப்பட்டு, அதில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சுமார் 4 அடி உயரத்தில் சிமெண்டினால் செய்யப்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் வள்ளி, தெய்வானை சிலைகளை நேற்று மதியம் 12.30 மணியளவில் ஆண் ஒருவர் கல்லால் அடித்து சேதப்படுத்திக் கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற பக்தர்கள் ஓடிச்சென்று அந்த நபரை பிடித்து, சிலைகளை சேதப்படுத்துவதை தடுத்தனர்.பின்னர் அவர்கள் இது குறித்து பாடாலூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பக்தர்களிடம் இருந்து மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சிறுவயலூரை சேர்ந்த பூபதி (வயது 49) என்பதும், அவர் தனது மனைவி லட்சுமியுடன் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, பெருமாள்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மாமனார் வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்காக மாத்திரைகள் உட்ெகாண்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று காலை வீட்டில் உள்ளவர்களிடம் மாத்திரை வாங்குவதற்கு துறையூர் சென்று வருவதாக கூறிவிட்டு வந்த அவர், செட்டிகுளத்துக்கு வந்து சுவாமி சிலைகளை சேதப்படுத்தியது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவிலில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் இறுதியில் செட்டிகுளத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சுவாமி சிலைகள், சுவாமி வாகனங்களை உடைத்து சேதப்படுத்தி, ஆவணங்களை எரித்த மனநலம் பாதிக்கப்பட்ட மாவிலங்கையை சேர்ந்த செல்வராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெரம்பலூர் காவல் நிலையம் முன்பு ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
    • கொலை வழக்கு விசாரணைக்காக, போலீசார் தனது மகனை பிடித்து சென்றதை கண்டித்து போராட்டம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவராக இருப்பவர் சாந்தா தேவி. தி.மு.க.வை சேர்ந்த இவர் தனது கணவரான அரசு பஸ் டிரைவரும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கவுன்சில் தலைவருமான குமார் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் போலீசாரை கண்டித்து பெரம்பலூர் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது சாந்தா தேவி கூறுகையில், நான் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றேன். என்னுடன் எனது மகன் மாறன் (24), என்னுடைய தங்கை மகன் லோகேஷ் (19) ஆகியோர் வந்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்ட தனிப்படை போலீசார், பெரம்பலூரில் சினிமா இயக்குனர் செல்வராஜ் என்ற அப்துல் ரகுமான் கொலை வழக்கில் சம்பந்தமில்லாத மாறன், லோகேஷை பிடித்து மறைமுகமான இடத்தில் வைத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கில் சம்பந்தமில்லாமல் பிடித்து வைத்திருக்கும் எனது மகனையும், தங்கையின் மகனையும் விடுவிக்க வேண்டும், என்றார்.இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமையிலான போலீசார் போலீஸ் நிலையம் வந்து தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால், அவர்கள் தர்ணாவை கைவிட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • பெரம்பலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது
    • மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம், என்று பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூரில் பெண்கள் உதவி தொகை திட்டத்தில், 88சதவீத விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது
    • 76ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவேற்றம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 88 சதவீதம் பதிவு ஏற்கனவே நடந்த முதற்கட்ட சிறப்பு முகாம்களில் 74,311 விண்ணப்பங்களும், முதற்கட்ட முகாம்களில் விடுபட்டவர்களுக்காக நடைபெற்ற முகாமில் 2,189 விண்ணப்பங்களும் என மொத்தம் 76,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நடந்த முகாம்களில் 95 சதவீத விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட குடும்ப தலைவிகளிடம் வழங்கப்பட்டு, அவற்றில் 88 சதவீத விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த விவசாயி பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
    • முதற்கட்ட விசாரணை அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது

    பாடாலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், பொம்மனப்பாடி இந்திரா நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 58), விவசாயி. இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள அவரது விவசாய கிணற்றில் இறந்து கிடப்பதாக பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அன்பழகனுக்கும், அவரது உறவினர்களுக்குமிடையே நிலத் தகராறு இருப்பது தெரியவந்தது. அன்பழகன் அதே பகுதியில் பிரச்சினைக்குரிய காலி இடத்தில் வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வந்தார். இதனால் ஏற்பட்ட தகறாரில் அன்பழகன் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மேட்டுகாளிங்கராயநல்லூர் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது

    அகரம்சீகூர், 

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள மேட்டுகாளிங்கராயநல்லூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மேட்டுகாளிங்கராயநல்லூர் பொதுமக்கள் சின்னாற்றில் இருந்து பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் ஊர்வலமாக அம்மன் சன்னிதானத்தை வந்தடைந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வயலூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக வீடு சூறையாடப்பட்டது
    • தாக்கப்பட்ட பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்

    அகரம்சீகூர், 

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வயலூர் கிராமத்தில் வசிக்கும் தங்கவேல் பூசாரியின் மகன்கள் முருகேசன், மாணிக்கம். இருவரிடையே சொத்து பிரிப்பதில் தகராறு காரணமாக முன் விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முருகேசன் மருமகன் மோகன் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து, மாணிக்கம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.அப்போது மாணிக்கம் மனைவி பூங்காவனம் (வயது 60) என்பவரையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பூங்காவனம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த வந்த அகரம்சீகூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விவசாயியை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்
    • ஆட்டோ மோதி படுகாயம் அடைந்த விவசாயிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடி தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 63), விவசாயி. அதே தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (53), டிரைவர். இவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று காலை சீனிவாசன் டீசல் வாங்குவதற்காக தனது மொபட்டில் பூலாம்பாடியில் இருந்து அரும்பாவூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது கார்த்திகேயன் தனது சரக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்று முன்னால் மொபட்டில் சென்று கொண்டிருந்த சீனிவாசன் மீது மோதி உள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் சீனிவாசனை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயியை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்ற கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×