என் மலர்
நீலகிரி
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், ஊட்டி உள்பட அனைத்து இடங்களிலும் காலை நேரங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே செல்கின்றனர்.
குன்னூரில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக இரவு மற்றும் பகல் நேரத்தில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக சீதோஷ்ண நிலை மாறியுள்ளது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. வழக்கத்திற்கு மாறாக குளிர் இருப்பதால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
காற்று அதிவேகத்துடன் வீசுவதால் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல மரங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த காற்றுக்கு குன்னூர் நகர பகுதிகளில் உள்ள 12-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை பறந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக யாரும் நடந்து செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
கோத்தகிரி மற்றும் கொடநாடு, ஓட்டுப்பட்டரை, சோலூர்மட்டம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் நேற்று மாலை லேசான சாரல் மழை பெய்தது. அதிகாலையில் கடும் பனிமூட்டத்துடன் குளிரும் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே தயங்குகின்றனர்.
குறிப்பாக வயதானவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சுவயட்டர், தலைக்கு குல்லா உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு கடும் பனி மூட்டத்துக்கு மத்தியிலும் வேலை பார்த்து வருகின்றனர். இதுதவிர சில ஆட்டோ டிரைவர்கள், வேன் டிரைவர்கள் தங்கள் வாகனங்களின் அருகே குளிரில் இருந்து காத்து கொள்ள தீமூட்டி காய்ந்து வருகின்றனர்.
தொடர்ந்து 2 நாட்களுக்கும் மேலாக கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும் இ-பாஸ் பெற்றால் மட்டுமே நீலகிரிக்குள் வர சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடலூர் பகுதியில் முதுமலை புலிகள் காப்பகம், ஊசிமலை காட்சி முனை, நடுவட்டம் ஆங்கிலேயர் கால சிறைச்சாலை, பைக்காரா படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இ-பாஸ் முறையில் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதேபோல் சுற்றுலா தொழிலை சார்ந்து வாழும் தொழிலாளர்கள் வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் இ-பாஸ் முறையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்குவதால் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்து செல்கின்றனர். இதேபோல் உள்ளூர் மக்களும் பொழுதைக் கழிக்கும் வகையில் நெருக்கடி அதிகம் இல்லாத சுற்றுலா தலங்களை பார்வையிட அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கூடலூர் பகுதியில் உள்ள பைக்காரா படகு குழாம், நடுவட்டம் ஆங்கிலேயர் கால சிறைச்சாலை, ஊசிமலை காட்சி முனை, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட இடங்களை கண்டு களிக்கும் வகையில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் இ-பாஸ் பற்று சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் உள்ளூர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊசிமலை காட்சி முனை உள்ளிட்ட இடங்களை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மனஅழுத்தத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொரோனா பரவலை தடுக்க மலைபிரதேசமான நீலகிரி மாவட்டத்துக்கு பிற மாவட்டங்களில் இருந்து வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதலில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது நீலகிரியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்தவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் இ-பாஸ் வழங்கப்படுகிறது
ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடக அரசின் ஸ்ரீ தோட்டக்கலை பூங்கா உள்ளது. இந்த பூங்கா திறக்கப்பட்டது குறித்து தகவல் தெரியாததால், மற்ற பூங்காக்களுக்கு வந்தவர்கள் அங்கு செல்லாமல் இருந்தனர். கர்நாடகா சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து, மற்றவர்களும் செல்ல தொடங்கி உள்ளனர். பூங்காவில் 2-வது சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை கவர மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன. பிகோனியா மலர்கள் அடங்கிய 20,000 பூந்தொட்டிகளுடன் மலைச்சரிவில் வரிசையாக மலர் அலங்காரம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 5 வண்ணங்களில் சால்வியா மலர்களை கொண்டு 10,000 பூந்தொட்டிகள் மூலம் தொட்டியில் இருந்து மலர்கள் விழுவது போல மலர் அருவி அமைக்கப்பட்டு இருக்கிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.
சைக்கிளமன், ரெனன்குளஸ், ஆர்கிட், ஜெரேனியம், ஸ்டார் மற்றும் ரெக்ஸ் போன்ற ரகங்களை சேர்ந்த பிகோனியா, லெம்ப்ராந்தஸ் உள்பட 200 ரகங்களை சேர்ந்த 50 ஆயிரம் பூந்தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 2-வது சீசனையொட்டி நடைபாதை ஓரத்தில் அலங்கார செடிகள் அழகாக வெட்டி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் பூங்கா திறக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர்.
கர்நாடகா தோட்டக்கலை பூங்காவுக்கு வருகை தரும் கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பூங்காவுக்குள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும். இதனால் நிலச்சரிவு, சாலைகளில் பாறைகள் விழுதல் போன்ற சம்பவங்கள் நடக்கும். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, குன்னூர் அருகே உள்ள ஆற்றில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமை தாங்கினார். குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தன்னார்வ குழுவினர் இணைந்து வெள்ளத்தில் சிக்கிய நபரை மீட்பது போன்று ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் வெள்ளத்தில் சிக்கிய நபரை கயிறு கட்டி தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். வெள்ளத்தில் மூழ்கினால் உடலில் இருந்து நீரை வெளியேற்றுவது, சுவாசத்தை சரி செய்வது, முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வனத்துறையினர், போலீசாரும் கலந்து கொண்டனர்.
ஊட்டியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. அப்போது கிரீன்பில்டு, காந்தல், வி.சி. காலனி, கோடப்பமந்து உள்ளிட்ட இடங்களில் 55 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகள் சேறும், சகதியுமாக மாறியது. மேலும் அங்கிருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட கிரீன்பில்டு பகுதியில் நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார். மேலும் கோடப்பமந்து கால்வாயை பார்வையிட்டார். அப்போது அங்கு மழைநீர் கால்வாய்களின் குறுக்கே அமைக்கப்பட்ட சிறிய பாலங்களை உயர்த்தி அமைக்க வேண்டும். கோடப்பமந்து கால்வாயில் தாழ்வாக செல்லும் குடிநீர் குழாய்களை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊட்டியில் ஒரே நாளில் 6 சென்டி மீட்டர் மழை பதிவானதால் தாழ்வான கிரீன்பில்டு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோடப்பமந்து கால்வாயில் பாதாள சாக்கடை திட்டத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோடப்பமந்து கால்வாயை மீண்டும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும். நீலகிரியில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 53 சதவீதம் அதிகமாக பெய்தது.
இதனால் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் வந்து தங்கலாம். நீலகிரியில் 486 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் பொக்லைன் எந்திரங்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது சப்-கலெக்டர் மோனிகா, நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். இதற்கிடையில் ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டா-சின்கோனா சாலையில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, மரத்தை வெட்டி அகற்றினர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-62.5, கல்லட்டி-14, குந்தா-46, எமரால்டு-13, பாலகொலா-30, குன்னூர்-16.5, கோடநாடு-25.5 உள்பட மொத்தம் 296.5 பதிவாகி உள்ளது. இதன் சராசரி 10.23 ஆகும்.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் தீ விபத்தை தவிர்ப்பது தொடர்பாக வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டம், கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஊட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி ரவிக்குமார் கூறியதாவது:-
கடைகள் காற்றோட்டமாக இருப்பது அவசியம். சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு ஆகியவை கடைகளின் முன்பகுதி ஓரத்தில் வைத்து பராமரிக்கப்பட வேண்டும். சிலிண்டரில் பொருத்தப்படும் டியூப் ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு பேரலில் தண்ணீர் நிரப்பி அதில் சிலிண்டரை வைக்க வேண்டும். அடுப்பின் அருகே ஒரு சாக்குப்பையை நனைந்த நிலையில் எப்பொழுதும் வைத்து இருக்க வேண்டும். எப்போதும் தயார் நிலையில் சிறிய அளவிலான தீயணைப்பு கருவியை வைத்திருக்க வேண்டும். டீக்கடைகளை மார்க்கெட்டின் வெளிப்பகுதியிலேயே வைத்து நடத்தினால் விபத்துகளை தவிர்க்கலாம். மார்க்கெட்டின் உள்பகுதியில் டீக்கடைகள் நடத்தினால் பாதுகாப்பாக நடத்த வேண்டும்.
இல்லையென்றால் ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் உள்ளே சென்று உடனடியாக தீயை அணைப்பதற்கு சிரமமாகவும், சேதங்கள் அதிகமாக ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. டீக்கடைகளில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் 2 மட்டுமே வைத்து இருக்க வேண்டும். இதற்கு மேல் கூடுதலாக வைக்கக்கூடாது. டீக்கடை வைத்து நடத்தி வருகிறவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைகளில் கட்டிட விதிமுறைகளின்படி மின் அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு டீக்கடை மற்றும் ஓட்டல்களில் வெப்பக்காற்று வெளித்தள்ளும் மின்விசிறி கண்டிப்பாக அமைக்க வேண்டும். இந்த பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்தால் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நகராட்சி வருவாய் அலுவலர் பால்ராஜ் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.






