என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேளாங்கண்ணி அருகே வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் காமேஸ்வரம் வைரவன் காடு பகுதியை சேர்ந்தவர் பூமாலை. இவருடைய மனைவி தமயந்தி (வயது 36). ஊராட்சி மன்ற உறுப்பினர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள கடலை சாகுபடி செய்யப்பட்ட வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். 

    அப்போது தமயந்தியை பாம்பு கடித்து விட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமயந்தி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி போலீஸ் சரகம் மாணிக்கபங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விக்னே‌‌ஷ். இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது26).இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கலைச்செல்வி மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் உள்ள மின்விசிறியில் கலைச்செல்வி தூக்குப்போட்டு கொண்டார். அப்போது சத்தம் கேட்டு விக்னேசின் தாயார் ஓடிச்சென்று பார்த்தபோது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மகன் விக்னேசை அழைத்து கதவை உடைத்து சென்று பார்த்த போது கலைச்செல்வி தூக்கி தொங்கி உள்ளார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கலைச்செல்வி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கலைச்செல்விக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதால் நாகை உதவி கலெக்டர் மணிவேலன் விசாரணை நடத்தி வருகிறார்.
    நாகை அருகே 6 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
    சிக்கல்:

    நாகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கமங்கலம் கிராமத்தில் 9-வது வார்டு பகுதியில் மேலத்தெரு உள்ளது. இதில் தமிழக அரசால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடு உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ளன.

    தொகுப்பு வீடுகள் பழுதடைந்து உள்ளதால் அதில் வசித்து வருபவர்கள், வீட்டின் பின்புறம் தென்னங்கீற்றால் அமைக்கப்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு செல்வம் என்பவரது வீட்டின் பின்புற பகுதியில் உள்ள கொட்டகையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வீசியதால் தீ அருகில் இருந்த பாஸ்கர், கிளியம்மாள், ஞானசுந்தரி, சுப்ரவேல், வளர்மதி ஆகியோரின் வீடுகளுக்கு பரவியது. இதில் 6 வீடுகளும் கொழுந்து விட்டு எரிந்தன.

    தீ விபத்து குறித்து அப்பகுதியினர் கீழ்வேளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 6 வீடுகளும் எரிந்து சாம்பலானது.இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்த மின் சாதன பொருட்கள், கட்டில், பீரோ, வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தன. இதன் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
    திட்டச்சேரியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, முககவசம் வழங்கப்பட்டது.
    திட்டச்சேரி:

    திட்டச்சேரியில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பரமநாதன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, முககவசம் வழங்கப்பட்டது.
    வேதாரண்யம் பகுதியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. முககவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

    தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களிடையே தயக்கம் இருந்து வந்தது. ஆனால் தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி செலுத்துவதற்கு பலரும் முனைப்பு காட்டி வருகிறார்கள். இதனால் தடுப்பூசியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு மத்திய அரசு அதன் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போதுமான அளவு தடுப்பூசி வரவில்லை.

    வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி மருந்து அறவே வரவில்லை. நேற்று அங்கு தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் மருந்து இல்லாத காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளானார்கள். இந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தடுப்பூசி மருந்து வருவதற்கு மேலும் சில நாட்களாகும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க வேண்டும். கரியாப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி வர நேரிட்டது. தினசரி அங்கு சென்று தடுப்பூசி போடுகிறார்களா? என்று பார்க்க வேண்டி உள்ளது. இவ்வாறு அலைக்கழிக்காமல், தேவையான தடுப்பூசி மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றனர்.
    நாகை மாவட்டம் திருமருகல் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள அகரக்கொந்தை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் பல ஆண்டுகளாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாத நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வசதி செய்து தரக் கோரியும் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் காரைக்கால்-நன்னிலம் சாலையில் வாழ்மங்கலம் பஸ் நிலையம் எதிரில் அமர்ந்து குடிநீர் கேட்டு கோஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்பரசு அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் காரைக்கால்-நன்னிலம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    நாகை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய சங்க துணைத்தலைவர் இடும்பன்சாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. பணிமனை தலைவர் பஞ்சநாதன், தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போக்குவரத்து தொழிலாளர்களின் வார ஓய்வை பறிக்க கூடாது. போக்குவரத்து தொழிலாளர்களின் அரசு விடுப்பு விதிமுறைகளை மாற்ற கூடாது. சம்பளத்தை பறிக்கும் திட்டங்களை செயல்படுத்த கூடாது. தொழிற்சங்கத்தின் அறிவுரைகளை மீறக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    அதேபோல் வேதாரண்யம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தலைவர் ஹரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் விடுமுறை எடுப்பதில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    நாகையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு மேலே இன்று ட்ரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

    இந்த நிலையில் நாகையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு மேலே இன்று ட்ரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பற்றிய விவரம் வருமாறு:-

    நாகை அடுத்த தெத்தி பகுதியில் உள்ள இ.ஜி.எஸ்.பிள்ளை தனியார் கல்லூரியில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்றடுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று இந்த மையத்தின் மேல் ட்ரோன் கேமரா சுற்றி சுற்றி பறந்துள்ளது. சுமார் ½ மணி நேரம் கேமரா பறந்து சென்றது.

    இது குறித்து தகவல் அறிந்த தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நாகை மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் அங்கு குவிந்த கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பிரவின் பிநாயரிடம் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் சென்னையை சேர்ந்த குமார், சுரேஷ்குமார், பாலாஜி ஆகிய 3 மாணவர்கள் விடுமுறைக்காக நாகைக்கு வந்ததும், அவர்கள் கல்லூரி அருகே உள்ள கிராமத்தில் ட்ரோன் கேமரா பறக்கவிட்டதில் அந்த கேமரா வாக்கு எண்ணும் மையம் மேல் பறந்ததும் தெரிவந்தது.

    இதைதொடர்ந்து போலீசார் மாணவர்கள் 3 பேரையும் நாகூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் இருந்த ட்ரோன் கேமரா மற்றும் கழுகுபார்வை காட்சிகளை பதிவு செய்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருமருகல் அருகே கொங்கராயநல்லூரில் உள்ள மண் குவாரியை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் கிராமத்தில் அரசு அனுமதியுடன் மண்குவாரி இயங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று குவாரியில் இருந்து மண் எடுக்க லாரிகள் வருவதைக் கண்ட கிராம மக்கள் திடீரென குவாரியை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் மண்குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன், கனிமவளத் துறை ஆய்வாளர் விஜயராகவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திட்டச்சேரி பாலமுருகன், திருக்கண்ணபுரம் இரணியன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மேலும் கனிம வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் குவாரி இயங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
    நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 925 ஆக உயர்ந்துள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 925 ஆக உயர்ந்துள்ளது. 102 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 9 ஆயிரத்து 604 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 479 ஆக உயர்ந்துள்ளது. 85 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 12 ஆயிரத்து 515 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 92 ஆக உயர்ந்துள்ளது. கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவர் உயிரிழந்தார்.
    வேதாரண்யம் பகுதிகளில் கொரோனாவை தடுக்க 10 லட்சம் முக கவசங்களை இலவசமாக வழங்கிய ஆசிரியையை பொதுமக்கள் பாராட்டினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியை. வசந்தா. இவர் அண்டர்காடு சுந்தர விலாஸ் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

    கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் போது இசைக்கலைஞர்கள், குடிசைவாழ்மக்கள், நாடோடிகள், நரிக்குறவர்கள், வடமாநில தொழிலாளர்களுக்கு என சுமார் ரூ.50 லட்சம் ரூபாய் செலவில் உணவு, மாஸ்க், உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

    சமூக அக்கறையோடு கணவர் சித்திரவேல் உதவியோடு தற்போது 10 லட்சம் முகக்கவசங்கள் வாங்கி அதனை பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று வழங்கி வருகிறார்.

    ஆசிரியை வசந்தா மற்றும் சித்திரவேலுவின் சமூகப்பணியை பொதுமக்கள் பாராட்டினர்.

    இவர்களின் சமூக பணியை பாராட்டி இதுவரை 50-க்கும் மேற்பட்ட விருதுகளை சமூகநல அமைப்புகள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    வேதாரண்யம்:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தினசரி பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க கோவிசீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பு ஊசிகள் பயன்பாட்டில் உள்ளன.

    இந்நிலையில் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் டோஸ் அளவிலான தடுப்பு மருந்துகள் பயனாளிகளுக்கு போட முடியாதபடி சுகாதாரத் துறையினர் சென்னைக்கு அதிக அளவில் தேவை என்று கூறி அனைத்து கிராம மற்றும் நகர்புற ஆஸ்பத்திரிகளில் உள்ள தடுப்பு மருந்துகளை எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பயனாளிகளுக்கு போதுமான அளவில் தடுப்பூசி போடுவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

    மேலும் ஆஸ்பத்திரிக்கு சென்று பயனாளிகள் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள சென்றால் ஊசிமருந்து கைவசம் இல்லை என்றும், இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் வந்து விடும் என்றும் கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர். தற்போது இரண்டாவது முறையாக தடுப்பு ஊசிமட்டுமே இப்போது உள்ளது என்றும் கூறுகின்றனர்.

    இது தவிர பணியில் உள்ள சுகாதாரத்துறை பிரிவைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களில் பெரும்பாலோனோர் சென்னை உட்பட பெரு நகரங்களுக்கு தேவை என்பதால் அழைத்து செல்லப்பட்டு விட்ட நிலையில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    எனவே கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் காலையில் தடுப்பு ஊசி போட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.

    இவர்களுக்கு முதலில் தடுப்பு ஊசி இல்லை என மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்து தடுப்பூசி வர வைக்கப்பட்டு 200 நபர்களுக்கு போடப்பட்டது. பின்பு தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறி டோக்கன் வழங்கி நாளை வாருங்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஊசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதனால் சிறிது நேரம் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×