என் மலர்
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி தாலுகா பழையாறு சுனாமி நகரைச் சேர்ந்த மதி (வயது 55), ஹரிஷ் (22), புதுப்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்த அப்பு என்கிற நகுலன் (45), முத்தையா (60), ராஜதுரை (45) ஆகிய 5 மீனவர்களும் கடந்த 3ஆம் தேதி பழையாறு துறைமுகத்தின் மூலம் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். மடவாமேடு கிராமம் அருகில் 3 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது காற்று அதிகமாக வீசியதால் எதிர்பாராதவிதமாக விசை படகு தண்ணீரில் மூழ்கியது.
இதில் கடலில் மூழ்கி தத்தளித்த 5 பேரையும் காரைக்கால் பகுதி மீனவர்கள் மீட்டு அழைத்து சென்றனர். விசை படகு மட்டும் கடலுக்குள் மூழ்கி விட்டது. இதையடுத்து கடலுக்குள் மூழ்கிய படகை பழையாறு மீனவர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக கடலூரிலிருந்து மூன்று நீர்மூழ்கி வீரர்கள் வந்து கடலுக்குள் சென்று மூழ்கிய படகை தண்ணீருக்குள் சென்று கயிறு கட்டி பின்னர் படகின் மூலம் வெளியே இழுத்து வந்தனர். இதைதொடர்ந்து படகு பழையார் மீன்பிடி துறைமுகத்தை ஒட்டி கரைக்கு உடைந்த நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் இழுத்து வரப்பட்டது.
இதுகுறித்து பழையாறு விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அருள்செழியன் கூறுகையில், ரூ.20 லட்சம் மதிப்பில் உள்ள இந்த விசைப்படகு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந் தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டது. படகில் இருந்த 5 பேரும் பத்திரமாக தப்பித்து கரையேறி விட்டனர். படகுகளுக்கு விபத்து காப்பீடு திட்டம் இல்லை. இதனால் வழக்கமாக அனைத்து படகுகளுக்கும் வழங்கப்படும் ரூ.45 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும்.
ஆனால் படகை இழந்த மீனவர்களுக்கு நிவாரணம் இதுவரை வழங்கவில்லை. விவசாய பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கி புயல் மற்றும் வெள்ளம் ஆகிய இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குவது போல் விசைப்படகை இழந்த குடும்பத்தினருக்கு அரசு போதிய நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். அப்போதுதான் படகின் உரிமையாளர் வறுமையில் இருந்து மீள்வதற்கு வாய்ப்புள்ளது. இயற்கை சீற்றத்தால் படகு விபத்துகுள்ளாகி தண்ணீரில் மூழ்கி விட்டால் அதற்குரிய போதிய நிவாரணத்தை தமிழக முதல்வர் இனிமேல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே எம்.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. பழையார் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். உரிய நிவாரணம் கிடைக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கபடும் என்றார். அப்போது கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் உடனிருந்தார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் சரகம் ஆதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவஷீலா (வயது 18) திருமணமானவர். மணல்மேடு நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சாருமதி (19) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் சாருமதி ஆதமங்கலத்தில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு கடந்த 29ஆம் தேதி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சாருமதி தனது தாத்தாவின் மோட்டார் சைக்கிளை வாங்கிகொண்டு சீர்காழி வரை சென்று வருவதாக கூறி புறப்பட்டுள்ளார். அப்போது அவருடன் சிவஷீலாவும் சென்றதாக தெரிகிறது.
ஆனால் இருவரும் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிவ ஷீலாவின் தாய் பொன்னாச்சி வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 இளம் பெண்களையும் தேடி வருகின்றனர். இதற்கிடையே சாருமதி எடுத்து சென்ற மோட்டார் சைக்கிள் வைத்தீஸ்வரன் கோயில் ரெயில் நிலையம் அருகே இருந்ததை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.






