என் மலர்
செய்திகள்

பேச்சு வார்த்தையால் ஏற்பட்ட உடன்பாட்டால் அனைவரும் கலைந்து சென்றனர்.
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு
மயிலாடுதுைற கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை 2-வது நாளாக பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். பேச்சு வார்த்தையால் ஏற்பட்ட உடன்பாட்டால் அனைவரும் கலைந்து சென்றனர்.
மயிலாடுதுறை:
புதிய மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக வணிகவரித்துறை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்திற்கு புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் கட்ட மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் 21 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இந்த இடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட ஆதீனம் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதனையடுத்து அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட முடிவு செய்து புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான டெண்டர் அறிவிப்பும் கடந்த 11-ந் தேதி தமிழக அரசு வெளியிட்டது.
இந்த நிலையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக இடம் சுத்தம் செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது அந்த பகுதி மக்கள் தாங்கள் விவசாயம் செய்து வரும் இடம் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதாக இருந்தாலும் அதில் 200 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும், எனவே எந்தவித இழப்பீடும் வழங்காமல் நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இடம் தூய்மைப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் இடம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் இடம் தூய்மைப்படுத்தும் பணியை தடுத்ததோடு பொக்லின் எந்திரத்தையும் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து தாசில்தார் ராகவன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை தற்போது சுத்தம் செய்யப்போவதில்லை என்றும், தருமபுர ஆதீனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் மட்டுமே தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனையடுத்து ஆதீனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் மட்டும் இடம் சுத்தப்படுத்தும் பணி நடந்தது என்பது குறிபிடத்தக்கது.
Next Story






